திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/001.திரு அங்கமாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



1. அங்கமாலை[தொகு]

இலக்கணம்:-

திரு அங்கமாலை என்னும் பெயரமைந்த இந்த இலக்கியம் பாட்டுடைத் தலைவரின் உடல் உறுப்புகளை வருணித்துப் பாடுதல் என்னும் பொருளுடையதாம்.

பாதாதி கேசம் கேசாதி பாதம்
எண்ணான் குறுப்பும் ஏற்க வருணித்து
கலிவெண் பாவால் கட்டுரை செய்வது
அவ்வப் பெயரின் அங்க வகையை
விளம்பி யொழுங்கின் வெளிவிருத் தத்தால்
வழுத்துவது அங்க மாலை யாமே
- பிரபந்த மரபியல் 13
ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கும் 
வெண்பா வாயினும் வெளிவிருத் தத்தின்
ஆயினுங் கேசாதி பாதம்
பாதாதி கேசமாகப் பாடுவ
தங்க மாலையா மாயுங் காலே
- முத்து வீரியம் 1046
அங்க மாலையே  ...   ...   ...    ...
... ... ... ... ... ...   ...   ...    
கலிவெண்பா வாதல் வெளிவிருத் தமாதல்
வலிதெனப் புகழ்ந்து வகுத்த செய்யுளே
- தொன்னூல் விளக்கம் 262

அங்கமாலையாவது மாந்தருள் சிறந்த ஆடவன் ஒருவனையோ பெண்ணொருத்தியையோ புகழும் பொருண்மையில் அவர்தம் உடல் உறுப்புகளைப் பாதாதிகேசமாகவோ கேசாதிபாதமாகவோ வருணித்து வெண்பா யாப்பிலோ வெளிவிருத்த யாப்பிலோ பாடப் பெறுவது. இஃது எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. ஒரு நாமம் ஓருருவம் ஒன்று மிலாத தனித்தலைமைப் பெரும்பதி, பெருங்காருண்யத் திருநோக்கால் இவ்வையகம் உய்யும் பொருட்டாய் ஒர் அழகிய அற்புதத் திருமேனி தாங்கி வந்து, ஞான சிங்காதன பீடமேறி, திருவருள் அரசாட்சிச் செங்கோல் ஓச்சிய பொற்காலத்தே அவர்களின் திவ்விய செண்பக மலர்மணம் கமழும் திருமேனியைத் தரிசித்துப் பேரின்ப உணர்வு முகிழ்த்து வருணித்துப் பாடியது இப்பனுவல். இஃது இலக்கண அமைதி குன்றாமல் கலிவெண்பா யாப்பில் பாடப் பெற்றதாமென்க.

திரு அங்கமாலை

காப்பு

கலிவெண்பா


விண்ணுலவும் எங்கோன் வியன்புவியோர் உய்வதற்காய்
மண்ணுலவ ஏற்றாரோர் மெய்ம்மேனி - தண்ணளியால்
கொண்ட திருமேனிக் கோல வடிவழகை
விண்டுரைக்க வல்லாரார் மேதினியில் - எண்டிசையும்
கண்டறியா என்னுயிரின் காதலர்காண் - கண்ணாளர்
அண்டர்கோன் மெய்யர் அருட்ஜோதி - மண்டுபுகழ்
மங்கா மணிவிளக்கு மன்னுயிர்க்கு மெய்விளக்கு
துங்கத் திருமேனிச் சீர்துலங்கும் - எங்கோன்காண்
பார்புகழும் பொன்னரங்கர் பேரெழிலார் அங்கங்கள்
ஆரெழிலைப் போற்றிடவே காப்பருள்க - சீரோங்கும்

