கலைக்களஞ்சியம்/அவயவச் சீரியல்

விக்கிமூலம் இலிருந்து

அவயவச் சீரியல் (Orthopaedics) என்பது கருவிலோ, பிறக்கும்போதோ, பிறந்த பின்னரோ எலும்பும் தசையும் சேர்ந்த உறுப்புக்களில் உண்டாகும் குறைகளை நீக்கிச் சீர் செய்யும் சிகிச்சை முறையாகும்.

சாதாரணமாகக் குழந்தை கருவிலிருக்கும்போது கருப்ப நோய்கள் குழந்தையின் எலும்புகளை நன்றாக வளரவிடாமலிருக்கலாம். சவ்வெலும்புகள் (Mem' brane bone) நன்றாக வளராமலோ, பலமற்றவைகளாகவோ இருந்துவிடலாம். குருத்தெலும்புகள் (Cartilage) வளர்ச்சிக் குறைவுடையவைகளாகவோ, மேடு பள்ளங்கள் உடையவைகளாகவோ இருந்துவிடலாம்.

குழந்தை பிரசவமாகும் வேளையில் காயங்கள் ஏற்படலாம். எலும்பு முறிதல், தசை நரம்புகள் காயப்படுதல் , மூளை அழுந்தியும் இரத்தக்குழாய் சிதறியும் நரம்புகளில் கோளாறுகள் உண்டாதல், கழுத்துச் சாய்தல் ஆகியவை நேரிடலாம்.

குழந்தை பிறந்து வளரும்போது முதுகெலும்பு பின்னால் மூடாமல் தண்டுவடத்தின் சவ்வும் நரம்புகளும் வெளியில் காணப்படலாம். முதுகெலும்பு அரைப்பாகம் இல்லாமல் போகலாம். ஐந்தாவது இடுப்பு முள் எலும்பின் வில்லும் கட்டையும் (Arch and body of the fifth lumbar vertebra) சேராமலிருந்து உடல் முன்னுக்கு வளைந்து போகலாம் (Spondilolisthesis). விலா எலும்பு ஒன்று கழுத்தில் மிகுதியாக இருக்கலாம். விலா எலும்புகள் ஒன்றோடொன்று சேர்ந்துமிருக்கலாம்.

உடம்பின் மேல்பாகத்தில் சொத்தைக்கை, எலும்பு எண்ணிக்கைக் குறைவு, நீளக் குறைவு, விரல்கள் எண்ணிக்கையில் கூடுதல் அல்லது குறைவு, விரல்கள் சேர்ந்தும் மூட்டுக்கள் அசைவு இல்லாமலும் இருத்தல் ஆகியவை காணப்படலாம்.

உடம்பின் கீழ்ப்பாகத்தில் இடுப்பு மூட்டு விலக்கு, முழங்கால் மூட்டு விலக்கு, பாதத்தில் வளைவுண்டாகி உள்ளங்கால் உட்புறமாக வளைதல், எலும்புகள் நீளக் குறைவு, பகுதிக் குறைவு, விரல்கள் எண்ணிக்கை மிகுதி, சேர்ந்திருத்தல் முதலியன உண்டாகலாம்.

பிறவிக் குறைகள் : குருத்தெலும்பு பிறவியிலேயே குறைந்து போகலாம் (Achondroplasia), அல்லது எலும்புக் கூடு கருவில் வளராது இருந்துவிடலாம். இக் குறைகள் சில வேளைகளில் பிறந்தவுடனும், சில வேளைகளில் சில காலங்கழித்தும் வெளித் தோன்றலாம். இக்குறைகள் உள்ள குழந்தைகள் குட்டையாயும் நீளமான மேல் உறுப்புக்கள் உடையனவாயுமிருக்கும். இக்குறைபாடு முதல் இரண்டு ஆண்டுகளில் வெளித்தோன்றும்.

குருத்தெலும்பு நன்றாக வளராமல் நொய்மையான எலும்பாக இருந்துவிடும். அத்தகைய எலும்பு எளிதில் உடையும் தன்மை யுடையது.

பிரசவக் குறைகள் : பிரசவ வேளையில் தலை வெளிவரும்போது, கழுத்து நெருங்கிக் கழுத்து மூலம் வரும் நரம்புகள் சிறிது கிழிந்து போகலாம் (Erbs Palsy). மேல் நரம்புகள் கிழிந்தால், தோள் நெஞ்சின் பக்கம் தொங்கும். உள்ளங்கை பின்புறம் திரும்பியிருக்கும். தன் கையால் தன் தோளைத் தொட முடியாது. கீழ் நரம்புகள் கிழிந்தால், கைத்தசைகள் வேலை செய்யா. விரல்களை விரிக்க முடியாது. கட்டை விரல் ஆள்காட்டி விரலுடன் சேராமல் இருக்கும். பிறந்தவுடனே சிகிச்சை செய்தால் நன்கு குணப்படும்; சில ஆண்டுகள் ஆன பிறகும் குணப்படுத்தலாம்.

