நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

2.பொருட்பால்: 1.அரசியல்[தொகு]

[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]


பதினாறாம் அதிகாரம் மேன்மக்கள்

[அஃதாவது, மேன்மக்கள் தலைமையைச் சொல்லுதலாம்]



பாடல்: 151 (அங்கண்)[தொகு]

அங்கண் விசும்பி னகனிலா பாரிக்குந்|அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மற்- றிங்கண்|திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் - திங்கள்

மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து|மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து

தேய்வ ரொருமா சுறின். (01)|தேய்வர் ஒரு மாசு உறின். (௧)

பதவுரை:

அம் = அழகிய,
கண் = இடமகன்ற,
விசும்பின் = ஆகாயத்தில்,
அகல் = பிரிவான,
நிலா = கிரணங்களை,
பாரிக்கும் = பரப்பும்,
திங்கள் = சந்திரன்,
மறு = களங்கத்தை,
ஆற்றும் = பொறுத்துக்கொள்வான்;
சான்றோர் = பெரியோர்கள்,
அஃது = அக்களங்கத்தை,
ஆற்றார் = பொறுத்துக்கொள்ளார்,
ஒரு = (தமக்கு) ஒரு,
மாசு = குற்றம்,
உறின் = வந்தால்,
தெருமந்து = மயக்கமடைந்து,
தேய்வர் = மாய்வர்.


கருத்துரை: சந்திரன் களங்கத்தைச் சகிக்கினும் பெரியோர்கள் அக்களங்கத்தைச் சகியார்.


விசேடவுரை: சான்றோர் - எழுவாய், தேய்வர் - பயனிலை. மன் - அசை.

நன்னூல்

‘திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்

மிகலினும் இழிபினும் ஒருமுடி பினவே.’
-இவ்விதியால் சந்திரனாகிய அஃறிணை உயர்திணை முடிபு பெற்றது. (151)

பாடல்: 152 (இசையுமெனினு)[தொகு]

இசையு மெனினு மிசையா தெனினும்|இசையும் எனினும் இசையாது எனினும்

வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையி|வசை தீர எண்ணுவர் சான்றோர் - விசையின்

னரிமா வுரங்கிழித்த வம்பினிற் றீதோ?|நரி மா உரம் கிழித்த அம்பினில் தீதோ

வரிமாப் பிழைப்பெய்த கோல். (02)|அரிமா பிழைப்பு எய்த கோல். (௨)

பதவுரை:

இசையும் எனினும் = கூடுமாயினும்,
இசையாது எனினும் = கூடாதாயினும்,
வசை = குற்றம்,
தீர = நீங்க,
எண்ணுவர் = நினைப்பவர்கள்,
சான்றோர் = பெரியவர்கள்;
விசையின் = விசையால்,
நரி மா = நரியினது,
உளம் = நெஞ்சத்தை,
கிழித்த = பிளந்த,
அம்பினில் = கணையைப் பார்க்கிலும்,
அரி மா = சிங்கத்தை,
பிழைப்ப + பிழைக்க,
எய்த = தொடுத்த,
கோல் = கணையானது,
தீதோ? = பொல்லாதோ?


கருத்துரை: பெரியோர்கள் பிறராற் பொருள் கிடைத்தாலுங் கிடையாவிட்டாலுங் குற்ற நினையார்கள்.

விளக்கவுரை: சான்றோர் - எழுவாய், எண்ணுவர் - பயனிலை. நரிமேல் எய்த அம்பிலும் அரிமேலெய்த அம்பு உயர்வு.

பாடல்: 153 (நரம்பெழுந்து)[தொகு]

நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்|நரம்பு எழுந்து நல் கூர்ந்தார் ஆயினும் சான்றோர்

குரம்பெழுந்து குற்றங்கொண் டேறா- ருரங்கவறா|குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் - உரம் கவறு ஆ

வுள்ளமெனு நாரினாற் கட்டி யுளவரையாற்|உள்ளம் எனும் நாரினால் கட்டி உள வரையால்

செய்வர் செயற்பா லவை. (03)|செய்வர் செயல் பால் அவை. (௩)

பதவுரை:

சான்றோர் = பெரியோர்கள்,
நரம்பு = நரம்புகள்,
எழுந்து = தோன்றி,
நல்கூர்ந்தார் ஆயினும் = வறுமைப்பட்டாராயினும்,
குரம்பு = வரம்பு,
எழுந்து = கடந்து,
குற்றம் கொண்டு = குற்றத்தைக் கொண்டு,
ஏறார் = (யாசிக்கச்) செல்லார்,
உரம் = அறிவே,
கவறு ஆ = கவறாகக் கொண்டு,
உள்ளம் எனும் = முயற்சி என்கிற,
நாரினால் = நாரால்,
கட்டி = மனத்தைக் கட்டி,
உள வரையால் = (தமக்குள்ள) பொருளளவால்,
செயற்பாலவை = செய்யத் தக்க கருமங்களை,
செய்வர் = செய்வார்கள்.

