கலைக்களஞ்சியம்/இதயம்

விக்கிமூலம் இலிருந்து

இதயம் என்பது இரத்தத்தை உடல் முழுவதும் பரவும்படி செய்வதற்காக அமைந்த உறுப்பாகும். இரத்தமானது உயிர் நிலைத்திருப்பதற்கு இன்றியமையாது வேண்டப்படுவதால், அதை இடைவிடாமல் ஓடச்செய்யும் இதயம் எல்லா உறுப்புக்களிலும் மிகவும் ஏற்றமுடையதாகும். இது நெஞ்சறையினுள் இரண்டு நுரையீரல்களுக்குமிடையே ஒரு சவ்வுப் பைக்குள் அடங்கியிருக்கிறது. அந்தப் பையை இதய உறை (Pericardium) என்று கூறுவர்.

இதயம் கூம்பு வடிவினதாய் அடிப்பாகம் வலது தோளை நோக்கியும் நுனிப்பாகம் கீழிறங்கி இடது விலாப்பக்கம் 5-6 விலாவெலும்புகளுக்கு இடையிலுமிருக்கும். விலாவின் இடப் பக்கம் விரல்களை வைத்தால் இதயத் துடிப்புத் தெரியும். அவ்விடமே இதயத்தின் நுனி உள்ளது. அது மார்புக் காம்புக்கு (Nipple) 1 1/2 அங்குலம் கீழ் இருக்கும். இது கைமுஷ்டி அளவுள்ளதாய், சராசரி 5 அங்குல நீளமும், 3 1/2 அங்குல அகலமும், 2 1/2 அங்குலம் குறுக்களவும் உடையதாயிருக்கும். சிலருக்கு இதனினும் பெரியதாகவும், ஒருவருக்கே பல சமயங்களில் பல விதமாகவுமிருக்கும். பொதுவாக இதயத்தின் நிறை உடம்பின் நிறையில் 150-ல் ஒன்றாக இருக்கும். அதன் கொள்ளளவு பிறந்த குழந்தையிடம் 22 க. செ. மி. ஆகவும்,

இதயத்தின் நிலை

1, 1 நுரையீரல்கள்
2 இதயம்
3 இடது காறையடித்தமனி
4 இடது கழுத்துத்தமனி
5 மூச்சுக் குழல்
6 வலது கழுத்துத் தமனி
7 வலது காறையடித்தமனி

8 வலது நுரையீரலை அறுத்து, தமனி. வடிகுழாய். மூச்சுக்குழல் ஆகியவற்றின் கிளைகளைக் காட்டியிருப்பது.

பதினாறு வயது இளைஞனிடம் 150 –160 க. செ.மீ. ஆகவும் இருக்கும். பதினாறு வயதுக்குப்பின் பத்து ஆண்டுக்காலம் மிக விரைவாகப் பருக்கும். அதன் பின் மெதுவாக வளரும். இறுதியில் 50 வயது ஆணில் 290க.செ.மீ.ஆகவும், பெண்ணில் 266 க. செ.மீ.ஆகவும் காணப்படும். ஆணினுடைய இதயம் 11 அவுன்ஸ் நிறையும், பெண்ணினுடைய இதயம் 9 அவுன்ஸ் நிறையுமிருக்கும்.

இதயத்தைப் பொதிந்துள்ள உறையானது இதயம் நுரையீரல்களுடனும் நெஞ்சுடனும் உராயாமல் தடுக்க உதவுகிறது. உறையினகத்தேயுள்ள மெல்லிய சவ்விலிருந்து ஊறும் வழுவழுப்பான நீர் இதயம் விரிந்து சுருங்கும்போது உராயாமல் தடுக்க உதவுகிறது. இதயத்தின் சுவர்களில் இதயத்துக்கு இரத்தம் தரும் குழாய்கள் உள்ளன. இதயத்தின் தசைகள் கை கால்களிலுள்ள தசைகள் போன்ற இயக்குத் தசைகளுமல்ல, இரப்பையிலுள்ள தசைகளைப்போன்ற இயங்கு தசைகளுமல்ல.இவை ஒருவகைச் சிறப்பான தசைகள். இத் தசைகள் தாமாகத் தனித்து நின்று இயங்கும் தன்மையன. இதயத்தை வெளியே எடுத்துப் போஷித்து வந்தால் அது பல மணிநேரம் இயங்கிக்கொண்டிருக்கும். இதயத்தின் ஒரு சிறு துண்டு கூட அவ்வாறு செய்யும். இவ்வியக்கம் இதயத்தின் சைனோ ஆரிகுலர் நோடு (Sino auricular node) என்னும் ஒரு குறிப்பிட்ட பாகத்தினின்றே பிறக்கின்றது.

இதயம் நான்கு அறைகளாலாயது. அதன் உள்ளிருக்கும் ஒரு தசைச்சுவர் அதை இடப்பக்கம் வலப்பக்கம் என இரண்டாகப் பிரிக்கிறது. வலப்பக்கம் மேலறை (Right Auricle), கீழறை (Right Ventricle) என்று இரண்டு அறைகளாகவும், இடப்பக்கம் மேலறை (Left Auricle) கீழறை (Left Ventricle) என்று இரண்டு அறைகளாகவும் பிரிந்துள்ளன. வலப் பக்கத்தில் சற்று நீலங் கலந்த சிவப்பான அசுத்த இரத்தமும், இடப் பக்கத்தில் மிகச் சிவப்பான சுத்த இரத்தமும் காணப்படும். அறைகளுக்குள் திரைச்சீலை போன்ற சவ்வுகள் உள்ளன. அவற்றைக் கதவுகள் (வால்வுகள்) என்று கூறுவர். அவை முன்னுக்குப்போகும் இரத்தத்தைப் பின்னுக்குத் திரும்பவொட்டாமல் தடுக்கும். வலக்கீழறையிலுள்ள கதவு மூன்று முக்கோணப் பிரிவுள்ளது. அதனை மூவிதழ்க் கதவு என்பர். அது வலக்கீழறைக்கு வரும் இரத்தத்தைத் திரும்ப வல மேலறைக்குக் செல்லாதபடி தடுக்கும். இடக் கீழறையில் இரண்டு பிரிவுகளுள்ள ஈரிதழ்க் கதவு உண்டு. நுரையீரல் தமனியும் பெருந் தமனியும் முறையே வல இடக் கீழறைகளிலிருந்து புறப்படும் இடங்களில் பிறைவடிவான கதவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மூன்று ஒரே மட்டத்தில் அமைந்திருக்கின்றன. இவை அங்கியில் இருக்கும் பைபோல இருக்கின்றன. இரத்தம் அறைகளிலிருந்து தமனிக்குப் போகும்போது வழிவிடுகின்றன. இரத்தம் திரும்பிவருமானால் அது பைகளில் நிரம்பி, வழியடைந்து விடும்.