பிட்டம் உதயமாகித் தலை பின்னால் வரும்போதும், அல்லது தலை உதயமாகி வரும்போது வழி குறுகியிருக்கும்போதும் மூளை நரம்புகள் ஊனமடையும். அதனால் கை கால்கள் கட்டைபோல் விறைப்பாக இருக்கும். இக் குழந்தை சுறுசுறுப்பில்லாமலும் புத்திக் குறைவாகவு மிருக்கும். இவர்களைச் சுமுகமாக வளர்த்தால் ஏறக் குறையப் பயன்படுவர்.

குழந்தை பிறந்து ஒரு வாரமாவதற்குள் கழுத்திலுள்ள ஸ்டெர்னோ மாஸ்டாயிடு (Sterno Mastoid) என்னும் இரண்டு தசைகளுள் ஒன்று மட்டும் வேலை செய்வதால் அப்பக்கத்துக் கழுத்துக் குறுகி, முகம் அடுத்த பக்கம் மேற்பக்கமாகத் திரும்பிப் பின் மண்டை எலும்பின் (Occipital) அருகிலிருக்கும். அப்பக்கத்திலே கழுத்து நோவும் கடினமான வீக்கமும் உண்டாகும். பிறவியிலேயே தசை குறுகியிருப்பதாலும், பிரசவத்தில் கழுத்து நெருங்கி இரத்தக்குழாயில் ஊனம் உண்டாவதாலும் இவ்வாறு ஏற்படலாம் (Torticollis). இப்படி ஏற்படும்போது குழந்தையின் தலையைத் தூக்கி நிமிர்த்திக் கழுத்தை மறுபக்கம் சாய்த்து மெதுவாக நாளடைவில் தசையை நீட்டவேண்டும். ஓர் ஆண்டு ஆனபிறகு சிகிச்சை செய்வதானால் தசையை நீட்டிச் சிறு ஆப்பரேஷன் செய்து குணப்படுத்தலாம். சிகிச்சை செய்யாதிருந்துவிட்டால் தசைகளின் மேலுறையும் கழுத்தின் சவ்வும் சுருங்கிக் கழுத்திலிருக்கும் முதுகெலும்புகளிலும் கோணல் ஏற்படும்.

இடுப்புப்பூட்டு விலக்கு (Congenital dislocation of hip) : இது சாதாரணமாகப் பிறவியிலேயே ஏற்படுகிறது. பிறந்து இரண்டு மூன்று மாதமானபிறகு பிறவியிலேயே இருபுறமும் பூட்டு விலகி யிருத்தல்

பிறவியிலேயே இருபுறமும் பூட்டு விலகியிருத்தல்

தொடைகளுக்கிடையேயுள்ள இடம் மிகுந்தும், குழந்தை காலைத் தூக்கி விளையாடாமலும் இருந்தால் வைத்தியரிடம் காட்டவேண்டும். சிசுவாயிருந்தால் இரண்டு வருடம் சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். வயது ஆறு ஏழு ஆகிவிட்டாலும், இடுப்புப் பூட்டை உள்ளே தள்ளிவைக்க முடியாமற் போனாலும் ஆப்பரேஷன் செய்து குணப்படுத்தவேண்டும்.

கோணல் பாதம் (Talipes) : சில வேளைகளில் கருவில் ஆறாவது வாரத்தில் சில மாறுதல்கள் ஏற்படுகின்றன.

பிறவியில் வளைந்த பாதம்

அதனால் குழந்தை பிறந்தபின் உள்ளங்காலை ஊன்ற முடியாமல் போகிறது. குதிக்கால் தூக்கியிருக்கும். பிறந்து ஒரு வாரமாவதற்குள் சிகிச்சை தொடங்கவேண்டும். நோவு இல்லாமலிருக்கும் பொருட்டு மயக்க மருந்து கொடுப்பதுண்டு. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இது இன்றியமையாதது. சிகிச்சை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்கட்கு ஒரு முறை வீதம் 4-6 மாதங்கள் செய்யவேண்டும். காலை நன்றாகத் திருத்திய பிறகு பிறவியில் வளைந்த பாதம் தக்க சோடுகள் செய்து அதை இரவும்பகலும் அணியச் செய்யவேண்டும். இவ்வாறு இரண்டு மூன்று ஆண்டுகள் செய்தால் குணமாகும். இடையில் நிறுத்தினால் அங்கவீனம் மீண்டும் வந்துவிடும். மூன்று வயதான குழந்தைகளிற் சிலருக்கு ஆப்பரேஷன் செய்ய வேண்டியிருக்கும். பார்க்க : கோணல்பாதம்.

