வேங்கடம் முதல் குமரி வரை 3/007-033

விக்கிமூலம் இலிருந்து

7. நாச்சியார் கோயில் நாச்சியார்

ழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஒரு காதல் கதை. ஆம், அந்தக் ‘கற்று அறிந்தார் ஏத்தும் கலியில் எத்தனை கதைகள்! நான் சொல்லும் கதை பலர் படித்து அனுபவித்ததுதான். ஒரு பெண்; அவள் சிறுமியாக இருக்கும்போது பக்கத்து வீட்டுப் பெண்களுடன் கூடிச் சிறு வீடு கட்டி, சோறு சமைத்து, விருந்தருந்தி எல்லாம் விளையாடுவாள். ஆண்பிள்ளைகளை அவள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் கோபமுற்ற அடுத்த தெருப்பையன் ஒருவன் வருவான்; இவளது பந்தை எடுத்துக் கொண்டு ஓடுவான்; கையால் கட்டிய சிறு வீட்டைக் காலால் அழிப்பான். இப்படிச் சிறு சிறு குறும்பு செய்வதே அவன் தொழில்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள். குறும்பு செய்த பயலும் வளர்ந்து கட்டிளங்காளையாகிறான். ஒருவரையொருவர் பார்க்கின்றனர் ஒருநாள், அந்தப் பார்வையிலேயே காதல் பிறக்கிறது இருவருக்கும். என்றாலும், நெருங்கிப் பேசியதில்லை, பழகியதில்லை. தன் காதலை வெளியிட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ள விரைகிறான் இளைஞன். துணிந்து கன்னிப் பெண்ணின் வீட்டுக்கே வருகிறான்; பெண்ணும் தாயும் தனித்திருக்கும் நேரத்திலே 'தாகமாயிருக்கிறது; கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என்கிறான். வீட்டிற்குள் இருந்த அம்மாவும், பெண்ணை அழைத்து 'பெண்ணே! இந்தப் பையனுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடம்மா' என்கிறாள். பெண்ணும் ஒரு சிறு! செம்பிலே தண்ணீர் எடுத்துக் கொண்டு தலைவாயிலுக்கு வருகிறாள். வந்திருப்பவனைப் பார்க்கிறாள். அவன் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு வந்தவனா? அவன் கொஞ்சம் அவசரக்காரனும் கூட; ஆதலால் நீர் கொண்டு வந்த பெண்ணின் கையைப் பற்றித் தன் பக்கலில் இழுக்கிறான். எவ்வளவு தான் காதல் வயப்பட்டாலும், இப்படித் திடீரென்று ஆடவன் கையைப் பற்றினால் கன்னிப் பெண் சும்மா இருப்பாளா? ‘அம்மா இவன் செய்வதைப் பாரம்மா' என்கிறாள். வீட்டிற்குள்ளிருந்த அம்மா, மகள் சத்தம் கேட்டு ஓடிவருகிறாள்.

அதற்குள் மகள் சுதாரித்துக் கொள்கிறாள். காதலனைச் காட்டிக் கொடுக்கவில்லை. அம்மா என்ன? என்ன?' என்று கேட்க, 'ஐயோ? இவருக்குத் தண்ணீர் குடிக்கும் போது விக்கி விக்கிப்புரையேறி விட்டது அம்மா! நான் பயந்தே விட்டேன்' என்று ஒரு புதிய நாடகமே நடிக்கிறாள். அம்மாவும் அவள் வார்த்தையை உண்மை என நம்பி, அவன் முகத்தைத் தடவிக் கொடுக்கிறாள். அப்போது பயல் சும்மாவா இருக்கிறான்; அம்மாவுக்குத் தெரியாமல் பெண்ணைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரிக்கிறான். ஆம், அவள் உள்ளத்தையும் அவன் தெரிந்து கொண்டான் அல்லவா? இப்படி ஒரு நாடகம். இந் நாடகத்தை மறுநாள் தன்னைத் தேடிவந்த தன் தோழியிடம் பெண்ணே சொல்கிறாள், அப்படிச் சொன்னதாகக் குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடுகிறார்.