வல மேலறையும் இட மேலறையும் இரத்தம் வந்து வடியும் அறைகள். வலக் கீழறை இரத்தத்தை நுரையீரலுக்கும் இடக் கீழறை இரத்தத்தை உடம்பு முழுவதுக்கும் பாய்ச்சும் அறைகள். இரத்தம் வடியும் அறைகள் மெல்லிய தசைகளாலும், இரத்தம் பாய்ச்சும் அறைகள் தடித்த தசைகளாலும் அமைந்துள்ளன. கீழ் அறைகளுக்குள் இடக் கீழறையே இரத்தத்தை உடம்பு முழுவதும் பரப்பி ஓடும்படி செய்வதால் மிகவும் தடித்த தசைகளால் ஆக்கப் பெற்றிருக்கிறது. இடக் கீழறையின் தசைகள் வலக் கீழறையின் தசைகளைவிட மூன்று மடங்கு தடிப்புடையனவாகும். உடம்பிலுள்ள அசுத்த இரத்தமானது இரண்டு பெரிய சிரைகள் மூலம் வல மேலறைக்கு வருகிறது. மேலறை நிறைந்ததும் அது சுருங்குகிறது. அதனால் அங்குள்ள இரத்தம் கீழறைக்கு வருகிறது. கீழறை சுருங்கும்போது இரத்தம் நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்குச் செல்லுகிறது. அங்கு அது தன்னிடமுள்ள கார்பன் டை ஆக்சைடு நீங்கப்பெற்று, ஆக்சிஜனை ஏற்றுச் சிவந்த சுத்த இரத்தமாக நுரையீரல் சிரை வழியாக இட மேலறைக்கு வருகிறது. அவ்வறை சுருங்கும்போது சிவந்த இரத்தம் இடக் கீழறைக்கு வந்து நிறைகிறது. கீழறை சுருங்கும்போது இந்த இரத்தம் பெருந்தமனி (Aorta) வழியாக உடல் முழுவதும் பரவுவதற்காகச் செல்லுகிறது. இரத்தமானது இப் பெருந்தமனியில் பல கிளைகளின் வழியாகப் பிரிந்து, ஒவ்வோர் உறுப்புக்கும் சென்று, பற்பல தந்துகிகளாகப் பிரிந்து, இரத்தத்திலுள்ள ஆக்சிஜனையும் உணவையும் கொடுத்துவிட்டு, அசுத்தங்களைச் சுமந்து, மறுபடியும் தந்துகிகள் ஒன்றாகச் சேர்ந்து வடி குழாய்களாகின்றன. இறுதியில் பெரிய சிரைகள் வழியே வல மேலறைக்கு வந்து சேர்கிறது.

இவ்வாறு, இரத்த ஓட்டம் நடைபெறுவதற்காக இதயத்திலுள்ள மேலறைகள் இரண்டும் ஒரே காலத்தில் சுருங்குவதும், கீழறைகள் இரண்டும் ஒரே காலத்தில் சுருங்குவதும் நிகழ்கின்றன. மேலறைகள் சுருங்கும் நேரம் கீழறைகள் சுருங்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்காம். இந்த இரண்டு விதச் சுருங்குதல்களும் நிகழ்வதை இதயச் சுருக்கம் (Systole) என்று கூறுவர். இச் சுருங்குதல் நிகழ்ந்ததும், இதயம் அதே கால அளவுக்குச் சற்று விரிந்து இளைப்பாறுகிறது. இதை இதய விரிவு (Diastole) என்று கூறுவர். இவ்வாறு சுருங்குதல், விரிதல் ஆகிய இரண்டு செயல்களையும் கொண்டது ஓர் இதயச் சுற்று (Cardiac Cycle)என்பர். இவ்வாறு இதயம் ஒரு நிமிஷத்தில் 72 முறை சுருங்கி விரிகிறது. இதை நாடித்துடிப்பு (Pulse) என்றும் கூறுவர். ஒவ்வொரு கீழறையும் ஒரு துடிப்பில் 5 கன அங்குல இரத்தத்தை வெளியேறச் செய்கிறது. அதனால் இதயம் இருபத்துநான்கு மணிநேரத்தில் 120 டன் நிறையை ஒரு அடி உயரம் தூக்கக் கூடிய வேலையைச் செய்கிறது. உடம்பிலுள்ள 5 குவார்ட்டு இரத்தமும் இரத்தக் குழாய்களில் 12 ஆயிரம் மைல் ஒடி இதயம் வந்து சேர்கிறது. இரத்தம் இதயத்தைவிட்டு வெளியேறி, உடம்பில் ஓடி, மீண்டும் இதயம் வந்துசேர ஒரு நிமிஷ நேரம் ஆகிறது.

கருப்பையில் போய்க் கருத் தங்கியதுமே இதயம் உண்டாகத் தொடங்குகிறது. அப்போது அது ஒரு சிறு குழாய் போலிருக்கும். ஆனால் துடிப்பு ஒழுங்காக நடைபெறும். இது விரைவில் வளர்ந்து ஆறு வாரமாகும்போது அறைகளாகப் பிரிகின்றது. அப்போது அது கழுத்தினிடமே காணப்படும். பிறகு மெதுவாகக் கீழிறங்கி நெஞ்சில் வந்து அமைகின்றது. அதனுடன் இரத்தம் வலது மேலறையிலிருந்து இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து நஞ்சுக்கொடிக்குச் செல்லுகிறது. குழந்தை பிறந்த பின்னர் மேலறைகளுக்கு இடையேயுள்ள துவாரம் மூடிக்கொள்கிறது. பிறக்கும்போது இதயம் அவுன்ஸும், இரண்டு வயதில் 1 அவுன்ஸும், 16 வயதில் 7 அவுன்ஸுமிருக்கும். குழந்தைகளுடைய உடம்பில் இதயம் கிடைமட்டமாக இருக்கும். பிறகு அது வளரும்போதுதான் ஏறக்குறைய நிலைமட்டமாக ஆகின்றது. சிசுவின் இதயம் ஒரு நிமிஷ நேரத்தில் 120 தடவை துடிக்கும். ஏழு வயதாகும்போது 90 தடவை துடிக்கும். நன்றாக வளர்ந்த பின்னர் 72 தடவை துடிக்கும்.

உடல் வேலை செய்யும்போது அதற்கு அதிகமான ஆக்சிஜனும் உணவும் தேவை. அவ்விரண்டும் இரத்தத்தின் வாயிலாகவே கிடைக்கும். ஆகவே வேலை செய்யும்போது இதயமும் விரைவாக வேலை செய்கின்றது.

