திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/076.சாலையூர்ப் பள்ளு

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



76.பள்ளு [தொகு]

இலக்கணம்:-

தென்னாடுடைய சிவனே போற்றி எனப் புகழப்பெறும் தெய்வத் திருவிளங்கும் தமிழகத்தில் தெய்வச்சீர் பொங்கும் உயர்தனிச் செம்மொழியாகிய இன்பச் செந்தமிழில் விளங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றான உழத்திப் பாட்டு போன்றது பள்ளு நாடகம்

சேரிமொழியாற் செவ்விதின் கிளந்து
ஓதல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப பொருளுணர்ந்தோரே
- தொல்காப்பியம்  - செய்யுளியல்  - 241

பள்ளு நாடகம் சிந்தும், கலிப்பாவும் விரவச் சேரி மொழிகளால் குறித்த பொருள் விளங்குமாறு பாடப் பெறும் நூல். நூலுக்குரிய எண்வகை உறுப்புகளில் ஒன்றாம் அதனைப் புலன் என்பர் தொல்காப்பியர். இந்நூலின் பாட்டுடைத் தலைவர் தெய்வீக மெய்வழிச் சாலையம்பதியில் எழுந்தருளி அருளரசாட்சி புரிந்திலங்கும் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் 
- திருக்குறள்

என்னும் முதுமொழிக்கிணங்க உயிர்களை ஊட்டி வளர்க்கும் உழவுத் தொழில் புரிந்த உத்தமப் பெருமரபாகிய வேளாண் மரபில் அவதாரம் செய்தருளியவர்கள் எங்கள் குருகொண்டல். விரியும் பண்ணைத் தொழில் சமுசாரியர்

நெறியிலங்கு ஜமால்குல நீதரே
- ஆண்டவர்கள் மான்மியம்

இன்னன காலம் ஏற்றும் வேளாண்மை நாள்
தன்னர் தந்தைய ரோடு உழவுசெய்
பன்னகம் பூமி யிற்பயி ரேற்றியே
வின்ன மில்லா விளைமலி காலத்தே
- ஆண்டவர்கள் மான்மியம்

ஏருகோல் சமு சாரியரென்று எல்
லோரும் கூற இயற்றும் தொழில்நலக்
காரியப் பணி எவ்வண மாயினும்
மீறி நின்று முடிப்ப பேராண்மையே
- - ஆண்டவர்கள் மான்மியம்

என்று எங்கள் ஆண்டவர்களின் மான்மியத்தில் குறிப்பிட்டவாறு உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு இயற்றப் பெற்றது சாலையூர்ப் பள்ளு.

சாலையூர்ப் பள்ளு

காப்பு

எண் சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

அருள்பெருகு வாரிதியென் ஐயர் பாதம்
அனைத்துலகும் படைத்தருளிக் காக்கும் பாதம்
திருவுயரும் மெய்ப்பொருள்தந் தாளும் பாதம்
செழுமறைகள் தெளியஒளி துலங்கும் பாதம்
கருமுதலாய்க் காத்தினிது வளர்த்த பாதம்
கனிஞானம் தெளியத்தேன் பொழியும் பாதம்
குருபெருமான் மெய்வழிஆண் டவர்கள் பாதம்
குவலயத்தே வானமுதப் பாதம் காப்பே

உயிர்ப்பயிர்செய் விண்ணுழவர் சாலை தெய்வ
ஓங்குபுகழ் போற்றிடவே விழைந்த பிள்ளை
மயக்கறவே எழுத்தாணி ஏடுதன்னில்
வரைநுனியில் நின்றருளிச் சாலைப் பள்ளு
நயம்கனிய இயற்றஅருள் வரங்கள் நல்கும்
நற்றாள்கள் சிரஞ்சூடிப் பணியும் ஏழை
இயலும்மெய் குண்டம்வான் பொன்னரங்கர்
இணைபதங்கள் என்றென்றும் காப்பதாமே.