கடர்த்தொடீஇ! கேளாம். தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து. வரிப்பந்து கொண்டு ஓடி
நோதக்கசெய்யும் சிறுபட்டி, மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா. இல்லிரே!
உண்ணும் நீர் வேட்டேன் என வந்தாற்கு, அன்னை அடல்பொன் சிரகத் தால்வாக்கி சுடரிழாய்!
உண்ணும் நீர் ஊட்டிவா என்றாள் ; என, யானும்
தன்னை அறியாது சென்றேன். மற்று என்னை வளைமுன்கை பற்றிநலிய, தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்ததுகாண் என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னையான்
உண்ணும்நீர் விக்கினான் என்றேனா, அன்னையும் தன்னைப்புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான், அக்கள்வன் மகன்

என்பது பாட்டு. பெண் எப்படித்தன் காதலைத் தோழியிடம் "நைஸாக' வெளியிடுகிறாள் என்பதை அறிந்து அறிந்து அனுபவிக்கிறோம் பாட்டைப் படிக்கிறபோதெல்லாம்.

இந்தக் 'கள்வன் மகன்' செய்த சிறு குறும்பையே அந்தக் கள்ளக் கண்ணனுமே செய்திருக்கிறான். கதை இதுதான் : திருநறையூர் என்னும் தலத்திலே மேதாவி முனிவர் இருந்து தவம் செய்கிறார். அவருடைய ஆசையெல்லாம் திருமாமகள், தனக்கொரு மகளாகப் பிறக்க வேண்டும் என்பதுதான், அவர் விரும்பிய வண்ணமே திரும்களும், முனிவரது பர்ணசாலையின் அருகிலே வஞ்சுள மரத்தடியில் சிறு குழந்தையாக அவதரிக்கிறாள். முனிவரும் அவளை எடுத்து வஞ்சுள வல்லி என்று பெயரிட்டு வளர்க்கிறார். அவளும் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள். அந்த நாராயணன் தான் எத்தனை நாட்களுக்குத் திருமகளைப் பிரிந்து இருப்பான்? (ஆம், இந்த பக்தர்கள் விரும்பும்போதெல்லாம் தான் பூதேவியும் சீதேவியும் ஏன் அந்த உமையும் கூடத் தங்கள் புருஷன் மாரைத் தவிக்க விட்டுவிட்டு, பூலோகத்தில், வந்து அவதரித்து விடுகிறார்களே! அத்தனை அன்பு தம் பக்தர்களிடம் அவர்களுக்கு, தம் கணவரிடம் வைத்திருக்கும் அன்பை விட). அவளைத் தேடிக் கொண்டு பூலோகத்திற்கு வருகிறான் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என்று ஐந்து உருத் தாங்கி வருகிறான். இந்தப் பஞ்ச வியூகப் பரமர்களையும் மேதாவி முனிவரது சீடர்கள் மணிமுத்தாற்றின் கரையிலே சந்தித்து முனிவரது ஆசிரமத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

ஐவரையும் அதிதிகளாக ஏற்று உபசரிக்கிறார் முனிவர். ஐவரில் நடுநாயகமாக அமைந்த வசுதேவருக்கு வஞ்சுள வல்லியின் மேலே ஒரு கண். உணவு அருந்தி விட்டுக் கையலம்பக் கிளம்பியபோது, முனிவர் தம் பெண்ணை தண்ணீர் கொடுக்கச் சொல்கிறார். தண்ணீர் கொண்டு வந்த தையலின் கையை வசுதேவன் பற்றுகிறான். உடனே வஞ்சுளவல்லி 'அப்பா! இவர் செய்வதைப் பாரும்' என்கிறாள். ஓடி வந்த மேதாவி முனிவர், தம் மகள் கைப்பற்றி நிற்கம் வசுதேவனைக் காண்கிறார். அவனது அக்கிரமத்தைக் கண்டு கோபங் கொள்கிறார். சாபம் கொடுக்கவே முனைகிறார்.