இதுபோலவே ஆகாய விமானத்தில் போகும்போது மேலேயுள்ள காற்றில் ஆக்சிஜன் குறைவாயிருக்குமாதலால் அப்பொழுதும் இதயம் விரைவாக வேலைசெய்யும். உணவு உண்டதும் சீரணம் நன்றாக நடைபெறுவதற்காக அதிகப்படி இரத்தம் சீரணக்கருவிகளுக்குத் தேவையாயிருப்பதால், இதயம் சாதாரணமாக வேலை செய்வதைவிட மூன்றிலொரு பங்கு கூடுதலாக வேலை செய்யும். கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கும் இரத்தம் தரவேண்டியிருப்பதால், கர்ப்பிணியின் இதயம் அரை

மடங்கு அதிகமாக வேலைசெய்யும். உடம்பில் காயமுண்டாகும்போது இரத்தம் வெளியே போய்விடுவதால், எஞ்சியுள்ள இரத்தம் பல அவயவங்களுக்குச் சென்று உதவுவதற்காக இதயம் விரைவாக வேலை செய்யும். கோபமுண்டானால் சண்டையிடவேண்டி

முக்கிய இரத்தக் குழாய்கள்

1. இருதயம் 2. இருதயத்தமனி 3. மேற்பெருஞ்சிரை 4. கீழ்ப்பெருஞ்சிரை 5. நுரையீரல்களைச் சார்ந்த குழாய்கள் 6. பெருந்தமனி 7. வலது கழுத்துத்தமனி 8. வலது கழுத்துச்சிரை 9. இடது காறையடித்தமனி 10. இடது காறையடிச்சிரை 11. வயிற்றைச் சார்ந்த குழாய்கள் 12. குடலைச் சார்ந்த குழாய்கள் 13. கல்லில் போர்ட்டல் சிரை 14. கல்லீரல் குழாய்கள் 15. கல்லில் சிரை 16. சிறுநீரகக் குழாய்கள் 17. இடுட்டத்தமனி 18. இடுப்புச்சிரை 19. தொடைத்தமனி 20. தொடைச்சிரை.

(Upload an image to replace this placeholder.)

வரும். அதற்கு இரத்தம் மிகுதியாகச் சில இடங்களுக்குச்

செல்லவேண்டும். ஆகையால் அச்சமயத்திலும் இதயம் படபடவென்று அடிக்கும்.

இத்தகைய வேளைகளில் விசேடமாகத் தேவைப்படுவது அளவுக்கு மிஞ்சிவிடாதிருக்குமானால் இதயம் துரிதமாக வேலைசெய்து உதவும். அதற்குக் கேடு ஒன்றும் நேராது. இவ்வாறு விரைவாக வேலைசெய்யும்போது இதயத்தின் துடிப்பு ஒரு நிமிஷத்தில் 72க்கும் அதிகமாயிருக்கும்.

நாம் வேலை செய்யாமல் படுத்து ஓய்வுகொண்டால் அப்போது இதயம் மெதுவாகவே வேலைசெய்யும். ஓய்வினால் ஒரு நாளில் 20 ஆயிரம் துடிப்புக்கள் குறையும் என்று கூறுவர்.

ஒருவருடைய இதயம் எந்த நிலைமையிலிருக்கிறது என்பதை அறியப் பலவித சோதனைகள் செய்வர். முதலில் நெஞ்சை அழுத்தி இதயத்தின் முனையைத் தொட்டுப் பார்ப்பர். முனையின் கிடக்கையைக்கொண்டு அதன் பருமனை அறிந்துகொள்வர். பிறகு இதயம் இருக்குமிடத்திற்கு நேராக நெஞ்சில் தட்டிப்பார்த்து இதயத்தின் உருவத்தை அறிந்துகொள்வர். அதன்பின் மார்பு சோதனி (Stethoscope) என்னும் கருவியை நெஞ்சின் மீது வைத்து இதயத்தின் துடிப்புச் சத்தங்களைக் கேட்பர். ஒவ்வொரு தடவை துடிக்கும்போதும் இதயத்தில் இரண்டு ஒலிகள் உண்டாகின்றன. தாழ்ந்த சுருதியான நீண்ட ஒலி லப் (Lubb) என்று ஒலிக்கும்; உயர்ந்த சுருதியான குறுகிய ஒலி டப் (Dup) என்று ஒலிக்கும். முதல் ஒலி கீழறைகள் சுருங்கும்போது கீழறை, மேலறைகளுக்கு நடுவிலிருக்கும் கதவுகள் மூடுவதாலும், இரண்டாவது ஒலி கீழறைச் சுருக்கம் முடிந்து அது விரியத்தொடங்கும்போது பெருந்தமனி வாயிலிருக்கும் பிறைவடிவக் கதவுகள் மூடுவதாலும் உண்டாகின்றன. இந்த ஒலிகளைக்கேட்டு இதயத்தின் நிலைமையை உணர்ந்துகொள்வர். சில வேளைகளில் மருத்துவர் எக்ஸ்கதிர்க் கருவிகளைக்கொண்டு இதயத்தைப் படம் பிடித்தும், அதன் நிழலைத் திரையில் விழச் செய்து பார்த்தும், அதன்பருமனையும் உருவத்தையும் துடிப்பையும் அறிவர்.

உடம்பில் மற்ற உறுப்புக்களைப் போலவே இதயமும் காயமுறுவதுண்டு. ஆயினும் அது நெஞ்சின் எலும்புக் கூட்டினுள் இருப்பதால் அக்கூடு அதற்குப் பாதுகாப்பு அளிக்கின்றது. நுரையீரல்கள் முன் பக்கம் தவிர மற்றப் பக்கங்களில் அணைகள்போலிருந்து பாதுகாக்கின்றன. ஆனால் அடி பலமாக விழுமானால் இதயத் தசைகளிலிருந்து இரத்தம் பெருகும். மிகுதியான இரத்தப் பெருக்கினால் பெருங்கேடு விளையும். கத்தியாலோ, குண்டாலோ உண்டாகும் காயம் உயிருக்கே அபாயம் தரும். அப்பொழுது வைத்தியர்கள் இரணசிகிச்சை செய்வர்.

கீல்வாத சுரமானது (Rheumatic fever) இதயத்தின் தசையைப் பலவீனப்படுத்தும், அல்லது கதவுகளை உருமாற்றிச் சரியாக அடைக்க வொட்டாதபடி செய்துவிடும். அப்பொழுது இதயம் அதிக வேலைசெய்ய வேண்டிவரும். அதனால் நாளடைவில் பலவீனமடையும்.

நிமோனியா, தொண்டையடைப்பான் (Diphheria)போன்ற தொற்றுநோய்கள் உண்டாகும்போது, நோய் நுண்மங்கள் உண்டாக்கும் நஞ்சு இதயத்தின் தசைகளைப் பலவீனப்படுத்தும். ஆனால், அந்த நோய்கள் குணமடையும்போது இதய பலவீனமும் நீங்கும்.

இரத்த அழுத்தமும், கிரந்திபோன்ற நோய்களும் இதயத்தைத் தாக்கலாம். இதய நோய் உண்டாய் விட்டது என்று தெரிந்தால் மக்கள் அச்சம் அடைகிறார்கள். பொதுவாக அப்படி அஞ்சவேண்டியதில்லை. நோயைக் குணப்படுத்தியோ, அது வராமல் தடுத்தோ நீண்ட காலம் வாழலாம்.

இதயம் நன்றாக இருப்பதற்குச் சுகாதார விதிகளின்படி நடப்பதே சிறந்த வழி. டீ. சி.

