நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

2.பொருட்பால்: 1.அரசியல்[தொகு]

[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]


பதினான்காம் அதிகாரம் கல்வி

[அஃதாவது, கல்வியைப் பற்றிச் சொல்லியது]

பாடல்: 131 (குஞ்சி)[தொகு]

குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு குஞ்சி அழகும் கொடும் தானை கோட்டு அழகும்

மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து மஞ்சள் அழகும் அழகு அல்ல - நெஞ்சத்து

நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற் நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி யழகே யழகு. (01) கல்வி அழகே அழகு. (௧)

பதவுரை

குஞ்சி= மயிரினுடையை,

அழகும்= அழகும்,

கொடும்= மடிப்புள்ள,

தானை= ஆடையினுடைய,

கோடு= கரைக்கோட்டினது,

அழகும்= அழகும்,

மஞ்சள்= மஞ்சளினுடைய,

அழகும்= அழகும்,

அழகு அல்ல= அழகல்லவாம்;

நெஞ்சத்து= மனதில்,

நடுவு நிலைமையால்= நடுவுநிலையால்,

நல்லம்= நன்மையுடையோம்,

யாம் என்னும்= யாமென்று சொல்லும்,

கல்வி= வித்தையினுடைய,

அழகே= அழகே,

அழகு- ஒருவர்க்கு அழகாகும்.

கருத்துரை
ஒருவர்க்குக் கல்வி அழகே அழகாகும்; மற்றை அழகுகள் அழகல்லவாம்.
விசேடவுரை
அழகு- எழுவாய், கல்வி அழகு- பயனிலை.

“ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்

பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப.”

இவ்விதியால் ஒருவர் என்றது, ஆண்பாற்கும் பெண்பாற்குங் கொள்க. மஞ்சள் பெண்பாற்கும், மஞ்சள் கலந்த சந்தனம் ஆண்பாற்குமாம். கல்வி பெண்பாற்கும் வேண்டுவதென்பதாயிற்று.

பாடல்: 132 (இம்மை பயக்)[தொகு]

இம்மை பயக்குமா லீயக் குறைவின்றால் () இம்மை பயக்குமால் ஈயக் குறைவு இன்றால்
தம்மை விளக்குமாற் றாமுளராக்- கேடின்றா ()தம்மை விளக்குமால் தாம் உளராக் - கேடு இன்றால்
லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோன் () எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்ம ரறுக்கு மருந்து. (02) மம்மர் அறுக்கும் மருந்து. (௨)

பதவுரை: இம்மை= இப்பிறப்பில்,

பயக்கும்= பயன்கொடுக்கும்;

ஈய= (பிறர்க்குக்) கொடுக்க,

குறைவு இன்று= குறைதலில்லை;

தம்மை= கற்றவர் தங்களை,

விளக்கும்= விளங்கச் செய்யும்;

தாம் உளரா= தாம் உயிருள்ளவராக வாழுமளவும்,

கேடு இன்று= கேடில்லை;

ஆல்= ஆதலால்,

எம்மை உலகத்தும்= எவ்வுலகத்தும்,

யாம்= நாம்,

கல்விபோல்= வித்தையைப் போல,

மம்மர்= மயக்கத்தை,

அறுக்கும்= தீர்க்கும்,

மருந்து= மருந்தை,

காணேம்= கண்டறியோம்.

கருத்துரை: கல்விக்கு மேலானது ஒன்றுமில்லை.

விசேடவுரை: யாம்- எழுவாய், காணேம்- பயனிலை, மருந்து- செயப்படுபொருள்.

பாடல்: 133 (களர்நிலத்)[தொகு]

களர்நிலத் துப்பிறந்த வுப்பினைச் சான்றோர் () களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிகாக் - கொள்வர் ()விளை நிலத்து நெல்லின் விழுமிது ஆ - கொள்வர்
கடைநிலத் தோராயினுங் கற்றறிந் தோரைத் () கடை நிலத்தோர் ஆயினும் கற்று அறிந்தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும். (03) தலை நிலத்து வைக்கப் படும். (௩)

பதவுரை: களர் நிலத்து= உவர் நிலத்தில்,

பிறந்த= உண்டான,

உப்பினை= உப்பை,

சான்றோர்= பெரியோர்,

விளை= விளைகின்ற,

நிலத்து= வயல்நிலத்துப் பிறந்த,

நெல்லின்= நெல்லைப் பார்க்கிலும்,

விழுமிது ஆ= சிறப்பாக,

கொள்வர்= கொள்வார்கள்; (அதுபோல)

கடை= கடையான,

நிலத்தோர் ஆயினும்= சாதியிற் பிறந்தோராயினும்,

கற்று அறிந்தோரை= கற்றுணர்ந்தவரை,

தலை நிலத்து= முதன்மையான இடத்து,

வைக்கப்படும்= வைக்கத்தகும்.

