நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

அறத்துப்பால்: துறவறவியல்[தொகு]

ஏழாம் அதிகாரம் சினமின்மை

[அஃதாவது, கோபம் இல்லாதிருக்கும் தன்மையைச் சொல்லுதலாம்]

பாடல்: 61 (மதித்திறப் )[தொகு]

மதித்திறப் பாரு மிறக்க மதியா (01) மதித்து இறப்பாரும் இறக்க மதியா

மிதித்திறப் பாரு மிறக்க- மிதித்தேறி மிதித்து இறப்பாரும் இறக்க - மிதித்து ஏறி

யீயுந் தலைமே லிருத்தலா லஃதறிவார் ஈயும் தலை மேல் இருத்தலால் அஃது அறிவார்

காயுங் கதமின்மை நன்று. காயும் கதம் இன்மை நன்று.

(01) 
பதவுரை
மதித்து= கனஞ்செய்து,
இறப்பாரும்= நடப்பவரும்,
இறக்க= நடக்கட்டும்;
மதியா= மதியாமல்,
மிதித்து= கனவீனஞ் செய்து,
இறப்பாரும்= நடப்பவரும்,
இறக்க= நடக்கட்டும்;
மிதித்து ஏறி= காலால் மிதித்து ஏறி,
ஈயும்= ஈயானதும்,
தலைமேல்= சிரசின்மேல்,
இருத்தலால்= இருக்கையால்,
அஃது= அவ் ஈயின் இயல்பை,
அறிவார்= அறிபவர்கள்,
காயும்= கோபிக்கும்,
கதம் இன்மை= கோபம் இல்லாதிருக்கை,
நன்று= நல்லது.
கருத்துரை
மதித்து நடப்பவரும் நடக்கட்டும்; மதியாது நடப்பவரும் நடக்கட்டும்; அடிமேல் ஏறிய ஈ முடிமேல் ஏறி இருத்தலால் அத்தன்மை யலைபவர் பிறர்மேற் கோபமில்லாதிருக்கை நன்று.
விசேடவுரை
கதமின்மை- எழுவாய், நன்று- பயனிலை.


பாடல்: 62 (தண்டாச்)[தொகு]

தண்டாச் சிறப்பிற்றம் மின்னுயிரைத் தாங்காது () தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாந் துறப்பவோ? - மண்டி () கண்டுழி எல்லாம் துறப்பவோ - மண்டி
யடிபெயரா தாற்ற விளிவந்த போழ்தின் () அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின்
முடிகிற்கு முள்ளத் தவர். (02) முடிகிற்கும் உள்ளத்தவர்.
பதவுரை
மண்டி= நெருங்கி,
அடி= பாதங்களை,
பெயராது= பெயர்த்து வையாமல்,
ஆற்ற= மிகவும்,
இளி= இழிவு,
வந்த போழ்தில்= வந்த காலத்தில்,
முடிகிற்கும்= (எண்ணியவற்றை) முடிக்கும்,
உள்ளத்தவர்= மனவலியுள்ளோர்,
தண்டாத= கெடாத,
சிறப்பின்= சிறப்புடைய,
தம்= தமது,
இன் உயிர்= இனிய வுயிரை,
தாங்காது= தாங்காமல்,
கண்ட உழி எல்லாம்= கோபம் கண்ட விடமெல்லாம்,
துறப்பவோ= உயிரை விடுவார்களோ?
கருத்துரை
மிகவும் இழிவு வந்த காலத்தில் நினைத்தவற்றை முடிக்கு மனவலிமையுடையோர், கோபங்கொண்ட விடத்தில் உயிரை விடார்கள்.
விசேடவுரை
உள்ளத்தவர்- எழுவாய், துறப்பவோ- பயனிலை.

தருக்க சங்கிரகம்

“உயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்.”

பாடல்: 63 (காவாதொரு)[தொகு]

காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொ () காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்

லோவாதே தன்னைச் சுடுதலா- லோவாதே ()ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே

யாய்ந்தமைந்த கேள்வி யறிவுடையா ரெஞ்ஞான்றுங் () ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவு உடையார் எஞ்ஞான்றும்

காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. (03) காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து.