இதய நோய்கள் : இதயத்திற்கு மற்ற உறுப்புக்களைப் போல் இரத்தம் வேண்டும். இதயத் தசைக்குப் பெருந்தமனியிலிருந்து இரு தமனிகள் இரத்தங் கொண்டு போகின்றன. இவற்றிற்குக் காரனரித் தமனிகள் (Coronary arteries) என்று பெயர். இதயம் திடமாய் வேலை செய்வதற்கு இக் குழாய்கள் கேடுறாமல் இருக்கவேண்டும். சில நோய்களின் காரணமாக இவை நோயுற்று, இதயம் பலவீனமடைகிறது. முக்கியமாக நீரிழிவு நோயினால் இந் நிலை ஏற்படலாம். மேகக் கிரந்தி (Syphilis) நோயினால் பெருந்தமனி பாதிக்கப்படுவதால் அதிலிருந்து பிரியும் காரனரி தமனி அடைபட்டு, இதயத்திற்குப் போதுமான அளவு இரத்தம் போவதில்லை. அதிகமான இரத்த அழுத்தமுள்ளவர்களுக்குக் காரனரி தமனியின் வழியே இரத்தம் போதுமான அளவு போகாமலிருந்து, இதயம் நாளடைவில் வலுவிழந்துவிடும்.

இதயத்தில் இரண்டு விதமான நரம்புகள் உண்டு. அவைகள் பரிவு நரம்பு என்றும், துணைப் பரிவு நரம்பு என்றும் சொல்லப்படும். துணைப்பரிவு இயக்கம் சஞ்சாரி நரம்பின் வழியே இதயத்தை அடைகிறது. இந்த நரம்பை மின்சாரத்தால் இதயம் மெல்ல இயங்கும், அல்லது நின்றுவிடும். சில நரம்புகள் பெருந்தமனியிலிருந்தும் இடது மேலறையிலிருந்தும் மூளையின் முகுளத்தை அடைவதால், அங்கு மின்சாரத்தால் தூண்டினால் இரத்த அழுத்தம் குறையும். அப்பொழுது உடலில் பரவியிருக்கும் இரத்தக் குழாய்கள் அகன்று கொடுக்கும். பரிவு நரம்பின் வழியே மின்சாரத்தால் தூண்டினால், இதயம் வேகமாகச் செல்லும். இதயத்தைச் சுற்றிச் சவ்வு போன்ற ஒரு போர்வை இருக்கிறது. இது இதய உறை எனப்படும். இந்த உறை இதயத்தோடு ஒட்டியிருக்கும். இரத்தக் குழாய்களையும் சற்று மூடியிருக்கும். இதயம் அதிகமாகத் தளர்ந்து விடாமல் இதய உறை அதைக் காக்கிறது.

இதய நோய்களின் குறிகள் : நோயாளிக்கு இதய நோய் இருப்பதைக் கண்டுபிடிக்க, அவர் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்ட பின்புதான் நோய்க் கூறு தெளிவாகத் தெரியும். உடலைப் பரிசீலனை செய்து, இதய நோயைக் கண்டு பிடிப்பது 100க்கு 25 பாகமே இயலும். வேறு முறைகளில் 20 பாகம் கண்டுபிடிக்க முடியும். ஆனால் நோயாளி சொல்லும் குறைகளிலிருந்து 50 பாகத்திற்கு மேலேயே நோய் எத்தகையது என்று ஊகிக்க முடியும்.

இதய நோயின் முதன்மையான குறி மேல் மூச்சு. நுரையீரலில் நோய் இல்லாத ஒரு நோயாளி நடக்கும் போதோ வேலை செய்யும்போதோ மூச்சு வாங்குகிறது என்று சொன்னால் இதய நோயென்று நிச்சயிக்கவேண்டும். அதாவது ஒருவர் வழக்கமாக ஒரு வேலையைச் செய்யும்போது, இதுகாறும் அதனால் ஒருவிதமான தொந்தரவும் இல்லாமலிருந்தும், இப்பொழுது அதே தொழிலைச் செய்யும்பொழுது மேல் மூச்சு வாங்குகிறது என்றால் இதயத்தினுடைய பலவீனத்தினாலேயே என்று அறிய வேண்டும். காலில் வீக்கம் ஏற்படலாம். இந்த வீக்கம் உலாவிக் கொண்டிருக்கும்போது காலிலே காணும். படுத்தேயிருக்கும் நோயாளிக்கு முதுகிலும் இரு சந்துகளிலும் வீக்கம் அதிகமாகத் தோன்றும். அதாவது இதய நோய்களில் வீக்கம் ஏற்படும்பொழுது எந்தப் பக்கம் கீழே உள்ளதோ அங்கேயே வீக்கம் காணும். அதனாலேயே நடந்துகொண்டிருக்கும் நோயாளிக்குப் பாதங்களிலும், படுத்திருக்கும் நோயாளிக்கு முதுகிலும் வீக்கம் காணப்படுகிறது. உதட்டிலும், கை நகங்களிலும் இரத்த ஓட்டம் குறைந்து அவை கறுக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாகவும், கார்பன்டை ஆக்சைடு அதிகமாகவும் இருப்பதால் அவை இவ்வாறு தோன்றுகின்றன. மற்றும் சிலருக்குப் பலவீனம் அதிகமாகிச் சிரைகள் பருத்துக் காணப்படும். முக்கியமாகக் கழுத்திலுள்ள சிரைகள் இவ்வாறு தெரியும். மற்றும் சிலருக்கு வலி உண்டாகும்; மார்பு படபட வென்று அடிக்கும் ; இருமலும் உண்டாகும். காரனரி தமனி அடைத்துக் கொள்வதாலோ, இந்தக் குழாய்கள் கொஞ்சநேரம் சுருங்கியிருந்து இரத்தம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாலோ வலி ஏற்படுகிறது. இதனால் ஆஞ்சனா பெக்டரிஸ் (த. க.) என்னும் நோய் ஏற்படலாம். அல்லது இதய உறை கேடுற்றும் வலி ஏற்படும். தேகப் பயிற்சி செய்யும்பொழுது எல்லோருக்குமே மார்பு படபடவென்று அடிக்கும். ஆனால் இதய நோயுள்ளவர்களுக்குச் சும்மாவிருக்கும்பொழுதே இது ஏற்படும். வெறும் பயத்தினாலும் இது ஏற்படலாம். உதாரணமாக இருட்டிலோ அல்லது சரியான வெளிச்சம் இல்லாமல் இருக்கும்பொழுதோ ஒரு கயிற்றைப் பார்த்துப் பாம்பு என்று நினைத்து அஞ்சுவதால் எல்லோருக்குமே இதயம் படபடவென்று அடித்துக்கொள்ளும். சில சமயங்களில் மனக் கவலையாலும் இது ஏற்படலாம். அதனால் மார்பு படபடப்பு மட்டும் இருக்குமொருவனை இதய நோயுள்ளவன் என்று கருதலாகாது.

இதய நோய் உள்ளவர்களுக்கு நுரையீரலில் இரத்தம் தங்கி, இரத்தத்திலுள்ள நீர் பிரிந்து நுரையீரல் பைகளில் சேருவதால் இருமல் ஏற்படுகிறது. கொஞ்ச தூரம் நடந்தாலும், கொஞ்சம் பேசினாலும் சிறிது இருமல் ஏற்பட்டு அடங்கும். பழையபடி இதயத்திற்குப் பலம் வந்தவுடன் இந்த இருமல் மறைந்து விடும்.