:கருத்துரை:

பெரியோர்கள் வறுமை அடைந்தாரானாலும், யாசிக்கார்கள்; உள்ளமட்டுந் தருமஞ் செய்வார்கள்.

விளக்கவுரை:

சான்றோர் - எழுவாய், செய்வர் - பயனிலை, செயற்பாலவை - செயப்படுபொருள். ‘கவறு’ என்றது, இருபிளவாகிய பனையின் அடிமட்டை. இம்மட்டை மரத்தைக் கவியப் பற்றியது போல, மனதை அறிவு கவியப் பற்றுதலாம்.

பாடல்: 154 (செல்வுழிக்)[தொகு]

செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்||செல்வுழிக் கண் ஒரு நாள் காணினும் சான்றவர்

தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் - புரிந்தியாப்பர்||தொல் வழி கேண்மையில் தோன்ற - புரிந்து யாப்பர்

நல்லவரை நாட சிலநா ளடிப்படிற்||நல்ல வரை நாட சில நாள் அடி படில்

கல்வரையு முண்டா நெறி. (04)||கல் வரையும் உண்டாம் நெறி. (௪)

பதவுரை:

நல் = நல்ல,
வரை = மலையையும்,
நாட = நாட்டையும் உடைய பாண்டியனே!
செல்வுழிக்கண் = போகின்ற வழியிடத்து,
ஒரு நாள் = (ஒருவரை) ஒரு நாள்,
காணினும் = கண்டாலும்,
சான்றவர் = பெரியோர்கள்,
தொன் = பழைய.
வழி = வழியில் வந்த,
கேண்மையில் = உறவைப்போல்,
தோன்ற = விளங்க,
புரிந்து = விரும்பி,
யாப்பர் = சிநேகஞ் செய்வர்,
கல்வரையும் = கன்மலையும்,
சிலநாள் = சிலகாலம்,
அடிபடில் = காலடிப்பட்டால்,
நெறி = வழி,
உண்டாம் = உண்டாகும்.

:கருத்துரை: பாண்டியனே! பெரியோர்கள் புதியவரைக் கண்டாலும் பழையவரைப் போலவே சிநேகஞ் செய்வர்.

விளக்கவுரை: சான்றவர் - எழுவாய், யாப்பர் - பயனிலை.

பாடல்: 155 (புல்லா)[தொகு]

புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி||புல்லா எழுத்தில் பொருள் இல் வறும் கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவுங் - கண்ணோடி||கல்லா ஒருவன் உரைப்பவும் - கண் ஓடி

நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்||நல்லார் வருந்தியும் கேட்பரை மற்று அவன்

பல்லாரு ணாணல் பரிந்து. (05)||பல்லாருள் நாணல் பரிந்து. (௫)

பதவுரை:

புல்லா = இலக்கணம் பொருந்தாத,
எழுத்தில் = எழுத்தினையுடைய,
பொருள் இல் = பொருளறிவில்லாத,
வறும் = வீணாகிய,
கோட்டி = சபையில்,
கல்லா ஒருவன் = கற்காத ஒருவன்,
உரைப்பவும் = ஒன்றைச் சொல்லவும்,
நல்லார் = மேன்மக்கள்,
கண் ஓடி = தாட்சணியங்கொண்டு,
வருந்தியும் = வருத்தமடைந்தும்,
அவன் = அவ்வறிவில்லான்,
பல்லாருள் = பலர் முன்,
நாணல் = நாணுதற்கு,
பரிந்து = இரங்கி,
கேட்பர் = கேட்பார்கள்.

:கருத்துரை: பெரியோர்கள், கல்லார் சபையில் ஞான சூனியன் ஒன்றைச் சொல்லினும் அவன் நாணுதலுக்கு இரங்கிக் கேட்பார்.

விளக்கவுரை: நல்லார் - எழுவாய், கேட்பார் - பயனிலை, ஏ, மற்று - அசைகள்.

