புறப்பொருள் வெண்பாமாலை/தும்பைப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

ஏழாவது

தும்பைப்படலம்[தொகு]

துன்னருங் கடும்போர்த் தும்பை தும்பை யரவம்
தன்னிக ரில்லாத் தானை மறமே
யானை மறத்தொடு குதிரை மறமே
தார்நிலை தேர்மறம் பாணது பாட்டே
இருவருந் தபுநிலை யெருமை மறமே
ஏம வெருமை நூழி லென்றா
நூழி லாட்டே முன்றேர்க் குரவை
பின்றேர்க் குரவை பேய்க்குர வையே
களிற்றுட னிலையே யொள்வா ளமலை
தானை நிலையே வெருவரு நிலையே
சிருங்கார நிலையே யுவகைக் கலுழ்ச்சி
தன்னை வேட்ட றொகைநிலை யுளப்பட
நன்பொரு டெரிந்தோர் நாலிரு மூன்றும்
வண்பூந் தும்பை வகையென மொழிப.
  1. தும்பை
  2. தும்பை யரவம்
  3. தானை மறம்
  4. யானை மறம்
  5. குதிரை மறம்
  6. தார்நிலை
  7. தேர்மறம்
  8. பாண் பாட்டு
  9. இருவரும் தபுநிலை
  10. எருமை மறம்
  11. ஏம வெருமை
  12. நூழில்
  13. நூழிலாட்டு
  14. முன்றேர்க் குரவை
  15. பின்றேர்க் குரவை
  16. பேய்க்குரவை
  17. களிற்றுடனிலை
  18. ஒள்வாளமலை
  19. தானை நிலை
  20. வெருவரு நிலை
  21. சிருங்கார நிலை
  22. உவகைக் கலுழ்ச்சி
  23. தன்னை வேட்டல்
  24. தொகைநிலை

நாலிரு மூன்றும் தும்பை வகை என மொழிப.

தும்பை[தொகு]

செங்களத்து மறங்கருதிப்
பைந்தும்பை தலைமலைந்தன்று. - கொளு
போர்க்களத்தில் தன் மறம் காட்டவேண்டி
தும்பைப்பூ சூடி எதிர்த்துப் போரிடுதல்
கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலநனைப்பப் – போர்கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர்
வெப்புடைத் தானையெம் வேந்து.
முரசம் கார்மேகம் போலக் கௌவையொலி முழங்க,
எம் மன்னன் தும்பை சூடிக்கொண்டு
தன் படையுடன் சென்று
குருதி நிலத்தை நனைக்க,
போரிட்டான்

தும்பை அரவம்[தொகு]

பொன்புனைந்த கழலடியோன்
தன்படையைத் தலையளித்தன்று. - கொளு
பொன்னாலான வீரக்கழல் அணிந்த மன்னன்
தன் படையின் முன் தோன்றி எழுச்சி ஊட்டுதல்
வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையும்
கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் – பல்புரவி
நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப்
பன்மணிப் பூணான் படைக்கு.
வெல்லும் போர்க்கருவிகளையும்
விரும்பும் விழுமிய பொருள்களையும்
குளுமையான அடைவு நிலங்களையும்
யானை, குதிரைகளையும்
பகைவர் நடுங்கும்படித்
தன் படையினருக்கு வேந்தன் அளித்தான்

தானைமறம்[தொகு]

தாம்படைத் தலைக்கொள்ளாமை
ஓம்படுத்த வுயர்புகூறின்று. - கொளு
தனக்குப் படைத்தலைமை வேண்டாம் என்று கூறும் மேம்பாட்டைப் புகழ்தல்
கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள்
இழுதார்வேற் றானை யிகலிற் – பழுதாம்
செயிர்காவல் பூண்டொழுகுஞ் செங்கோலார் செல்வம்
உயிர்காவ லென்னு முரை.
பேய்கள் நிறைந்த போர்களத்தைப் பார்த்துத் தன் படையினர் எண்ணம் மாறுபட்டால் தனக்குப் பழுதாகும் என்று எண்ணி சினம் கொண்ட மறவன் செங்கோலன் தரும் செல்வத்தை வேண்டாம் என்றான்