இதய நோயினால் தூக்கமும் குறையலாம்; தூங்க முடியாமலும் போகலாம்.

இதய அறைகளில் இரத்தம் வந்து வெளியேறும் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் கதவுகள் பழுதடைந்து இதயநோய் தோன்றலாம். முக்கியமாகக் கீல்வாத சுரத்தினால் கதவுகள் பழுதாகின்றன. இப்போது கதவுகளைத் தவிர இதயத் தசைகளும் இதய உறையும் பழுதடையும்.

இதய நோய்கள் பிறவியிலேயே ஏற்படலாம். அல்லது பிறந்த பின்பு நோயினால் இதயத்திற்குக் கேடு ஏற்பட்டு உண்டாகலாம். பிறவியிலேயே இதயத்தின் அமைப்புச் சாதாரணமாக இல்லாவிடினும் அதனால் ஒருவகைக் கேடும் ஏற்படாமல் இருக்கலாம். உதாரணமாக இடப் புறம் இருக்கும் இதயம் மிகச் சிலருக்கு வலப் புறம் இருக்கலாம். அதனால் அவர்களுக்கு யாதொரு தொந்தரவும் ஏற்படாது. சில சமயங்களில் பிறவிக் கோளாற்றின் கடுமையால் பிறந்த குழந்தை உயிரோடு இருப்பதே இயலாது போய்விடும். உதாரணமாக இதயத்தில் இடது கீழறை இல்லாமலேயே இருக்கலாம். அல்லது வலது கீழறை இல்லாமலேயே இருக்கலாம். இவ்வாறு பிறக்கும் குழந்தை விரைவில் இறந்துவிடும். மற்றும் சில சமயங்களில் இதயத்தில் கோளாறு இருந்தும், குழந்தைப் பருவம் அல்லது வாலிபப் பருவம் வரை அது உயிரோடு இருக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கலாம்.

முக்கியமாகக் காணப்படும் பிறவிக் கோளாறுகள்:

திறந்த குழாய்த் தமனி (Patent Ductus Arteriosus): பெருந் தமனியையும், நுரையீரல் தமனியையும் இணைக்கும் குழாய் ஒன்றுள்ளது. இது குழந்தை பிறந்த சிறிது காலத்திற்குள் மூடிப்போய்விடுகிறது. இப்படி மூடிக்கொள்ளாவிட்டால், இதய உள் அறை நுண்மங்களால் தாக்கப் பெற்று, இதய உள்ளுறை நுண்ம அழற்சி (Bacterial endocarditis) என்ற நோய் தோன்றும். இந்த நோயுள்ளவர்கள் நாளடைவில் பலம் குன்றிச் சோர்வடைகிறார்கள். இதனால் இடது கீழறை மிகுதியாக வேலை செய்ய நேர்கிறது. இக்காரணத்தினால் நாளடைவில் இதயம் பலவீனமடைந்து ஆயுள் குறைகிறது. இந்த நோயுள்ளவர்களைப் பரீட்சை செய்து பார்க்கும்போது, இடப் பக்கத்தில் மார்பெலும்பிற்கு அருகில் இரண்டாவது விலா எலும்பு, மார்பெலும்போடு சேருமிடத்தில் இதய ஓட்டத்தின் ஒலி கேட்காமல் எந்திரம் ஓடுவதுபோன்ற ஒலி கேட்கும். இந்த ஒலி இதயம் சுருங்கும்போது பலமாகவும், தளரும் போது குறைவாகவும் இருக்கும். இந்த ஒலி எந்திர முணுமுணுப்பு (Machinery murmur), குடைவில் ஓடும் ரெயிலின் முணுமுணுப்பு (Train in the tunne1 murmur), சுழலும் பம்பர முணுமுணுப்பு (Humming top murmur) என்று பலவகைகளாக அழைக்கப்படும். சாதாரண இதய ஒலியைப்போலன்றி, இது தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் இருக்கும். அதாவது சாதாரண இதயச் சத்தங்களைப் போல் இல்லாமல், ஓயாமலும் அதிகச் சத்தத்தோடும் ஒரு சத்தம் உண்டாகிறது என்பதே.

ஆப்பரேஷன் செய்வதால் இந்த நோய் பூரணமாகக் குணமாகலாம். இந்த நோயோடு இதய உள்ளுறை நுண்ம அழற்சியும் ஏற்பட்டால், ஆப்பரேஷன் செய்தே ஆகவேண்டும். இந்த நோயினால் இடது கீழறை பலவீனமடைந்து, அது தன் வேலையைச் சரிவரச் செய்யாவிட்டாலும் ஆப்பரேஷன் செய்யவேண்டும்.

நுரையீரற் சுருக்கம் (Pulmonary spenosis) : இந்த நோயினால் நுரையீரலுக்கு இரத்தத்தைச் செலுத்தும் தமனிகள் குறுகித் தடைப்பட்டு விடும். அல்லது அவற்றின் கதவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு, சிறு துவாரம் இருந்தாலும் நுரையீரலுக்குச் செல்லும் இரத்தம் குறைந்துவிடும். இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து, உதடும் நகங்களும் கறுத்துவிடும். விரல்கள் பருக்கும். இந்த நோயின் விளைவாக நுரையீரலுக்குப் போதுமான அளவு இரத்தம் இல்லாததால் க்ஷயமும் உண்டாகலாம். சிறு குழந்தைக்கு இந்நோய் கண்டால் அது நெடுநாள் பிழைத்திராது; ஐந்து அல்லது பத்து வயதிற்குள்ளேயே இறந்துவிடும். இந்த நோயோடு மற்றும் சில நோய்கள் சேர்ந்து காணப்படுகின்றன. பெருந் தமனி வலப்பக்கமிருந்து புறப்படலாம். இதனால் அசுத்த இரத்தம் பெருந்தமனியின் வழியாக உடம்பின் பல பகுதிகளுக்குக் கொண்டுபோகப்பட்டு, அங்குக் கருநிறம் ஏற்படக் கூடும். வேறு சிலருக்கு இடது கீழறை பெரிதாக இல்லாமல் வலது கீழறை பெரிதாக இருக்கும். இரு கீழறைகளையும் பிரிக்கும் இடைச் சுவரில் பிளவுகள் இருப்பதும் உண்டு. ஆப்பரேஷன் செய்து, வேறு இடத்திலுள்ள முக்கியமான தமனியை நுரையீரலுக்குச் செல்லும்படி செய்தால், உதடுகளிலும் விரல் நகங்களிலும் காணப்படும் கருநிறம் மாறி, நோயாளிகளுக்கு முன்னிலும் அதிகமாக வேலை செய்யும் ஆற்றல் உண்டாகும்.

