அகநானூறு/51 முதல் 60 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


1. களிற்றியானை நிரை[தொகு]

பாடல்: 51 (ஆள்வழக்)[தொகு]

ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற,
நீள்எரி பரந்த நெடுந்தாள் யாத்து,
போழ்வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி,
ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி 5
எருவைச் சேவல் கரிபுசிறை தீய,
வேனில் நீடிய வேய்உயர் நனந்தலை,
நீஉழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி
பல்இதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்
பிரியின் புணர்வது ஆயிற், பிரியாது. 10
ஏந்துமுலை முற்றம் வீங்கப், பல்வீழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை - மாண் நெஞ்சம்!- நீங்குதன் மறந்தே. 14

பாடல்: 52 (வலந்தவள்ளி)[தொகு]

'வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் 5
ஆகொள் வயப்புலி ஆகும் அஃது" எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக், கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சுஅமர் வியன்மார்பு உடைத்துஎன அன்னைக்கு
அறிவிப் பேம்கொல்? அறியலெம் கொல்?' என 10
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற்
சேர்ந்தன்று - வாழி, தோழி!- 'யாக்கை
இன்உயிர் கழிவது ஆயினும், நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச் செய்யா தீமே! 15

பாடல்:53 (அறியாய்)[தொகு]

அறியாய், வாழி, தோழி! இருள்அற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்,
நீர்அற வறந்த நிரம்பா நீள்இடை, 5
வள்எயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரிஅரை புதைத்த புலம்புகொள் இயவின்,
விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர் 10
எழுத்துடை நடுகல் இன்நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்;
'அருளே காதலர்' என்றி, நீயே. 16

பாடல்: 54 (விருந்தின்)[தொகு]

விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம்பெயற்
காரும் ஆர்கலி தலையின்று: தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்,
வள்வாய் ஆழி உள்உறுபு உருளக், 5
கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத்
தாம்புஅசை குழவி வீங்குசுரை மடியக்,
கனையலம் குரல் காற்பரி பயிற்றிப்,
படுமணி மிடற்ற பயநிரை ஆயம்
கொடுமடி உடையர் கோற்கைக் கோவலர் 10
கொன்றையம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனைநகு மாலைத்,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் 15
நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி,
'முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி,
வருகுவை ஆயின், தருகுவென் பால்' என,
விலங்கு அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் 20
திதலை அல்குல்எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே! 22

பாடல்: 55 (காய்ந்துசெலற்)[தொகு]

காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்,
ஈந்துகுருகு உருகும் என்றூழ் நீள்இடை,
உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்,
விளிமுறை அறியா வேய்கரி கானம்,
வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள் 5
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம்
ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ - ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் 10
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென,
இன்னா இன்உரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகி யாங்குப், பிரிந்து இவண் 15
காதல் வேண்டி, எற் றுறந்து
போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே! 17

பாடல்: 56 (நகையாகின்றே)[தொகு]

நகை ஆகின்றே - தோழி! - நெருநல்-
மணிகண் டன்ன துணிகயம் துளங்க,
இரும்புஇயன் றன்ன கருங்கோட்டு எருமை,
ஆம்பல் மெல்லடை கிழியக், குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக், கரைய 5
காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்துறை ஊரன் திண்தார் அகலம்
வதுவை நாள்அணிப் புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் 10
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு,
எம்மனைப் புகுதந் தோனே; அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென், எதிர்சென்று,
'இம்மனை அன்று; அஃது உம்மனை' என்ற
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே. 16

பாடல்: 57 (சிறுபைந்)[தொகு]

சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
நெடுநீர் வானத்து, வாவுப்பறை நீந்தி
வெயில்அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
பெறுநாள் யாணர் உள்ளிப், பையாந்து,
புகல்ஏக் கற்ற புல்லென் உலவைக் 5
குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ்
இரும்பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொரப்,
பெருங்கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள்இடை
யாமே எமியம் ஆகத், தாமே 10
பசுநிலா விரிந்த பல்கதிர் மதியிற்
பெருநல் ஆய்கவின் ஒரீஇச், சிறுபீர்
வீஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ-
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக் 15
களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும்புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
பானாட் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் - ஆய்சிறு நுதலே! 19

பாடல்: 58 (இன்னிசை)[தொகு]

இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ,
மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்
காடுதேர் வேட்டத்து விளிவுஇடம் பெறாஅது,
வரிஅதள் படுத்த சேக்கை, தெரிஇழைத்
தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, 5
கூதிர் இல் செறியும் குன்ற நாட!
வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப், பல்ஊழ்
விளங்குதொடி முன்கை வளைந்துபுறம் சுற்ற,
நின்மார்பு அடைதலின் இனிது ஆகின்றே-
நும்இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் 10
தண்வரல் அசைஇய பண்புஇல் வாடை
பதம்பெறு கல்லாது இடம்பார்த்து நீடி-
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர்மடி கங்குல், நெடும்புற நிலையே! 14

பாடல்: 59 (தண்கயத்து)[தொகு]

தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே!- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை,
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் 5
மரம்செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பிடி உணீஇயர், அம்குழை,
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே- தோழி!
சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல், 10
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து,
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை,
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம்பா ராட்டிய காலையும் உள்ளார், 15
வீங்குஇறைப் பணைத்தோள் நெகிழச், சேய்ந்நாட்டு
அருஞ்செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே! 18

பாடல்: 60 (பெருங்கடற்)[தொகு]

பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்
கொடுந்தொழின் முகந்த செங்கோல் அவ்வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து, 5
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்னஎம்
ஒண்தொடி ஞெமுக்கா தீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, 10
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினுஞ் செறிய
அருங்கடிப் படுக்குவள், அறன்இல் யாயே 15
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/51_முதல்_60_முடிய&oldid=480950" இலிருந்து மீள்விக்கப்பட்டது