பாடல்: 156 (கடித்துக்)[தொகு]

கடித்துக் கரும்பினை கண்டகர நூறி||கடித்து கரும்பினை கண் தகர நூறி

யிடித்துநீர் கொள்ளினு மின்சுவைத்தே - யாரும்||இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே - யாரும்

வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்||வடு பட வைது இறந்த கண்ணும் குடி பிறந்தார்

கூறார்தம் வாயிற் சிதைந்து. (06)||கூறார் தம் வாயில் சிதைந்து. (௬)

பதவுரை: கரும்பினை = கரும்பை,

கடித்து = தரித்து,
கண் = கணுக்கள்,
தகர = உடைய,
நூறி = நெறித்து,
இடித்து = (ஆலையில்) ஆடி,
நீர் = இரசத்தை,
கொள்ளினும் = கொண்டாலும்,
(அக்கரும்பு) இன் = இனிய,
சுவைத்தே = மதுரமுடையதே,
ஆகும் = ஆம்; (அதுபோல)
வடு பட = குற்றம் உண்டாக,
வைது = ஒருவர் வைது,
இறந்தக் கண்ணும் = போனாலும்,
குடிப் பிறந்தார் = நற்குடியிற் பிறந்தார்,
தம் = தம்முடைய,
வாயில் = வாயினாலே,
சிதைந்து = சிதைய,
கூறார் = சொல்லார்.

:கருத்துரை: கரும்பை வருத்தினும் இனிய சாற்றைக் கொடுக்கும்; அதுபோல, ஒருவர் வைதாலும் நற்குடியிற் பிறந்தார் கூட வையமாட்டார்.

விளக்கவுரை: குடிப்பிறந்தார் - எழுவாய், கூறார் - பயனிலை.

பாடல்: 157 (கள்ளார்)[தொகு]

கள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ||கள்ளார் கள் உண்ணார் கடிவ கடிந்து ஒரீஇ

யெள்ளிப் பிறரை யிகழ்ந்துரையார் - தள்ளியும்||எள்ளி பிறரை இகழ்ந்து உரையார் - தள்ளியும்

வாயிற்பொய் கூறார் வடுவறு காட்சியார்||வாயில் பொய் கூறார் வடு அறு காட்சியவர்

சாயிற் பரிவ திலர். (07)||சாயில் பரிவது இலர். (௭)

பதவுரை:

வடு = குற்றம்,
அறு = அற்ற,
காட்சியார் = அறிவுடையார்,
கள்ளார் = திருடார்,
கள் உண்ணார் = கள்ளைக் குடியார்,
கடிவ = நீக்கத் தக்கவைகளை,
கடிந்து = நீக்கி,
ஒரீஇ = தீமையின் நீங்கி,
பிறரை = அயலாரை,
எள்ளி = அவமதித்து,
இகழ்ந்து = நிந்தித்து,
உரையார் = சொல்லார்;
தள்ளியும் = தவறியும்,
வாயில் = வாயால்,
பொய் கூறார் = பொய் சொல்லார்;
சாயின் = துன்பம் வந்தால்,
பரிவது இலர் = விசனப்படார்.


:கருத்துரை: மேன்மக்கள் திருடார், கள்ளுண்ணார், பிறரையிகழார், பொய் சொல்லார், வறுமை வந்தால் விசனப்படார்.

விளக்கவுரை: காட்சியார் - எழுவாய், பரிவதிலர் - பயனிலை.

பாடல்: 158 *(பிறர்மறை)*[தொகு]

பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்||பிறர் மறையின் கண் செவிடு ஆய் திறன் அறிந்து

தேதில ரிற்கட் குருடனாய்த் - தீய||ஏதிலர் இல் கண் குருடனாய் - தீய

புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாது||புறம் கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்

மறங்கூற வேண்டா வவற்கு. (08)||அறம் கூற வேண்டா அவற்கு. (௮)

பதவுரை:

பிறர் = அயலாருடைய,
மறையின்கண் = இரகசியச் சொல்லிடத்து,
செவிடு ஆய் = செவிடனாகவும்,
திறன் அறிந்து = நல்லொழுக்கத் திறமறிந்து,
ஏதிலார் = அயலாருடைய,
இல் = மனையாள்,
கண் = இடத்து,
குருடனாய் = குருடனாகவும்,
தீய = கொடிய,
புறம் கூற்றில் = பொறாமைச் சொல்லிடத்து,
மூங்கையாய் = ஊமையாகவும்,
நிற்பான் ஏல் = இருப்பானானால்,
அவற்கு = அவனுக்கு,
யாதும் = யாதொரு,
அறம் = தருமமும்,
கூற வேண்டா = சொல்லவேண்டாவாம்.