கீழறை இடைச்சுவர்க் குறை (Inter-ventricular septal defect) மேற்சொன்ன நோய்களில் இருக்குமளவு ஆபத்து இதில் இல்லை. இதனால் ஆயுள் குறைவதில்லை. வேறு ஏதாவது நோய்க்காகப் பரீட்சிக்கும் போது இத்தகைய கேடும் இருப்பது தெரியவரும். பரீட்சை செய்யும்போது இடப்பக்கத்தில் ஐந்தாவது விலா எலும்புக்கு அடியிலும் மார்பெலும்பிலிருந்து இரண்டு அங்குல தூரத்திலும் ஒருவகை ஒலி கேட்கும். இந்த ஒலி இதயம் சுருங்கும்போதெல்லாம் கேட்கும். இதற்குச் சுருக்கமுணுமுணுப்பு (Systolic murmur) என்று பெயர்.

மேலறை இடைச்சுவர்க் குறை (Auricular septal defect) : இதிலும் அதிகமான தொந்தரவு கிடையாது. இந்தக் குறையால் இதய உள்ளுறை கீல்வாத அழற்சி (Rheumatic endocarditis) ஏற்படலாம். இந்த நோயினால் பெண்களின் ஆயுள் குறைவதில்லை. ஆனால் பிரசவ காலங்களில் இதயம் பலவீனமடைவதால் இந்நோயுள்ள பெண்களுக்கு மூன்று அல்லது நான்கு பிரசவத்திற்குமேல் உண்டாகாமல் இருப்பது நலம். இந்த நோயினால் வலது கீழறை இயற்கையளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேர்வதால், அது நாளடைவில் வலுக் குறைந்து மரணம் ஏற்படலாம்.

பிறந்தபின் தோன்றும் இதய நோய்கள் கீல்வாத சுரம், மேகக்கிரந்தி, டிப்தீரியா, கபவாத சுரம், டைபாயிடு முதலிய தொற்று நோய்களினால் விளைபவை. கீல்வாத சுரமே முக்கியமாக இதய நோய்களுக்குக் காரணமாகும். கீல்வாத சுரத்தினால் இதய உறை, இதயத் தசை, இதயக் கதவுகள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இதய உறை கேடுறுவதால் மார்பு வலி தோன்றும் ; இதயத்தைச் சுற்றிக் கெட்ட நீர் சுரந்து சேரும். இதனால் இதயம் வலிவிழக்கும். தொடக்க நிலையில் இதயத்தைப் பரிசீலனை செய்தால் தோல் உரிப்பது போன்ற ஒலி கேட்கும்.

இதயத் தசைக் கீல்வாத அழற்சி (Rheumatic Myocarditis): இதில் கீல்வாத சுரத்தினால் இதயத்தசைகளில் கீல்வாத நுண்மங்கள் தங்கி இதயத்தசைக்கு வலுக்குறைவு ஏற்படுகிறது. இதனால் நோயாளி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எல்லா நோய்களைக் காட்டிலும் இந்த நோயாலேயே அதிகமான கேடு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு முக்கியமாகக் கீல்வாத சுரம் கண்டவுடன் அதை விரைவில் நன்றாகக் குணப்படுத்த வேண்டும். நோயின் வேகம் முழுவதும் அடங்கும் வரை நோயாளியைப் படுக்கையிலேயே வைத்திருக்கவேண்டும். இதயக் கீல்வாத அழற்சி கண்ட பிறகு சிகிச்சை அவ்வளவு பயன் தராது. ஏனென்றால் நோய் நுண்மங்கள் தசைகளை அழித்துவிடுகின்றன. இதனால் நோயாளிக்கு வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது.

கீல்வாத சுரத்தினால் இதயக் கதவுகளில் நோய் காணலாம். இதயத்தில் நான்கு முக்கியமான கதவுகள் இருக்கின்றன. அவற்றில் ஈரிதழ்க் கதவுகளும், பெருந்தமனிக் கதவுகளும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. கதவுகளை மட்டும் நோய் பாதித்தால் அதிகமாகக் கேடு உண்டாவதில்லை. ஆனால் தசைகளைப் பாதிக்கும் போது பலவீனம் ஏற்பட்டு, நோயும் அதிகமாகக் காண்கிறது.

மேகக்கிரந்தி நோயினால் பெருந்தமனி பாதிக்கப்படுகிறது. இந் நோய் நுண்மங்கள் பெருந்தமனியிலிருக்கும் ரப்பர் போன்ற திசுவை அழித்து விடுகின்றன. இதனால் இத்தமனி உருமாறி அகன்று விடுகிறது. இந்த உருமாற்றம் தமனியின் முதற் பாகத்திலும், இரண்டாவது பாகத்திலும், மூன்றாவது பாகத்திலும் காணப்படலாம். முதல் பாகத்தில் காணப்பட்டால் பரிசீலனை செய்து கண்டுபிடிக்க முடியும். இரண்டாவது பாகத்தில் ஏற்பட்டால் நோயாளியின் குறைகளிலிருந்து கண்டுபிடிக்க முடியும். மூன்றாவது பாகத்தில் இருந்தால் நோயாளிக்கு ஒருவிதமான தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம். எக்ஸ்-கதிர்ப் படம் பிடித்துத்தான் இது இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மேகக்கிரந்தி, தொடக்க நிலையில் உள்ளபோதே சரியான சிகிச்சை செய்தால் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம். பெருந்தமனியில் நோய் கண்டபிறகு எவ்வளவு சிரத்தையாக வைத்தியம் செய்தாலும் அதிலிருக்கும் ரப்பரைப் போன்ற திசுவுக்குக் கேடு நேராமல் தடுக்க இயலாது. ஆனால் சிகிச்சையின் பலனாக வலி குறையலாம். அப்போது போதுமான அளவு பெனிசிலின் கொடுத்து, அந்த நோயை ஓரளவு கட்டுப்படுத்தி விடுகிறார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து இலட்சம் அலகு பெனிசிலின் விகிதம் பதினான்கு நாளுக்குக் கொடுக்கவேண்டும். பிறகு அதே அளவு பெனிசிலினை வாரம் ஒரு முறை கொடுத்து, மற்றும் இன்னொரு முறை பதினைந்து நாள், நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் அலகுகள் பெனிசிலின் கொடுக்க வேண்டும். இரத்தப் பரிசோதனை செய்து, இரத்தம் சுத்தமாகும்வரை பெனிசிலின் கொடுத்து வரவேண்டும்.

வேறு வகைத்தொற்று நோய்களாலும் இதயத்திற்குக் கேடு ஏற்படலாம். இவைகளிலும்கூட நோயைச் சரியாகக் கவனித்து வந்து, நோயின் வேகம் அடங்கும்வரை படுக்கையிலேயே வைத்திருந்தால் இதயத்திற்குக் கேடு ஏற்படாமல் நலன் உண்டாகலாம். தொற்று நோய் இருக்கும்போது நடப்பதாலும், உடற்பயிற்சி செய்வதாலும், போதுமான அளவு ஓய்வு இல்லாமல் இருப்பதாலும் இதயத்திற்கு வேலை அதிகமாகி இதயம் கேடுறுகிறது. முக்கியமாக டிப்தீரியா கண்டவர்கள், நோய் கண்டு குணமான பிறகு வெகு நாள்வரை ஓய்வெடுக்க வேண்டும். இந்த நோயினால் நச்சு நீர் சுரந்து, இதயத் தசைகள் மிகவும் பலவீனப்பட்டு விடுகின்றன. ரெ.சு.