இதுவுமது

பூம்பொழிற் புறங்காவலனை
ஓம்படுத்தற்கு முரித்தெனமொழிப
அரசனைப் பாதுகாக்கும் அணுக்க மறவன் திறம் கூறுவதும் இத் திணைக்கு உரித்து என்று கூறுவர்
வயிர்மேல் வளைஞரல வைவேலும் வாளும்
செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி – உயிர்மேற்
பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்த்
குலகழியு மோர்த்துச் செயின்.
கொம்பும் சங்கும் முழங்க, வேலும் வாளும் வீசிச் சீறிப் பாய்ந்து தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மன்னன் உயிரை உலகின் நலனைப் பாதுகாப்பதற்காப் போரிட்டான்

இதுவுமது

வேற்றானை மறங்கூறி மாற்றார தழிபிரங்கினும்
ஆற்றி னுணரி னத்துறையாகும்.
தன் வேல்படையின் மறத்தைச் சொல்லி மாற்றாரது அழிவுக்கு இரக்கப்பட்டாலும் இந்தத் துறை ஆகும்
மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை
ஒன்னார் நடுங்க வுலாய்நிமிரின் – என்னாங்கொல்
ஆழித்தேர் வேல்புரவி யண்ணன் மதயானைப்
பாழித்தோண் மன்னர் படை.
இந்த வேல்மறவன் மீளி கடல் போன்ற பகைவர் படை நடுங்கப் போர்க்களத்தில் உலாவுகிறான். பகைவனின் தேர், குதிரை, யானைப் படைகள் என்ன ஆகுமோ

யானைமறம்[தொகு]

எழுமரவக் கடற்றானையான்
மழகளிற்றின் மறங்கிளந்தன்று. -கொளு
முழங்கும் யானைப் படையின் மறத்தைக் கூறுவது
அடக்கருந் தானை யலங்குதார் மன்னர்
விடக்கு முயிரு மிசையக் – கடற்படையுள்
பேயு மெருவையுங் கூற்றுந்தன் பின்படரக்
காயுங் கழலான் களிறு.
அடக்க முடியாத படையினைக் கொண்ட பகைமன்னனின் கொழுப்பையும் உயிரையும் பிசைந்து உண்ணவேண்டும் என்று எண்ணி இந்த மறவன் தன் வீரக் கழலைச் சுழற்றி விட்டுக்கொண்டு தன் யானைமேல் வருகிறான்

குதிரைமறம்[தொகு]

எறிபடையா னிகலமருள்
செறிபடைமான் றிறங்கிளந்தன்று. - கொளு
பகையரசன் எறிபடை கொண்டு தாக்கும் போர்களத்தில் குதிரைப் படை மறவன் போரிடும் திறம் பற்றிக் கூறுதல்
குந்தங் கொடுவில் குருதிவேல் கூடாதார்
வந்த வகையறியா வாளமருள் – வெந்திறல்
ஆர்கழன் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை
வார்கணையின் முந்தி வரும்.
குந்தம், வில், வேல், வாள் கொண்டு பகைவர் தாக்கும் போர்க்களத்தில் வில் மறவன் தன் குதிரையில் முந்திக்கொண்டு வருகிறான்

தார்நிலை[தொகு]

முன்னெழுதரு படைதாங்குவனென
மன்னவர்க்கு மறங்கிளந்தன்று. - கொளு
முன்னே சென்று முன்னே வரும் படையைத் தாக்குவேன் என்று மறம் பேசுவது
உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின்
சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய் – எறிசுடர்வேற்
றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்தே நின்னனோடு
பாங்கலா மன்னர் படை.
வேந்தே! இன் பகைவர் படையினரின் வாள் தாக்குலுக்கு முன் நிற்காவிட்டால் நமக்கு இருளாய் முடியும் - என்றான் அந்த மறவன்

