அகநானூறு/351 முதல் 360 முடிய

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
அகநானூறு பக்கங்கள்


அகநானூறு[தொகு]

பாடல் 351 (வேற்றுநாட்டு)[தொகு]

வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணி
பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப
பொருள்அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு
குறைவினை முடித்த நிறைவின் இயக்கம்
அறிவுறூஉம் கொல்லோ தானே- கதிர்தெற 5
கழலிலை உகுத்த கால்பொரு தாழ்சினை
அழல் அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில்
புழல்வீ இருப்பைப் புன்காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
செய்குறி ஆழி வைகல்தோறு எண்ணி 10
எழுதுசுவர் நினைந்த அழுதுவார் மழைக்கண்
விலங்குவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்ப
திருந்திழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்துஅணை மீது பொருந்துவீக் கிடக்கை
வருந்துதோள் பூசல் களையும் மருந்தென 15
உள்ளுதொறு படூஉம் பல்லி
புள்ளுத்தொழுது உறைவி செவிமுத லானே? 17

பாடல் 352 (முடவுமுதிர்)[தொகு]

'முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடுமயில் முன்னது ஆகக் கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை 5
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியலன் அன்பினன்' என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் 10
நல்லை காண் இனிக்- காதல் அம்தோழீஇ!-
கடும்பரி புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல்
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணின் னுள்ளும் 15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே. 17

பாடல் 353 (ஆள்வினைப்)[தொகு]

ஆள்வினைப் பிரிதலும் உண்டோ ? பிரியினும்
கேளினி- வாழிய நெஞ்சே!- நாளும்
கனவுக்கழிந் தனைய வாகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும் 5
இந்நிலை அறியாய் ஆயினும் செந்நிலை
அமைஆடு அங்கழை தீண்டிக் கல்லென
ஞெமைஇலை உதிர்த்த எரிவாய்க் கோடை
நெடுவெண் களரி நீறுமுகந்து சுழலக்
கடுவெயில் திருகிய வேனில்வெங் காட்டு 10
உயங்குநடை மடப்பிணை தழீஇய வயங்குபொறி
அறுகோட்டு எழிற்கலை அறுகயம் நோக்கித்
தெண்நீர் வேட்ட சிறுமையின் தழைமறந்து
உண்நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம்நிழல் அற்ற இயவின் சுரனிறந்து 15
உள்ளுவை அல்லையோ மற்றே- உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
தாதுதுகள் உதிர்த்த தாழைஅம் கூந்தல்
வீழ்இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி 20
மகிழ்அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன்மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே? 23

பாடல் 354 (மதவலியானை)[தொகு]

மதவலி யானை மறலிய பாசறை
இடிஉமிழ் முரசம் பொருகளத்து இயம்ப
வென்றுகொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவைப் பல்லினம் புறவுதொறு உகளக்
குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்து 5
இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
கடுநடைப் புரவி வழிவாய் ஓட
வலவன் வள்புவலி உறுப்பப் புலவர்
புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண்கமழ் சாந்தம் நுண்துகள் அணிய 10
வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டுஉறை வதுகொல் தானே...மாண்ட
போதுஉறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திருநுதற் பசப்பே? 14

பாடல் 355 (மாவும்வண்தளிர்)[தொகு]

மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்
மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை
நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும் 5
துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்
தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்
செழுமனை மறக்கும் செவ்விவேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் 10
புலந்தனம் வருகம் சென்மோ- தோழி!
'யாமே எமியம் ஆக நீயே
பொன்நயந்து அருள்இலை யாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே. 14

பாடல் 356 (மேல்துறைக்)[தொகு]

மேல்துறைக் கொளீஇய கழாலின் கீழ்த்துறை
உகுவார் அருந்தப் பகுவாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசிபிணித்
தெண்கண் கிணையின் பிறழும் ஊரன்
இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென் 5
பொற்றெடி முன்கை பற்றின னாக
'அன்னாய்!' என்றனென் அவன்கைவிட் டனனே
தொன்னசை சாலாமை நன்னன் பறம்பில்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போல் நாவினே னாகி மற்றுது 10
செப்பலென் மன்னால் யாய்க்கே நல்தேர்க்
கடும்பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளா னாகவும் ஒல்லார்
கதவ முயறலும் முயல்ப அதாஅன்று 15
ஒலிபல் கூந்தல் நம்வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலைபழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின்னீர் ஓதி!- என்னைநின் குறிப்பே? 20

பாடல் 357 (கொடுமுள்)[தொகு]

கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
வான்முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
தடமருப்பு யானை வலம்படத் தொலைச்சி
வியலறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து 5
புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுநெறி
பயில்இருங் கானத்து வழங்கல் செல்லாது
பெருங்களிற்று இனநிரை கைதொடூஉப் பெயரும்
தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பற்
பெருங்காடு இறந்தனர் ஆயினும் யாழநின் 10
திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகுபெயல் நிலைஇய தீநீர்ப் பொய்கை
அடைஇறந்து அவிழ்ந்த தண்கமழ் நீலம்
காலொடு துயல்வந் தன்னநின்
ஆய்இதழ் மழைக்கண் அமர்த்த நோக்கே. 16

பாடல் 358 (நீலத்தன்ன)[தொகு]

நீலத்து அன்ன நிறம்கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய்மயில் தோகை
இன்தீம் குரல துவன்றி மென்சீர்
ஆடுதகை எழில்நலம் கடுப்பக் கூடி
கண்ணேர் இதழ தண்நறுங் குவளை . 5
குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை
நீடுநீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை யாகிப் புலம்புகொண்டு
இன்னை ஆகிய நின்நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின், அன்னோ! 10
என்னென உரைக்கோ யானே- துன்னிய
பெருவரை இழிதரும் நெடுவெள் அருவி
ஓடை யானை உயர்மிசை எடுத்த
ஆடுகொடி கடுப்பத் தோன்றும்
கோடுயர் வெற்பன் உறீஇய நோயே? 15

பாடல் 359 (பனிவார்உண்)[தொகு]

'பனிவார் உண்கணும் பசந்த தோளும்
நனிபிறர் அறியச் சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார்
நீடினர் மன்னோ காதலர்' எனநீ
எவன்கை யற்றனை?- இகுளை!- அவரே 5
வான வரம்பன் வெளியத்து அன்னநம்
மாணலம் தம்மொடு கொண்டனர்- முனாஅது
அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயம்எழுந் தாங்கு
வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை 10
சூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும்
பொய்யா நல்லிசை மாவண் புல்லி
கவைக்கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குரூஉப்புகை
அருவித் துவலையொடு மயங்கும்
பெருவரை அத்தம் இயங்கி யோரே! 16

பாடல் 360 (பல்பூந்தண்பொழில்)[தொகு]

பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பி
ஒருகால் ஊர்திப் பருதிஅம் செல்வன்
குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித்
தண்சேற்று அடைஇய கணைக்கால் நெய்தல்
நுண்தாது உண்டு வண்டினம் துறப்ப 5
வெருவரு கடுந்திறல் இருபெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடலணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்
பெரும்புலம் பினளே தெய்ய அதனால் 10
பாணி பிழையா மாண்வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்றுஇழி களிற்றின் குவவுமணல் நந்தி
இரவின் வம்மோ- உரவுநீர்ச் சேர்ப்ப!- 15
இனமீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன்னென
நன்மலர் நறுவீ தாஅம்
புன்னை நறும்பொழில் செய்தநம் குறியே 19
அகநானூறு
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/351_முதல்_360_முடிய&oldid=480944" இலிருந்து மீள்விக்கப்பட்டது