பிறந்தபின் ஏற்படும் ஊனங்கள் : இவை முன் கூட்டித் தடுக்கக்கூடியவை. இவையாவன :
1. இளம்பிள்ளை வாதத்தால் தசை சோர்ந்து அங்க மாறுதல் உண்டாகும்.
2. உணவில் இருக்கவேண்டிய சத்துக்கள் குறைந்தால், உதாரணமாக டீ வைட்டமின் குறைந்தால் கணை நோய் (Rickets), எலும்பு மிருதுவாதல் (Osteomalacia) உண்டாகும்.
3. கை யெலும்பில் அடி, தசை நரம்புகள் அறுதல்.
4. அடி காயத்தால் எலும்பு முறிதல், வளைதல், குறுகுதல், மூட்டுப்பிடிப்பு, உடைந்த எலும்பு சேராமை, சதை அற்று விரல் ஆட்ட முடியாமை, சதைக்கு உயிர் தரும் நரம்புகள் அவற்றால் உயிர்ச்சேதம் நேரும்.
5. பூட்டு விலகல்.
6. சுரத்துடன் வீக்கங்கண்டு சீழ் பிடித்தால் குழந்தைகளின் பூட்டின் மேலும், மற்றவர்களின் எலும்பிலும் சீழ் பிடிக்கும். வாத வகைகள் சிலவற்றில் பூட்டுக்களின் அசைவு குறைவுபடும்.
7. க்ஷயரோகத்தில் பூட்டுக்களில் ஏற்படும் மாறுதல்கள்.
8. எலும்பு வளருமிடத்துக்குக் கீழோ மேலோ இருக்கும் தட்டுக்களில் ஏற்படும் விபத்துக்கள்.
9. இடுப்பு, தோள் பட்டை, மேல்தோள் இவற்றில் நோவு ஏற்படுதல் முதலியன.

இளம்பிள்ளை வாதம் நிரம்ப நாள் நீடித்திருக்கக் கூடியது. வீட்டில் சிகிச்சை செய்வது நல்லது. இந் நோய் கண்டவுடன் படுக்கவைத்து ஓய்வு தரவேண்டும். மெல்லிய தலையணைகளைத் தலைக்கும் தோள்பட்டைக்கும் வைக்கவேண்டும். தோள் பூட்டு அசையாமல் 75° கோணத்தில் இருக்கவேண்டும். கால்கள் முழங்காலுடனும் விரல்களுடனும் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். முழங்கால்கள் இரண்டு அங்குலம் விலகி இருக்கவேண்டும். பாதங்கள் கால்களுக்குச் சரியாக நேர்க்கோணத்தில் இருக்கவேண்டும். நோய் கண்டவுடன் சிகிச்சை செய்தல் இன்றியமையாதது. தசைகள் வாடாமல் இருப்பதற்காகச் சுடுநீர் ஒற்றடம் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டு காலைத் தூக்கும் நிலைமை வரும்வரை படுத்தேயிருக்கவேண்டும்; நடக்கக்கூடாது. இந்நோயின் வைரஸ் (Virus) பிறரையும் பாதிக்குமாதலால் மூன்று வாரகாலம் நோயாளியின் மலசலங்களைக் கொளுத்தி வரவேண்டும். பார்க்க : இளம் பிள்ளை வாதம்.

கணை நோய் : ஒன்றரை வயது முதல் இரண்டு வயதுக்குள் உண்டாகிறது. சுண்ணாம்பும் பாஸ்பரஸும் குறைவதால் ஏற்படுகிறது. மண்ணீரலும் பருத்து விடும். பேதி உண்டாகலாம். எலும்புகள் வளையும். குழந்தை நடக்கவேண்டிய பருவத்தில் நடக்காமல் இருந்துவிடும். பல் முளையாது. உச்சிக்குழி மூடாமல் இருந்துவிடும். வலிப்பு ஏற்படலாம். நெஞ்சுக்கூடு முன்னுக்கு வந்திருக்கும். பால், முட்டை, வெண்ணெய், மீனெண்ணெய், சூரிய ஒளி, போதுமான அளவு தந்தால் நோய் வராது. எக்ஸ்கதிர்ப் படம் எடுத்தால் நோயின் தொடக்கத்தில் கண்டுகொள்ளலாம். அப்போது சத்துள்ள உணவு கொடுத்து, நடக்காமல் செய்தால் குணமாய்விடும். ஐந்து வயதில் ஏற்பட்டால் அங்க ஊனங்களை நீக்க ஆப்பரேஷன், முதுகுக்கட்டு முதலியன தேவையாகும். பார்க்க : கணை நோய்.