இதுவுமது

ஒருகுடை மன்னனைப் பலகுடை நெருங்கச்
செருவிடைத் தமியன் றாங்கற்கு முரித்தே. - கொளு
தன் ஒருகுடை மன்னனைப் பலகுடை மன்னர் சேர்ந்து தாக்கும்போது தான் தனியே எதிர்த்து நிற்பது
காலான் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல்
வேலான்கை வேல்பட வீழ்ந்தனவே – தாலா
இலைபுனை தண்டா ரிறைவன்மேல் வந்த
மலைபுரை யானை மறிந்து.
காற்றுடன் வரும் புயல் போல வந்து தாக்கிய பகைவனின் வேல்படைகள் வேல்மறவன் ஒருவனின் தாக்குதலால் வீழ்ந்தன

தேர்மறம்[தொகு]

முறிமலர்த்தார் வயவேந்தன்
செறிமணித்தேர்ச் சிறப்புரைத்தன்று. - கொளு
போரிடச் செல்லும் வேந்தனின் தேர்ப்படைச் சிறப்பினைக் கூறுவது
செருமலி வெங்களத்துச் செங்குருதி வெள்ளம்
அருமுர ணாழி தொடர – வருமரோ
கட்டார் கமழ்தெரியற் காவலன் காமர்தேர்
ஒட்டார் புறத்தின்மே லூர்ந்து.
கொடிய போர்க்களத்தில் குருதி வெள்ளம் பாயும்படி காவலனின் தேர்ப்படை வரும்

பண்பாட்டு[தொகு]

வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல்யாழ்ப் பாணர் கடனிறுத்தன்று. - கொளு
போரிடும் களிற்றைத் தாக்கி வீழ்ந்த மறவனைப் பாராட்டிப் பாணர் தன் கடமையைச் செய்தல்
தளரிய றாய்புதல்வர் தாமுண ராமைக்
களரிக் கனன் முழங்க மூட்டி – விளரிப்பண்
கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினார் செய்தார் விருந்து.
போர்க்களத்தில் களிற்றினை சாய்த்து வீழ்ந்துபட்டவனைப் போற்றிப் பாணர் போர்க்களத்தில் விளரிப்பண் பாடினர்

இருவரும் தபுநிலை[தொகு]

பொருபடை களத்தவிய
இருவேந்தரு மிகலவிந்தன்று. - கொளு
போரிட்ட மறவர்களுடன் தாமும் போரிட்டு இரு வேந்தர்களும் மடிந்தது
காய்ந்து-கடுங்களிறு கண்கனலக் கைகூடி
வேந்த ரிருவரும் விண்படர – ஏந்து
பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
இருபடையு நீங்கா விகல்.
இரு மன்னர்களும் கடுஞ்சினத்துடன் போரிட்டுக் களத்தில் மாய்ந்தது கண்டும் இரு படையினரும் போரை நிறுத்தவில்லை

எருமை மறம்[தொகு]

வெயர்பொடிப்பச் சினங்கடைஇப்
பெயர்படைக்குப் பின்னின்றன்று. - கொளு
சினம் கொண்டு தாக்கிப் பெயரும் தன் படைக்குப் பின் நின்று தளராமல் போரிடுதல்
கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் – நடுங்கமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி
வாள்வெள்ளைந் தன்மேல் வர.
கனலும் விழியுடன், போர்களத்தில் பிணங்களுக்கு இடையில், ஆள் வெள்ளம் திரும்பிச் செல்லும்போதும், அந்த மறவன் தன் வேலை ஊன்றிக்கொண்டு வாள் வெள்ளத்தை எதிர்த்து நின்றான்

ஏம வெருமை[தொகு]

குடைமயங்கிய வாளமருட்
படைமயங்கப் பாழிகொண்டன்று. - கொளு
மன்னனை எதிர்த்து மறவன் வாட்போர் புரிதல்
மருப்புத்தோ ளாக மதர்விடையிற் சீறிச்
செருப்புகன்று செங்கண் மறவன் – நெருப்பிமையாக்
கைக்கொண்ட வெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி
மெய்க்கொண்டான் பின்னரு மீட்டு.
போரை விரும்பிய மறவன் தன வேலை யானைமேல் வீசி அதன் கொம்புகளைத் தன் மார்பில் வாங்கிக்கொண்டு போரிட்டான்

