நளவெண்பா/கலிநீங்கு காண்டம்/பாடல் 361 முதல் 405

விக்கிமூலம் இலிருந்து


புகழேந்திப்புலவர் பாடிய நளவெண்பா[தொகு]

இருதுபன்னன் குண்டினபுரி அடைந்தது[தொகு]

361. ஆமை முதுகி லலவன் துயில்கொள்ளும்

காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்தன்

பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட் டெழுங்கூற்றம்

அன்னகரி யொன்றுடையா னாங்கு.

இருதுபன்னன் வீமராசனுக்குத் தன் வரவு அறிவித்தது[தொகு]

362. வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்

முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்

தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்

மன்விரவு தாரான் மகிழ்ந்து.

வீமராசன் இருதுபன்னனை வினாவியது[தொகு]

363. கன்னி நறுந்தேறன் மாந்திக் கமலத்தின்

மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்

நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்

எய்தற் கவாவியவா றென்.

இருதுபன்னன் மறுமொழி[தொகு]

364. இன்றுன்னைக் காண்பதோ ராதரவால் யானிங்ஙன்

மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்

ஒளியார்வேற் கண்ணாள்மே லுள்ளந் துரப்பத்

தெளியாது முன்போந்த சேய்.

நளன் மடைவாயிற் புக்கது[தொகு]

365. ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்

கோதி லடிசிற் குறைமுடிப்பான் - மேதிக்

கடைவாயிற் கார்நீலங் கண்விழிக்கும் நாடன்

மடைவாயிற் புக்கான் மதித்து.

நளன் புக்க மடைவாயிற் சிறப்பு[தொகு]

366. ஆதி மறைநூ லனைத்துந் தெரிந்துணர்ந்த

நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்

நிரப்பாம லெல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்

வரப்பாகன் புக்க மனை.

தமயந்தி நளன் செய்யும் மடைத்தொழிலை அறிந்துவரச் செய்தது[தொகு]

367. இடைச்சுரத்தில் தன்னை யிடையிருளில் நீத்த

கொடைத் தொழிலா னென்றயிர்த்தக் கோமான் - மடைத்தொழில்கள்

செய்கின்ற தெல்லாந் தெரிந்துணர்ந்து வாவென்றாள்

நைகின்ற நெஞ்சாள் நயந்து.

தமயந்தி தன் மக்களை நளன்பால் விடுத்தது[தொகு]

368. கோதை நெடுவேற் குமரனையுந் தங்கையையும்

ஆதி யரச னருகாகப் - போத

விளையாட விட்டவன்றன்மேற் செயல்நா டென்றாள்

வளையாடுங் கையாள் மதித்து.

தன் மக்களைக் கண்ட நளன் அவர்களோடு உரையாடியது[தொகு]

369. மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்

புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்

என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான்

வன்மக் களியானை மன்.

370. மன்னு நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்

அன்னைதனைக் கான்விட் டவனேக - இந்நகர்க்கே

வாழ்கின்றோ மெங்கள் வளநாடு மற்றொருவன்

ஆள்கின்றான் னென்றா ரழுது.

371. ஆங்கவர் சொன்ன வுரைகேட் டழிவெய்தி

நீங்கா வுயிரோடு நின்றிட்டான் - பூங்காவின்

வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன்

வெள்ளம்போற் கண்ணீ ருகுத்து.

372. உங்க ளரசொருவன் ஆளநீ ரோடிப்போந்

திங்க ணுறைத லிழுக்கன்றோ - செங்கை

வளவரசே யென்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற

இளவரசை நோக்கி யெடுத்து.

373. நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்

அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது

தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்

வாய்மையே கண்டாய் வலி.

374. எந்தை கழலிணையி லெம்மருங்குங் காணலாம்

கந்து கடியும் கடாக்களிற்றின் - வந்து

பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்

மணிமுடியிற் றேய்ந்த வடு.

375. மன்னர் பெருமை மடைய ரறிவரோ

உன்னை யறியா துரைசெய்த - என்னை

முனிந்தருள லென்று முடிசாய்த்து நின்றான்

கனிந்துருகி நீர்வாரக் கண்.

அச்செய்தியைக் கேட்ட தமயந்தியின் துயரம்[தொகு]

376. கொற்றக் குமரனையுங் கோதையையுந் தான்கண்டு

மற்றவன்றா னாங்குரைத்த வாசகத்தை - முற்றும்

மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே

அழிந்தாள் விழுந்தா ளழுது.