பக்கக்கூன் (Scoliosis) : சில காரணங்களால் முதுகு எலும்பு ஒன்றிலிருந்து ஒன்று விலக்கம் கண்டு உருளத் தொடங்கிவிடும். அப்போது மார்புக் கூட்டில் மாறுதல் உண்டாகும் ; மூச்சுத் திணறும் ; எக்ஸ் கதிர்ப் படம் எடுத்து, எந்த எலும்பு எவ்வளவு உருள்கிறது என்று கண்டு, தொடக்கத்தில் சிகிச்சை செய்தால் ஒருவாறு குணமாகும். பலகைக் கட்டிலில் படுக்கவைக்க வேண்டும். பார்வையில் பிழையிருந்தால் கண்ணாடி போடவேண்டும். இரண்டாண்டுகள் சிகிச்சை செய்தால் குணமாகும். முற்றியபின் குணப்படுத்துவது சிரமம்.

குமரப்பருவக் கூனல் (Adolescent kyphosis): குனிந்து வேலை செய்வதாலும், உணவில் சத்துக்குறைவதாலும், மிகுந்த களைப்பு ஏற்படுவதாலும் முதுகு எலும்பு கோணிவிடும். ஆறுமாதம் படுக்கையில் இருந்து, சத்தான உணவு கொண்டால் இதை வராமல் தடுக்கலாம்.

சிலர்க்கு முதுகெலும்பில் நோய் ஏற்பட்டோ அல்லது பிட்டத்திலும் கீழ் உறுப்புத்தசைகளிலும் நோய் ஏற்பட்டோ , வயிறு முன் வந்து, முதுகில் இடுப்புப் பக்கத்தில் வளைவு ஏற்படுவதுண்டு.

தட்டைப் பாதம் (Flat foot) : இதை வலிமையற்ற கணுக்கால் என்று கூறுவர். சில குழந்தைகளுடைய பாதங்களில் உள்வளைவு இல்லாமல் உள்ளங்கால் தட்டையாயிருக்கும். இது கால் தசையின் வலிமைக் குறைவால் ஏற்படுகிறது. சோட்டின் குதியின் உட்பக்கம் காலங்குலம் உயரமாகத் தைத்துக் கொடுக்க வேண்டும். தொண்டைச்சதை வளர்ச்சி (Tonsilitis) இருந்தால் நீக்க வேண்டும். குழந்தையை நீரில் பாதத்தை வைத்து விளையாடுமாறு செய்தால் தசைகள் உறுதியடையும். இவ்வாறு செய்தால் 6 மாதத்தில் குணமடையும். கவனியாமல் இருந்துவிட்டால் பின்னால் அதிக தூரம் நடக்கமுடியாது. இம்மாதிரிக் குழந்தைகள் குறுகின இறுக்கமான பூட்சுகளை உபயோகித்தால் பல கெடுதல்கள் உண்டாகும். உள்ளங்காலில் விரலுக்கடியில் ஆணி முளைக்கும்.

எலும்பு முறிவுகள் : தாய் வயிற்றில் ஏற்படும் முறிவுகளைத் தடுக்கும் முறை இப்போது தெரியவில்லை. பிரசவ வேளையிலும் முறிவு ஏற்படலாம். பின்னால் பல விபத்துக்களாலும் முறிவுகள் உண்டாகலாம். எலும்பு நோய் கண்டால் விபத்து ஏற்படாமலே முறிவுகள் உண்டாகலாம். புற்றுநோய் கண்டவிடத்திலும் முறிவு உண்டாகும். பொதுவாக நிரம்ப நடந்து வழக்கமில்லாதவர் நெடுந்தூரம் நடந்தாலும் முறிவு ஏற்படுவதுண்டு.

மூடின எலும்பு முறிவுஎன்றும், திறந்த எலும்பு முறிவு என்றும் முறிவுகள் இருவகைப்படும். தோல் கிழியாமல் உள் காயமாக இருந்தால் மூடின முறிவு. தோல் கிழிந்து இரத்தக் காயமாக இருந்தால் திறந்த முறிவு. திறந்த முறிவே மிகுந்த அபாயமானது. கிருமிகள் புகுந்து, சன்னி, இழுப்புப்போன்ற அபாயங்களை உண்டாக்கலாம்.