நூல்

சிறப்பு

பேராயிரம் உடையார் பெம்மான் பெருந்துறையார்
நேராரும் என்றுமிலார் நித்தியர்தான் - ஓரோர்கால்
வெட்ட வெறுவெளியாய் விண்ணாகி வெப்பமதாய்
உட்கலந்த காற்றாகி நீராகித் - திட்பமாய்
மண்ணாகி நாற்பிறப்பு வாயிலாய் ஏழ்வகையாம் (5)
எண்ணரிய ஜீவர்களை உற்பவித்து - எண்ணமிகு
மானுடத்தைத் தோற்றுவித்துத் தானதனுள் புக்கிருந்து

அவதாரம்

கோனிடத்தில் தாம்விளங்கும் கோவேந்தர் - தான்தனையே
நன்குணரச் செய்து நரர்மனுவாய்த் தேவராய்
இன்குணத்தால் ஏற்றமுறச் செய்குருவாய்ப் - பொன்குணத்தார் (10)
ஆயிரத்தெண் மாற்று அபரஞ்சித் தங்கத்தை

திருமேனி

ஆய்ந்துருக்கி மேனிசெய்த தன்மைபோன்ம் - வாய்ந்தநல்
தந்தத்தால் செப்பமிட்ட சிற்பமதோ செண்பகப்பூ
கந்தம் கமழும் திருவுருவம் - விந்தையார்

திரு சிரம்

பொன்முடியைத் தாங்கழகார் பொற்சிரமேற் றான்வளர்ந்த (15)
நன்முடிதான் கார்முகிலோ நல்லொளியின் - தன்மேல்வை
நள்ளிருளோ! நன்னீர்க் கரையறல்போன்ம் நன்கிலங்கும்
வெள்ளத்தின் சீரலைகள் போல்மிளிரும் - வள்ளல்கோன்
தான்வளர்ந்து மிக்கத் தவம்செய்சீ ரார்காலம்
வான்வளர்ந்த ஆல்விழுது போன்ம்சடைகள் - தான்தூங்கும் (20)
ஞானச்செங் கோலாட்சி கோனடத்தும் நற்காலம்
வானப் பனிப்பாறை மேற்படிந்த - போன்விளங்கும்
வெண்பஞ்சைப் போலும் துலங்கும் திருமுடிகாண்
மண்வந்த விண்விஞ்சை மாதவரின் - ஒண்நுதல்தான்

திரு நுதல் (நெற்றி)

எட்டுணையும் கள்ளமிலார் ஏதமிலார் நெஞ்சம்போல் (25)
பட்டயம்போல் காணும் பரந்தகன்று - திட்டமொளிர்
சிந்தனையார் ரேகை சிறந்திருக்கும் கண்டோர்கள்
வந்தனைசெய் தோற்றம் விளங்குங்காண் - எந்தையெழில்

திருப்புருவம்

நற்புருவம் கூற்றத்தைச் சேதிக்கும் கூர்வாளோ
வெற்பு வினைபிறவி வெல்லவளை - விற்காட்சி (30)
தர்மத் திருச்சாலைத் தனித்த வளைமுகப்போ
கர்மந் தனையறுக்கும் கத்தியிதோ - மர்மமிகும்
ஞான ரகசியங்கள் மாயைத் திரைகிழிக்கும்
வானமிர்த மென்னும்சீர் மந்திரவாள் - தேனார்

திருவிழிகள்

அருளே பெருகும் திருவிழிகள் ஆர்மெய்ப் (35)
பொருளோர் குவளை மலர்போன்ம் - திருவிளங்கும்
செந்தா மரையிதழை ஒக்கும் நயனங்கள்
விந்தை ஒளிக்கதிர்கள் வீசிடவே - எந்தை
ஒருநோக்கால் ஈர்வினையும் மும்மலமும் ஓடும்
திருநோக்கால் ஞானம் தெளியும் - அருளாளர் (40)
ஏறிட்டு நோக்கில் எமனின் அமல்தவிரும்
மாறில் வரம்வழங்கும் மாட்சிமைதான் - கூறரிய
நாட்டம் இமையா நலமுடைத்து முப்புரமும்
வாட்டம்கொண் டேஎரியச் செய்ததிது - ஆட்டுவிக்கும்
காமம் தவிர்த்துவிடும் கண்டற்றே மாணாக்கர் (45)
சேமம் செழிக்கவரும் சீர்துலங்கும் - தீமைகள்
பாபங்கள் சாபங்கள் பார்வையினா லேதகிக்கும்
பூபன் அறவாழி காணில்முத் - தாபங்கள்
தீர்க்கும் திருவோங்கும் தென்னா டுடைசிவனார்
ஆர்க்கும்ஞா னச்செங்கோல் ஆட்சியினால் - பார்க்கும் (50)
இடமெல்லாம் இன்பமலர் பூக்கும்கண் டோர்க்குத்
திடஞானம் சிந்தையினில் தேக்கும் - வடமேரு