நூழில்[தொகு]

கழல்வேந்தர் படைவிலங்கி
அழல்வேறிரித் தாட்டமர்ந்தன்று. - கொளு
வேந்தனின் படையை விலக்கிக்கொண்டு நிற்கும் மறவன் அழலும் தன் வேலைச் சுழற்றிக்கொண்டு போர்க்களத்தில் ஆடுதலை விரும்பியது
ஆட லமர்ந்தா னமர்வெய்யோன் வீழ்குடர்
சூடன் மலைந்த சுழல்கட்பேய் – மீடல்
மறந்தவேன் ஞாட்பின் மலைந்தவர் மார்பம்
திறந்தவேல் கையிற் றிரித்து.
பேய் குடல்மாலை அணிந்தாடும் போர்க்களத்தில் எதிர்த்தவனின் மார்பைப் பிளந்த வேலைக் கையில் சுழற்றிக்கொண்டு மறவன் ஆடுகிறான்

நூழிலாட்டு[தொகு]

களங்கழுமிய படையிரிய
உளங்கிழித்தவேல் பறித்தோச்சின்று. - கொளு
தன் படையினர் பரந்தோடத் தன் மார்பில் பாய்ந்த வேலைப் பிடுங்கி, வீசியவன்மீது மறவன் பாய்ச்சுதல்
மெய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல்
கையகத்துக் கொண்டான் கழல்விடலை – வெய்ய
விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
படுசுட ரெஃகம் பறித்து.
கழலணிந்த விடலை தன் மார்புக் கவசத்தில் பாய்ந்திருக்கும் வேலைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டு நிற்கிறான்
பகைவர் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லை

முன்தேர்க் குரவை[தொகு]

எழுவுறல் திணிதோள் வேந்தன் வெஃறேர்
முழுவலி வயவர் முன்னா டின்று. - கொளு
மன்னன் செல்லும் வெற்றித் தேரின் முன்னர் வயவர் மகிழ்ச்சியுடன் ஆடியது
ஆனா வயவர்முன் னாட வமர்க்களத்து
வானார்மின் னாகி வழிநுடங்கும் – நோனாக்
கழுமணிப் பைம்பூட் கழல்வேந்த னூரும்
குழுமணித் திண்டேர்க் கொடி.
போர்க் களத்தில் கழல்வேந்தன் செல்லும் தேரின் முன்னர், வயவர் அடும்போது, தேரிலுள்ள கொடியும் ஆடிற்று

பின்தேர்க் குரவை[தொகு]

கருங்கழன் மறவரொடு வெள்வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின்னா டின்று. - கொளு
போர்க்களத்தில் மன்னன் தேரின் பின்னே மறவரும், விறலியரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஆடுதல்
கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும்
வளையா வயவரும் பின்னாக் – கொளையாய்ந்து
தசைவிளங்கும் பாடலொ டாட வருமே
திசைவிளங்குந் தானையான் றேர்.
மன்னன் தேரின் பின்னே இருந்துகொண்டு
கிளை நரம்பில் கை படாமல் பாணன் யாழை மீட்டவும்
கொளை என்னும் குரவை ஓசை முழக்கத்துன் பாடினி பாட்டிசைக்கவும்
படையுடன் மன்னன் தேர் போர்களம் வருகிறது

பேய்க் குரவை[தொகு]

மன்ன னூரு மறமிகு மணித்தேர்ப்
பின்னு முன்னும் பேயா டின்று. - கொளு
மன்னன் போர்க்களம் செல்லும் மணித் தேரின் முன்னும், பின்னும் நல்ல தீனி கிடைக்கும் என்று மகிழ்ந்து பேய்கள் ஆடிக்கொண்டு செல்லல்
முன்னரும் பின்னரும் மூரிக் கடற்றானை
மன்ன னெடுந்தேர் மறனேத்தி – ஒன்னார்
நிணங்கொள் பேழ் வாய நிழல்போ னுடங்கிக்
கணங்கொள்பே யாடுங் களித்து.
வேந்தன் பகைவரின் குருதித் தசையை வாயில் அதவிக்கொண்டு
வேந்தன் செல்லும் தேரின் முன்னரும், பின்னரும்
அவனது படையினருடன் சேர்ந்து பேய்கள் ஆடுகின்றன

