நளவெண்பா/கலிதொடர் காண்டம்/பாடல் 169 முதல் 220

விக்கிமூலம் இலிருந்து


நளன் தமயந்தியுடன் தன் நாடு சென்றமை[தொகு]

169. தவளத் தனிக்குடையின் வெண்ணிழலுந் தையல்

குவளைக் கருநிழலுங் கொள்ளப் - பவளக்

கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்

செழுந்தேரி லேறினான் சென்று.

நளன் தமயந்திக்கு வழியில் பல காட்சிகளைக் காட்டுதல்[தொகு]

170. மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடையப்

பொங்கி யெழுந்த பொறிவண்டு - கொங்கோடு

எதிர்கொண் டணைவனபோ லேங்குவன முத்தின்

கதிர்கொண்ட பூண்முலையாய் காண்.

171. பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே

பூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்

பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்

மின்னெடுவேற் கையான் விரைந்து.

172. மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்

பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்

காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே

வேர்த்தாளைக் காணென்றான் வேந்து.

173. புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்

செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்

அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்

செம்மலரில் தேனே தெளி.

174. கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து

மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்

பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்

காதார மில்லா தறிந்து.

175. ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்

தோற்ற வமளியெனத் தோற்றுமால் - காற்றசைப்ப

உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே

எக்கர் மணன்மே லிசைந்து.

176. அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு

புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக் - கலந்தொசிந்த

புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே

அல்லென்ற சோலை யழகு.

177. கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்

அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ - கொங்கவிழ்தேன்

வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று

பார்க்கின்ற தென்னலாம் பார்.

178. கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்

எய்தத் தனிவைத்த ஏந்திழையாள் - வையத்தார்

உண்ணாக் கடுவிடத்தை யுண்ட தொருமூன்று

கண்ணானைப் போன்றனளே காண்.

179. கொழுநன் கொழுந்தாரை நீர்வீசக் கூசிச்

செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள் - கெழுமியவக்

கோமகற்குத் தானினைந்த குற்றங்க ளத்தனையும்

பூமகட்குச் சொல்லுவாள் போல்.

180. பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்

பெய்து முகமூன்று பெற்றாள்போல் - எய்த

வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று

செருவாளைப் பார்துவக்குஞ் சேய்.

181. பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்

தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த - மின்னுடைய

பூணாள் திருமுகத்தைப் புண்டரிக மென்றயிர்த்துக்

காணா தயர்வானைக் காண்.

182. சிறுக்கின்ற வாண்முகமுஞ் செங்காந்தட் கையால்

முறுக்குநெடு மூரிக் குழலும் - குறிக்கின்

கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி

அரும்பாம் பணைமுலையா யாம்.

183. சோர்புனலில் மூழ்கி யெழுவாள் சுடர்நுதன்மேல்

வார்குழலை நீக்கி வருந்தோற்றம் - பாராய்

விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே

புரைகின்ற தென்னலாம் பொற்பு.

184. செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்

முழுநீல மென்றயிர்த்து முன்னர்க் - கழுநீரைக்

கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்

வையாரும் வேற்றடக்கை மன்.

நளன் தமயந்தியுடன் பல நதி முதலியவற்றில் நீராடியது[தொகு]

185. காவி பொருநெடுங்கண் காதலியுங் காதலனும்

வாவியும் ஆறும் குடைந்தாடித் - தேவின்

கழியாத சிந்தையுடன் கங்கைநதி யாடி

ஒழியா துறைந்தா ருவந்து.

186. நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்

உறையும் இளமரக்கா ஒக்கும் - இறைவளைக்கைச்

சிற்றிடையாய் பேரின்பத் தேமொழியாய் மென்முறுவல்

பொற்றொடியாய் மற்றிப் பொழில்.

தமயந்தியின் ஊடல்[தொகு]

187. கன்னியர்தம் வேட்கையே போலுங் களிமழலை

தன்மணிவா யுள்ளே தடுமாற - மன்னவனே

இக்கடிகா நீங்க ளுறையு மிளமரக்கா

ஒக்குமதோ வென்றா ளுயிர்த்து.

188. தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதன்மேல்

வெண்தரளம் என்ன வியர்வரும்பக் - கெண்டைக்

கடைசிவப்ப நின்றாள் கழன்மன்னர் வெள்ளைக்

குடைசிவப்ப நின்றான் கொடி.

189. தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த

மங்கை வதன மணியரங்கில் - அங்கண்

வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவ மென்னும்

கொடியாடக் கண்டானோர் கூத்து.

தமயந்தி புலவி தவிர்த்தது[தொகு]

190. சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடியைத்

தொல்லை மணிமுடிமேற் சூட்டினான் - வல்லை

முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த

செழுநீலம் மாறாச் சிவப்பு.

ஊடல் நீங்கித் தமயந்தி நளனுடன் கூடி மகிழ்ந்தது[தொகு]

191. அங்கைவேல் மன்னன் அகல மெனுஞ்செறுவில்

கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கடைத்துக்

காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்

கோதையரின் மேலான கொம்பு.

நள தமயந்தியர் கங்கை கண்டது[தொகு]

192. வேரி மழைதுளிக்கு மேகக் கருங்கூந்தல்

காரிகையுந் தானும்போய்க் கண்ணுற்றான் - மூரித்

திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை

கரையேறுங் கங்கைக் கரை.

அவர்கள் ஒரு பொழிலை அடைந்தது[தொகு]

193. சூதக் கனியூறல் ஏற்ற சுருள்வாழை

கோதில் நறவேற்குங் குப்பியென - மாதரார்

ஐயுற்று நோக்கு மகன்பொழில்சென் றெய்தினான்

வையுற்ற வேற்றானை மன்.

நளன் தமயந்திக்குத் தன் வளநகரைக் காட்டியது[தொகு]

194. வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்

தான்தோன்று மற்றின் தடம்பதிதான் - வான்தோன்றி

வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்

நல்விளக்கே யெங்கள் நகர்.

நளன் பன்னிரண்டாண்டுகள் தமயந்தியோடு மகிழ்ந்திருந்தது[தொகு]

195. பொய்கையும் வாசப் பொழிலு மெழிலருவச்

செய்குன்று மாறுந் திரிந்தாடித் - தையலுடன்

ஆறிரண்டாண் டெல்லை கழித்தா னடையலரைக்

கூறிரண்டாக் கொல்யானைக் கோ.

தமயந்தியின் மக்கட் பேறு[தொகு]

196. கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக

நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப - நூலென்னத்

தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்

ஈன்றாள் குழவி யிரண்டு.

கலி நளனைச் சார முடியாதிருந்தது[தொகு]

197. ஆண்டிரண்டா றெல்லை யளவுந் திரிந்தேயும்

காண்டகைய வெங்கலியுங் காண்கிலான் - நீண்டபுகழ்ச்

செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்

தன்னெறியால் வேறோர் தவறு.

கலி நளனைச் சேர்ந்தது[தொகு]

198. சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு

புந்தி மகிழப் புகுந்துகலி - சிந்தையெலாம்

தன்வயமே ஆக்குந் தமைய னுடனிருந்தான்

பொன்னசல மார்பற் புகைந்து.

199. நாராய ணாய நமவென் றவனடியில்

சேராரை வெந்துயரஞ் சேர்ந்தாற்போல் - பாராளும்

கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி

கற்றவனைச் சேர்ந்தான் கலி.

கலி புட்கரனை நளனோடு சூதாட அழைத்தது[தொகு]

200. நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்

தன்னரசு வாங்கித் தருகின்றேன் - மன்னவனே

போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்

கேதுவாய் நின்றா னெடுத்து.

புட்கரன் உடன்பட்டுக் கலியுடன் சென்றது[தொகு]

201. புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்

கன்னி யிளமேதிக் காற்குளம்பு - பொன்னுரைத்த

கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்

கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.

புட்கரன் நிடத நாடடைந்தது[தொகு]

202. வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறிக்

கங்கைத் திரைநீர் கரையேறிச் - செங்கதிர்ப்பைம்

பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு

பின்னொழியப் போந்தான் பெயர்ந்து.

நளன் புட்கரனைக் கண்டு வினாவியது[தொகு]

203. அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்

எடுத்தகொடி யென்னகொடி யென்ன - மிடற்சூது

வெல்லுங் கொடியென்றான் வெங்கலியா லங்கவன்மேல்

செல்லுங் கொடியோன் தெரிந்து.

