அகநானூறு/61 முதல் 70 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


1. களிற்றியானை நிரை[தொகு]

[தொகு]

பாடல்:61 (நோற்றோர்)[தொகு]

'நோற்றோர் மன்ற தாமே கூற்றங்
கோளுற விளியார், பிறர்கொள விளிந்தோர்' எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாள்இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய்உழந்து
ஆழல் வாழி, தோழி!- தாழாது, 5
உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ,
அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
நறவுநொடை நெல்லின் நாள்மகிழ் அயரும் 10
கழல்புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே - முனாஅது
முழவுஉறழ் திணிதோள் நெடுவேள் ஆவி 15
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே. 18

பாடல்:62 (அயத்துவளர்)[தொகு]

அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத்தோள்,
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன
மாஇதழ் மழைக்கண், மாஅ யோளொடு 5
பேயும் அறியா மறைஅமை புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்வு பிரிந்து இசைப்பக்,
கரந்த கரப்பொடு நாஞ்செலற்கு, அருமையின்,
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல, 10
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந் தோளே - வென்வேற்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்,
மடவது மாண்ட மாஅ யோளே! 16

பாடல்:63 (கேளாய்)[தொகு]

கேளாய் வாழியோ மகளை! நின் தோழி,
திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு-
பெருமலை இறந்தது நோவேன்; நோவல்-
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி,
முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி 5
பெரும்புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்பக்
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்.
கன்று காணாது, புன்கண்ண, செவிசாய்த்து 10
மன்றுநிறை பைதல் கூறப், பல உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ,
முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை,
மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை 15
தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்,
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல்?, எனக் கலுழும்என் நெஞ்சே! 19

பாடல்: 64 (களையும்)[தொகு]

களையும் இடனாற் - பாக! உளை அணி
உலகுகடப் பன்ன புள்இயற் கலிமா
வகைஅமை வனப்பின் வள்புநீ தெரியத்
தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி,
ஐதுஇலங்கு அகல்இலை நெய்கனி நோன்காழ் 5
வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச்,
செலவுநாம் அயர்ந்தனம் ஆயிற், பெயல
கடுநீர் வரித்த செந்நில மருங்கின்,
விடுநெறி ஈர்மணல், வாரணம் சிதரப்,
பாம்புஉறை புற்றத்து ஈர்ம்புறங் குத்தி, 10
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன்நிலை வேட்கையின் மடநாகு தழீஇ,
ஊர்வயிற் பெயரும் பொழுதிற், சேர்புஉடன்,
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
ஆபூண் தெண்மணி ஐதுஇயம்பு இன்இசை 15
புலம்புகொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. 17

பாடல்:65 (உன்னங்)[தொகு]

உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம்சேரா இயல்பிற் பொய்ம் மொழிச்
சேரிஅம் பெண்டிர் சௌவையும் ஒழிகம்;
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற் 5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவஇனி - வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே - மலைதொறும்
மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி, 10
மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்,
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்ஊர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக், 15
காடுமீக் கூறும் கோடுஏந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம், 'பணைத்தோள்,
நாறுஐங் கூந்தல், கொம்மை வரிமுலை,
நிரைஇதழ் உண்கண், மகளிர்க்கு
அரியவால்' என அழுங்கிய செலவே! 20

பாடல்:66 (இம்மையுலகத்து)[தொகு]

'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் 5
வாயே ஆகுதல் வாய்த்தனம் - தோழி!
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு இறப்போன்
மாண்தொழில் மாமணி கறங்கக், கடை கழிந்து 10
காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூங்கட் புதல்வனை நோக்கி, 'நெடுந்தேர்
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன், தாங்காது,
மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும! செல்இனி, அகத்து' எனக் 15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
தானே புகுதந் தோனே; யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
கலக்கினன் போலும், இக்கொடியோன்' எனச்சென்று 20
அலைக்கும் கோலொடு குறுகத், தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போலவந்து இசைப்பவும், தவிரான்
கழங்குஆடு ஆயத்து அன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய,
அழுங்கினன் அல்லனோ, அயர்ந்த தன் மணனே! 26

பாடல்:67 (யானெவன்)[தொகு]

யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறைதுறந்து எழிலி நீங்கலிற், பறைபு உடன்,
மரம்புல் லென்ற முரம்புஉயர் நனந்தலை;
அரம்போழ் நுதிய வாளி அம்பின் 5
நிரம்பா நோக்கின்; நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல்அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் 10
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவல்இடி பதுக்கை ஆள்உகு பறந்தலை,
'உருஇல் பேஎய் ஊராத் தேரோடு 15
நிலம்படு மின்மினி போலப் பலஉடன்
இலங்கு பரல் இமைக்கும்' என்ப - நம்
நலம்துறந்து உறைநர் சென்ற ஆறே! 18

பாடல்:68 (அன்னாய்)[தொகு]

'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தணஅயத்து அமன்ற கூதளம் குழைய,
இன்இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டி யன்ன ஒண்தளிர்ச் செயலை 5
ஓங்குசினைத் தொடுத்த ஊசல், பாம்புஎன,
முழுமுதல் துமிய உரும்எறிந் தன்றே;
பின்னும் கேட்டியோ?' எனவும், அஃது அறியாள்,
அன்னையும் கனைதுயில் மடிந்தனள்; அதன்தலை
மன்உயிர் மடிந்தன்றால் பொழுதே ; காதலர் . 10
வருவர் ஆயின், பருவம்இது' எனச்
சுடர்ந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுதுஅன் றாக,
வந்தனர் - வாழி, தோழி!- அந்தரத்து
இமிழ்பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத் 15
தவிர்வுஇல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல் பலஉடன்
வெண்கோட்டு யானை விளிபடத் துழவும்
அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக்கடு சுரனே. 21

பாடல்:69 (ஆய்நலம்)[தொகு]

ஆய்நலம் தொலைந்த மேனியும், மாமலர்த்
தகை வனப்புஇழந்த கண்ணும், வகைஇல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே; உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் 5
செய்பொருள் திறவர் ஆகிப், புல்இலைப்
பராரை நெல்லி அம்புளித் திரள்காய்
கான மடமரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் 10
பொன்புனை திகிரி திரிதர குறைத்த
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், எனையதூஉம்
நீடலர் - வாழி, தோழி! - ஆடுஇயல்
மடமயில் ஒழித்த பீலிவார்ந்து, தம்
சிலைமாண் வல்வில் சுற்றிப், பலமாண் 15
அம்புடைக் கையர் அரண்பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரின் நாறும்நின்
அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே. 20

பாடல்:70 (கொடுந்திமிற்)[தொகு]

கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இருபுலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்,
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப், புதுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக் கவினி மாநீர்ப் 10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 15
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்றுஇவ், அழுங்கல் ஊரே. 17
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/61_முதல்_70_முடிய&oldid=1376262" இலிருந்து மீள்விக்கப்பட்டது