அவையடக்கம்

நாற்கவியும் பொழியும்கவி வாணர் முன்னே
நானுமொரு புலவனென முனைந்த தெண்ணில்
பாற்குடியை மறந்தபிள்ளை அறிஞர்முன்னே
பகருமொழிப் பொழிவதனின் பான்மை போலும்
வேற்கரத்தார் மெய்வழிதெய் வத்தைப் போற்ற
விழைந்ததனால் மேருவைச்சார் காகம் பொன்மை
ஏற்குமொரு நிறம்போலும் அனந்த ராதி
இனியதனிச் சான்றோர்கள் ஏற்பர்காணே.

சாலைவளர் நன்னயப்பண் ணையத்தின் மாட்சி
சற்சனர்மெய்ச் சமூகமுனர் பள்ளுப் பாடல்
கோலமிகு கர்த்தாதி கர்த்தர் வானார்
கருணையர்தான் உயிர்களிக்கும் பெற்றி கூறல்
வாலகுரு மெய்வழிஆண் டவர்கள் சீர்மை
விதந்துரைசெய் கடைப்பிள்ளை மழலை இத்தைச்
சீலர்அனந் தாதியரும் தமிழ்ச்சான் றோரும்
சிந்தைகனிந் தினிதேற்கும் விந்தை தானே.

நூல்

கண்ணிகள்

அருள்பெரு குற்ற பெருஞ்சோதி - அக
இருளற வெற்றி தருஞ்சோதி - ஒரு
குருவடி வுற்று வருஞ்சோதி திருவடி போற்றி

கருமுதல் பற்றி புரந்தாதி எனை
அருகுற வைத்து விதந்தோதி - மதி
பெருகுற மெய்ம்மை வளர் நீதி முழுமுதலானார்

ஒரு தனிமெய்யர் திருக்கோலம் - எம
துயிர்கள் செழிக்க அருள்சீலம் - பெரும்
உலகு புரக்க எழுங்காலம் திரு அவதாரம்

திருவுயர் மெய்வழி தந்தாண்டு - மறை
தெளிவுற மெய்ம்மொழி தந்தீண்டு - நமன்
துயர்கெட நல்வரமே கொண்டு வரு இறை சூலே

வேறு

பெருசீர்தனி கைதரு செல்வம்
வருசாவறு ஔஷத கல்வம்
குரு மாமணி யால்வினை வெல்வம் துணை தயவாமே!

வரும் ஜீவர்கள் உய்தி நினைந்து
அருமாமறை யாவு மிணைந்து
திருவாரெழில் மேனி புனைந்து கருணையின் நீர்மை!

திருவோங்கிடு மெய்ந்நிலைப் போதம்
தரும் வானவர் மாதவர் நாதம்
பெருகும்அனந் தாதியர் நீதம் குருதவமாட்சி

பெருமானருட் தாள்சிர மேற்றி
திருநாம மோவாது வாய் சாற்றி
குருவேபரன் என்றினி போற்றி அடைக்கலமானோம்!

கோல்காரன் வரவு

கொச்சகக் கலிப்பா

ஆதிசைவச் சீர்துலங்கு ஐந்தெழுத்து மந்திரத்தை
நீதியுட னோதிதிரு நீறணிந்து நெற்றியிலே
மேதினிக்குண் பானளிக்கும் வேளாண்மைச் சீர்விரிக்கும்
மூதுரைசொல் கோல்க்காரன் மேன்மையொடு வந்தனனே.

சிந்து

வெள்ளையுரு மால்சிரசில் மிக்ககிலங்க - நெற்றி
மேனியில் விபூதிசந்த னங்கள் துலங்க
தெள்ளியதோர் சவ்வாதுப் பொட்டதுமிட்டு - காதில்
செம்பொன்கடுக் கண்அணிந்து கோல்கையில் தொட்டு
பள்ளருக்குப் பண்ணையார் வரவையுரைத்து - தொழில்
பாங்குடன் ஒழுங்குமுறைப் பண்பையுரைத்து
கள்ளமிலா தேயுழைத்துப் பண்ணைசெழிக்கச் - செய்யும்
காரியங்கள் அத்தனையும் நன்கு மொழியும்

