நளவெண்பா/கலிதொடர் காண்டம்/பாடல் 271 முதல் 316

விக்கிமூலம் இலிருந்து


நளனது பிரிவுத்துயர்[தொகு]

271. போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்

ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல்

கடைவார்தங் கைபோல் ஆயிற்றே காலன்

வடிவாய வேலான் மனம்.

272. சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த

மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த

ஒளித்ததேர்த் தானை யுயர்வேந்த னெஞ்சம்

வலித்ததே தீக்கலியால் வந்து.

273. தீக்கா னகத்துறையுந் தெய்வங்காள்! வீமன்தன்

கோக்கா தலியைக் குறிக்கொண்மின் - நீக்காத

காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின்

றேதிலன்போற் போகின்றேன் யான்.

நளன் தமயந்தியை நீத்துச் சென்றது[தொகு]

274. ஏந்து மிளமுலையா ளின்னுயிருந் தன்னருளும்

பூந்துகிலும் வேறாகப் போயினான் - தீந்தேன்

தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னை

இடையிருளிற் கானகத்தே யிட்டு.

275. தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி

மேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளிற்

செங்கா னகஞ்சிதையத் தேவியைவிட் டேகினான்

வெங்கா னகந்தனிலே வேந்து.

தமயந்தி விழித்துக்கொண்டு நளனைக் காணாது வருந்தியது[தொகு]

276. நீல மளவே நெகிழ நிரைமுத்தின்

கோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தே

எங்குற்ற யென்னா இனவளைக்கை நீட்டினாள்

அங்குத்தான் காணா தயர்ந்து.

277. வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்

கையரிகொண் டெவ்விடத்துங் காணாமல் - ஐயகோ

என்னப்போய் வீழ்ந்தா ளினமேதி மென்கரும்பைத்

தின்னப்போம் நாடன் திரு.

278. அழல்வெஞ் சிலைவேட னம்புருவ ஆற்றா

துழலுங் களிமயில்போ லோடிக் - குழல்வண்

டெழுந்தோட வீழ்ந்தா ளிருகுழைமேற் கண்ணீர்க்

கொழுந்தோட வீமன் கொடி.

279. வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்

தானுங் குழலுந் தனிவீழ்ந்தாள் - ஏனம்

குளம்பான் மணிகிளைக்குங் குண்டுநீர் நாடன்

இளம்பாவை கைதலைமே லிட்டு.

பொழுது புலர்ந்தமை[தொகு]

280. தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்

கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை

வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்

கூவினவே கோழிக் குலம்.

சூரியோதயம்[தொகு]

281. வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்

தான மடந்தைக்குத் தார்வேந்தன் - போனநெறி

காட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானூடே

நீட்டுவான் செங்கரத்தை நின்று.

தமயந்தி நளன் அடிச்சுவடு கண்டு வருந்தியது[தொகு]

282. அல்லியந்தார் மார்ப னடித்தா மரையவள்தன்

நல்லுயிரு மாசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள்

வேந்தனே என்று விழுந்தாள் விழிவேலை

சார்ந்தநீர் வெள்ளத்தே தான்.

தமயந்தி, மயில் முதலியவற்றை நோக்கி 'நளன் சென்ற வழி காட்டீர்' எனக் கூறியது[தொகு]

283. வெறித்த இளமான்காள்! மென்மயில்காள்! இந்த

நெறிக்கண் நடிதூழி வாழ்வீர் - பிறித்தெம்மைப்

போனாரைக் காட்டுதிரோ என்னாப் புலம்பினாள்

வானாடர் பெற்றிலா மான்.

ஒரு பாம்பு தமயந்தியைப்பற்றி விழுங்கலுற்றது[தொகு]

284. வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியால்

மோட்டு வயிற்றரவு முன்தோன்ற - மீட்டதனை

ஓரா தருகணைந்தாள் உண்தேன் அறற்கூந்தல்

போரார் விழியாள் புலர்ந்து.

285. அங்கண் விசும்பி னவிர்மதிமேற் சென்றடையும்

வெங்க ணரவுபோல் மெல்லியலைக் - கொங்கைக்கு

மேலெல்லாந் தோன்ற விழுங்கியதே வெங்கானின்

பாலெல்லாந் தீயுமிழும் பாம்பு.

தமயந்தி நளன் உதவிநாடி அழுதது[தொகு]

286. வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவநின்

தாளடைந்து வாழுந் தமியேனைத் - தோளால்

விலக்காயோ வென்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங்

கிலக்காகி நின்றா ளெடுத்து.

287. வென்றிச் சினவரவின் வெவ்வா யிடைப்பட்டு

வன்துயராற் போயாவி மாள்கின்றேன் - இன்றுன்

திருமுகநான் காண்கிலேன் தேர்வேந்தே யென்றாள்

பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து.