திருச் செவிகள்

எங்கள் பணிவார்ந்த விண்ணப்பம் ஏற்றருளும்
பொங்கெழிலார் நற்செவியர் பாண்டியர்தான் - தங்கள்
தனித்தந்தை தந்த திருஞானம் ஏற்று (55)
இனித்துக் கிடக்கும் இதயம் - கனிச்சுவையார்
விஸ்வநா தம்கேட்டு விஸ்வரூ பம்காட்டும்
விஸ்வநா தர்எங்கோன் வான்மடலே - விஸ்வம்
வள்ளைக் கொடிபோல் வளைந்திருக்கும் வேண்டுதல்ஏல்
வெள்ளைத் திருப்புத்தூர் வேந்தரிவர் - கள்ளமிலார் (60)
கேள்விக் குறியாய் விடையாகி மிக்கிலங்கும்
வேள்வித் தலைவர் விமலமொழி - ஆள்கைசெய்
தேவ உணவருந்தும் சீரிடமாய் ஆகுமிது
ஆவா அனாகதம்கேட் டானந்தம் - மேவத்
துணைசெய் திருஅங்கம் தேவருயிர் ஆர்ந்து (65)
அணைசெய் பேரின்பம் ஆக்கும் - இணையில்லார்

திரு நாசி

ஆசி அருள்சாமி ஆண்டவர்கள் ஆரெழில்சேர்
நாசி குமிழ்போலும் நன்கிலங்கும் - தேசிகர்தம்
மூக்குவெளி யேமூச்சு ஒடாத் தவத்தினர்காண்
தேக்கும்எள் ளுப்பூப்போல் சீரிலங்கும் - ஆக்கம் (70)
பெருகத் துணைசெய்யும் பேணும் வினைகள்
அருகவே ஆட்சிசெய் துள்ளம் - உருகிடவே

திருக் கன்னம்

அன்னை பெரியதாய் ஆர்ந்துமுத் தம்பொழிந்த
கன்னம் சுவைமாங் கனிபோல - மன்னும்
இளஞ்சிரிப்புப் பூக்கும் இனியதோர் காலம் (75)
வளம்கொழிக்கும் பள்ளமதும் வாய்க்கும் - உளங்கவரும்

திரு மலர் வாய்

செங்குமுத மோஅழகுச் செம்பவளப் பெட்டகமோ
செங்கமல மெல்லிதழ்கள் செப்பம்செய் - எங்கள்
மதிவதன மேரு மணிவாணி மன்னர்
புதிதுபுதி தாயமுதம் பொங்கும் - கதியோங்கும் (80)
சாவா வரமருளும் தேவேசர் பொன்மலர்வாய்
ஓவா தறமிளிர்சொல் வர்ஷிக்கும் - ஆவாவான்
கற்பூர வாடை கமழும் மணிமொழிவாய்
பொற்பூரும் வான்மறைகள் பொங்கிவரும் - நற்பேறு