மூடின முறிவு : அடிப்பட்ட இடத்தில் நோவு உண்டாகும். முறிந்த துண்டுகள் உராய்வது காதுக்குக் கேட்கும். கைக்குப் புலப்படும். களைப்பு உண்டாகும். இரத்த அழுத்தம் குறையும். அரை மணி நேரத்தில் வீக்கம் உண்டாகும். சுரம், தலைவலி முதலியன ஏற்படும். நடுக்கம் ஏற்படலாம். எத்தகைய முறிவு என்று காண எக்ஸ்கதிர்ப் படம் உதவி செய்யும்.

எலும்பு முறிவுடன் சில சிக்கல்களும் ஏற்படுவ துண்டு. முக்கியமானவை : 1. தமனியிலும் சிரையிலும் காயமோ வீக்கமோ ஏற்படலாம். ஊற்று நாடியில் வீக்கமும் அறுதலும் உராய்வும் உண்டாகலாம். எலும்பு முறிவு பூட்டிற்கு அருகிலிருந்தால் பூட்டு நன்றாக அசையாது. சுவாசப்பைகளில் இரத்தம் உறைந்து மூச்சுத் திணறலாம். இருமினால் இரத்தம் வரலாம். 2. எலும்பு முறிவுக்கு உடனே கட்டுக் கட்டி அசையாதிருக்கச் செய்யாவிட்டால் மச்சையிலுள்ள கொழுப்பு இரத்தத்துடன் சேர்ந்து மூச்சுத் திணறலையும் சுரத்தையும் உண்டாக்கும். 3. படுத்திருப்பதாலும், கட்டுக் கட்டுவதால் உண்டாகும் அழுத்தத்தாலும் புண் உண்டாகலாம். இது ஆறுவதற்கு நீண்ட நாளாகுமாதலால் புண் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 4. புண்ணில் கிருமிகள் சேர்ந்தால் ஊனழுகல் (Gangrene) உண்டாகும். அதற்காகப் புண்ணை நான்கு பக்கங்களிலும் வெட்டி எடுத்துப் புண் இல்லாத பிளவுபோல் தைக்கிறார்கள். பென்சிலின், சல்பானி லமைடு என்பவற்றை 4 மணிக்கு ஒரு தடவையாக மாற்றிக் கொடுக்கிறார்கள். 5. மது அருந்துபவர்க்கும் கடின வேலை செய்பவர்க்கும் எலும்பு முறியும்போது கையாட்டம், சன்னி, சித்தப்பிரமை உண்டாகலாம். 6. சதைகள் இரத்த ஓட்டமில்லாமல் சுருங்கிப்போவ துண்டு. இது கடுமையானது.

இவ்விதமான சிக்கல்கள் ஏற்படாமல் கவனிக்க வேண்டும். எலும்பு முறிந்தவுடன் கவனித்துச்

இரத்த ஓட்டமில்லாமல் வற்றிய முன்கை

சேர்த்து வைத்துக் கட்டின பின் 12 மணி நேரத்திற்குள் இரத்த ஓட்டம் நன்றாய் நடக்கிறதா என்று கவனிக்கவேண்டும். விரல்கள் வீக்கமில்லாமல் ஆட்டக் கூடியனவாகவும், உணர்ச்சி யுள்ளனவாகவும் இருக்குமாறு கவனித்துக்கொள்ளு தல் வேண்டும்.

பூட்டிற்கு முன்பாக இரத்த ஓட்டமில்லாமல் எலும்புபோல் முரடு கட்டிக் கொண்டு பூட்டினுடைய அசைவுக்குக் கேடு உண்டாகலாம். இது பொதுவாகக் குழந்தைகளிடம் முழங்கை எலும்பு முறிவினால் உண்டாகும். எலும்பு முறிந்த இடத்தைத் தேய்ப்பதாலும், பிறர் அதை அசைப்பதாலும் உண்டாகும். முறிவை அசைவில்லாமல் கட்டி வைத்துப் பிறகு நோயாளியே மெதுமாக அசைக்கவும், தேய்க்காமலிருக்கவும் செய்தால் இந்தச் சிக்கல் ஏற்டாது.

எலும்பு முறிவுக்கு முதல் உதவி : வீக்கம் வருமுன் சிகிச்சை செய்வது நல்லது. எக்ஸ்கதிர்ப் படம் எடுப்பது நலம். நோவு இல்லாமல் இருப்பதற்காக அந்த இடத்தில் புரோகேயின் 1% மருந்து ஊசி குத்தவேண்டும். அல்லது ஈதர் மயக்க மருந்து கொடுத்து முதல் உதவிக் கட்டைக் கட்டவேண்டும். புண் ஏற்பட்டிருந்தால் சுத்தமாகக் கழுவித் தைக்கவேண்டும்.

