காற்றில் வந்த கவிதை/கணக்கு மாமனார்

விக்கிமூலம் இலிருந்து
கணக்கு மாமனர்


வேலை ஒன்றும் செய்யாமல் பிறருடைய உழைப்பைக் கொண்டே சுகமாக வாழும் பண்ணைக்காரர்களும் உண்டு. அவர்களைக் கொடுத்து வைத்தவர்கள்' என்று கிராமத்திலே சொல்லுவார்கள். "உட்கார்ந்த இடத்திலேயே அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. அவர்கள் எதற்கு வேலை செய்யவேண்டும்?' என்றும் பேசுவார்கள்.

இப்படிச் சுகமாக இருக்கின்ற பேர்வழிகளில் சிலர் பெரிய உலுத்தர்களாக இருப்பார்கள். தங்கள் குடும்பத்திற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொள்ளுவதிலும் அவர்களுக்கு விருப்பம் இராது.

மாமனர் உலோபியாக இருந்துவிட்டால் அவர் கையை எதிர்பார்த்து வாழும் மருமகள் பாடு திண்டாட்டந்தான். பிரிவினை இல்லாத குடும்பத்திலே மருமகள் இவ்வாறு அல்லல் படுவதுண்டு.

மகன் தந்தையின் பேச்சை மீறி நடக்கமாட்டான். சர்வாதிகாரமும் தந்தையிடத்திலே இருக்கும். பெட்டிச் 

சாவியும் அவரிடத்திலேதான். அவர் கணக்குப் பார்த்துக் கொடுக்கிறவர்.

மாமியாருடைய கொடுமைக்கு ஆளாகி நடக்கும் மருமகளுக்கு இப்படிக் கணக்குப் பார்க்கிற மாமனரும் வாய்த்து விட்டால் அவள் வாழ்க்கை பெருந் துன்பமாக முடியும். நாடோடிப் பாடல் ஒன்று இதை நன்றாக விவரிக்கிறது.

மேற்கே மழை பேய மேல் கிணறு தண்ணிர் வர
கொக்கு வடம்பிடிக்கக் கோழிக்குஞ்சு தண்ணிர் கட்ட
சுள்ளெறும்பு பாத்திகட்டச் சோலைக்குயில் நாற்றுநட
காக்காய் கருதுவெட்டக் கட்டெறும்பு தாம்படிக்க
மச்சான் படியளக்க மாமனார் கணக்குப் பார்க்க
மூளிப்பையன் வாசலிலே முள்ளு முள்ளாய்க் குத்துதே