377. கொங்கை யளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்

அங்கை யிரண்டு மடுபுகையால் - இங்ஙன்

கருகியவோ வென்றழுதாள் காதலனை முன்னாள்

பருகியவேற் கண்ணாள் பதைத்து.

உள்ள நிலைமையைத் தமயந்தி தன் தந்தைக்கு அறிவித்தது[தொகு]

378. மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவர்க்குக்

கொற்றத் தனித்தேருங் கொண்டணைந்து - மற்றும்

மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா ணெங்கள்

கொடைத்தொழிலா னென்றாள் குறித்து.

வீமராசன் நளனைத் தோற்றத்தால் அறிய முடியாது வாக்கினால் அறிந்தது[தொகு]

379. போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்

காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஓதம்

வரிவளைகொண் டேறும் வளநாடன் தன்னைத்

தெரிவரிதா நின்றான் திகைத்து.

380. செவ்வாய் மொழிக்குஞ் செயலுக்குஞ் சிந்தைக்கும்

ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்

நோக்கினா னோக்கித் தெளிந்தா னுணங்கியதோர்

வாக்கினான் தன்னை மதித்து.

வீமராசன் நளனைத் தன் உருக்காட்ட வேண்டியது[தொகு]

381. பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்

ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி

தெளியா திருக்குந் திருநாடா! உன்னை

ஒளியாது காட்டுன் னுரு.

நளன் கார்க்கோடகன் தந்த ஆடைகளை உடுத்ததும் சுய உருப்பெற்றதும்[தொகு]

382. அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்

ஒருதுகிலை வாங்கி யுடுத்தான் - ஒருதுகிலைப்

போர்த்தான் பொருகலியின் வஞ்சனையாற் பூண்டளிக்கும்

கோத்தாயம் முன்னிழந்த கோ.

383. மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப்

புக்கோ ரருவினைபோற் போயிற்றே - அக்காலம்

கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்

மானகத்தேர்ப் பாகன் வடிவு.

நளன் மக்கள் அவனைச் சுயவடிவில் கண்டு மகிழ்ந்து வணங்கியது[தொகு]

384. தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்

போதலருங் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்

பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்

மின்னிடையா ளோடும் விழுந்து.

தமயந்தி நளனடியில் வீழ்ந்து வணங்கியது[தொகு]

385. பாதித் துகிலோடு பாய்ந்திழியுங் கண்ணீரும்

சீதக் களபதனஞ் சேர்மாசும் - போத

மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்

அலர்ந்ததே கண்ணீ ரவற்கு.

தமயந்தியின் துயரநிலை[தொகு]

386. வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்

அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தே

வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்

நீரால் மறைத்தனவே நின்று.

வானவர் நளனை வாழ்த்திப் பூமாரி பெய்தது[தொகு]

387. உத்தமரின் மற்றிவனை யொப்பா ரொருவரிலை

இத்தலத்தி லென்றிமையோ ரெம்மருங்கும் - கைத்தலத்தில்

தேமாரி பெய்யுந் திருமலர்த்தார் வேந்தன்மேல்

பூமாரி பெய்தார் புகழ்ந்து.

கலி, நளனைத் தன்பால் வரம் கொள்ள வேண்டியது[தொகு]

388. தேவியிவள் கற்புக்குஞ் செங்கோன் முறைமைக்கும்

பூவுலகி லொப்பார்யார் போதுவார் - காவலனே

மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்

முற்றன்பாற் பாரளிப்பான் முன்.

நளன் கேட்ட வரம்[தொகு]

389. உன்சரிதஞ் செல்ல வுலகாளுங் காலத்து

மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என்சரிதம்

கேட்டாரை நீயடையே லென்றான் கிளர்மணிப்பூண்

வாட்டானை மன்னன் மதித்து.

கலி நளனுக்கு வரமளித்து மீண்டது[தொகு]

390. என்காலத் துன்சரிதங் கேட்டாரை யானடையேன்

மின்கா லயில்வேலாய் மெய்யென்று - நன்காவி

மட்டுரைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று

கட்டுரைத்துப் போனான் கலி.

வீமராசன் நளன் முதலியோர்க்கு விருந்தளித்தது[தொகு]

391. வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்

கோதையையு மக்களையுங் கொண்டுபோய்த் - தாது

புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி

விதையக்கோன் செய்தான் விருந்து.