வசுதேவனோ இந்த இக்கட்டான நிலையை உணர்ந்து, சங்குசக்கரம் ஏந்திய தன் திருக்கோலத்தை உடனே காட்டுகிறான். வந்திருப்பவன் திருமகள் கொழுநனாம் நாராயணனே என்று அறிந்ததும் மேதாவி முனிவர் வாழ்த்துகிறார்; தம் மகளாம் வஞ்சுளவல்லியை வசுதேவன் வடிவில் வந்த நம்பிக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார். அந்தத் திருமணக் கோலத்திலேயே இந்த நறையூரிலே நம்பி நின்றருளுகிறான். மேதாவி முனிவர் கெட்டிக்காரர். திருமணம் முடியும் முன்பே, நறையூர் நம்பியிடம் சில நிபந்தனைகள் போடுகிறார். ஒன்று தமக்குப் பிறவாமையாகிய பேறு, மற்றொன்று அத்தலத்தில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் விண்ணகர வாழ்வு, மூன்றாவதாக அத்தலத்தில் எல்லாக் காரியங்களிலும் அக்ரஸ்தானம் தம் பெண்ணாகிய வஞ்சுளவல்லி நாச்சியாருக்கே என்பவை அவை.

நிபந்தனைகளுக்கு எல்லாம் உட்பட்டே நம்பி, நாச்சியாரைத் திருமணம் செய்து கொள்கிறான். அன்று முதல் நறையூர் என்ற பெயர் மங்கி நாச்சியார் கோயில் என்றே விளங்குகிறது அத்தலம். நறையூர் நம்பியும், அன்று முதல் 'ஹென்பெக்ட் ஹஸ்பெண்டாகவே' அத்தலத்தில் வாழ்கிறான்! அந்த நாச்சியார் கோயிலுக்கே இன்று செல்கிறோம் நாம்.

நறையூர் என்னும் இந் நாச்சியார் கோயில் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் ஆறு மைல் தொலைவில் இருக்கிறது. கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கினால் வண்டி கிடைக்கும்; பஸ் கிடைக்கும்; ஏன்? கார் வேண்டுமானாலும் கிடைக்கும். செல்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு நேரே நாச்சியார் கோயிலுக்கே சென்று விடலாம்.

சைவ வைஷ்ணவ வேற்றுமை எல்லாம் நமக்குக் கிடையாது என்று சொல்பவர்கள் இருந்தால் வழியில் உள்ள அரிசிற்கரைப் புத்தூர், நறையூர் சித்தீச்சுரம் என்னும் சிவன் கோயில்களிலும் இறங்கி அங்குள்ள சொர்ணபுரி ஈசுவரர், சித்தநாத ஈசுவரர் இவர்களையும் வணங்கிய பின் மேலே நடக்கலாம். நாராயணன் சிவனை வணங்கிப் பல வரங்களைப் பெற்றான் என்றுதான் சைவர்கள் கதை சொல்வார்கள். இவற்றிற்கெல்லாம் வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள் வைஷ்ணவர்கள், பிரமன் தலையைக் கொய்த சிவபெருமான் கையில் அந்தக் கபாலம் ஒட்டிக்கொள்ள அதைக் களைய, சித்தநாத ஈசுவரர் நறையூர் நம்பியை வணங்கினார் என்பது புராண வரலாறு.