கருத்துரை: தாழ்ந்த நிலத்திற் பிறந்த உப்பை உயர்ந்த நிலத்திற் பிறந்த நெல்லினுஞ் சிறப்பாகக் கொள்வர்; அதுபோலக் கீழ்குலத்தோராயினுங் கற்றோரை மேலிடத்து வைக்கத்தகும்.

விசேடவுரை: சான்றோர்- எழுவாய், கொள்வர்- பயனிலை.

பாடல்: 134 (வைப்புழிக்)[தொகு]

வைப்புழிக் கோட்படா வாய்தீயிற் கேடில்லை () வைப்பு உழிக் கோள் படா வாய்த்து ஈயில் கேடு இல்லை
மிக்க சிறப்பி னரசர்-செறின்வவ்வா ()மிக்க சிறப்பின் அரசர் - செறின் வவ்வார்
ரெச்ச மெனவொருவன் மக்கட்குச் செய்வன () எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற. (04) விச்சை மற்று அல்ல பிற. (௪)

பதவுரை: வைப்பு உழி= வைத்தவிடத்தில்,

கோள் படா= பிறரால் கொள்ளப்படாது;

வாய்த்து= பொருந்தி,

ஈயில்= கொடுத்தால்,

கேடு இல்லை= குறைவு இல்லை;

மிக்க= மிகுந்த,

சிறப்பின்= சிறப்புடைய,

அரசர்= அரசர்கள்,

செறின்= கோபித்தால்,

வவ்வார்= கவரார்; (ஆகையால்)

ஒருவன்= ஒருவன்,

மக்கட்கு= தன் புதல்வர்க்கு,

எச்சம் என= (தேடியிடும்) பிள்ளையென,

செய்வன= செய்யத்தகுவன,

விச்சை= கல்விகளே;

பிற= பிறவெல்லாம்,

அல்ல= தேடிவைக்குஞ் செல்வங்களல்ல.

கருத்துரை: ஒருவன் தன் பிள்ளைக்குத் தேடியிடும் பிள்ளையாகக் கல்வியொன்றே கற்பிக்க வேண்டும்.

விசேடவுரை: விச்சை- எழுவாய், செய்வன- பயனிலை. மற்று- அசை.

பாடல்: 135 (கல்விகரை)[தொகு]

கல்வி கரையில கற்பவர் நாள்சில () கல்வி கரை இல கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கிற் பிணிபல- தெள்ளிதி ()மெல்ல நினைக்கில் பிணி பல - தெள்ளிதின்
னாராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் () ஆராய்ந்து அமைவு உடைய கற்பவே நீர் ஒழியப்
பாலுண் குருகிற் றெரிந்து. (05) பால் உண் குருகின் தெரிந்து. (௫)

பதவுரை: கல்வி= கல்விகள்,

கரை இல= அளவில;

கற்பவர்= கற்பவர்களுக்கு,

நாள்= வாழ்நாள்கள்,

சில= சிலவுள;

மெல்ல= மெதுவாக,

நினைக்கில்= ஆராய்ந்தால்,

பிணி= நோய்கள்,

பல= பலவுள;

தெள்ளிதின்= தெளிவுள்ள அறிவால்,

ஆராய்ந்து= விசாரித்து,

அமைவு உடைய= நிறைவுடைய நூல்களை,

நீர் ஒழிய= சல நீங்க,

பால்= பாலை,

உண்= உண்ணும்,

குருகில்= அன்னம் போல,

தெரிந்து= அறிந்து,

கற்ப= (அறிவுடையோர்கள்) கற்பார்கள்.

கருத்துரை: அன்னம் நீரை நீக்கிப் பாலைக் கொள்ளுதல்போல, அறிவுடையோர்கள் பொய்ந்நூலைத் தள்ளி மெய்ந்நூலைக் கற்பார்கள்.

விசேடவுரை: (அறிவுடையோர்)- தோன்றா எழுவாய், கற்ப- பயனிலை, அமைவுடைய- செயப்படுபொருள். ஏ-அசை.