அசைவில்லாமல் செய்வதற்காகப் பாரிஸ் சாந்துக் கட்டுப் போடலாம். இழுப்பு அல்லது சன்னி வராமலிருப்பதற்கு ஊசி குத்தவேண்டும். எலும்புகள் சேர 8-12 வாரம் செல்லும். கட்டுக்கட்டின 12 மணி நேரத்துக்குள் கால், கை விரல்களை நன்றாகக் கவனிக்க வேண்டும். விரல் குளிராமலும், நிறம் மாறாமலும், அசைவுள்ளதாகவும் இருக்கவேண்டும். வீக்கம் உண்டாகாதிருப்பதற்காக அடிபட்ட பாகத்தை உயர்த்தி வைக்கவேண்டும்.

மூட்டு விலக்குகள் : மூட்டின் உறை கிழிவதாலும், அல்லது உறையில் நச்சு நீர் ஊறிப்போவதாலும் உண்டாகும் தசைகளின் இழுப்பால் மூட்டு விலகிவிடுகிறது. முதுகில் அடி விழுவதாலும், ஆழமில்லாத நீரில் தலைகீழாகக் குதிப்பதாலும் முதுகெலும்பு விலகும். இதனால் கைகால் தளர்ந்து மலச்சிக்கலும் மூத்திர அடைப்பும் உண்டாகும். ஈதர் மயக்க மருந்து கொடுத்து மூட்டை உள்ளே தள்ளவேண்டும். மூட்டு விலகாதிருப்பதற்காகக் கட்டுப்போடவேண்டும். வீக்கமும் கிழிவுகளும் ஆறுவதற்கு இரண்டு வாரமாகும். நோயாளி முதலில் தசைகளையும் விரலையும் ஆட்டவும், பிறகு மூட்டை அசைக்கவும் செய்யவேண்டும்.

விளையாட்டு விபத்துக்கள் : கிரிக்கட்டு, ஹாக்கி விளையாடுவோருக்கு முழங்கால் மூட்டின் பூட்டிற்குள் இருக்கும் சவ்வு கிழியலாம். அது ஒட்டிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து பெயரலாம். இவ்வாறு நேர்ந்தால் நடக்க முடியாது, விளையாட முடியாது. மூட்டிற்குள் நீர் வைக்கும். மூன்று வாரம் நடக்காமல் நான்குதலைத் தசை (Quadriceps) தளர்ச்சியடையா திருக்குமாறு பயிற்சி செய்ய வேண்டும்.

க்ஷய நோய் : க்ஷயக் கிருமிகள் எலும்பிலோ அல்லது மூட்டுச்சுரப்புச் சவ்விலோ (Synovial Membrane) சேர்ந்துகொள்வதுண்டு. தந்துகிகள் அறுந்து விடும். உடம்பில் கொதிப்பும் இரத்தக் குறைவும் பசியின்மையும் நிறைக் குறைவும் உண்டாகும். பொதுவாக இது தடுக்கக்கூடிய நோய். பெரும்பாலும் முதுகெலும்பில் உண்டாகும். முதலில் நோவு உண்டாகும். குனியக் கஷ்டமாயிருக்கும் எக்ஸ் கதிர்ப்படம் எடுத்துப் பார்க்கவேண்டும். நோவும் முதுகுப் பிடிப்பு மிருந்தால் உடனே சிகிச்சை செய்ய வேண்டும்.. இந்த க்ஷயநோய் தோள்பட்டைப் பூட்டு, முழங்கை மூட்டு, மணிக்கட்டு, கைவிரல் எலும்புகளின் பூட்டு, மார்பு எலும்பு, முழங்கால் பூட்டு, கணுப்பூட்டு, கால்கை சிற்றெலும்புகள், கால்விரல் எலும்புப் பூட்டு இவை களில் உண்டாகும்.

பொதுவாகக் காற்று, ஒளி, சத்தான உணவு நிறையக் கிடைக்கும்படி செய்யவேண்டும். நோயுள்ள உறுப்பை அசையாமல் வைக்கவேண்டும். இதற்காகத் தக்க பத்தை, பாரிஸ் சாந்து முதலியவைகளைப் பயன்படுத்தவேண்டும். பூட்டை அசைக்கவோ, தேய்க்கவோ, மடக்கவோ கூடாது. பொதுவாக உடம்பின் மேற்பகுதியிலானால் ஒன்றரை ஆண்டிலும், கீழ்ப் பகுதியிலானால் இரண்டு மூன்று ஆண்டுகளிலும் குணமாகும். நான்கு திங்கட்கு ஒரு முறை எக்ஸ் கதிர்ப்படம் எடுத்துப் பார்த்து வரவேண்டும். ஸ்ட்ரெப்டோமைசின் மருந்தை அரை கிராம் நாடோறும் ஊசிகுத்தி, கால் சியம் பாஸ் என்னும் மருந்தையும் கொடுத்து வந்தால் உடம்பு விரைவாகத் தேறுகிறது. கட்டு எடுத்தபின் ஐந்து ஆண்டுகள்வரை அடிக்கடி கவனிக்கவேண்டும். மூட்டில் நோய் வராதிருப்பதற்குப் பலவித ஆப்பரேஷன்கள் செய்வதுண்டு. சிகிச்சை சரியாகச் செய்தால் 90% குணமடைவார்கள். பார்க்க : க்ஷயம்.