ஏதோ பெண் சாதிக்கு அடங்கி வாழ்பவர் என்றாலும், இப்படி சிவனுக்கும் மேற்பட்ட பரத்துவம் உடையவராக இருக்கிறாரே என்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. இனி நாச்சியார் கோயிலை நோக்கி நடக்கலாம். அந்தக் கோயிலையும் முந்திக், கொண்டு ஒரு பெரிய திருக்குளம் தோன்றும். 684 அடி நீளமும் 225 அடி அகலமும் உள்ள இந்தத் திருக்குளத்தை மணிமுத்தாறு என்று கூறுகிறார்கள், நறையூர் நம்பிக்கு அணிவிக்கத் திருப்பாற் கடலிலிருந்து வைர முடியைக் கருடாழ்வார் எடுத்துப் போகும்போது அதில் உள்ள மணி ஒன்று கழன்று விழுந்திருக்கிறது இக்குளத்தில். அதனால் தான் மணிமுத்தாறு என்கிறார்களாம். இது மிகப் புனிதமான தீர்த்தம்: இறங்கி நீராடுவதற்கு வசதியாகவும் இருக்கும். ஆதலால் நீராடிவிட்டே கோயிலுள் செல்லலாம். .

கோயில் வாயிலில், நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைத்திருக்கிறார்கள். கோயில் வாயிலை 75 அடி உயரமுள்ள கோபுரம் அழகுசெய்கிறது. கோபுர வாயிலில் ஒரு மாடத்தில் தும்பிக்கை ஆழ்வார் இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறார், அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லலாம். உள்ளே நுழைந்ததும் ஏதோ தெரியாத்தனமாக மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கே வந்து சேர்ந்து விட்டோமே என்று தோன்றும். அப்படி உருண்டு திரண்ட பெரிய தூண்கள் ஏந்தும் மண்டபம் ஒன்றைப் புதிதாகச் சமைத்திருக்கிறார்கள். மண்டபம் அழகாயிருக்கிறது என்பது வாஸ்தவம். ஆனால் அந்த கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில் கட்டிடக் கலையோடு பொருந்துவதாக இல்லை. பரவாயில்லை. செய்ததை அழகாகச் செய்திருக்கிறார்களே என்று திருப்திப் பட்டுக் கொண்டே நடக்கலாம்.

கோயில் மிகவும் பெரிய கோயில், 690 அடி நீளம் 288 அடி அகலம் என்றால் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்துக் கொள்ளுங்களேன். இக் கோயில் விமானம் ஸ்ரீநிவாச விமானம் எனப் பெயர் பெறும். ஸ்ரீநிவாசன் மிகவும் மகிழ்ந்து உறையும் தலத்தில் உள்ள விமானம் ஸ்ரீநிவாச விமானமாயிருப்பது பொருத்தம் தானே. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். இது ஸ்ரீநிவாசனுக்கு மட்டுந்தான் உகந்த தலம் என்பதல்ல; அந்த ஸ்ரீதேவிக்குமே தேன் அனைய இருப்பானது பற்றித் தானே நறையூர் என்றே பெயர் பெற்றிருக்கிறது. புதிதாய்க் கட்டிய மண்டபத் தினின்றும் விலகி விமான தரிசனம் செய்தபின் படிக்கட்டுகள் ஏறிக் கல்யாண மண்டபத்தைக் கடந்து, திரும்பவும் படிக்கட்டுகள் ஏறியே கருப்பக்கிருக வாயிலுக்கே வரவேணும். அங்கே கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நிற்பவனே ஸ்ரீநிவாசன் என்னும் நறையூர் நம்பி. அன்று மேதாவி முனிவருக்கு ஆழியும் சங்கமும் ஏந்திய கைகளை முன்னே நீட்டிக்கொண்டு எழுந்தருளிய அவசரத்திலேயே நிற்கிறான். இவருக்கு இரண்டே கைகள்தான். காட்சி கொடுக்கத் துடித்த அவசரத்தில் தனக்கு நான்கு கைகள் உண்டு என்பதைக்கூட அல்லவா இவர் மறந்திருக்கிறார்!

