அகநானூறு/81 முதல் 90 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


1. களிற்றியானை நிரை[தொகு]

பாடல்: 81 (நாளுலா)[தொகு]

நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்,
புல்அளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு
அரும்புஊது குருகின், இடந்து, இரை தேரும் 5
மண்பக வறந்த ஆங்கண் கண்பொரக்
கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
நெறிஅயல் மராஅம் ஏறிப், புலம்புகொள
எறிபருந்து உயவும் என்றூழ் நீள்இடை
வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் - சிறந்த 10
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
மாவண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மைஎழில் உண்கண் கலுழ-
ஐய! சேறிரோ, அகன்றுசெய் பொருட்கே? 13

பாடல்: 82 (ஆடமைக்)[தொகு]

ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக,
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்இசைத்
தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரற் றூம்பொடு 5
மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக
இன்பல் இமிழ்இசை கேட்டுக், கலிசிறந்து,
மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலி ஆடுமயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்! 10
உருவவல் விற்பற்றி, அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி வினாஅய்ப்,
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோ ர்
பலர்தில், வாழி - தோழி - அவருள், 15
ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே? 18

பாடல்: 83 (வலஞ்சுரி)[தொகு]

வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடி,
கறைஅடி மடப்பிடி கானத்து அலறக்,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலிசிறந்து,
கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து, 5
பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவுநொடை நல்இல் பதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும் 10
சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ,
எய்தவந் தனவால் தாமே - நெய்தல்
கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண்எம் காதலி குணனே! 14

பாடல்: 84 (மலைமிசைக்)[தொகு]

மலைமிசைக் குலஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பௌவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர், வலன்ஏர்பு வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இருநிலம் கவினிய ஏமுறு காலை- 5
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய,
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவு அடைந் திருந்த அருமுனை இயவிற்
சீறூ ரோளே, ஒண்ணுதல்! - யாமே, 10
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி,
அரிஞ்ர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங்கு ஆர்எயில்
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து, 15
வினைவயின் பெயர்க்குந் தானைப்,
புனைதார், வேந்தன் பாசறை யேமே! 17

பாடல்: 85 (நன்னுதல்)[தொகு]

நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்
இன்னம் ஆகவும், இங்குநத் துறந்தோர்
அறவர் அல்லர் அவர்' எனப் பலபுலந்து
ஆழல் - வாழி, தோழி!- 'சாரல், 5
ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி,
கன்றுபசி களைஇய, பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை;
நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை 10
நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை
நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து,
துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
பருவம் காண் அது; பாயின்றால் மழையே. 15

பாடல்:86 (உழுந்துதலைப்)[தொகு]

உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்,
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக், 5
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்துகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப், 10
புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக'- என
நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி 15
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
'பேர்இற் கிழத்தி ஆக' எனத் தமர்தர;
ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல், 20
கொடும்புறம் வளைஇக், கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என. 25
இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்-
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சி யோளே - மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்குஈர் ஓதி, மா அ யோளே. 31

பாடல்: 87 (தீந்தயிர்)[தொகு]

தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
கன்றுவாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்,
குடுமி நெற்றி நெடுமரச் சேவல் 5
தலைக்குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல்லெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கட்பாணி,
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்,
குன்றுசேர் கவலை, இசைக்கும் அத்தம், 10
நனிநீடு உழந்தனை மன்னே! அதனால்
உவஇனி - வாழிய, நெஞ்சே - மைஅற
வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச்
சுணங்குஅணி வனமுலை நலம்பா ராட்டித்,
தாழ்இருங் கூந்தல்நம் காதலி
நீள்அமை வனப்பின் தோளுமார் அணைந்தே! 16

பாடல்:88 (முதைச்சுவற்)[தொகு]

முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லி பாடுஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கி,
கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே - குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து,
இருங்கல் விடர்அளை அசுணம் ஓர்க்கும்
காம்புஅமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்,
கொடுவிரல் உளியம் கெண்டும்
வடுஆழ் புற்றின வழக்குஅரு நெறியே? 15

பாடல்:89 (தெறுகதிர்)[தொகு]

தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்,
உறுபெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை,
உருத்துஎழு குரல குடிஞைச் சேவல்,
புல்சாய் விடரகம் புலம்ப, வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண், 5
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிரக், காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்,
களரி பரந்த கல்நெடு மருங்கின்,
விளர்ஊன் தின்ற வீங்குசிலை மறவர் 10
மைபடு திண்தோள் மலிர வாட்டிப்,
பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும் ஞாட்பில், துடிஇகுத்து
அருங்கலம் தெறுத்த பெரும்புகல் வலத்தர், 15
விலங்கெழு குறும்பில் கோள்முறை பகுக்கும்
கொல்லை இரும்புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே - தேம்பெய்து
அளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள், 20
இடுமணற் பந்தருள் இயலும்,
நெடுமென் பணைத்தோள், மாஅ யோளே? 22

பாடல்:90 (மூத்தோர்)[தொகு]

மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளைஅவிழ் தாழைக் கானல்அம் பெருந்துறை
சில்செவித்து ஆகிய புணர்ச்சி அலர்எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பன்னாள் 5
வருமுலை வருத்தா, அம்பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர், 10
இரும்புஇடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
'உறும்' எனக் கொள்குநர் அல்லர்-
நறுநுதல் அரிவை பாசிலை விலையே! 14
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/81_முதல்_90_முடிய&oldid=480953" இலிருந்து மீள்விக்கப்பட்டது