அகநானூறு/341 முதல் 350 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


3.நித்திலக் கோவை[தொகு]

பாடல்:341 (உய்தகைஇன்றால்)[தொகு]

உய்தகை இன்றால்- தோழி- பைபயக்
கோங்கும் கொய்குழை உற்றன குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்குசினை விளிக்கும்
நாடுஆர் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைக்
கழைஅழி நீத்தம் சாஅய வழிநாள் 5
மழைகழிந் தன்ன மாக்கால் மயங்குஅறல்
பதவுமேயல் அருந்து துளங்குஇமில் நல்லேறு
மதவுடை நாகொடு அசைவீடப் பருகி
குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லிணர்ப்
பொன்தகை நுண்தாது உறைப்பத் தொக்குஉடன் 10
குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும்
யாணர் வேனில்மன் இது-
மாண்நலம் நுகரும் துணையுடை யோர்க்கே. 13

பாடல்:342 (ஒறுப்பஓவலை)[தொகு]

ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்குயான்
கிளைஞன் அல்லனோ- நெஞ்சே- தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நல்நாட்டு உள்ளதை
மண்கொள் புற்றத்து அருப்புஉழை திறப்பின் 5
ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்துபடப்
பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கை
கெடாஅ நல்இசைத் தென்னன் தொடாஅ 10
நீர்இழி மருங்கில் கல்லளைக் கரந்தஅவ்
வரையர மகளிரின் அரியள்
அவ்வரி அல்குல் அணையாக் காலே! 13

பாடல்:343 (வாங்கமை)[தொகு]

வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்
சில்சுணங்கு அணிந்த பல்பூண் மென்முலை
நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் 5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்துஅவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
கண்பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனந்தலை யாஅத்து அம்தளிர்ப் பெருஞ்சினை 10
இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார்
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறம்நிறை பண்டத்துப் பொறைஅசாஅக் களைந்த
பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்துநின்று 15
உள்ளினை- வாழிஎன் நெஞ்சே- கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையின் பிரிந்தநீயே. 19

பாடல்:344 (வளமழை)[தொகு]

வளமழை பொழிந்த வால்நிறக் களரி
உளர்தரு தண்வளி உறுதொறும் நிலவெனத்
தொகுமுகை விரிந்த முடககாற் பிடவின்
வைஏர் வால்எயிற்று ஒள்நுதல் மகளிர்
கைமாண் தோணி கடுப்பப் பையென 5
மயிலினம் பயிலும் மரம்பயில் கானம்
எல்லிடை உறாஅ அளவை வல்லே
கழல்ஒளி நாவின் தெண்மணி கறங்க
நிழல்ஒலிப் பன்ன நிமிர்பரிப் புரவி
வயக்குஉறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து 10
இயக்குமதி- வாழியோ கையுடை வலவ!
பயப்புறு படர்அட வருந்திய
நயப்புஇன் காதலி நகைமுகம் பெறவே. 13

பாடல்:345 (விசும்புதுளி)[தொகு]

'விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித்
தண்பதம் படுதல் செல்கெனப் பன்மாண்
நாம்செல விழைந்தன மாக' ஓங்குபுகழ்க்
கான்அமர் செல்வி அருளலின் வெண்கால்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை 5
நுணங்குநுண் பனுவற் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழில் குன்றத்துக்
கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐதுஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சின்னாள் கழிக! என்று முன்னாள் 10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்
மாமுறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப
உறைகழிந்து உலந்த பின்றைப் பொறைய
சிறுவெள் அருவித் துவலையின் மலர்ந்த 15
கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச்
செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்பக்
காடுகவின் பெறுக- தோழி- ஆடுவளிக்கு
ஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ்
கல்கண் சீக்கும் அத்தம்
அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே. 21

பாடல்:346 (நகைநன்று)[தொகு]

நகைநன்று அம்ம தானே- இறைமிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண்தோடு அன்ன கயல்குறித்துக்
கள்ளார் உவகைக் கலிமகிழ் உழவர் 5
காஞ்சிஅம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதுஅழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் 10
பார்வல் இருக்கும் பயம்கேழ் ஊர-
யாம்அது பேணின்றோ இலமே- நீ நின்
பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணதிர்ந்து இயம்ப
மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி 15
எம்மனை வாரா யாகி முன்னாள்
நும்மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள்- நெடுந்தேர்
இழையணி யானைப் பழையன் மாறன்
மாடமலி மறுகின் கூடல் ஆங்கண் 20
வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல்அமர் சாஅய்க்
கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி
ஏதின் மன்னர் ஊர்கொளக்
கோதை மார்பன் உவகையிற் பெரிதே. 25

பாடல்:347 (தோளும்தொல்கவின்)[தொகு]

தோளும் தொல்கவின் தொலைய நாளும்
நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன 5
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழியச்
சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே
வாய்க்கதில்- வாழி தோழி- வாயாது
மழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து 10
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென குவவுஅடி
வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்
கன்றொழித்து ஒடிய புன்தலை மடப்பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு
கெடுமகப் பெண்டிரின் தேரும்
நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே! 16

பாடல்:348 (என்ஆவதுகொல்)[தொகு]

என்ஆ வதுகொல் தானே- முன்றில்
தேன்தேர் சுவைய திரள்அரை மாஅத்துக்
கோடைக்கு ஊழ்த்த கமழ்நறுந் தீங்கனிப்
பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச்சுளை அளைஇ
இறாலொடு கலந்த வண்டுமூசு அரியல் 5
நெடுங்கண் ஆடுஅமைப் பழுநிக் கடுந்திறல்
பாப்புக்கடுப்பு அன்ன தோப்பி வான்கோட்டுக்
கடவுள்ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர்
முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி
அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி 10
யானை வவ்வின தினைஎன நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச்
சிலைஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே? 14

பாடல்:349 (அரம்போழ்)[தொகு]

அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய
எவன்ஆய்ந் தனர்கொல்- தோழி! ஞெமன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே 5
உரன்மலி உள்ளமொடு முனைபா ழாக
அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு
எழிற் குன்றத்துக் கவாஅன் கேழ்கொளத்
திருந்துஅரை நிவந்த கருங்கால் வேங்கை 10
எரிமருள் கவளம் மாந்திக் களிறுதன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்லூர் பாம்பின் தோன்றும்
சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே. 14

பாடல்:350 (கழியேசிறு)[தொகு]

கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்ப
எறிதிரை ஓதம் தரல்ஆ னாதே
துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர்அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே; 5
கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச்
சேந்தனை சென்மோ- பெருநீர்ச் சேர்ப்ப!-
இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி 10
வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே! 15
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/341_முதல்_350_முடிய&oldid=480943" இலிருந்து மீள்விக்கப்பட்டது