திரு மணி நா

ஆணி மொழித்திருநா அற்புதநா ஆன்றகலை (85)
வாணி மறைமொழிநா வேதன்நா - காணரிய
காட்சிகளும் கேள்விகளும் கண்டுகேட் டுண்டுயிர்க்கும்
மாட்சிகளும் கூறும் மறலியினின் மீட்சிதரும்
பூவிதழோ பொன்மணியார் நாவிதழோ எம்முயிரைக்
கூவிதழோ மெய்வழிக்குக் கூவிதழோ - தேவிதழோ (90)
எம்செவியில் பேரின்ப போகம் இனிதியற்றும்
செம்மை குருலிங்கம் சீரங்கம் - தம்மருளால்
வானார் மறைகளெலாம் சீராய்த் தெளியவருள்
தேனார் கனிமொழிநா செப்பரிய - கோனெம்மான்
கூவும் குயிலிசையும் கொஞ்சும் கிளிமொழியும் (95)
மேவும் குழல்யாழின் மெல்லிசையும் - தேவன்
பிறவிப் பிணிதவிர்க்கும் போர்வாள்காண் வஞ்ச
மறலியிடர் சேதிக்கும் கூர்வாள் - அறங்கூறி
தீரா மதப்பிணக்கைத் தீர்க்கும் ஒருங்கிணைக்கும்
சேராச்சா திச்சிக்கல் தீர்மருந்து - ஆராலும் (100)
தீர்க்கவிய லாவழக்கைத் தீர்க்கும் அறமன்றம்
பார்க்குள்ளே வல்லாரை மாட்டாரை - ஆர்க்கின்ற
செல்வர் வறியவரைக் கல்லாரைக் கற்றவரைப்
பல்வகையாய் நின்றாரைப் பேதமற - நல்விதமாய்
ஆர்க்கும் அழகியநா அன்பு - இறைநேசம் (105)
தேக்கும் திருநாஎம் தெய்வநா - காக்கும்

திருப்பற்கள்

புரிசை எனப்பொலியும் பொன்திருவாய்ப் பற்கள்
வரிசைமுத் துச்சரம்போன்ம் தெய்வக் - குரிசிற்கு
தென்னம்பா ளைஅரிசி போல்வதுவும் மாதுளைமுத்
தென்னும் அமைப்பாய் இலங்கும்காண் - மின்னும் (110)
அறப்பல்லென் னும்வெண் ணிறப்பல்காண் மெய்சொல்
திறப்பல் திருவோங் கருட்சொல் - சிறப்போங்கும்
இல்லக நல்விளக்கு ஏற்போர் இருள்கெடுக்கும்
பல்லக மார்விளக்கு பண்பாளர் - நல்லிதயத்(து)
உள்ளருட் ஜோதி ஒளிரக் கருணையெனும் (115)
வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்யும்காண் - வள்ளல்எம்

திருவதனம்

அண்ணல் திருவதனம் அவ்வானில் போலின்றி
மண்ணில் மறுவில் நிறைமதிகாண் - எண்ணில்
தாரகைகள் சூழத் தனிநிலாப் போதரல்போல்
பேரனந்தர் சூழப் பவனிவரும் - பேரரசர் (120)
சீரார் திருமுகத்தைக் கண்டற்றே மண்ணவர்தம்
தீரா வினைதீரும் மெய்சேரும் - பேராத
பாவங்கள் மாயும் பிறவிப் பிணிதீரும்
சாபங்கள் யாவும் தவிர்ந்தேமுத் - தாபங்கள்
வீயும் தணிந்துவிடும் வெஞ்சினமும் மேலோர்கள் (125)
ஆயும் கலைகள் தெளிவார்க்கும் - தாயும்
சேயும் எனும்உறவு தான்முகிழ்க்கில் பேரின்பம்
ஓயாது பொங்கும் உயிர்ப்பயிர்தான் - மாயாத்
தவச்செல்வம் தேங்கும் அவம்அகந்தை நீங்கும்
பவனெங்கோன் மாட்சி விளங்கும் - நவநிதியர்க்கு (130)