இடுப்பு வலி வயதானவர்களுள் 50% பேர்க்கு நேரிடுவதுண்டு. சிறுவயதில் ஏற்பட்டால் முதுகு எலும்பில் க்ஷயம் உண்டா என்று சோதிக்கவேண்டும். இல்லையானால் நரம்புத் தண்டில் தசைப் பெருக்கம் இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். முதுகின் தசைகள் வலிமையற்றிருப்பது, வயிற்றின் தசைகள் வலிமையற்று முதுகின் தோலுக்குக்கீழ்க் கரடு கட்டியிருப்பது, எலும்புகள் திரும்பியிருப்பது போன்ற பல காரணங்களால் இவ்வலி ஏற்படும். இது பொதுவாக மிகுந்த கடினமான தொழில் செய்வார்க்கே நேர்கிறது. சைக்களிலிருந்து அல்லது சருக்கி வீழ்ந்தவர்க்கும் நேரும். ஆறுமாத காலம் படுக்கையில் இருந்தால் இந்தத் துருத்துதல் தானாக மறைந்துவிடும்.

தோள்பட்டை வலி இடப் பக்கம் ஏற்பட்டால் இருதயத்தையும், வலப் பக்கம் ஏற்பட்டால் கல்லீரலையும் பரிசோதித்து, அவற்றில் நோய் உண்டா என்று கவனிக்கவேண்டும். நீரிழிவு உள்ளவர்கட்கும், கீழே விழுந்து கையில் காயம்பட்டுத் தோள் பூட்டை அசைக்க முடியாமலிருக்கிறவர்கட்கும் இந்த நோய் ஏற்படலாம். மிகுந்த வலி உண்டாகும். எக்ஸ்கதிர்ப் படம் எடுத்துப் பார்த்து, எலும்பில் க்ஷயரோகம் இல்லாதிருந்தால் ஆழ்ந்து ஊடுருவும் எக்ஸ்கதிர்ச் சிகிச்சை செய்ய வேண்டும். மற்றவர்கட்குத் தசையை மெதுவாக உருவி, ஒவ்வோர் அசைவையும் ஒழுங்கான அளவுக்கு வருமாறு செய்ய வேண்டும். பூட்டைப் பயன்படுத்துமாறு வற்புறுத்தவேண்டும். வலியில்லாமல் இருப்பதற்காக ஆஸ்பிரின் மருந்து கொடுக்கலாம்.

எலும்புக்கீல் அழற்சி (Osteo arthritis) வயது முதிரும்போது கீல்முனைகளிலுள்ள குருத்தெலும்பு சிதறி எலும்பு தெரியலாம். நடக்கும்போதும் வேலை செய்யும்போதும் எலும்புகள் உராய்ந்து வலி உண்டாகும். பூட்டு வீங்கலாம். தசைகள் தளரும். இடுப்புப் பூட்டிலும் முழங்கால் பூட்டிலுமே 90% உண்டாகிறது. சிறுவயதில் ஏற்பட்டால் பூட்டில் நோயோ அல்லது பூட்டின் மேலும் கீழுமுள்ள எலும்புகளில் உடைவு அல்லது நோயோ ஏற்பட்டிருக்கவேண்டும். இந்தியாவில் 40 வயது மக்களிற் பெரும்பாலோர் நீரிழிவு உள்ளவர்களாகவும் முழங்கால் வலியுடையவர்களாகவுமிருக்கிறார்கள். இவர்கள் உடல் நிறை பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடக்கக் கஷ்டமாயிருந்தால் காலிப்பர் (Calliper) என்பதைக் கொடுத்து நடக்கவைக்கலாம். இடுப்புப் பூட்டின் வலி மிகுதியாயிருந்தால் ஆப்பரேஷன் சிகிச்சைகள் செய்யவேண்டும்.

