அகநானூறு/311 முதல் 320 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


நித்திலக்கோவை[தொகு]

பாடல்: 311 (இரும்பிடி)[தொகு]

இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று
அருங்கடிக் காப்பின் அகனகர் ஒருசிறை
எழுதி யன்ன திண்ணிலைக் கதவம்
கழுதுவழங்கு அரைநாள் காவலர் மடிந்தெனத்
திறந்துநப் புணர்ந்து 'நும்மிற் சிறந்தோர் 5
இம்மை உலகத்து இல்'லெனப் பன்னாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயந்தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப
வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி 10
செவியடை தீரத தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட்டு உம்பர் செல்லருஞ்
சுரமிறந்து ஏகினும் நீடலர்
அருண்மொழி தேற்றிநம் அகன்றிசி னோரே! 14

பாடல்:312 (நெஞ்சுடன்படு)[தொகு]

நெஞ்சுடன் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரையக் கருதும் ஆயின் பெரிதுவந்து
ஓங்குவரை இழிதரும் வீங்குபெயல் நீத்தம்
காந்தளஞ் சிறுகுடிக் கௌவை பேணாது 5
அரிமதர் மழைக்கண் சிவப்ப நாளைப்
பெருமலை நாடன் மார்புபுணை யாக
ஆடுகம் வம்மோ- காதலம் தோழி!
வேய்பயில் அடுக்கம் புதையக் கால்வீழ்த்து
இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார் 10
ஓடுபுறம் கண்ட தாள்தோய் தடக்கை
வெல்போர் வழுதி செல்சமத் துயர்த்த
அடுபுகழ் எஃகம் போலக்
கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே! 14

பாடல்:313 (இனிப்பிறிது)[தொகு]

'இனிப்பிறி துண்டோ ? அஞ்சல் ஓம்பென!'
அணிக்கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறுநினைந்து அல்கலும்
குளித்துப்பொரு கயலிற் கண்பனி மல்க
ஐய வாக வெய்ய உயிரா 5
இரவும் எல்லையும் படரட வருந்தி
அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்பத்
தம்மல தில்லா நம்மிவண் ஒழியப்
பொருள்புரிந்து அகன்றன ராயினும் அருள்புரிந்து
வருவர்- வாழி, தோழி!- பெரிய 10
நிதியஞ் சொரிந்த நீவி போலப்
பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை
நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி
ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல 15
இல்வழிப் படூஉங் காக்கைக்
கல்லுயர் பிறங்கல் மலைஇறந் தோரே. 17

பாடல்:314 (நீலத்தன்ன)[தொகு]

நீலத் தன்ன நீர்பொதி கருவின்
மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
நிலம்தண் ணென்று கானங் குழைப்ப
இனந்தேர் உழவர் இன்குரல் இயம்ப
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின் 5
திரிமருப் பிரலை பைம்பயிர் உகள
ஆர்பெயல் உதவிய கார்செய் காலை
நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
கல்லெனக் கறங்குமணி இயம்ப வல்லோன்
வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர் 10
ஈர்ம்புறவு இயங்குவழி அறுப்பத் தீந்தொடைப்
பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரார் ஆயின் தந்நிலை
எவன்கொல்? பாண! உரைத்திசிற் சிறிதெனக்
கடவுட் கற்பின் மடவோள் கூறச் 15
செய்வினை அழிந்த மையல் நெஞ்சில்
துனிகொள் பருவரல் தீர வந்தோய்!
இனிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி!
வேலி சுற்றிய வால்வீ முல்லைப்
பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின் 20
இன்னகை இளையோள் கவவ
மன்னுக பெரும! நின் மலர்ந்த மார்பே! 22

பாடல்:315 (கூழையுங்)[தொகு]

'கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும் 5
அறியா மையிற் செறியேன் யானே
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக் 10
கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே- தேக்கின் 15
அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
ஊன்புழுக்கு அயரும் முன்றில்
கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே. 18

பாடல்:316 (துறைமீன்)[தொகு]

துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து 5
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த தெரிஇழை நெகிழ்தோள்
ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ 10
புலத்தல் ஒல்லுமோ?- மனைகெழு மடந்தை
அதுபுலந்து உறைதல் வல்லி யோரே
செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்
தாமட்டு உண்டு தமியர் ஆகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப 15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்மவஃது உடலு மோரே! 17

பாடல்:317 (மாகவிசும்பின்)[தொகு]

"மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்
பாஅய் அன்ன பகலிருள் பரப்பிப்
புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக்
குவிமுகை முருக்கின் கூர்நுனை வைஎயிற்று
நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும் 5
முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்துடன்
மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப்
பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊதுதொறுங் குரவத்து 10
ஓங்குசினை நறுவீ கோங்கலர் உறைப்பத்
துவைத்துஎழு தும்பி தவிர்இசை விளரி
உதைத்துவிடு நரம்பின் இம்மென இமிரும்
மரனே முற்ற காமர் வேனில்
வெயிலவிர் புரையும் வீததை மாஅத்துக் 15
குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லை கொல்லென மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தன மாகநயந் தாங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல 20
வந்துநின் றனரே காதலர் நத்துறந்து
என்னுழி யதுகொல் தானே பன்னாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன்னுதற் பாஅய பசலை நோயே? 24

பாடல்:318 (கானமானதர்)[தொகு]

கான மானதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமுநனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதக வுடைய
இரவழங்கு சிறுநெறி தமியை வருதி-
வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம 5
முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழவிறல் நனந்தலைப் பயமலை நாட!-
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்றுதலை யாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாமிவண் ஒழிய 10
எற்கண்டு பெயருங் காலை யாழநின்
கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமாற் சிறிதே- வேட்டொடு
வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்
நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே! 15

பாடல்:318 (மணிவாய்க்காக்கை)[தொகு]

மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை
பிணிவீழ் ஆலத் தலங்குசினை ஏறிக்
கொடுவில் எயினர் குறும்பிற் கூக்கும்
கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படுபிணங் கவரும் பாழ்படு நனந்தலை 5
அணங்கென உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலைச்
சுரும்பார் கூந்தற் பெருந்தோள் இவள்வயிற் 10
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும்பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய்குழைத்
தளிரேர் அன்ன தாங்கரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனிபேர் அன்பினள்
'செல்வேம்' என்னும் நும்மெதிர்
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! 16

பாடல்:320 (ஓங்குதிரைப்)[தொகு]

ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும்
கானல்அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப! 5
மலர்ஏர் உண்கண்எம் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்கநீ அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்புஅமர் எக்கர் அம்சிறை உளரும்
தடவுநிலைப் புன்னைத் தாதுஅணி பெருந்துறை 10
நடுங்குஅயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டற் பாவை சிதைய வந்துநீ
தோள்புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ கடல்அறி கரியே? 14
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/311_முதல்_320_முடிய&oldid=480939" இலிருந்து மீள்விக்கப்பட்டது