திருக்கண்டம்

ஆழி வலம்புரிச்சங் கஃதொக்கும் கண்டம்காண்
பூழியர்கோன் பொன்னரங்கர் பொற்றாளே - வாழிய
பொற்காரை முத்து நவரத்ன மாலையணி
விற்பனர்தம் கண்டம் இளம்கமுகு - சொற்பெருக்கு
பொங்கி வரத்துணையாய்ப் பூரிக்கும் காட்சிதரும் (135)
எங்கள் தவமேரு ஏரார்ந்த - மங்கா
வரதர் மணிமிடறு மிக்கெழிலார் சீர்மெய்
விரதர் மறைமுதல்வர் மார்பம் - பரந்தகன்று

திருமார்பு

வெள்ளானை மத்தகம்போல் மிக்கிலங்கும் நல்லரவம்
பொள்ளெனவே ஏலும் படம்விரிபோன்ம் - தெள்ளிதின் (140)
சீரிடைதான் மிக்கச் சிறுத்துமே லேவிரிந்து
ஆரெழிலாய்க் காட்சிதரும் அம்மவோ - பேரழகர்
பொன்புரிநூல் முத்தாரம் ரத்னாபர் ணங்களெல்லாம்
அன்பர்விழை வேற்று அணிகாட்சி - இன்பருளும்
திண்டோள்கள் மிக்குத் திரண்டு தசையுருண்டு (145)
கண்டோர் வியக்கக் கவர்ந்திடுங்காண் - அண்டர்கோன்
வேளாண்மைச் சீர்பணிகள் மிக்கியற்றி நெல்வணிகத்
தாளாண்மை செய்த தனித்திறமும் - தோளாண்மை
கூட்டும் சிலம்பம் கலைபலவும் சீர்சிறந்த
ஆட்டங்கள் வெற்றிகொண்ட ஆளாண்மை - காட்டும் (150)
முழவனைய தோள்கண்டார் மிக்கன்பு கொண்டு
தழுவச்சிந் தைவிழையும் சீர்மை - எழிலும்

திருத் தோள்கள்

வலிமை சிறந்த புஜபலதாஷ் டீகம்
பொலியும் திருத்தோள்கள் காண்மின் - சலியாது
துன்பங்கள் தாம்சுமந்து தொந்தரவு பல்லேற்று (155)
இன்பம் எமக்கருளும் எம்சாமி - அன்பு
அறந்தாங்கும் தென்பு திடமோங்கும் சர்வம்
துறந்தோங்கும் தேவேசர் மெய்ம்மைத் - திறந்தாங்கும்

திருக்கரங்கள்

வல்லாள கண்டர்காண் வானின் கொடைவிஞ்சும்
எல்லாம்வல் லாரின் இனியகரம் - எல்லவர்க்கும் (160)
இன்னமுதம் ஈயும்கை ஏந்தி இறைஞ்சினர்க்கு
பன்னலங்கள் பாலிக்கும் பொற்கரங்காண் - பொன்னரங்கர்
மேழி பிடித்தகரம் மாண்பார் சுதர்ஸனமாம்
ஆழி தரித்தகரம் அண்டினபேர் - ஊழி
தவிர்த்தகரம் ஆசி அளித்தகரம் எம்மான் (165)
பவித்திரமார் பொற்கரங்கள் பண்பார் - சிவத்திருவே
வந்து வரம்வழங்கும் வன்மை சிறந்திருக்கும்
சிந்தை கவரும் திருக்கரங்கள் - எந்தைபிரான்
சீராரும் சன்னதங்கள் ஈராறு தாங்கினர்காண்
நேராரும் கூறவொண்ணா நித்தியர்காண் - பாரகத்தே (170)