தமயந்தி தன் மக்களை நினைத்து வருந்தியது[தொகு]

288. மற்றொடுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன்

பெற்றெடுத்த மக்காள் பிரிந்தேகும் - கொற்றவனை

நீரேனுங் காண்குதிரே என்றழுதாள் நீள்குழற்குக்

காரேனு மொவ்வாள் கலுழ்ந்து.

தமயந்தி தன் உயிர் நீங்கு நிலையில் நளனை நினைந்து வணங்கிக் கூறியது[தொகு]

289. அடையுங் கடுங்கானி லாடரவின் வாய்ப்பட்

டுடையுமுயிர் நாயகனே ஓகோ - விடையெனக்குத்

தந்தருள்வா யென்னாத்தன் தாமரைக்கை கூப்பினாள்

செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து.

ஒரு வேடன் அங்கு வந்தது[தொகு]

290. உண்டோ ரழுகுரலென் றொற்றி வருகின்ற

வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான்

கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில்

முழுகுவாள் தெய்வ முகம்.

தமயந்தி அவ்வேடனை வேண்டிக் கொண்டது[தொகு]

291. வெய்ய அரவின் விடவாயி னுட்பட்டேன்

ஐயன்மீ ருங்கட் கபயம்யா - னுய்ய

அருளீரோ என்னா அரற்றினா ளஞ்சி

இருளீரும் பூணா ளெடுத்து.

வேடன் தமயந்தியைப் பாம்பின் வயினின்று மீட்டது[தொகு]

292. சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி

வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் - மங்கையைவெம்

பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்த

காம்பின்வாய் வில்வேடன் கண்டு.

தமயந்தி வேடன் உதவிக்கு நன்றி கூறியது[தொகு]

293. ஆருயிரும் நானு மழியாமல் ஐயாவிப்

பேரரவின் வாயிற் பிழைப்பித்தாய் - தேரில்

இதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென்றி

விதர்ப்பன்றான் பெற்ற விளக்கு.

வேடன் தமயந்தியை விரும்பித் தன்னுடன் வர அழைத்தது[தொகு]

294. இந்து நுதலி எழில்நோக்கி ஏதோதன்

சிந்தை கருதிச் சிலைவேடன் - பைந்தொடிநீ

போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்

கேதுவாய் நின்றா னெடுத்து.

தமயந்தி வேடனிடம் தப்பி ஓட முயன்றது[தொகு]

295. வேட னழைப்ப விழிபதைத்து வெய்துயிரா

ஆடன் மயில்போல் அலமரா - ஓடினாள்

தூறெலா மாகச் சுரிகுழல்வேற் கண்ணினீர்

ஆறெல்லா மாக வழுது.

தமயந்தி சீறிவிழிக்க வேடன் எரிந்து நீறானது[தொகு]

296. தீக்கட் புலிதொடரச் செல்லுஞ் சிறுமான்போல்

ஆக்கை தளர வலமந்து - போக்கற்றுச்

சீறா விழித்தாள் சிலைவேட னவ்வளவில்

நீறாய் விழுந்தா னிலத்து.

தமயந்தியை ஒரு வணிகன் கண்டு வினாவியது[தொகு]

297. அவ்வளவி லாதிப் பெருவழியி லாய்வணிகன்

இவ்வளவு தீவினையே னென்பாள்தன் - மெய்வடிவைக்

கண்டானை யுற்றான் கமலமயி லேயென்றான்

உண்டாய தெல்லா முணர்ந்து.

298. எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னூர் யாதுன்பேர்

நெக்குருகி நீயழுதற் கென்னிமித்தம் - மைக்குழலாய்

கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம்

விட்டுரைக்குந் தார்வணிகர் வேந்து.

299. முன்னை வினையின் வலியால் முடிமன்னன்

என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக்

காணா தழுகின்றே னென்றாள் கதிரிமைக்கும்

பூணாரம் பூண்டாள் புலர்ந்து.

வணிகன் தமயந்தியைச் சேதி நகரில் விட்டுச் சென்றது[தொகு]

300. சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டப்

போதிற் கொடைவணிகன் போயினான் - நீதி

கிடத்துவான் மன்னவர்தங் கீர்த்தியினைப் பார்மேல்

நடத்துவான் வட்டை நடந்து.

தமயந்தியைக் கண்ட பணிப்பெண்கள் சேதியரசன் தேவிக்கு அறிவித்தது[தொகு]

301. அற்ற துகிலு மறாதொழுகு கண்ணீரும்

உற்ற துயரு முடையவளாய் - மற்றொருத்தி

நின்றாளைக் கண்டோ ம் நிலவேந்தன் பொற்றேவி

என்றார் மடவா ரெடுத்து.

சேதிராசன் தேவி தமயந்தியை அழைத்து வரச் செய்தது[தொகு]

302. போயகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை

ஆய மயிலை யறியவே - நீயேகிக்

கொண்டுவா வென்றாள்தன் கொவ்வைக் கனிதிறந்து

வண்டுவாழ் கூந்தன் மயில்.