பதவுரை
காவாது= (நாவைக்) காக்காமல்,
ஒருவன்= ஒருவன்,
தன்= தனது,
வாய் திறந்து= வாயைத் திறந்து,
சொல்லும் சொல்= சொல்லும் கடுஞ் சொற்கள்,
ஓவாது= ஒழியாமல்,
தன்னை= வைதவனையே,
சுடுதலால்= சுடலால்,
ஓவாது= ஒழியாமல்,
ஆய்ந்து= பல நூலாராய்ந்து,
அமைந்த= நிரம்பிய,
கேள்வி= கல்வி,
அறிவு உடையார்= விவேகமுடையார்,
எ ஞான்றும்= எக்காலத்திலும்,
காய்ந்து= கோபித்து,
அமைந்த= கொடுமை நிறைந்த சொற்களை,
கறுத்து= சீறி,
சொல்லார்= சொல்லார்கள்.
கருத்துரை
ஒருவன், நாவைக் காவாது பிறனை வைத சொல்லானவை தன்னைச் சுடுதலால் கல்வி அறிவுடையார் எக்காலத்திலுங் கோபித்துக் கொடுஞ்சொற்களைச் சொல்லார்.
விசேடவுரை
அறிவுடையார்- எழுவாய், சொல்லார்- பயனிலை, அமைந்த- செயப்படுபொருள், ஏகாரம் இரண்டும் அசைகள்.

பாடல்: 64 (நேர்த்து)[தொகு]

நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் () நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்

வேர்த்து வெகுளார் விழுமியோர்- ஓர்த்ததனை ()வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்து அதனை

யுள்ளத்தா னுள்ளி யுரைத்தூரா யூர்கேட்பத் () உள்ளத்தான் உள்ளி உரைத்து ஊராய் ஊர் கேட்பத்

துள்ளித்தூண் முட்டுமாங் கீழ். (04) துள்ளித் தூண் முட்டுமாம் கீழ்.

பதவுரை
விழுமியோர்= பெரியோரானவர்,

நிகரல்லார்= ஒப்பில்லார், நேர்த்து= எதிர்த்து, நீர் அல்ல= குணமில்லாச் சொற்களை, சொல்லியக்கால்= சொன்னால், வேர்த்து= (மனம்) புழுங்கி, வெகுளார்= கோபியார், கீழ்= கீழ்மகன், ஓர்த்து= ஆராய்ந்து, அதனை= வைத்தனை, உள்ளத்தான்= மனதால், உள்ளி= நினைத்து, உராய்- சென்று, ஊர்= ஊராய், கேட்ப= கேட்க, உரைத்து= சொல்லி, துள்ளி= துடித்து, தூண்= தூணில், முட்டும்= முட்டிக்கொள்வான்.

கருத்துரை
பெரியோர்கள் தமக்கு ஒப்பில்லார் கொடுஞ்சொற்களைச் சொன்னால் கோபியார்; கீழானவன் பிறன் வைத்தனை நினைத்து ஊரார்க்குச் சொல்லித் தூணில் முட்டிக்கொள்வான்.
விசேடவுரை
விழுமியோர்- எழுவாய், வெகுளார்- பயனிலை, கீழ்- எழுவாய், முட்டும் - பயனிலை. நேர்த்து-ஓர்த்து விகாரம்.

நன்னூல்:வினையியல் 29-ம் சூத்திரம்.

“பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்

செல்லாதாகுஞ் செய்யுமென் முற்றே.”

இவ்விதியால் முட்டும் என்றது முட்டுவான் என்றாயிற்று.

பாடல்: 65 (இளையா)[தொகு]

இளையா னடக்க மடக்கங் கிளைபொரு () இளையான் அடக்கம் அடக்கம் கிளை பொருள்
ளில்லான் கொடையே கொடைப்பய- னெல்லாம் ()இல்லான் கொடையே கொடைப் பயன்-
எல்லாம்
ஒறுக்கு மதுகை யுரனுடை யான் () ஒறுக்கும் மதுகை உரன் உடையான்
பொறுக்கும் பொறையே பொறை. (05) பொறுக்கும் பொறையே பொறை.
பதவுரை

இளையான்= இளமையுடையவன்,

அடக்கம்= ஐம்பொறிகளை அடக்குதல்,

அடக்கம்= அடக்கமாவது;

கிளை= வளரும்,

பொருள்= திரவியம்,

இல்லான்= இல்லாதவன்,

கொடையே= கொடுத்தலே,

பயன்= பிரயோசனமுள்ள,

கொடை= கொடையானது,

எல்லாம்= யாவும்,

ஒறுக்கும்= சஞ்சரிக்கும்,

மதுகை= வெற்றியும்,

உரன்= பலத்தையும்,

உடையாளன்= உடைய சுத்த வீரன்,

பொறுக்கும்= பொறுக்கின்ற,

பொறையே= பொறுமையே,

பொறை= பொறுமையாவது.

கருத்துரை
இளையவன் ஐம்பொறி அடக்குதலே அடக்கமாகும். இல்லாதவன் கொடுக்கிறதே கொடையாகும். சுத்தவீரன் பொறுக்கிறதே பொறுமையாகும்.
விசேடவுரை
அடக்கம்- எழுவாய், அடக்கம்- பயனிலை. கொடை- எழுவாய், கொடை- பயனிலை. பொறை- எழுவாய், பொறை- பயனிலை.

