மனோன்மணீயம்/மூலம்

விக்கிமூலம் இலிருந்து

மனோன்மணீயம் நாடகம்[தொகு]

முதல்அங்கம் களம் 01[தொகு]

பாயிரம்[தொகு]

கடவுள்வணக்கம்

(நேரிசைவெண்பா)

வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர்

போதமும் போய்த்தீண்டாப் பூரணமே!- பேதமற

வந்தெனைநீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்

சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.


தமிழ்த்தெய்வ வணக்கம்

(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே. (01)


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. (02)

(இவையிரண்டும் ஆறடித் தரவு)


கடல் குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை உனக்குவமை சொல்லுவதும் புகழாமே. (01)
ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே. (02)
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே. (03)
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. (04)
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே. (05)
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. (06)
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே. (07)
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். (08)
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்? (09)
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே. (10)
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி? (11)
மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

(இவை பன்னிரண்டும் தாழிசை)

எனவாங்கு,

(இது தனிச்சொல்)


நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனும் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

(ஆசிரியச் சுரிதகம்)


அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்


(நேரிசைவெண்பா)

அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய்- நமையுமிந்த
நாடகமே செய்ய நயந்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.


(பாயிரம் முற்றிற்று)

வெண்பா 2/க்கு அடி 08
கலிப்பா 1- க்கு அடி 49
ஆகப் பாயிரம் 1/க்கு அடி 57

பார்க்க[தொகு]

மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.

I[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05

II[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 03

III[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 04

IV[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 04

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 05

V[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 04

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 05

"https://ta.wikisource.org/w/index.php?title=மனோன்மணீயம்/மூலம்&oldid=478919" இலிருந்து மீள்விக்கப்பட்டது