:கருத்துரை:

பிறர் இரகசியத்திற் செவிடனாகவும், பிறர் மனையாளிடத்துக் குருடனாகவும், பொறாமை சொல்வோனிடத்து ஊமையாகவும் ஒருவன் இருந்தானானால் அவனுக்கு இதுவே பெரிய தருமம்.

விளக்கவுரை:

ஒருவன் - எழுவாய், கூறவேண்டா - பயனிலை.

பாடல்: 159 (பன்னாளுஞ்)[தொகு]

பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை|பல் நாளும் சென்றக்கால் பண்பு இலார் தம் உழை

யென்னானும் வேண்டுப வென்றிகழ்ப- யென்னானும்|என் ஆனும் வேண்டுப என்று இகழ்ப - என் ஆனும்

வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர்|வேண்டினும் நன்று மற்று என்று விழுமியோர்

காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. (09)|காண் தொறும் செய்வர் சிறப்பு. (௯)

பதவுரை:

பண்பு இலார் = நற்குணமில்லார்,
தம் உழை = தம்மிடத்து,
பல் நாளும் = பல நாளும்,
சென்றக்கால் = (ஒருவர்) சென்றால்,
என் ஆனும் = யாதாகிலும்,
வேண்டுப = வேண்டுவார்கள்,
என்று = என்று சொல்லி,
இகழ்ப = இகழ்வார்கள்;
விழுமியோர் = மேன்மக்கள்,
என் ஆனும் = யாதாகிலும்,
வேண்டினும் = வேண்டினாலும்,
நன்று = நல்லது,
என்று = என்று சொல்லி,
காண்தொறும் = காணுந்தோறும்,
சிறப்பு = சிறப்பை,
செய்வர் = செய்வார்கள்.

:கருத்துரை:

கீழ்மக்கள் தங்களிடத்து ஒருவர் வந்தால் யாதொன்றைக் கேட்பார்களென்று இகழ்வார்கள்; மேன்மக்கள் தங்களிடத்து வந்தவருக்குக் காணுந்தோறுஞ் சிறப்புச் செய்வார்கள்.

விளக்கவுரை:

பண்பிலார் - எழுவாய், இகழ்ப - பயனிலை, விழுமியோர் - எழுவாய், செய்வர் - பயனிலை, சிறப்பினை - செயப்படுபொருள், மற்று - அசை.

பாடல்: 160 (உடையாரிவ)[தொகு]

உடையா ரிவரென் றொருதலையாப் பற்றிக்||உடையார் இவர் என்று ஒரு தலையா பற்றி

கடையாயார் பின்சென்று வாழ்வ - ருடைய||கடையாயார் பின் சென்று வாழ்வர் -உடைய

பிலந்தலைப் பட்டது போலாதே நல்ல||பிலம் தலை பட்டது போலாதே நல்ல

குலந்தலைப் பட்ட விடத்து. (10)||குலம் தலை பட்ட இடத்து. (௰)

பதவுரை:

உடையார் = செல்வமுள்ளார்,
இவர் என்று = இவர்களென்று,
ஒரு தலையா = ஒரு துணிவாக,
பற்றி = பிடித்து,
கடையாயார் = கீழ்மக்கள்,
பின் சென்று = பின் போய்,
வாழ்வர் = சிலர் வாழ்வார்கள்;
நல்ல = நல்ல,
குலம் = குலத்திற் பிறந்தாரை,
தலைப்பட்ட = முதன்மையாகச் சேரப்பட்ட,
இடத்து = இடத்திலே,
உடைய = எல்லாப் பொருளுமுடைய,
பிலம் = குகையை,
தலைப்பட்டது போலாதே = தலைப்பட்டது போலுமல்லவோ.

:கருத்துரை:

கீழ்மக்களைச் சென்று சிலர் வாழ்ந்திருப்பர்; மேன் மக்களைச் சேர்தல் எப்பொருளுமுள்ள குகை அகப்பட்டது போலும்.

விளக்கவுரை:

(சிலர்) = தோன்றா எழுவாய், வாழ்வர் = பயனிலை.


‘மேன்மக்கள்’ அதிகாரம் முற்றிற்று.


பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
[[]]
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]