திருவுதரம்

கல்லுக்குள் தேரைக்கும் கர்ப்பைக்குள் நல்லுயிர்க்கும்
நல்லுணவு நல்கும் நாயகர்க்கு - நல்லுதரம்
பொன்வட்டில் போலப் பொலிந்திலங்கும் சிங்கத்தின்
தன்வயிறு போலத் தனித்திலங்கும் நன்மார்பு
மேடிட்ட போலுமது மிக்கிலங்கும் தந்தம்போன்ம் (175)
நாடி இடைசிறுத்தாற் போல்மிளிரும் - நீடுலகில்
ஆறுசுவைக் கோரண்டம் ஆங்கு படைத்தவரே
ஆறு சுவைமறுத்துத் தம்பசியை - நீற
ஊன உணவாசை விட்டேகற் றாழையுண்டார்
வானவர்கோன் உந்தி விளங்குமெழில் - ஞானபதி (180)
உந்திக் கமலஎழில் கண்டற்றே உள்ளுருகும்
வந்திக்கத் தோன்றும் வடிவழகு - நந்தீசர்

திருத் தொடைகள்

என்சாமி தாட்கள் இடையெழில்காண் தென்னாடர்
பொன்னரங்கர் தாமோர்சீர் பொற்பதுமை - தன்மேனி
தாங்கும் திருத்தொடைகள் தக்க வயிரத்தூண் (185)
பாங்காய்த் தவத்திருக்கும் பெற்றியதாம் - ஆங்கினிய
செவ்வாழைச் சீர்மரத்தால் செப்பமிட்ட செங்கம்பம்
அவ்வுமுதல் மந்திரத்தார் ஆர்தொடைகள் - செவ்வையாய்

திருமுழிகள்

பொற்கிண்ணம் தான்கவித்தாற் போன்ற அழகியவாம்
நற்கிண்ணத் தாள்முழிகள் நன்கிலங்கும் - விற்பன்னர் (190)

திரு முழந்தாள்

வெண்கலம் வார்த்து விளக்கிவைத்த போல்அறவோர்
விண்கலம் முன்தாள் விளங்கும் - மண்ணகத்தார்

திருப்பூம்பாதம்

பற்றிப் படிந்தோர்கள் பல்பிணியும் போயொழியும்
கொற்றவரெம் சாலைக் குலதெய்வ - நற்றாள்கள்
பொற்றா மரைஇதழ்போன்ம் பூம்பாதம் - பொற்சிலம்பு (195)
பொற்சதங்கை பொற்காரை பூண்டழகார் - விற்பன்னர்
மண்படியா மென்மலர்த்தாள் மக்களெமக் காயிரங்கி
மண்படியப் போந்து நடம்புரிந்தார் - விண்முடியர்
சீரார் திருத்தாள் சிறப்புரைக்க வல்லேனோ
பேராளர் பாதப் பெருமைசொல - யாராலும் (200)
ஒண்ணாது ஒண்மணித்தாள் பட்டஇடம் தொட்டுவந்து
கண்ணிலொற்றிக் கொண்டால் கதிமோட்சம் - மண்ணவரே

திருத்தாள் விரல்கள்

பொன்மிஞ்சி பூணழகுப் பொன்விரலார் பூம்பாதம்
அன்பொழுகக் கண்டினிது ஆராதித் - தென்பிறவிச்
சோதரரே! சோதரியீர்! சுந்தரர்நம் தெய்வத்தின் (205)

வாழ்த்து

ஆதரவைக் கொண்ட அனந்தாதி - மூதுரையீர்!
நங்கள் குலதெய்வ நல்லங்கம் கண்டுவந்து
பொங்கும் பயபக்தி பூரிப்பால் - மங்களங்கள்
தங்கும் இருவினையும் தீரும் எமபடர்தான்
மங்கும் மணிவாணி மாதவரை - அங்கம் (210)
குளிர்ந்து களித்தாடி ஆண்டவரைப் போற்றி
தளிர்ந்து மகிழ்ந்திருங்கள் ஜீவன் - ஒளிர்ந்து
சாவா வரம்பெறுங்கள் சாயுச்யம் ஏறிடுங்கள்
தேவாதி தேவன் திருத்தாளே - ஓவாது
போற்றிப் பணிந்திருங்கள் ஏற்றி இறைஞ்சிடுங்கள் (215)
ஆற்றின் துறையறிந்தீர் வாழி!

திருஅங்கமாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!