இருதுபன்னன் நளனிடம் தன் பிழை பொறுக்க வேண்டிப் பின் தன் நகர்க்கேகியது[தொகு]

392. உன்னையா னொன்று முணரா துரைத்தவெலாம்

பொன்னமருந் தாராய் பொறுவென்று - பின்னைத்தன்

மேனீர்மை குன்றா வெறுந்தேர் மிசைக்கொண்டான்

மானீ ரயோத்தியார் மன்.

நளன் தனது மனைவி மக்களுடன் நிடதநாடு சென்றது[தொகு]

393. விற்றானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்லப்

பொற்றேர்மேற் றேவியொடும் போயினான் - முற்றாம்பல்

தேநீ ரளித்தருகு செந்நெற் கதிர்விளைக்கும்

மாநீர் நிடதத்தார் மன்.

394. தானவரை மெல்லத் தரித்தநெடு வைவேலாய்

ஏனைநெறி தூரமினி யெத்தனையோ - மானேகேள்

இந்த மலைகடந் தேழுமலைக் கப்புறமா

விந்தமெனு நம்பதிதான் மிக்கு.

சூரியோதயம்[தொகு]

395. இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்

செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்

கிருக்குமா காண்பான்போ லேறினான் குன்றில்

செருக்குமான் தேர்வெய்யோன் சென்று.

நளன், மாவிந்த நகரைச் சார்ந்த ஒரு சோலையில் தங்கியது[தொகு]

396. மன்றலிளங் கோதையொடு மக்களுந் தானுமொரு

வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச் - சென்றடைந்தான்

மாவிந்த மென்னும் வளநகரஞ் சூழ்ந்தவொரு

பூவிந்தை வாழும் பொழில்.

நளன் புட்கரனுக்கு அறிவித்தது[தொகு]

397. மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்

குற்ற பணைய முளதென்று - கொற்றவனைக்

கொண்டணைவீ ரென்று குலத்தூ தரைவிடுத்தான்

தண்டெரியல் தேர்வேந்தன் தான்.

புட்கரன் நளனைக் கண்டது[தொகு]

398. மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்

தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் - ஆய

பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்

இருந்தானைக் கண்டா னெதிர்.

புட்கரன் நளனை நலம் வினாவியது[தொகு]

399. செங்கோ லரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா

வெங்கோ லரசன் வினாவினான் - அங்கோலக்

காவற் கொடைவேந்தே காதலர்க்குங் காதலிக்கும்

யாவர்க்குந் தீதிலவே யென்று.

நளனும் புட்கரனும் மறு சூது ஆடியது[தொகு]

400. தீது தருகலிமுன் செய்ததனை யோராதே

யாது பணைய மெனவியம்பச் - சூதாட

மையாழி யிற்றுயிலும் மாலனையான் வண்மைபுனை

கையாழி வைத்தான் கழித்து.

நளன் தன் நாடு முதலியன வென்று கொண்டது[தொகு]

401. அப்பலகை யொன்றி னருகிருந்தார் தாமதிக்கச்

செப்பரிய செல்வத் திருநகரும் - ஒப்பரிய

வன்றானை யோடு வளநாடும் வஞ்சனையால்

வென்றானை வென்றானவ் வேந்து.

புட்கரன் யாவும் இழந்து தன் நாடு சென்றது[தொகு]

402. அந்த வளநாடு மவ்வரசு மாங்கொழிய

வந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்

நாவேய்ந்த சொல்லா னளனென்று போற்றிசைக்கும்

தேர்வேந்தற் கெல்லாங் கொடுத்து.

நளன் தன் நகரை அடைந்தது[தொகு]

403. ஏனை முடிவேந்த ரெத்திசையும் போற்றிசைப்பச்

சேனை புடைசூழத் தேரேறி - ஆனபுகழ்ப்

பொன்னகர மெய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து

நன்னகரம் புக்கான் நளன்.

நகர மாந்தரின் மகிழ்ச்சி நிலை[தொகு]

404. கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ

நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று

மாதோடும் மன்னன் வரக்கண்ட மாநகருக்

கேதோ வுரைப்ப னெதிர்.

(பின்னுரை)[தொகு]

405. வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீ

தென்றுரைத்து வேத யியல்முனிவன் - நன்றிபுனை

மன்னா பருவரலை மாற்றுதியென் றாசிமொழி

பன்னா நடத்திட்டான் பண்டு.

கலி நீங்கு காண்டம் முற்றும்

நளவெண்பா முற்றும்