பாடல் 136 (தோணி)[தொகு]

தோணி யியக்குவான் றொல்லை வருணத்துக் () தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டா னென்றிகழார் - காணா ()காணில் கடை பட்டான் என்று இகழார் - காணா
யவன் றுணையா வாறுபோ யற்றேநூல் கற்ற () அவன் துணை ஆ ஆறு போய் அற்றே நூல் கற்ற
மகன்றுணையா நல்ல கொளல். (06) மகன் துணையா நல்ல கொளல். (௬)

பதவுரை:

தொல்லை= பழைய,

வருணத்து= சாதிகளுள்,

காணில்= ஆராயில்,

தோணி= தோணியை,

இயக்குவான்= ஓட்டுவான்,

கடை= கீழ்ச்சாதியில்,

பட்டான் என்று= பிறந்தவன் என்று,

இகழார்= இகழார்கள்;

அவன்= அவனையே,

துணையா= துணையாக,

ஆறு= ஆற்றை,

போய் அற்றே= கடந்து போவது போலும்,

காணாய்= பாராய்,

நூல்= நூல்களை,

கற்ற மகன்= கற்றவன் இழிவானவனாகிலும்,

துணை ஆ= அவனே துணையாக,

நல்ல= நல்ல நூற்பொருள்களை,

கொளல்= (ஒருவன்) கற்றுக் கொள்ளல் வேண்டும்.

கருத்துரை: ஒருவன் இழிந்தோனிடத்துங் கல்வியைக் கற்க வேண்டும்.

விசேடவுரை: (ஒருவன்)- தோன்றா எழுவாய், கொளல்- பயனிலை, நல்ல- செயப்படுபொருள்.

பாடல் 137 (தவலருந்)[தொகு]

தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையா () தவல் அரு தொல் கேள்வி தன்மை உடையார்
ரிகலில ரெஃகுடையா தம்முட்- குழீஇ ()இகல் இலர் எஃகு உடையா தம் உள் - குழீஇ
நகலி னினிதாயிற் காண்பா மகல்வானத் () நகல் இனிது ஆயின் காண்பாம் அகல் வானத்து
தும்ப ருறைவார் பதி. (07) உம்பர் உறைவார் பதி. (௭)

பதவுரை: தவல் அரு= கேடில்லாத,

தொல்= பழைய,

கேள்வி= கல்விகளால் வரும்,

தன்மை= குணங்களை,

உடையார்= உடையவர்களும்,

இகல் இலர்= பகையில்லாதவர்களும்,

எஃகு உடையார்= கூரிய புத்தி கூர்மை உடையவர்களும்,

தம்முள்= தங்களிடத்தில்,

குழீஇ= கூடவிருந்து,

நகலின்= மகிழ்தலைப் பார்க்கிலும்,

அகல்= அகன்ற,

வானத்து= வானத்தில்,

உம்பர்= தேவர்கள்,

உறை= வாசம்பண்ணும்,

வார் பதி= நெடும்பதி,

இனிது ஆயின்= இனிதாயிருந்தால்,

காண்பாம்= (யாம்) காணக்கடவோம்.

கருத்துரை: அறிவுடையோரிடத்துக் கூடி மகிழ்தலைப் பார்க்கிலும் தேவருலகம் இனிதாயிருக்காமானாற் காண்போம்.

விசேடவுரை: யாம்- எழுவாய், காண்பாம்- பயனிலை, பதி- செயப்படுபொருள்.

பாடல் 138 (கனைகடற்)[தொகு]

கனைகடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை () கனை கடல் தண் சேர்ப்ப கற்று அறிந்தார் கேண்மை
நுனியிற் கரும்புதின் றற்றே- நுனிநீக்கித் ()நுனியில் கரும்பு தின்று அற்றே - நுனி நீக்கித்
தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா () தூரில் தின்று அன்ன தகைத்து அரோ பண்பு இலா
வீர மிலாளர் தொடர்பு. (08) ஈரம் இலாளர் தொடர்பு. (௮)

பதவுரை:

கனை= சத்திக்கும்,

தண்= குளிர்ந்த,

கடல்= கடலினது,

சேர்ப்ப= கரையையுடைய பாண்டியனே!

