அகநானூறு/41 முதல் 50 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


1. களிற்றியானை நிரை[தொகு]

பாடல்: 41 (வைகுபுலர்)[தொகு]

வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக்,
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப,
நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, . 5
அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக்
கோழிணர் எதிரிய மரத்த கவினிக்,
காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம்பிரி புலம்பின் நலம் செலச் சாஅய் 10
நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த
நல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ-
மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
அம்கலுழ் மாமை கிளைஇய,
நுண்பல் தித்தி, மாஅ யோளோ? 16

பாடல்: 42 (மலிபெயல்)[தொகு]

மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
தளிர்ஏர் மேனி, மாஅ யோயே!
நாடுவறம் கூர, நாஞ்சில துஞ்சக் 5
கோடை நீடிய பைதுஅறு காலைக்
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்,
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை, 10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்று - சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே! 14

பாடல்:43 (கடல்முகந்து)[தொகு]

கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர் மின்னொடு வலன்ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன்தலை மடப்பிடி
கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றி, 5
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது,
கதிர்மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளிமயங் கின்றே தண்குரல் எழிலி, யாமே
கொய்அகை முல்லை காலொடு மயங்கி,
மைஇருங் கானம் நாறும் நறுநுதல், 10
பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை
நல்எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும்
அளியரோ அளியர்தாமே - அளிஇன்று
ஏதில் பொருட்பிணிப் போகித், தம்
இன்துணைப் பிரியும் மடமை யோரே! 15

பாடல்: 44 (வந்துவினை)[தொகு]

வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே;
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே; நின்தேர்
முன்இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது 5
ஊர்க, பாக! ஒருவினை, கழிய-
நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்அருங் கடுந்திறல் கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை என்றுஆங்கு
அன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10
பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக்,
கண்டது நோனானாகித் திண்தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15
பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே! 19


பாடல்:45 (வாடல்)[தொகு]

வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து,
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
ஆள்இல் அத்தத்து உழுவை உகளும் 5
காடு இறந்தனரே, காதலர்; மாமை,
அரிநுண் பசலை பாஅய, பீரத்து
எழில்மலர் புரைதல் வேண்டும்,அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி, 10
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்வோ - பொலந்தார், 15
கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்,
வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய
உடைமதில் ஓர் அரண்போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே! 19

பாடல்: 46 (சேற்றுநிலை)[தொகு]

சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய,
அம்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை 5
வண்டூது பனிமலர் ஆரும் ஊர!
யாரை யோ? நிற் புலக்கேம், வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம் 10
கூறேம்; வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றீ, பெரும! நிற் றகைக்குநர் யாரோ? 16

பாடல்:47 (அழிவில்)[தொகு]

அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினைஇவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து
எழுஇனி - வாழிய நெஞ்சே! - ஒலிதலை
அலங்குகழை நரலத் தாக்கி, விலங்குஎழுந்து,
கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி 5
விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து,
அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன்சுடர் கல்சேர்பு மறைய, மனைவயின்
ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின் 10
குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
நெடுநிலை வியன்நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
"யாண்டு உளர்கொல்?" எனக், கலிழ்வோள் எய்தி,
இழைஅணி நெடுந்தேர்க் கைவண் செழியன் 15
மழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய்புரை பணைத்தோள், பாயும்
நோய்அசா வீட, முயங்குகம் பலவே! 15

பாடல்:48 (அன்னாய்)[தொகு]

"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனிபசந் தனள்" என வினவுதி; அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்,
மலிபூஞ் சாரல், என்தோழி மாரோடு 5
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
"புலிபுலி!" என்னும் பூசல் தோன்ற-
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், 10
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
"யாதோ, மற்று அம் மாதிறம் படர்?" என
வினவிநிற் றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்மறைபு ஒடுங்கி 15
நாணி நின்றனெ மாகப், பேணி,
"ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மைஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?" என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, 20
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற அக் குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன்மறை தேஎம்நோக்கி, "மற்றுஇவன்
மகனே, தோழி!" என்றனள்
அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே. 26

பாடல்: 49 (கிளியும்)[தொகு]

'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என்உயிர்' என,
கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, 5
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினே னாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல்கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
விறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி, 10
வறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய
மடமான் அசாஇனம் திரங்குமரல் சுவைக்கும்
காடுஉடன் கழிதல் அறியின் - தந்தை
அல்குபதம் மிகுந்த கடியுடை வியன்நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, 15
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடுஅமை அரிச்சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே! 18

பாடல்: 50 (கடல்பாடு)[தொகு]

கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;
செவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாண்இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,
பகலும் நம்வயின் அகலா னாகிப் 5
பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
"வாராதோர் நமக்கு யாஅர்?" என்னாது,
மல்லன் மூதூர் மறையினை சென்று,
சொல்லின் எவனோ - பாண! 'எல்லி 10
மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்' எனக்
கண்நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்நுதல் அரிவை "யான் என் செய்கோ?" எனவே! 14
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/41_முதல்_50_முடிய&oldid=1435841" இலிருந்து மீள்விக்கப்பட்டது