இந்திரநீலமொத்த இருண்டமேனி, குன்றாடும் கொழுமுகில் போல், குவளைகள் போல், குரை கடல்போல், நின்றாடும் கமல மயில்போல் நிறமுடைய பெருமான் அவன் என்றாலும் மேனியெல்லாம் தங்கக் கவசமும், அழகான ஆபரணங்களும் அணிந்து கொண்டே சேவை சாதிக்கிறான். இவருக்குப் பக்கத்திலே வஞ்சுளவல்லி, மன்னும் மரகதக் குன்றின் அருகே ஓர் இளம் வஞ்சிக்கொடி நிற்பதுபோல நிற்கிறாள். இந்த நம்பியை அடுத்தே அன்று அவருடன் வந்த சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர், புருஷோத்தமர் நிற்கிறார்கள். மூலவருக்கு முன்னால் உற்சவர் இருக்கிறார், எல்லா இடத்திலும் பூதேவி ஸ்ரீதேவி சமேதனாக நிற்பவர் இங்கே வஞ்சுள வல்லியோடு மாத்திரமே நிற்கிறார். இந்த வஞ்சுளவல்லியும், 'இத்தலத்தில் எனக்கே பிரதானம்' என்பதைச் சொல்லிக் கொள்கிறவள் போன்று ஓர் அடி எட்டி எடுத்து வைத்து முன்வந்து நிற்கிறாள். இந்தக் கோயிலிலும் நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது. ஆம், நறையூர் நம்பியே, நாச்சியார் நிழலிலே ஒதுங்கித்தானே வாழ்கிறார்.

நம்பி, நாச்சியார் எல்லோரையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது இத்தலம்தானே கருட சேவைக்குப் பேர்போனது, கருவறையில் கருடனைக் காணோமே என்று கேட்கத் தோன்றும். அதற்குள் அர்ச்சர்கள் நம்மை அந்தப் பக்ஷிராஜன் சந்நிதிக்கே கூட்டிச்சென்று விடுவார்கள். இவர் நல்ல கருங்கல் உருவினர். கல்கருடன் என்ற பெயர் பெற்றவர். வாகான வடிவம், நீள்சிறகு, நீள்முடி, அகன்ற மார்பு, ஆஜானு பாகுவான தோற்றத்தோடு விளங்குவார் தனிக்கோயிலில். இந்தக் கோயில் பத்தரை அடிச்சதுரமே உள்ள சிறிய கோயில் தான். அங்கிருந்து வெளியே நான்கு பேர் எளிதாக எடுத்து வந்து விடுவார்கள்.

அதன்பின் அந்தப்பொல்லாத கருடாழ்வாருக்கு எங்கிருந்துதான் பலம் வருகிறதோ தெரியவில்லை . பின்னர் வெளியில் எடுக்க வேண்டுமானால் எட்டுப் பேர்களாகவும் இன்னும் படிகள் இறங்கும்போது முப்பத்திரண்டு பேர்களாகவும் ஸ்ரீபாதம் தாங்குகிறவர்கள் வளர்ந்து கொண்டே போவார்கள். தறையூர் நம்பி ஆரோகணித்து வரும் நாச்சியார் கோயில் கருடசேவை கண்கொள்ளாக் காட்சியே. மார்கழி, பங்குனி மாதங்களில் நடக்கும் இந்தச்சேவைக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகம். இவர் சிறந்த வரப்பிரசாதி. நறையூர் நம்பியிடம் கேட்டுப் பெறாத பிரார்த்தனைகளைக்கூட இவர் நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் உடையவர்.

அவருக்கு உவப்பான பலகாரம் அமுதகலசம் என்னும் மோதகம் தான். இந்த அமுதகலசம் என்றைக்கும். கிடைக்கும். கிடைக்காவிட்டாலும், காத்திருந்து பண்ணச் சொல்லி, பக்ஷிராஜனுக்கு நிவேதனம் பண்ணிவிட்டு, ருசிபார்த்துவிட்டே கிளம்புங்கள். எக்காரணத்தையிட்டும் அமுத கலசம் அருந்த மறந்து விடாதீர்கள்.