உடம்பு பிடித்தல் (Massage) : அடிபட்ட பாகங்கட்கு இரத்த ஓட்டம் மிகுவதற்காக அப்பாகத்தைப் பிடித்து விடுவதுண்டு. இது அடிபட்ட பாகங்கட்கோ அல்லது அசைவற்றுப்போன பாகங்கட்கோ சிரையிலுள்ள இரத்தத்தை விரைவாக ஓடச் செய்வதற்குள்ள முறையாகும். இது இரத்தத்திலுள்ள மாசுகளை வெளியேறச் செய்து வீக்கத்தைக் குறைக்கிறது. அன்றியும் தசைகள் வன்மை குறையாமலிருந்து, காயம் குணமானபின் முன்போல் வேலை செய்யுமாறும் செய்கிறது. கணுக்களில் சவ்வு ஏற்படாமலும், இரத்த ஓட்டம் மிகுதியாக ஓடாமலும் செய்கிறது. உள்ளேயுள்ள உறுப்புக்கள் உற்சாகமாக வேலை செய்கின்றன. ஆனால் இம்முறையை நன்றாகக் கற்றவர்களே கையாளலாம். சூடுள்ள பாகத்திலும், க்ஷயரோகத்தால் உண்டான வீக்கத்திலும் பூட்டுக்களிலும் பிடிக்கக் கூடாது. எப்போதும் வைத்தியருடைய மேற்பார்வையில் செய்வது நல்லது.

உடம்பு பிடிப்பதில் பலவகைகள் உள்ளன: 1. பிழிதல் (Petrusage) : கையால் பலமுறை அடிபட்ட உறுப்பின் நுனியில் தொடங்கி அடிவரையிற் பிழிவதாகும். உறுப்பில் தேங்கும் மாசுகள் நெகிழ்ந்து வெளியேறும். இரத்த ஓட்டம் மிகும். 2. அடித்தல் (Tapotement) : உள்ளங்கையாலும், விரல்களாலும் அடிபட்ட இடத்தைச் சுற்றி விரைவாக அடித்தலாகும். இரத்த ஓட்டம் மிகும். 3. அழுத்திப் பிடித்தல் (Deep massage) : சில இடங்களில் நல்ல பயன்தரும். இதை அறியாமல் செய்தால் வலி மிகும். வைத்தியர் கூறுவதுபோல் செய்வதே நல்லது. வலியும் உணர்ச்சியும் இல்லாத வீக்கமுள்ள காயமாயிருந்தாலும், நரம்புகள் பின்னியிருந்தாலும் அழுத்திப் பிடித்தல் அவசியம். ஆனால் நரம்பு வீக்கமும், உணர்ச்சியில்லாத நோயும் இருந்தால் அழுத்திப் பிடித்தலாகாது. எலும்பு பற்றிய நோய்கள், எலும்பு முறிதல் போன்ற காயங்கள் இருந்தாலும் அழுத்திப் பிடிக்கக்கூடாது. பார்க்க : உடம்பு பிடித்தல்.

சுளுக்கு எடுத்தல் (Manipulation) :}} இது எல்லா நாடுகளிலும் நீண்டகாலமாக நடைபெற்று வரும் முறை. ஆனால் முறையைக் கையாளுமுன் நோய் இத்தகையது என்று அறிந்துகொள்ள வேண்டும். வைத்தியர்களே இவ்வாறு செய்யவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். சூடான பாகத்திலும், சீழ் வைத்த பாகத்திலும், இரத்தக்குழாய் நோய்களிலும், க்ஷயரோகத்தாலுண்டான எலும்புமூட்டு, தசைபற்றிய நோய்களிலும் இதைப் பயன்படுத்தலாகாது. உயிருக்கும் உறுப்புக்கும் கேடு உண்டாகும்.

இந்த முறையை ஒழுங்காகக் கையாண்டால் எலும்பு முறிந்த பாகங்களைச் சரிப்படுத்தலாம். மூட்டு விலக்குகளை உள்செலுத்தி, மூட்டைச் சரியான நிலைமையில் இருக்கச் செய்யலாம் ; விளையாட்டில் விபத்து ஏற்பட்டு, நடக்க முடியாதிருப்பவனை நடக்கும்படி செய்யலாம் ; வீக்கம் என்று எண்ணிப் பூட்டை அசைக்காமலிருக்கும் போது இப்பயிற்சியால் அசைவு கொடுத்துச் சரிப்படுத்தலாம். மட்டையாற் பந்தடிப்பதுபோல் முழங்கையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு உண்டாகும் நோயை நீக்கலாம்; பலவித இடுப்புப் பிடிப்புக்களையும் முதுகு வலியையும் போக்கலாம். என். எஸ். ந.