நளவெண்பா/சுயம்வர காண்டம்/பாடல் 14 முதல் 54

விக்கிமூலம் இலிருந்து


நிடதநாட்டுச் சிறப்பு[தொகு]

14.
காமர் கயல்புரழக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் றளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.

மாவிந்தநகர்ச் சிறப்பு[தொகு]

15.
கோதை மடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீத களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்த மென்பதோர்
ஞானக் கலைவாழ் நகர்.

16.
நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்று மகிழ்கமழு மென்பரால் - தென்றல்
அலர்த்துங் கொடிமாடத் தாயிழையா ரைம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

17.
வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

18.
தெரிவனநூ லென்றுந் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவு மிரவே யிகழ்ந்தெவரும்
கல்லா தனவுங் கரவு.

19.
மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகுந் தடந்தோளான் - காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.

அந்நாட்டு மன்னன் நளன் சிறப்பு[தொகு]

20.
ஓடாத தானை நளனென் றுளனொருவன்
பீடாருஞ் செல்வப் பெடைவண்டோ - டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்குந் தண்தார்
அருகுடையான் வெண்குடையா னாங்கு.

21.
சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ வுலகு.

நளன் பூஞ்சோலை சென்றமை[தொகு]

22.
வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் - தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூனாடிச் சோலை புக.

23.
வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர - நின்ற
தளவேனல் மீதலருந் தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்த தெதிர்.

24.
தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தா லன்ன பொழில்.

சோலையில் அன்னப்புள் வந்ததும், அதனை மங்கையர் பற்றி அரசன்முன் வைத்தலும்[தொகு]

25.
நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப - மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே யாங்கு.

26.
பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலவேறி மென்கரும்பைக் - கோதிக்
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா வென்றான் பெயர்ந்து.

27.
நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தன்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.

28.
அன்னந் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே - அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு.

29.
அஞ்சல் மடவனமே உன்றன் னணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்.

30.
செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் - வெய்ய
அடுமாற்ற மில்லா அரசன்சொற் கேட்டுத்
தடுமாற்றந் தீர்ந்ததே தான்.

அன்னம் தமயந்தியின் சிறப்புரைத்தமை[தொகு]

31.
திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி யென்றோதுந் தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு.

32.
அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை யென்றா னனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து.

33.
எழுவடுதோள் மன்னா இலங்கிழையோர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை - உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு.

34.
நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.

35.
மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை யடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.

36.
என்றும் நுடங்கு மிடையென்ப வேழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகாற் சிறுபறவை யஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.

37.
செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் - வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.

நளன் தமயந்திபால் காதல் கொண்டது[தொகு]

38.
அன்னமே நீயுரைத்த அன்னத்தை யென்னாவி
உன்னவே சோரு முனக்கவளோ - டென்ன
அடைவென்றான் மற்றந்த அன்னமதை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து.

39.
பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமள்தான்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கட் - காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள்பாத
நடைகற்பான் வந்தடைந்தே யாம்.

40.
இற்றது நெஞ்ச மெழுந்த திருங்காதல்
அற்றது மான மழிந்ததுநாண் - மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து.

அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறித் தமயந்திபால் சென்றது[தொகு]

41.
வீமன் திருமடந்தை மென்முலையை யுன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் - சேம
நெடுங்குடையா யென்றுரைத்து நீங்கியதே யன்னம்
ஒடுங்கிடையாள் தன்பா லுயர்ந்து.

நளனது விரக தாபம்[தொகு]

42.
இவ்வளவிற் செல்லுங்கொ லிவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற் காத லியம்புங்கொல் - இவ்வளவில்
மீளுங்கொ லென்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை யரசு.

43.
சேவல் குயிற்பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல்கேட்
டாவி யுருகி யழிந்திட்டான் - பூவின்
இடையன்னஞ் செங்கா லிளவன்னஞ் சொன்ன
நடையன்னந் தன்பா னயந்து.

44.
அன்ன முரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தான் தோகை விரித்தாட - முன்னதனைக்
கண்டாற்றா துள்ளங் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கிஃ தன்றோ குணம்.

45.
வாரணியுங் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரீர்
கொடியா ரெனச்செங்கை கூப்பினான நெஞ்சம்
துடியா நெடிதுயிரரச் சோர்ந்து.

தமயந்தி அன்னத்தை நோக்கி வினாவியது[தொகு]

46.
மன்னன் விடுத்த வடிவிற் றிகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி யருகணைய - நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்னாடல் சொல்லென்றா ளீங்கு.

அன்னம் நளன் சிறப்புரைத்தல்[தொகு]

47.
செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்குந் தடந்தோளான் - மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்த னுனக்கு.

48.
அறங்கிடந்த நெஞ்சு மருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்டோ ள் வலியும் - நிலங்கிடந்த
செங்கண்மா லல்லனேல் தேர்வேந்த ரொப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு.

தமயந்தி நளன்பால் கொண்ட காதற்றிறம்[தொகு]

49.
புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளங் கவர வொளியிழந்த - வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்ந்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதிப் பொன்.

50.
மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்ன முரைக்க வகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினா ளென்செய்வாள் மற்று.

51.
வாவி யுறையும் மடவனமே யென்னுடைய
ஆவி யுவந்தளித்தா யாதியால் - காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி யென்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து.

தோழியர் தமயந்தியின் நிலை வேறுபாட்டைத் தாய்க்குரைக்க அவள் அரசனுக்கு அறிவித்தது[தொகு]

52.
கொற்றவன்தன் தேவிக்குக் கோமகந்தன் தோழியர்கள்
உற்ற தறியா வுளநடுங்கிப் - பொற்றொடிக்கு
வேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனைக்
கூறினாள் பெற்ற கொடி.

வீமராசன் தமயந்தி மாளிகைக்கு வந்தது[தொகு]

53.
கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்
மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப - நெருங்கு
பரிவளை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற
வரிவளைக்கை நல்லாள் மனை.

தமயந்தி தந்தையை வணங்கியது[தொகு]

54.
கோதை சுமந்த கொடிபோ லிடைநுடங்கத்
தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள் - மீதெல்லாம்
காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும்
பூந்தாரம் மெல்லோதிப் பொன்.