களிற்றுடனிலை[தொகு]

ஒளிற்றெஃகம் படவீழ்ந்த
களிற்றின் கீழ்க் கண்படுத்தன்று. - கொளு
பகைவன் யானையை வேலால் வீழ்த்தி, அது சாயும்போது அதன் அடியில் பட்டு மடிந்தது
இறுவரை வீழ வியக்கற் றவிந்த
தறுகட் டகையரிமாப் போன்றான் – சிறுகட்
பெருங்கைக் களிறெறிந்து பின்னதன்கீழ்ப் பட்ட
கருங்கழற் செவ்வே லவன்.
மலை அதிர முழங்கிக்கொண்டு வரும் யானை போன்று கருங்கழல் வேல்மறவன் போர்க்களத்தில் யானையை வீழ்த்தி அது சாயும்போது அதன் அடியில் பட்டு மாண்டான்.

ஒள்வாளமலை[தொகு]

வலிகெழுதோள் வாள்வயவர்
ஒலிகழலா னுடனாடின்று. - கொளு
கழல் மறவனுடன் சேர்ந்து வாளைச் சுழற்றிக்கொண்டு வாள்மறவன் போர்க்களத்தில் ஆடுதல்
வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார்
ஆளமா வென்றி யடுகளத்துத் – தோள்பெயராக்
காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார்
வேந்தொடு வெள்வாள் விதிர்த்து.
குளத்தில் வாளைமீன் பிறழ்வது போல வாளைச் சுழற்றிக்கொண்டு போர்க்களத்தில் கழல்மறவன் ஆடுகிறான்

தானைநிலை[தொகு]

இருபடையு மறம்பழிச்சப்
பொருளகத்துப் பொலிவெய்தின்று. - கொளு
இருதிறப் படைகளும் போற்றும்படி போர்க்களத்தில் மறவன் தன் திறமையை வெளிப்படுத்தியது
நேரார் படையி னிலைமை நெடுந்தகை
ஓரா னுறைகழியா னொள்வாளும் – தேரார்க்கும்
வெம்பரிமா வூர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்கும்
கம்பமா நின்றான் களத்து.
யானைமீதும், குதிரைமீதும் வந்து தாக்கும் மறவர்கள் வியக்கும்படியாக, எதிராளிகளைத் தடுத்து நிறுத்திக்கொண்டு கழல்மறவன் போர்களத்தில் நின்றான்

வெருவருநிலை[தொகு]

விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப
நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகை நிலையுரைத்தன்று. - கொளு
பகைவரின் அம்புகள் தைத்தும் உடல் நிலத்தில் சாயாமல் உடல் அம்பில் நின்றது
வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப
எங்கு மருமத் திடைக்குளிப்பச் – செங்கட்
புலவா நெடுந்தகை பூம்பொழி லாகம்
கலவாமற் காத்த கணை.
முரசதிர வேலும் வில்லும் உடலில் பாய்ந்து, சினக்கண் மாறாத மறவனை மண்ணில் சாயாமல், கணைகள் நிறுத்தின

சிருங்கார நிலை[தொகு]

பகைபுகழக் கிடந்தானை
முகைமுறுவலார் முயக்கமர்ந்தன்று - கொளு
பகைவர் புகழும்படிப் போரிட்டுக் களத்தில் கிடந்தவனை
மனைவி முயங்கியது
எங்கணவ னெங்கணவ னென்பா ரிகல்வாடத்
தங்கணவன் றார்தம் முலைமுகப்ப – வெங்கணைசேர்
புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
நுண்ணிடைப் பேரல்கு லார்.
புண் பட்ட மார்புடன் போர்க்களத்தில் கிடப்பவனை
என் கணவன், என் கணவன் என்று சொல்லிக்கொண்டு
மகளிர் தம் முலைகளால் அவன் மார்பினைத் தழுவினர்