இதய ரணசிகிச்சை : இதயம் பற்றிய ரணசிகிச்சை முறை மிகுந்தமுன்னேற்றமடைந்திருப்பதால், இதயநோயாளிகள் துன்புற்று இறவாவண்ணம் அவர்களுக்கு ஓரளவு உதவி அளிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுளது. இதயம் உள்ள நிலைமையை அறிவதற்குச் சிறந்த முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதய ரணசிகிச்சை நான்கு வகையான சந்தர்ப்பங்களில் பயன்பட்டு வருகின்றது: 1. போர்க்களத்தில் இதயத்தினுள் சென்றுவிட்ட குண்டுகளை எடுத்துக் குணப்படுத்துகிறார்கள். 2. இதயத்திலுள்ள கதவுத் தொளைகள் குறுகிவிட்டால், அதை நீக்க இதுவரை மருத்துவச் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டுவந்தது. இப்போது ரணசிகிச்சையால் குணப்படுத்தத் தொடங்கியுள்ளனர். விரலை உள்ளே செலுத்தி விரிக்கலாம். அல்லது கத்தியை நுழைத்துக் கதவை நறுக்கலாம். ஆயினும் இப்போது ஆலன் என்பவரும் கிரஹாம் என்பவரும் கண்டுபிடித்துள்ள 'இதயங்காட்டி' (Cardioscope) வாயிலாகக் கண்ணால் பார்த்துக்கொண்டே இந்தச் சிகிச்சையைச் செய்யலாம். சில குழந்தைகளினுடைய உடம்பில் நுரையீரலுக்குச்செல்லும் தமனி குறுகி யிருப்பதால் இதயத்திலிருந்து தூய இரத்தம் நுரையீரலுக்குப் போதுமான அளவு போவதில்லை. அப்போது குறுகிய பாகத்தைத் துண்டித்து விட்டுப் பொருத்தித் தைத்துத் தூய இரத்தம் போகுமாறு செய்கிறார்கள். 3. ஆஞ்சனாபெக்டரிஸ் என்னும் மார்புவலி நோய் ஏற்பட்டால், இதயத்தின் தசைகளுக்கு இரத்தம் போவது சிறிது சிறிதாகக் குறைந்து போகும். இந்த நோயுள்ளவருக்கு முதுகு பக்கம் பரிவு நரம்பு அணுத்திரளின் மேற்பாகத்தை வெட்டும் ரணசிகிச்சை செய்து துன்ப நீக்கம் தரலாம். 4. இதயம் பழுதாய்ப் போனால் செயற்கை இதயம் செய்து, அகத்தே வைத்து, இதய வேலையைச் செய்யுமாறு செய்துவிட்டு, நோயாளியின் இதயத்துக்கு ஓய்வு கொடுக்கவும் பழுதுபார்க்கவும் மேனாடுகளில் வகை கண்டுள்ளனர். இவ்வகைச் சிகிச்சை இந்தியாவில் இன்னும் தொடக்க நிலையிலேயே இருந்து வருகிறது. சீ. ரா.

இதயத் தமனி அடைப்பு (Coronary Thrombosis) : இந்த நோயால் இதயத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனியில் இரத்தம் ஓடாமல் இறுகிக் கட்டியாகி வழி அடைத்துப் போகிறது. அதனால் இதயத் தசைக்கு இரத்த ஓட்டமில்லாமல் போவதால், இரத்தம் பாய வேண்டிய இடங்களில் தசைகள் அழிந்து விடுகின்றன. ஆகவே நாளடைவில் அழிந்த தசைப் பகுதிகள் மறைந்து, இதயம் சரியாக வேலை செய்ய முடியாமல் பலவீனப்பட்டுப் போய்விடுகிறது. இந்த நோய் முக்கியமாக நீரிழிவு உள்ளவர்களுக்கும், இரத்த அழுத்தம் அதிகமாயுள்ளவர்களுக்கும் ஏற்படும். சாதாரணமாக நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இது ஏற்படும். ஆனால் சில சமயங்களில் சிறு வயதிலும் ஏற்படலாம். அப்படி ஏற்படுமாயின் சிறு வயதில் ஓர் இரத்தக் குழாய்க்கும் மற்றோர் இரத்தக் குழாய்க்கும் இணைப்புக் குறைவாயிருப்பதால் நோயாளி பிழைப்பது அரிது. வயது முதிர முதிர இரத்தக் குழாய்களில் கிளைகள் உண்டாகி இணைப்பு மிகுவதால், ஓர் இரத்தக் குழாய் அடைப்பட்ட போதிலும் மற்றோர் இரத்தக் குழாயிலிருந்து இரத்தம் வேண்டிய இடங்களுக்குப் போய்க் கொண்டிருக்கும். ஆகவே, நோயினால் கேடு ஏற்பட்டாலும் மரணம் சீக்கிரமாக ஏற்படுவதில்லை. இந்த நோய் ஒருமுறை கண்டால் மேலும் மேலும் காணலாம்.

நோய்க் குறிகள்: இந்த நோய் கண்டவுடனே அநேகமாக மார்பிலும், இதயத்திற்கு முன்பக்கத்திலும் வலி ஏற்படும்; பொறுக்க முடியாத வலி இருக்கும். ஆனாலும் சிலருக்கு அதிக வலி உண்டாவதில்லை. மிகச் சிலருக்கு வலியே இல்லாமலும் இருக்கலாம். மார்பில் வேதனை அநேகமாக இருந்தாலும், சிலருக்கு இது வலப்பக்கத்திலேயே காணலாம். மற்றும் சிலருக்கு இடக்கையிலே தோளிலிருந்து சிறுவிரல் வரையில் வலி உண்டாகலாம். சிலருக்கு வலக்கையில் வலி இருக்கலாம். சிலருக்கு முதுகிலே வலி இருக்கலாம். சிலருக்கு வயிற்றின் மேல்பாகத்தில் வலி இருக்கலாம். இப்படி வயிற்றின் மேல்பாகத்தில் வலி இருக்கும்போது, இதைக் குடல் சம்பந்தமான நோய் என்று தவறாக எண்ணி ஆப்பரேஷன் செய்ய நேரலாம். அதிலும் வயிற்றில் வலி ஏற்பட்டு, வாந்தியும் குடல் புரட்டலும் இருந்துகொண்டிருந்தால் இம்மாதிரித் தவறு ஏற்பட்டு விடுகிறது. இந்த வலியைப் பொறுக்க முடியாமல் நோயாளி படுக்கையிலே சிறிது நேரங்கூட அமைதியாக இல்லாமல் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குப் புரண்டு கொண்டே இருப்பான். அவன் இருக்கும் நிலையை அதிர்ச்சிநிலை (State of Shock) என்று சொல்லுவார்கள். அதனுடன் நெற்றியிலும் வியர்வை காணப்படும். நாடியும் பலம் குன்றியிருக்கும். இந்த நிலையில் இரத்தம், இதயம், நுரையீரல், மூளை ஆகிய முக்கியமான அவயவங்களுக்கு மட்டுமே போகிறது. மற்ற அவயவங்களுக்கு இரத்தம் மிகக் குறைவாகப் போகிறது. ஆகவே முக்கியமான அவயவங்கள் பாதுகாக்கப்பட்டு, மற்ற அவயவங்களுக்கு இரத்த ஓட்டம் மிகவும் குறைந்து விடுகிறது. அவற்றில் இரத்த ஓட்டமே இராது எனலாம். நாடியின் துடிப்பு மிகுதியாகி ஒரு நிமிஷத்திற்குச் சாதாரணமாக இருப்பதுபோல் எழுபத்திரண்டு இல்லாமல் நூற்றுக்கு மேற்பட்டே இருக்கும்; வாந்தியும் எடுக்கலாம்; புளி ஏப்பமும் ஏற்படலாம். அதோடு இருபத்து நான்கு மணி நேரத்தில் இலேசான சுரமும் தோன்றலாம். அதே சமயத்தில் நுரையீரல்களில் சிறிது கோழை ஏற்பட்டுக் கபவாத சுரம்போல் காணலாம். மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். இந்தச் சிரமம் நோய் குணமாகும்வரையில் இருந்துகொண்டே இருக்கும்.