ஆழிஎழில் சூழ்உலகில் ஓங்கு தொழிலாம் - உயிர்க்(கு)|r}}
ஆகுணவு தந்திடுதல் அஃதின் எழிலாம்
வாழுமுயிர் அத்தனைக்கும் வேண்டும் அணியாம் - இந்த
வையகத்தில் ஈடிணையில் நல்ல பணியாம்
மேழியதன் செல்வமென்றும் கோழைபடாது - தன்னை
மிக்கநம்பி வாழ்பவரைக் கீழே விடாது
வாழியநற் சீருழவர் வையகமெங்கும் - அவர்
வாழ்வினிலே எப்பொழுதும் நல்வளம் தங்கும்

ஏருழுது மண்ணுணக்கிச் சீர்படுத்துங்கள் - உங்கள்
இனிய மனம் கள்ளமின்றிப் பண்படுத்துங்கள்
சீருடனே நல்ல உரமிட்டு வையுங்கள் - நல்ல
சிந்தையினில் தூய்மை தரம் நட்டுவையுங்கள்
வேருடன் களைகளைக் களைந்தெறியுங்கள் - இனிய
மென்மனத்தில் ஆற்றலின் திறம்விரியுங்கள்
பாருலகில் வேளாண்மை ஓங்கிடச் செய்வோம் - தெய்வ
பாதமதைப் போற்றி எந்தப் பணியும் செய்வோம்.

வேந்தர்முதல் ஏந்திகை இரப்பவர்வரை - வாழ
வேண்டுணவு தந்திடுவோர் ஈண்டுழவர்காண்
சாந்துணையும் எவ்வுயிர்க்கும் ஆந்துணைவர்தான் - ஞானச்
சற்சனர்க்கும் சகலருக்கும் நற்றுணைவர்தான்
காந்துமொரு வெம்பசிக்கு ஈந்த மருந்து - மிக்க
கற்ற வர்க்கும் மற்றவர்க்கும் வாய்த்த விருந்து
ஆர்ந்துழைக்கும் ஏருழவர் பூமிபுரப்பார் - அவர்க்(கு)|r}}
அன்புத்துணை யாற்றிடுவோர் வாழ்வில் சிறப்பார்

ஒருநெல்லை ஆயிரம் நெல் ஆக்கும் சித்துகாண் - இது
உண்மையாகவே உலகைக் காக்கும் வித்தைகாண்
பெரும்பூமி தன்னில்விவ சாயம் சிறக்கும் - இதைப்
பேண வில்லையானால் எல்லாச் சாயம் வெளுக்கும்
அருமை உழவுத் தொழில் ஆற்றும் நல்லிரே - நாட்டில்
அனைவருக்கும் உணவுதந்து போற்ற வல்லிரே
வருகின்றார் பண்ணைக் காரர் வந்து கூடுங்கள் - அவர்
வழங்கும் கூலியைப் பெற்று மகிழ்ந்தாடுங்கள்

குடும்பன் தோன்றுதல்

கொச்சகக் கலிப்பா

செவ்வியநல் ரட்சிப்புச் சீராஅ ணிந்துஇடை
கவ்வியகா விக்கச்சம் குறுவாள்கைக் கோலுடனே
திவ்வியபா சுரமிசைக்கும் செவ்வாயன் அன்புகனி
பவ்விய நடைக்குடும்பன் பண்ணை வந்து தோன்றினனே

அறுசீர் விருத்தம்

தெய்வீக மெய்வழியின் சீர்திறமும் பேர்புகழும் கேட்ட பள்ளன்
உய்வாகும் ஜீவனொடு உறுதேக முத்தியுண்டு என்ற றிந்து
மெய்வழிதெய் வத்திற்கு மிக்கடிமை ஆயினன்காண் அருளால் பெற்ற
எய்தரிய ரட்சிப்புச் சீராவும் இடைக்கச்சும் அணிய லானான்

ஆர்க்கும் ஆழிசூழ் ஞாலத்
தீர்க்க தரிசியர்கள்
ஆர்ந்துரை செய்த வண்ணம்

அவதரித்து

பார்க்குள் உயிர்ப் பயிர்செய்
சீர்க்கொள் மெய்வழி தெய்வப்
பாதம் பணிந்து செல்லப்
பிள்ளையானேன்

ஏர்க்கொழு வின்பின் பூமி
தார்க்கோல் செங்கோல் கொண்டாளும்
ஈடில்வே ளாண்மை செய்யும்
பள்ளன் நானே.