பாடல் 66 (கல்லெறிந்)[தொகு]

கல்லெறிந் தன்ன கயவர்வா யின்னாச்சொல் () கல் எறிந்து அன்ன கயவர் வாய் இன்னாச் சொல்

எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்- ஒல்லை ()எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் - ஒல்லை

யிடுநீற்றாற் பையவிந்த நாகம்போற் றத்தங் () இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம்

குடிமையான் வாதிக்கப் பட்டு. (06) குடிமையான் வாதிக்கப் பட்டு.

பதவுரை

இடு=மந்திரித்திடும்,

நீற்றால்= திருநீற்றால்,

ஒல்லை= சீக்கிரம்,

பை= படம்,

அவிந்த= அடங்கிய,

நாகம்போல்= நாகத்தைப் போல்,

தம்தம்= தங்கள் தங்களுடைய,

குடிமையால்= குடிப்பிறப்பால்,

வாதிக்கப்பட்டு= ஒறுக்கப்பட்டு,

கல்= கல்லை,

எறிந்தன்ன= எறிந்தாற்போலும்,

கயவர்= கீழானவர்,

வாய்= வாயில் வரும்,

இன்னாச் சொல்= கொடுஞ் சொற்களை,

எல்லாரும்= யாவரும்,

காண=அறிய,

பொறுத்து உய்ப்பர்= சகித்து நடப்பர் (பெரியோர்).

கருத்துரை
மந்திரித்த திருநீற்றால் அடங்கிய நாகம் போலப் பெரியோர் தங்கள் குல ஒழுக்கத்திற்கு அஞ்சிக் கீழ்மக்கள் சொல்லிய கொடுஞ்சொற்களைப் பொறுத்து நடப்பர்.
விசேடவுரை
(பெரியோர்)- தொன்றா எழுவாய், உய்ப்பர்- பயனிலை, இன்னாச்சொல்- செயப்படுபொருள்.

பாடல் 67 (மாற்றாராய்)[தொகு]

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை () மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை

யாற்றாமை யென்னா ரறிவுடையார்- ஆற்றாமை () ஆற்றாமை என்னார் அறிவு உடையார் - ஆற்றாமை

நேர்த்தின்னா மற்றவர் செய்தக்காற் றாமவரைப் () நேர்த்து இன்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்

பேர்த்தின்னா செய்யாமை நன்று. (07) பேர்த்து இன்னா செய்யாமை நன்று.

பதவுரை

அறிவுடையார்= அறிவுளார்,

மாற்றார் ஆய்= பகைவராய்,

நின்று= நின்று,

தம்= தம்மோடு,

மாறு ஏற்பார்க்கு= மாறுபடுமவர்க்கு,

ஏலாமை= பொருந்தாமையை,

ஆற்றாமை= வல்லமை இல்லாமை,

என்னார்= என்று சொல்லார்;

ஆற்றாமை= பொறுத்தற்கரியவை,

நேர்த்து= எதிர்த்து,

இன்னா= துன்பங்களை,

அவர்= அப்பகைவர்,

செய்தக்கால்= செய்தால்,

தாம்= தாங்கள்,

அவரை= அப்பகைவரை,

பேர்த்து= மீண்டு,

இன்னா= தீங்குகளை,

செய்யாமை= செய்யாதிருத்தல்,

நன்று= நல்லது.

கருத்துரை

தம்முடன் எதிர்ப்பவர்மேல் எதிராதிருத்தலை வல்லமையில்லாமை என்று அறிவுடையோர் சொல்லார். பகைவர் துன்பஞ்செய்தால் அவர்களுக்குத் துன்பஞ் செய்யாதிருத்தலே நல்லது.

விசேடவுரை
அறிவுடையோர்- எழுவாய், என்னார்- பயனிலை, மற்று- அசை.

அவிநயம்

நெடின்மிக வருதல் நெடிற்செய்யுள் என்ப.

பாடல் 68 (நெடுங்கால)[தொகு]

நெடுங்கால மோடினு நீசர் வெகுளி () நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடுங்கால மன்றிப் பரக்கு- மடுங்காலை ()கெடும் காலம் அன்றிப் பரக்கும் - அடும் காலை

நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே () நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம். (08) சீர் கொண்ட சான்றோர் சினம்.