இன்னும் இத்தலத்திலே, நரசிம்மன் சந்நிதி, ஆஞ்ச நேயர் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி எல்லாம் பார்க்க வேண்டியவை. மேலும் எண்ணற்ற செப்பு வடிவங்கள் பெரிய அளவிலும் மிகச் சிறிய அளவிலும் ஏராளமாக இருக்கின்றன. இருப்பவைகளில் கலை அழகு நிரம்பியது யோக நரசிம்மரது வடிவம். சிறியவைகளை எல்லாம், நல்ல கண்ணாடிப் பெட்டியில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கலை அன்பர்கள் விரும்பினால் எடுத்துக் காட்டுவார்கள். இந்த நறையூர் நம்பியிடம் ஆறாத காதல் உடையவர் திருமங்கை மன்னன் என்பதை அவர் பாடிய நூற்றுப் பத்துப் பாசுரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தலத்து ஸ்ரீனிவாசனே அவருக்கு முத்திராதாரணம் செய்து வைத்திருக்கிறார். இத்தலத்தைப்பற்றி, இங்குள்ள நம்பியைப்பற்றி அவர் பாடிய பாடல்கள் எல்லாம் எத்தனை தரம் படித்தாலும் தெவிட்டாதவை.

குலையார்ந்த பழுக்காயும்,
பசுங்காயும் பாளைமுத்தும்
தலையார்த்த இளங்கமுகின்
தடஞ்சோலைத் திருநறையூர்,
மலையார்ந்த கோலம் சேர்
மணிமாடம் மிகமன்னி
நிலையார் நின்றான். தன்
நீள்கழலே அடை நெஞ்சே

என்று நம்பியைப் பாடுவார். பின்னர்,

அம்பரமும், பெருநிலனும், திசைகள் எட்டும்,
அலைகடலும், குலவரையும், உண்டகண்டான்
கொம்பு அமரும் வட்மரத்தின் இலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடகிற்பீர்?
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசமுண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்தகோயில் - * . - :திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

என்று நம்மை எல்லாம் கூவி அழைத்து அந்த நம்பியிடம் ஈடுபடுத்துவார். இந்தப் பாசுரங்கள் எல்லாம் அரங்கத்தில் துயிலும் அரவணையான். காதிலும் விழுந்திருக்கிறது. திருமங்கை மன்னன் நறையூர் நம்பிக்கு ஒரு பெரிய மடலும் அரங்கநாதனுக்கு ஒரு பெரிய மதிலும் கட்ட முனைந்தபோது அந்த அரவணையான், மங்கை மன்னனை அழைத்து “மதிலை அங்கே கட்டு, மடலை இங்கே பாடு” என்று வேண்டியிருக்கிறான். அத்தனை விருப்பம் அந்த அரங்கநாதனுக்கு மங்கை மன்னன் பாடல் பெற.

ஆனால் ஆழ்வாரோ இதற்கு இணங்கவில்லை. 'மடல் அங்கேதான் மதில் இங்கேதான்' என்று சொல்லி அரங்கன் வேண்டுகோளையே தட்டிக் கழித்திருக்கிறார். அத்தனை ஆர்வம் ஆழ்வார்க்கு நம்பியிடம்.

கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில் பின்னர் வந்த மன்னர்களால் விரிவடைந்திருக்கிறது. அதை எல்லாம் அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திரிபுவன சக்கரவர்த்தி சடாவர்மன் சுந்தரபாண்டியன் நறையூரில் நின்றருளிய எம்பெருமானுக்கு ஒரு தலத்தையே சாஸனம் செய்திருக்கிறான். தஞ்சை ரகுநாத நாயக்கன் நாச்சியாருக்கு ஒரு மண்டபம் கட்டியிருக்கிறான்.

இன்னும் இதுபோன்ற எத்தனையோ தகவல்கள். நமக்குத் தகவல்கள் எதற்கு, நாச்சியாரும் நம்பியும் ஆட்கொள்ள முனைந்து நிற்கும்போது.