சேதியரசன் தேவி தமயந்தியை வினாவியது[தொகு]

303. அந்தா மரையி லவளேயென் றையுற்றுச்

சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியே

உள்ளவா றெல்லா முரையென்றா ளொண்மலரின்

கள்ளவார் கூந்தலாள் கண்டு.

தமயந்தியின் மறுமொழி[தொகு]

304. என்னைத் தனிவனத்திட் டென்கோன் பிரிந்தேக

அன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கே

வந்தே னிதுவென் வரவென்றாள் வாய்புலராச்

செந்தேன் மொழிபதறாத் தேர்ந்து.

தமயந்தி அரண்மனையில் தங்கியிருந்தது[தொகு]

305. உன்றலைவன் தன்னை யொருவகையால் நாடியே

தந்து விடுமளவுந் தாழ்குழலாய் - என்றனுடன்

இங்கே யிருக்க இனிதென்றா ளேந்திழையைக்

கொங்கேயுந் தாராள் குறித்து.

வீமராசன் நளனையும் தமயந்தியையும் தேடிவர ஒரு மறையவனை ஏவியது[தொகு]

306. ஈங்கிவளிவ் வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப்

பூங்குயிலும் போர்வேற் புரவலனும் - யாங்குற்றார்

சென்றுணர்தி யென்று செலவிட்டான் வேதியனைக்

குன்றுறழ்தோள் வீமன் குறித்து.

மறையோன் சேதிநாடு சென்று தமயந்தியைக் கண்டது[தொகு]

307. ஓடும் புரவித்தேர் வெய்யோ னொளிசென்று

நாடு மிடமெல்லாம் நாடிப்போய்க் - கூடினான்

போதிற் றிருநாடும் பொய்கைத் திருநாடாம்

சேதித் திருநாடு சென்று.

308. தாமஞ்சே ரோதித் தமயந்தி நின்றாளை

ஆமென் றறியா அருமறையோன் - வீமன்

கொடிமேல் விழுந்தழுதான் கொம்புமவன் செம்பொன்

அடிமேல் விழுந்தா ளழுது.

மறையோன் சேதியரசியிடம் தமயந்தியின் நிலை அறிவித்ததும் அவள் துயரும்[தொகு]

309. மாரி பொருகூந்தன் மாதராய் நீபயந்த

காரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்குழலும்

வேணியாய் வெண்டுகிலும் பாதியாய் வெந்துயருக்

காணியாய் நின்றா ளயர்ந்து.

310. தன்மக ளாவ தறியாத் தடுமாறாப்

பொன்வடிவின் மேலழுது போய்வீழ்ந்தாள் - மென்மலரைக்

கோதிப்போய் மேதி குருகெழுப்புந் தண்பணைசூழ்

சேதிக்கோன் தேவி திகைத்து.

சேதிராசன் தமயந்தியை அவள் தந்தை நகருக்கு அனுப்பியது[தொகு]

311. கந்தனையுங் கன்னியையுங் கண்டாயி னுஞ்சிறிது

தன்துயரந் தீர்ந்து தனியாறத் - தந்தை

பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை

விதியிலே போந்தாளை மீண்டு.

தமயந்தியைக் கண்ட குண்டினபுர மக்களின் துயரம்[தொகு]

312. கோயிலு மந்தப் புரமும் கொடிநுடங்கும்

வாயிலும் நின்று மயங்கியதே - தீயகொடும்

கானாள மக்களையுங் கைவிட்டுக் காதலன்பின்

போனாள் புகுந்த பொழுது.

313. அழுவார் விழுவா உயிர்ப்பார்

தொழுவார் தமரெங்குஞ் சூழ்வார் - வழுவாக்

காமநீ ரோதக் கடல்கிளர்ந்தால் ஒத்தவே

நாமவேல் வீமன் நகர்.

314. தந்தையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீர்சொரியச்

சிந்தை கலங்கித் திகைத்தலமந் - தெந்தாயான்

பட்டதே யென்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண்

விட்டநீர் மேலே விழ.

தமயந்தியைக் கண்ட தாய்தந்தையரும் சுற்றத்தாரும் கொண்ட துயர்[தொகு]

315. செவ்வண்ண வாயாளுந் தேர்வேந் தனுமகளை

அவ்வண்ணங் கண்டக்கா லாற்றுவரோ - மெய்வண்ணம்

ஓய்ந்துநா நீர்போ யுலர்கின்ற தொத்ததமர்

நீந்தினார் கண்ணீரி னின்று.

316. பனியிருளிற் பாழ்மண் டபத்திலே யுன்னை

நினையாது நீத்தகன்ற போது - தனியேநின்

றென்னினைந்து என்செய்தா யென்னாப் புலம்பினாள்

பொனினைத்தாய் நோக்கிப் புலர்ந்து.

கலிதொடர் காண்டம் முற்றும்