பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா-கட்டுரை

721

இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்

1953 மேயில் விமானக் கம்பெனிகளைத் தேசியமாக்குவதற்காகச் சட்டம் இயற்றப்பட்டு, 1953 ஆகஸ்டு முதல் நெடுந்தூர அயல்நாட்டுப் பிரயாணத்துக்காக ஒரு நிலையமும், அடுத்துள்ள அயல் நாட்டுப் பிரயாணம் உள்நாட்டுப் பிரயாணம் இரண்டிற்கும் ஒரு நிலையமும் அமைக்கப்பட்டு நடந்து வருகின்றன. பீ. எம். தி.


இந்தியா — கட்டுரைகள் : இந்தியா என்ற தலைப்பில் புவியியல், பூகோளம், வரலாறு, அரசியல் அமைப்பு, பொருளாதார வரலாறு முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன. முக்கியமான இந்திய மொழிகளுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. இந்திய ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம், கல்வி, கைததொழில்கள், ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு முறையே ஓவியம் முதலான தனித் தனிக் கட்டுரைகளின் கீழ்ப் பார்க்க. இந்தியாவில் உள்ள முக்கியமான நிலையங்களுக்கும் தனிக் கட்டுரைகள் உண்டு. அவற்றுடன் கீழ்க்கண்ட தலைப்புக்களையும் பார்க்க : இந்தியத் தத்துவ சாஸ்திரம், இந்தியக் கலைகள், இந்தியக் கலையும் மதமும்.


இந்தியா பாகிஸ்தான் இலங்கை விவிலிய சங்கம் (The Bible Society of India, Pakistan and Ceylon) : இது இந்திய இலங்கைச் சங்கமாக 1811-12-ல் நிறுவப்பெற்று இப்பொழுதுள்ள பெயரை 1947-ல் பெற்றது. விவிலிய வேத நூலை எவ்வித உரையும் குறிப்புமின்றி மொழிபெயர்த்து அச்சிட்டு வழங்குவதே இதன் தனி நோக்கம். பொது மக்கள் ஆதரவு கொண்டே இது நடைபெறுகிறது. இதன் தலைமைத்தலம் பெங்களூர். இச்சங்கம் சென்ற இருபது ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 10 இலட்சம் பிரதிகள் வழங்கியிருக்கிறது. இதுவரையில் இந்தியா, இலங்கை பாகிஸ்தானிலுள்ள 115 மொழிகளில் இந்நூல் முழுவதுமோ அதன் பாகங்களோ அச்சிடப்பட்டிருக்கின்றன.


இந்தியாவில் டச்சுக்காரர் : டச்சுககாரர் முதன் முதலாக இந்தியாவில் 1605-ல் மசூலிப்பட்டினத்திலும், 1610-ல் பழவேற்காட்டிலும் (புலிக்கட்) வியாபார நிலையங்கள் ஏற்படுத்திக்கொண்டனர். 1612-ல் போர்ச்சுக்கேசியர் பழவேற்காடு வியாபார நிலையத்தை அழித்துவிட்டனர். ஆகையால் டச்சுக்காரர் மறுபடியும் கெல்டிரியா என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். 1617-ல் சூரத்தில் ஒரு வியாபார நிலையமும், வங்காளத்தில் சின்சூரா என்னுமிடத்தில் ஒரு நிலையமும் ஏற்படுத்திக்கொண்டனர். இவர்கள் 1658-ல் தூத்துக்குடியையும், 1659-ல் நாகபட்டினத்தையும், 1661-ல் கொல்லத்தையும், 1662-ல் கொடுங்கோளூரையும் (கிராங்கனூர்), 1663-ல் கண்ணனூரையும் கொச்சியையும் கைப்பற்றினர். டச்சுக்காரர்கள் இந்தியாவில் இவ்விடங்களில் நிலைத்துக் கொண்டதற்கு அவர்கள் கிழக்கிந்தியத் தீவுகளில் நடத்திவந்த வியாபாரமே காரணம். இந்தியாவில் அவர்களுக்கு வேறு வகையான நோக்கம் ஒன்றும் இல்லை. பிரெஞ்சிந்தியக் கவர்னரான டூப்ளேயும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பில் வங்காளத்தில் வெற்றி கண்ட ராபர்ட் கிளைவும் இந்தியாவில் அடைந்த வெற்றிகளால் டச்சுக்காரர் இந்தியாவை விட்டகல நேர்ந்தது. தே. வெ. ம.


இந்தியாவில் டேனர் : 1616-ல் டேனருடைய கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. அப்போது தஞ்சையிலிருந்த மன்னரான இரகுநாத நாயக்கர் 1620 ல் டேனர் தரங்கம்பாடியில் வியாபார நிலையம் ஏற்படுத்திக் கொள்வதையனுமதித்தார். அவர்கள் வங்காளத்தில் சேரம்பூர் என்னுமிடத்தில் 1676-ல் ஒரு நிலையம் ஏற்படுத்திக் கொண்டனர். 1845-ல் இவ்விரு இடங்களையும் ஆங்கிலக் கிழக்கிந் தியக் கம்பெனிக்கு 12½ இலட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். தே. வெ. ம.