நளன் புட்கரனுடன் சூதாட இசைந்தது[தொகு]

204. ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு

வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல் - தான்தேக்கி

மீதாடி வாளைவயல் வீழ்ந்துழக்கும் நன்னாடன்

சூதாட என்றான் துணிந்து.

நளனுக்கு அமைச்சர் முதலினோர் சூதின் தீமைகளை உரைத்தது[தொகு]

205. காதல் கவறாடல் கள்ளுண்ணல் பொய்ம்மொழிதல்

ஈதல் மறுத்த லிவைகண்டாய் - போதில்

சினையாமை வைகுந் திருநாடா செம்மை

நினையாமை பூண்டார் நெறி.

206. அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்

திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும் - மறத்தையே

பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்

தீண்டுவரோ வென்றார் தெரிந்து.

207. உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்

திருவழிக்கு மோனஞ் சிதைக்கும் - மருவும்

ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது

பொருவரோ தக்கோர் புரிந்து.

208. ஆயம் பிடித்தாரு மல்லற் பொதுமகளிர்

நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே - மாயம்

பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே

வடித்தாரின் றிலோர் வழக்கு.

நளனது மறுப்புரை[தொகு]

209. தீது வருக நலம்வருக சிந்தையால்

சூது பொரவிசைந்து சொல்லினோம் - யாதும்

விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி

கலக்கலைநீர் நாடன் கனன்று.

புட்கரனை நளன் பந்தயம் யாதென்று கேட்டது[தொகு]

210. நிறையிற் கவறாட நீநினைந்தா யாகில்

திறையிற் கதிர்முத்தஞ் சிந்தும் - துறையில்

கரும்பொடியா மள்ளர் கடவடிக்கும் நாடா

பொரும்படியா தென்றானிப் போது.

நளன் சூதாடியதும் யாவும் தோற்றதும்[தொகு]

211. விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்

ஒட்டினே னுன்பணையம் ஏதென்ன - மட்டவிழ்தார்

மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்

கொல்லேற்றை வைத்தான் குறித்து.

212. காரேயுங் கூந்தலார் காரிகைமேற் காதலித்த

தாரேயுந் தோளான் தனிமனம்போல் - நேரே

தவறாய்ப் புரண்ட தமையனொடுங் கூடிக்

கவறாய்ப் புரண்டான் கலி.

213. வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்

கொத்த பணைய முரையென்ன - வைத்தநிதி

நூறா யிரத்திரட்டி நூறுநூ றாயிரமும்

வேறாகத் தோற்றானவ் வேந்து.

214. பல்லா யிரம்பரியும் பத்துநூ றாயிரத்து

சொல்லார் மணித்தேருந் தோற்றதற்பின் - வில்லாட்கள்

முன்றோற்று வானின் முகிறோற்கு மால்யானை

பின்றோற்றுத் தோற்றான் பிடி.

215. சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன

மாதுரங்கம் பூணும் மணித்தேரான் - சூதரங்கில்

பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழல்

பூவையரைத் தோற்றான் பொருது.

216. கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்

விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் - நிற்கும்

நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கிச்

சிறியானைச் சேர்ந்தாள் திரு.

புட்கரன் தமயந்தியைப் பந்தயமாக வைக்ககேட்டது[தொகு]

217. மனைக்குரியா ரன்றே வருந்துயரந் தீர்ப்பார்

சினைச்சங்கின் வெண்டலையைத் தேனால் - நனைக்கும்

குவளைப் பணைப்பைந்தாட் குண்டுநீர் நாடா

இவளைப் பணையந்தா வின்று.

நளன் சூதாட்டத்தை விட்டு நீங்கியது[தொகு]

218. இனிச்சூ தொழிந்தோ மினவண்டு கிண்டிக்

கனிச்சூத வார்பொழிலின் கண்ணே - பனிச்சூதப்

பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே

நாம்போது மென்றான் நளன்.

நளன் நகரைவிட்டுச் சென்றது[தொகு]

219. மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரைப்

புன்காகங் கொள்ளத்தான் போனாற்போல் - தன்கால்

பொடியாடத் தேவியொடும் போயினா னன்றே

கொடியானுக் கப்பார் கொடுத்து[தொகு]

220. கடப்பா ரெவரே கடுவினையை வீமன்

மடப்பாவை தன்னுடனே மன்னன் - நடப்பான்

வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்த

தனைத்தே விதியின் வலி.