உவகைக் கலுழ்ச்சி[தொகு]

வாள்வாய்த்த வடுவாழ்யாக்கைக்
கேள்கண்டு கலுழ்ந்துவந்தன்று - கொளு
போரில் வாளால் வெட்டப்பட்டு கிடக்கும் மறவன் உடலினைக் கண்டு அவனது உறவுக்காரி கண்ணீருடன் பெருமித உவகை கொள்ளுதல்
வெந்தொழிற் கூற்றமு நாணின்று வெங்களத்து
வந்த மறவர்கை வாடுமிப்பப் – பைந்தொடி
ஆடரிமா வன்னான் கிடப்ப வகத்துவகை
ஓடரிக்க ணீர்பா யுக.
வெற்றி கொள்ளும் அரிமா போன்ற தன் கணவன் உடல் போர்க்களத்தில் எதிரி வாளால் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு கண்ணீர் மல்க உள்ளம் மகிழ்ந்தது கண்டு கூற்றமே நாணிற்று

தன்னை வேட்டல்[தொகு]

தம்மிறைவன் விசும்படைந்தென
வெம்முரணா னுயிர் வேட்டன்று. - கொளு
தன் அரசன் விசும்பு இடைந்தான் என்று அவனது மெய்காப்பாளன் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டது
வான மிறைவன் படர்ந்தென வாடுடுப்பா
மானமே நெய்யா மறம்விறகாத் – தேனிமிரும்
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர்
ஒள்ளழலுள் வேட்டா னுயிர்.
தன் அரசன் வாலுலகம் சென்றுவிட்டான் என்று
அவனது மெய்காப்பாளன்
தன் வாளைத் துடுப்பாக்கிப்பொண்டு
தன் மானத்தை நெய்யாக்கிக்கொண்டு
தன் மறத்தை விறகாக வைத்து
வேள்வி செய்தான்
அதாவது தன் வாளால் தன் உயிரையே மாய்த்துக்கொண்டான்

இதுவுமது

காய்கதிர் நெடுவேற் கணவனைக் காணிய
ஆயிழை சேறலு மத்துறை யாகும். - கொளு
போர்களத்தில் மாண்ட தன் கணவனை வானுலகில் காணும்பொருட்டு மனைவி அவனுடன் செல்வதைக் கூறினும் இந்தத் துறை ஆகும்
கற்பின் விழுமிய தில்லை கடையிறந்
திற்பிறப்பு நாணு மிடையொழிய – நற்போர்
அணங்கிய வெங்களத் தாருயிரைக் காண்பான்
வணங்கிடை தானே வரும்.
கற்பினைக் காட்டிலும் விழுமிய பொருள் வேறொன்றும் இல்லை
கணவன் இடையிலே மாள அவனுக்குப் பின் வாழ்வதற்கு மனைவி நாணினாள்
அணங்கிய அவன் உயிரைக் காண்பதற்காக மனைவியும் தானே வருகிறாள்

தொகைநிலை[தொகு]

அழிவின்று புகழ்நிறீஇ
ஒழிவின்று களத்தொழிந்தன்று. - கொளு
கணவன் புகழை நிலைநாட்டுவதற்காக மனவியும் போர்களத்தில் உயிரைத் துறந்தாள்
மண்டமர்த் திண்டோள் மறங்கடைஇ மண்புலம்பக்
கண்டிரள் வேன் மன்னர் களம்பட்டார் – பெண்டிர்
கடிதெழு செந்தீக் கழுமினா ரின்னும்
கொடி தேகா ணார்ந்தின்று கூற்று.
தன் தோள் வீரத்தைக் காட்டி மண்ணுலகம் புலம்ப மன்னன் போர்க்களத்தில் மாண்டான்
அவனது மனைவியரும் தீ மூட்டி அதில் விழுந்து இறந்தொழிந்தனர்
என்னே! கொடுமை!

ஏழாவது தும்பைப் படலம் முற்றிற்று.