இந்தியாவில் பிரெஞ்சுக்காரர் : முதன் முதலாக 1664-ல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி பிரெஞ்சு அரசர் XIV-ம் லூயியின் நிதி மந்திரியான கால்பெர்ட்டின் முயற்சியால் நிறுவப்பட்டது. அவர்கள் 1668-ல் சூரத்தில் பண்டகசாலையையும், அடுத்த ஆண்டில் மசூலிப்பட்டினத்தில் ஒரு பண்டகசாலையையும் ஏற்படுத்திக்கொண்டனர். 1672-ல் அவர்கள் சான் தோமைக் (San Thome) கைப்பற்றினர். 1674-ல் அது டச்சுக்காரர் வசமாயிற்று. அதே ஆண்டில் ஷெர்கான் லோடி என்பவனிடமிருந்து கிடைத்த ஓரிடத்தில் மார்ட்டின் என்னும் பிரெஞ்சுக் கவர்னர் நிறுவிய நகரமே பிறகு புதுச்சேரியாயிற்று. 1677-ல் சிவாஜி சோழமண்டலத்தின்மீது படையெடுத்து ஷெர்கானைத் தோற்கடித்தபோது பிரெஞ்சுக்காரர் நிலைமை மோசமாயிற்று. 1681-ல் சூரத்திற்குச் சென்ற மார்ட்டின் ஐந்தாண்டுகள் கழித்து மறுபடியும் புதுச்சேரிக்குத் திரும்பினான். அவன் வந்த பிறகு அந்த ஊரில் வியாபாரம் பெருகிற்று. 1690-ல் சந்திரநாகூரில் ஒரு பிரெஞ்சுப் பண்டகசாலை அமைக்கப்பட்டது. 1693-ல் புதுச்சேரி டச்சுக்காரர் வசமாயிற்று. இது மறுபடியும் 1699-ல்தான் பிரெஞ்சுக்காரருக்குத் திரும்பக் கிடைத்தது. புதுச்சேரியில் அவர்கள் கட்டிய கோட்டைக்குச் செயின்ட் லூயிக்கோட்டை என்பது பெயர். புதுச்சேரி மற்றப் பிரெஞ்சுப் பற்றிடங்களை விட விரைவாக வளர்ச்சியுற்றுப் பெரிய வியாபாரத் தலமாயிற்று.

1706-ல் மார்ட்டின் இறந்த பிறகு 1720 வரையில் பிரெஞ்சுக் கம்பெனியார் இந்தியாவில் முன்னிருந்த நிலையிலேயே இருந்தனர். 1720-35 வரையில் பிரெஞ்சிந்தியக் கவர்னராக வந்த லென்வார் கள்ளிக்கோட்டை, மாஹி, யானாம் என்னுமிடங்களில் பிரெஞ்சுக்காரரை நிலைப்படுத்தினார். அவர்காலத்தில் புதுச்சேரி அழகான நகரமாக மாறிற்று. லென்வாருக்குப்பின் கவர்னராக வந்த மோஸ் (1735-1742) கருநாடக நவாபுகளோடு நட்புப் பூண்டிருந்தார். 1739-ல் இவர் தஞ்சை மன்னர்களுக்கு உதவிபுரிந்து காரைக்காலைத் தம் வசப்படுத்திக் கொண்டார். இவருக்குப்பின் டூப்ளே பிரெஞ்சுக் கவர்னராக வந்தார். 1745-ல் ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரரைக் கடல்வழியாக எதிர்க்கத் தொடங்கியபோது டூப்ளே லாபார்தனே என்னும் பிரெஞ்சுக் கடற் படைத் தளபதியைத் தமக்கு உதவியாக வரைவழைத்துக்கொண்டார். 1746-ல் நாகபட்டினத்திற்கருகே நடந்த கடற்போர் வெற்றி தோல்வியின்றி முடிந்ததாயினும் பிரிட்டிஷ்காரர் சிறிது அஞ்சியேயிருந்தனர். டூப்ளேயும் லாபார் தனேயும் சென்னையைத் தாக்கிப் பிடித்துக்கொண்டனர்; ஆயினும், அவ்விரு தலைவர்களுக்கிடையே பிணக்கு உண்டானதால் சென்னை பிரெஞ்சுக்காரர்களிடம் தங்கவில்லை. ஆர்க்காட்டு நவாபிற்கும் பிரெஞ்சுக்காரருக்கும் அடையாற்றுக்கருகில் நடந்த போரில் பிரெஞ்சுக்காரர் எளிதில் வெற்றி பெற்றனர். சென்னையைக் கைப்பற்றிய டூப்ளேயால் செயின்ட் டேவிட் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. 1748-ல் புதுச்சேரி ஆங்கிலேயரால் முற்றுகையிடப்பட்டபோது அதை டூப்ளே மிகுந்த திறமையோடு