கற்று அறிந்தார்= கற்று உணர்ந்தோர்,

கேண்மை= சிநேகமானது,

கரும்பு= கரும்பை,

நுனியில்= நுனியிலிருந்து,

தின்று அற்று= தின்றாற் போலும்;

பண்பு இலா= நற்குணங்கள் இல்லாத,

ஈரம் இலாளர்= அன்பில்லாதவர்கள்,

தொடர்பு= சிநேகமானது,

நுனி= கரும்பின்நுனியை,

நீக்கி= விட்டு,

தூரில்= அடியிலிருந்து,

தின்று அன்ன= தின்றாற் போலும்,

தகைத்து= தன்மையுடையது.

கருத்துரை: கற்றோர் சிநேகம் கரும்பை நுனியிலிருந்து தின்றாற் போலும்; மற்றோர் சிநேகம் கரும்பை அடியிலிருந்து தின்றாற் போலும்.

விசேடவுரை: கேண்மை- எழுவாய், தின்றற்று- பயனிலை, தொடர்பு- எழுவாய், தகைத்து- பயனிலை. ஏ, அரோ- அசைகள்.

பாடல் 139 (கல்லாரே)[தொகு]

கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகி () கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
னல்லறிவு நாளுந் தலைப்படுவர்- தொல்சிறப்பி ()நல் அறிவு நாளும் தலைப்படுவர் - தொல் சிறப்பின்
னொண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு () ஒள் நிறம் பாதிரிப் பூ சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. (60) தண்ணீர்க்குத் தான் பயந்து ஆங்கு. (௯)

பதவுரை: ஒள்= ஒள்ளிய,

நிறம்= நிறமுடைய,

பாதிரி= பாதிரிப் பூவின்,

புது ஓடு= புதிய இதழ்களானவை,

சேர்தலால்= அடைதலால்,

தண்ணீர்க்கு= சலத்திற்கு,

தான்= வாசனைதான்,

பயந்தாங்கு= பயன்பட்டாற் போலும்,

கல்லாரே ஆயினும்= கற்றிலரானாலும்,

கற்றாரை= கற்றவரை,

சேர்ந்து= சார்ந்து,

ஒழுகின்= நடப்பாராயின்,

தொல்= பழைய,

சிறப்பின்= சிறப்புடைய,

நல்= நல்ல,

அறிவு= அறிவில்,

நாளும்= நாடோறும்,

தலைப்படுவர்= முதன்மையுடையவராவர்.

கருத்துரை: பாதிரிப்பூக்களின் இதழ்களானவை தண்ணீர்க்கு வாசம் தந்தாற்போலும், கல்லாதவருங் கற்றோரைச் சார்ந்தால் அறிவில் முதன்மையாவர்.

விசேடவுரை: ஓருவர்- எழுவாய், தலைப்படுவர்- பயனிலை. ஏ- அசை.

பாடல் 140 (அலகுசால்)[தொகு]

அலகுசால் கற்பி னறிவுநூல் கல்லா () அலகு சால் கற்பின் அறிவு நூல் கல்லாது
துலகநூ லோதுவ தெல்லாங் - கலகல ()உலக நூல் ஓதுவது எல்லாம்- கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம் () கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில். (09) போஒம் துணை அறிவார் இல். (௰)

பதவுரை:

அலகு= அளவு,

சால்= மிக்க,

கற்பின்= நூல்களைக் கற்றால்,

அறிவுநூல்= ஞான நூல்களை,

கல்லாது= கற்காமல்,

உலகம் நூல்= உலகத்திற்குரிய நூல்களை,

ஓதுவது எல்லாம்= கற்பதெல்லாம்,

கலகல= கலகலவென்னும் ஓசையாய்,

கூஉம் துணை= கூவுமளவு,

அல்லால்= அல்லது,

தடுமாற்றம்= பிறவித்துன்பத்தைவிட்டு,

கொண்டு= நல்வழியைக்கொண்டு,

போஒம் துணை= போகும் அளவை,

அறிவார்= அறியவல்லவர்,

இல்= இல்லை.

கருத்துரை:

ஞானத்திற்குரிய நூல்களைக் கற்காமல், உலகத்திற்குரிய நூல்களைக் கற்குதல் வீண் என்பதாம்.

விசேடவுரை:

அறிவார்- எழுவாய், இல்- பயனிலை.

‘கல்வி’ அதிகாரம் முற்றிற்று




பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்


2.பொருட்பால்: 1.அரசியல்

[[]]
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை

II.பொருட்பால்: 2.நட்பியல்

21.சுற்றந்தழால்
22.நட்பாராய்தல்
23.நட்பிற் பிழைபொறுத்தல்
24.கூடா நட்பு

II.பொருட்பால்: 3.இன்பவியல்

[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]
[[]]