நோய்க் கூறு: திடீரென்று மார்புநோய் கண்டு, அமைதியில்லாமல் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டு இருந்தால் இதயத் தமனி அடைப்பு என்று கருதப்படும். அதிலும் இரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வந்தாலும், வலி கண்டு இருபத்து நான்கு மணி நேரத்திற்கெல்லாம் இலேசாகச் சுரம் கண்டாலும், இரத்த வெள்ளணுக்கள் அதிகரித்தாலும், அதிர்ச்சி ஏற்பட்டாலும் இந் நோய் என்றே கருத வேண்டும்.

இந்த நோயை வயிற்று நோய் என்று தவறாக எண்ணக்கூடும். ஆனால் வயிற்று நோயால் வலியும் வாந்தியும் ஏற்பட்டாலும்கூட, நாடி குறைவதில்லை. இரத்த அழுத்தம் குறைந்து வருவதில்லை. வயிற்றுநோய் என்றால் இரைப்பையில் அல்லது குடலில் புண் ஏற்பட்டுத் துவாரம் உண்டாகி, வயிற்றில் காற்றுச் சேர்வதால் ஈரல் இருக்குமிடத்தைத் தட்டிப் பார்க்கும்பொழுது, ஈரல் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாமற் போய்விடும். அந்தமாதிரி இந்த நோயினால் ஏற்படுவதில்லை. வயிற்று நோயினால் வயிற்றின் மேலிருக்கும் தசைகள் பலகை போல் கெட்டியாகும். அம்மாதிரியும் இந்நோயினால் ஆவதில்லை. நுரை யீரல்களில் ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு நோயைக் கண்டுபிடித்து விடலாம்.

இந் நோயைக் கண்டு பிடிப்பதற்கு முக்கியமாக மின்சார இதயங் காட்டி (Electro-cardiograph) என்ற கருவியால் பரீட்சை செய்து, அது தோற்றுவிக்கும் சில மாறுதல்களைக் கண்டு இந் நோயை அறிய இயலும்.

சிகிச்சை: முக்கியமாக நோயாளியைப் படுக்கவே வைத்திருக்க வேண்டும். எவ்வளவு விரைவில் வலியை அடக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் அடக்க வேண்டும். அப்படி வலியை அடக்கிவிட்டால் அதிர்ச்சி ஏற்படாது. அதிர்ச்சி ஏற்படாவிட்டால் மரணமும் ஏற்படாது. இதற்காக மார்பியா ஊசி போட வேண்டும். முதலில் இருபத்து நான்கு மணி வரையில் பார்லி நீர் அல்லது குளூக்கோஸ் நீர் கொடுக்கவேண்டும். ஒரு வாரம் கழிந்த பின்னர் வேண்டுமானால் சோறு முதலிய உணவு கொடுக்கலாம். சீரணசக்தி தரும் மருந்துகளும் கொடுக்கலாம். மூச்சை உட்கொள்ள உதவியாக ஆக்சிஜனைக் கொடுக்கலாம். மலம் போகாவிட்டால் முதல் நாற்பத்தெட்டு மணி நேரம்வரை ஒன்றும் செய்யக்கூடாது. நாற்பத்தெட்டு மணி நேரம் கழித்தும் மலம் போகாவிட்டால் வஸ்தி வைத்து மலப்பிரவர்த்தி செய்விக்கலாம். நோய் கண்டு ஆறு வாரம்வரை படுத்தே இருக்கவேண்டியது மிக முக்கியமானது. படுக்கையில் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் திரும்பவேண்டுமென்றாலும் பக்கத்திலிருப்பவர்களே திருப்பவேண்டும். உணவையும் மற்றவர்களே வாயில் கொடுக்கவேண்டும். நோயாளி எந்த வேலையையும் தானே செய்துகொள்ளக் கூடாது. இப்படி ஆறு வாரம் கழிந்தபின் வெகு சாக்கிரதையாகப் படுக்கையிலேயே உட்கார வைக்கலாம். அப்படி ஒரு வாரம், இரண்டு வாரம் சென்றபின் சம தரையில் நடக்கவும் அனுமதிக்கலாம். ஆனாலும் இந்த நோய் ஒருமுறை கண்டால் அவ்வாறு கண்டவர்களைப் படிக்கட்டின்மேல் ஏறிச் செல்வதற்கோ அல்லது அதிகச் சிரமமான வேலை செய்வதற்கோ அனுமதிக்கக் கூடாது. மூச்சுவிடச் சிரமம் இல்லாமல் எந்தெந்த வேலை செய்ய முடியுமோ அந்தந்த வேலையைச் செய்யலாம். கூடியவரை வாரத்திற்கு ஒருநாள் முழுவதும் படுத்தே இருக்கவேண்டும். இரவிலும் மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் சிறிது அதிகமாகப் படுத்திருக்கவேண்டும். பகலிலும் அரை மணியிலிருந்து ஒரு மணிவரை ஓய்வு கொள்ளுதல் நலம்.

நோய் முடிவு: சில சமயங்களில் நோய் கண்டவுடனேயே சாவு ஏற்படலாம். திடீரென்று சாவு நேர்வதற்கு இந்த நோயே காரணம். மற்றும் சிலருக்கு நோய் கண்ட சில மணி நேரத்திற்கெல்லாம் சாவு ஏற்படலாம். மற்றும் சிலருக்கு நோய் கண்ட சில நாள் கழித்தே சாவு ஏற்படும். இருந்தாலும் 100க்கு 50க்கும் மிகுதியானவர்களுக்கு மறுபடியும் வேலை செய்யக்கூடிய சக்தியுடன் குணம் ஏற்படலாம். ஆயினும்,மேலே சொன்ன நிபந்தனைகளை அனுசரிக்காவிட்டால் இதயம் வலிமை யிழந்து சாவு நேரும். ரெ. சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இதயம்&oldid=1463253" இலிருந்து மீள்விக்கப்பட்டது