பதவுரை

நீசர்= கீழ்மக்களுடைய,

வெகுளி= கோபமானது,

நெடுங்காலம்= அநேக காலம்,

ஓடினும்= சென்றாலும்,

கெடும் காலம்= கெட்டுப் போகுங்காலம்,

இன்றி= இல்லாமல்,

பரக்கும்= வளர்ந்து நிற்கும்;

சீர்= சிறப்பை,

கொண்ட= கொண்டிருக்கிற,

சான்றோர்= பெரியோர்,

சினம்= கோபமானது,

அடும்= காய்ச்சும்,

காலை= காலத்தில்,

நீர்= நீரானது,

கொண்ட= கொண்டிருக்கிற,

வெப்பம்போல்= உஷ்ணம்போல்,

தானே= தனக்குத்தானே,

தணியும்= ஆறும்.

கருத்துரை

கீழ்மக்கள் கோபம் நெடுநாட் சென்றாலும் பெருகி நிற்கும்; பெரியோர் கோபம் நீர்கொண்ட வெப்பம்போல் தனக்குத் தானே தணியும்.

விசேடவுரை

நீசர் வெகுளி- எழுவாய், பரக்கும்- பயனிலை. சான்றோர் சினம்- எழுவாய், தணியும்- பயனிலை. ஏ-அசை.

பாடல் 69 (உபகாரஞ்)[தொகு]

உபகாரஞ் செய்ததனை யோராதே தங்க () உபகாரம் செய்ததனை ஓராதே தம் கண்

ணபகார மாற்றச் செயினு- முபகாரந் ()அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்

தாஞ் செய்வதல்லாற் றவற்றினாற் றீங்கூக்கல் () தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல்

வான்றோய் குடிப்பிறந்தார்க் கில். (09) வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல்.


பதவுரை

உபகாரம்= உதவி,

செய்ததனை= செய்ததை

ஓராது= அறியாது,

தங்கண்= தம்மிடத்து,

அபகாரம்= ஒருவர் அபகாரத்தை,

ஆற்ற= மிகவும்,

செயினும்= செய்தாலும்,

உபகாரம்= உதவியை,

தாம்= தாங்கள்,

செய்வது அல்லால்= செய்வதல்லது,

தவற்றினால்= (அவர் செய்த) குற்றத்தால்,

தீங்கு= பொல்லாங்கை,

ஊக்கல்= செய்தல்,

வான்= பெருமை,

தோய்= நிறைந்த,

குடிப்பிறந்தார்க்கு= நற்குடியிற் பிறந்தார்க்கு,

இல்= இல்லை.

கருத்துரை
ஒருவர் உபகாரத்தை அறியாது அபகாரத்தைச் செய்தாலும் நற்குடியிற் பிறந்தார் உபகாரஞ் செய்தலே அல்லாது அபகாரஞ் செய்யார்.
விசேடவுரை
ஊக்கல்- எழுவாய், இல்- பயனிலை, தீங்கு- செயப்படுபொருள். வான்றோய் குடி- உயர்ந்த குடி எனினுமாம்.

பாடல் 70 (கூர்ந்துநாய்)[தொகு]

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற் () கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் தம் வாயால்
பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை- நீர்த்தன்றிக் ()பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை - நீர்த்து அன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ? () கீழ் மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்க டம்வாயான் மீட்டு. (60) மேல் மக்கள் தம் வாயான் மீட்டு.


பதவுரை

நாய்= நாயானது,

கூர்த்து= கோபமிகுந்து,

கௌவிக்கொள= கடித்துக் கொள்ள,

கண்டும்= பார்த்தும்,

பேர்த்து= மீண்டு,

தம்= தம்முடைய,

வாயால்= வாயினால்,

நாய்= கடித்த நாயை,

கௌவினார்= கடித்தவர்,

ஈங்கு= இவ்வுலகில்,

இல்லை= இல்லை;

நீர்த்து அன்றி= குணமில்லாமல்,

கீழ்மக்கள்= கீழானவர்கள்,

கீழாய= இழிவான சொற்களை,

சொல்லியக்கால்= சொன்னால்,

மேல்மக்கள்= மேலானவர்கள்,

தம் வாயால்= தங்கள் வாயால்,

மீட்டு= மறுத்து,

சொல்பவோ= சொல்வார்களோ?

கருத்துரை

நாய் கடிக்கக் கண்டும், தங்கள் வாயால் கடித்தநாயைக் கடித்தவர்கள் இவ்வுலகிலில்லை; கீழானவர்கள் இழிவான சொற்களைச் சொன்னால் மேலானவர்கள் ஒன்றுஞ் சொல்லார்கள்.

விசேடவுரை

மேன்மக்கள்- எழுவாய், சொல்பவோ- பயனிலை, கீழானவற்றை- செயப்படுபொருள்.

அவிநயம்

“ஒற்றுப் பயில லொற்றியற் செய்யுள்”

முதலாவது, துறவறவியல் முற்றிற்று[தொகு]

பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
[[ ]]
நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்
பொருட்பால்
நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி