அகநானூறு/311 முதல் 320 முடிய
Appearance
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
நித்திலக்கோவை
[தொகு]பாடல்: 311 (இரும்பிடி)
[தொகு]- இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று
- அருங்கடிக் காப்பின் அகனகர் ஒருசிறை
- எழுதி யன்ன திண்ணிலைக் கதவம்
- கழுதுவழங்கு அரைநாள் காவலர் மடிந்தெனத்
- திறந்துநப் புணர்ந்து 'நும்மிற் சிறந்தோர் 5
- இம்மை உலகத்து இல்'லெனப் பன்னாள்
- பொம்மல் ஓதி நீவிய காதலொடு
- பயந்தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப
- வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்
- மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி 10
- செவியடை தீரத தேக்கிலைப் பகுக்கும்
- புல்லி நன்னாட்டு உம்பர் செல்லருஞ்
- சுரமிறந்து ஏகினும் நீடலர்
- அருண்மொழி தேற்றிநம் அகன்றிசி னோரே! 14
பாடல்:312 (நெஞ்சுடன்படு)
[தொகு]- நெஞ்சுடன் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கி
- இரவின் வரூஉம் இடும்பை நீங்க
- வரையக் கருதும் ஆயின் பெரிதுவந்து
- ஓங்குவரை இழிதரும் வீங்குபெயல் நீத்தம்
- காந்தளஞ் சிறுகுடிக் கௌவை பேணாது 5
- அரிமதர் மழைக்கண் சிவப்ப நாளைப்
- பெருமலை நாடன் மார்புபுணை யாக
- ஆடுகம் வம்மோ- காதலம் தோழி!
- வேய்பயில் அடுக்கம் புதையக் கால்வீழ்த்து
- இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார் 10
- ஓடுபுறம் கண்ட தாள்தோய் தடக்கை
- வெல்போர் வழுதி செல்சமத் துயர்த்த
- அடுபுகழ் எஃகம் போலக்
- கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே! 14
பாடல்:313 (இனிப்பிறிது)
[தொகு]- 'இனிப்பிறி துண்டோ ? அஞ்சல் ஓம்பென!'
- அணிக்கவின் வளர முயங்கி நெஞ்சம்
- பிணித்தோர் சென்ற ஆறுநினைந்து அல்கலும்
- குளித்துப்பொரு கயலிற் கண்பனி மல்க
- ஐய வாக வெய்ய உயிரா 5
- இரவும் எல்லையும் படரட வருந்தி
- அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்பத்
- தம்மல தில்லா நம்மிவண் ஒழியப்
- பொருள்புரிந்து அகன்றன ராயினும் அருள்புரிந்து
- வருவர்- வாழி, தோழி!- பெரிய 10
- நிதியஞ் சொரிந்த நீவி போலப்
- பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை
- நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
- வசிபடு புண்ணின் குருதி மாந்தி
- ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல 15
- இல்வழிப் படூஉங் காக்கைக்
- கல்லுயர் பிறங்கல் மலைஇறந் தோரே. 17
பாடல்:314 (நீலத்தன்ன)
[தொகு]- நீலத் தன்ன நீர்பொதி கருவின்
- மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
- நிலம்தண் ணென்று கானங் குழைப்ப
- இனந்தேர் உழவர் இன்குரல் இயம்ப
- மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின் 5
- திரிமருப் பிரலை பைம்பயிர் உகள
- ஆர்பெயல் உதவிய கார்செய் காலை
- நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
- கல்லெனக் கறங்குமணி இயம்ப வல்லோன்
- வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர் 10
- ஈர்ம்புறவு இயங்குவழி அறுப்பத் தீந்தொடைப்
- பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப
- இந்நிலை வாரார் ஆயின் தந்நிலை
- எவன்கொல்? பாண! உரைத்திசிற் சிறிதெனக்
- கடவுட் கற்பின் மடவோள் கூறச் 15
- செய்வினை அழிந்த மையல் நெஞ்சில்
- துனிகொள் பருவரல் தீர வந்தோய்!
- இனிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி!
- வேலி சுற்றிய வால்வீ முல்லைப்
- பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின் 20
- இன்னகை இளையோள் கவவ
- மன்னுக பெரும! நின் மலர்ந்த மார்பே! 22
பாடல்:315 (கூழையுங்)
[தொகு]- 'கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
- சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
- பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
- கண்துணை ஆக நோக்கி நெருநையும்
- அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும் 5
- அறியா மையிற் செறியேன் யானே
- பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
- அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
- சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
- புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக் 10
- கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
- அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
- வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
- கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
- சேக்குவள் கொல்லோ தானே- தேக்கின் 15
- அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
- ஊன்புழுக்கு அயரும் முன்றில்
- கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே. 18
பாடல்:316 (துறைமீன்)
[தொகு]- துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
- அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
- ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
- தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
- பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து 5
- குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
- போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
- தேர்தர வந்த தெரிஇழை நெகிழ்தோள்
- ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
- பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ 10
- புலத்தல் ஒல்லுமோ?- மனைகெழு மடந்தை
- அதுபுலந்து உறைதல் வல்லி யோரே
- செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்
- தாமட்டு உண்டு தமியர் ஆகித்
- தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப 15
- வைகுநர் ஆகுதல் அறிந்தும்
- அறியார் அம்மவஃது உடலு மோரே! 17
பாடல்:317 (மாகவிசும்பின்)
[தொகு]- "மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்
- பாஅய் அன்ன பகலிருள் பரப்பிப்
- புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக்
- குவிமுகை முருக்கின் கூர்நுனை வைஎயிற்று
- நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும் 5
- முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்துடன்
- மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப்
- பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி
- நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல
- அரவ வண்டினம் ஊதுதொறுங் குரவத்து 10
- ஓங்குசினை நறுவீ கோங்கலர் உறைப்பத்
- துவைத்துஎழு தும்பி தவிர்இசை விளரி
- உதைத்துவிடு நரம்பின் இம்மென இமிரும்
- மரனே முற்ற காமர் வேனில்
- வெயிலவிர் புரையும் வீததை மாஅத்துக் 15
- குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப
- வருவேம்" என்ற பருவம் ஆண்டை
- இல்லை கொல்லென மெல்ல நோக்கி
- நினைந்தனம் இருந்தன மாகநயந் தாங்கு
- உள்ளிய மருங்கின் உள்ளம் போல 20
- வந்துநின் றனரே காதலர் நத்துறந்து
- என்னுழி யதுகொல் தானே பன்னாள்
- அன்னையும் அறிவுற அணங்கி
- நன்னுதற் பாஅய பசலை நோயே? 24
பாடல்:318 (கானமானதர்)
[தொகு]- கான மானதர் யானையும் வழங்கும்
- வான மீமிசை உருமுநனி உரறும்
- அரவும் புலியும் அஞ்சுதக வுடைய
- இரவழங்கு சிறுநெறி தமியை வருதி-
- வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம 5
- முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும்
- பழவிறல் நனந்தலைப் பயமலை நாட!-
- மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
- இன்றுதலை யாக வாரல் வரினே
- ஏமுறு துயரமொடு யாமிவண் ஒழிய 10
- எற்கண்டு பெயருங் காலை யாழநின்
- கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை
- ஊதல் வேண்டுமாற் சிறிதே- வேட்டொடு
- வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்
- நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே! 15
பாடல்:318 (மணிவாய்க்காக்கை)
[தொகு]- மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை
- பிணிவீழ் ஆலத் தலங்குசினை ஏறிக்
- கொடுவில் எயினர் குறும்பிற் கூக்கும்
- கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
- படுபிணங் கவரும் பாழ்படு நனந்தலை 5
- அணங்கென உருத்த நோக்கின் ஐயென
- நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
- பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
- நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலைச்
- சுரும்பார் கூந்தற் பெருந்தோள் இவள்வயிற் 10
- பிரிந்தனிர் அகறல் சூழின் அரும்பொருள்
- எய்துக மாதோ நுமக்கே கொய்குழைத்
- தளிரேர் அன்ன தாங்கரு மதுகையள்
- மெல்லியள் இளையள் நனிபேர் அன்பினள்
- 'செல்வேம்' என்னும் நும்மெதிர்
- 'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! 16
பாடல்:320 (ஓங்குதிரைப்)
[தொகு]- ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்
- திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
- தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர்
- விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும்
- கானல்அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப! 5
- மலர்ஏர் உண்கண்எம் தோழி எவ்வம்
- அலர்வாய் நீங்கநீ அருளாய் பொய்ப்பினும்
- நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
- அடும்புஅமர் எக்கர் அம்சிறை உளரும்
- தடவுநிலைப் புன்னைத் தாதுஅணி பெருந்துறை 10
- நடுங்குஅயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
- வண்டற் பாவை சிதைய வந்துநீ
- தோள்புதிது உண்ட ஞான்றைச்
- சூளும் பொய்யோ கடல்அறி கரியே? 14