ஊர்க்குள் மெய்த் தெய்வத்திரு
பேர்ச்சீர் புகழ் பராவும்
பேர்சண் முகக் குடும்பன்
நானே ஆண்டே

சிந்து

சிந்தையைநா வேருழுது சீர்மைப் படுத்தி - நல்ல
செவியில் அமுதமடை நீர்மை விடுத்து
எந்தைமெய் வழிதெய்வம் உயிர் வளர்ப்பார் - இங்கு
ஈடிணையில் ஞானமெனும் பயிர்வளர்ப்பார்
விந்தை விரியமறை மெய்ம்மை துலங்கும் - பல
வேதாந்தம் சித்தாந்தம் கனியுகுக்கும்
தந்தை தனிகைசுதர் தவவிளைவே - இங்கு
சர்வ மதங்களுக்கும் உண்மை தெளிவே.

எந்தனுடற் சோதரரே பள்ளர் பள்ளீரே - உழைப்பு
இன்பமெனத் தாம்கருது கின்ற தெள்ளீரே
சிந்தையினிற் கள்ளங்கப டின்றி வாழ்வீரே - அன்பு
செய்பவர்க் குயிர்கொடுக்கும் பாசத் தாழ்வீரே
சந்ததம் உலகம்வாழத் தானுழைப்பீரே - நீங்கள்
தாமும் உண்டு பிறர்க்களித் தேபிழைப்பீரே
விந்தைநெறி மெய்வழியொன் றேஅதன் பேராம் - அதில்
மெய்யன்புடை யோர்சாவாத வாழ்வடைவாராம்

ஆதிமுழு முதல்ஒரு சீருருவானார் - எம்மை
அங்கமதில் ஏற்றுளத்தில் பேருருவானார்
நீதிநட வுசெய்யவே நீணிலம் வந்தார் - மெய்யாம்
நித்திய வித்தாக்கிடவே ஞானமும் தந்தார்
மேதினியில் வந்தஅயன் மால்சிவனொன்றாய் - உயர்
மெய்வழி ஆண்டவரென வந்தனர் நன்றாய்
சீதனம் கொடுக்க வந்த வான்கொடை வள்ளல் - எங்கள்
சிந்தை அதைப் பெற்றவுடன் பேரின்பத்துள்ளல்

ஒன்றுகுலம் ஒன்றிறைவர் என்று நாட்டுவார் - இந்த
உண்மையறி யாதவரைச் சொல்லில் வாட்டுவார்
வென்றுமத சாதிபேதம் வீய ஓட்டுவார் - அந்த
மெய்ம்மை தனைப் பேதமற நன்கு கூட்டுவார்
பொன்றியே சாவாதிருக்கும் பேர்வரம் தந்தார் - ஞான
போதகத்தால் ஜீவனுய்யும் சீர்தரம் தந்தார்
குன்றுடையார் எம்பெருமான் கோலத்தைப் பாரீர் - உங்கள்
கோதகன்று நித்தியம் கொண்டோங்கிட வாரீர்

விண்ணுழவர் ஏன்றகடைப் பிள்ளையும் நானே - தெய்வ
மெய்யருளைத் தேக்கிக் கொண்ட பள்ளனும் நானே
பண்ணைத் தொழில் பாங்குறவே செய்திடுவேனே - நன்கு
பாடுபட்டு நல்ல விளைவெய்திடு வேனே
மண்ணெனும் தாய் நம்பினர்க்கு வாழ்வு கொடுப்பாள் - கொடும்
வஞ்சகரைத் தான் விழுங்கித் தாழ்வு கொடுப்பாள்
பண்ணழகர் ஆண்டவரின் பாதம் பணிவோம் - பெரும்
பாக்கியமென் றதைச்சிர மீது அணிவோம்.

நல்முத்து ஆழ்கடலில் மூழ்கி யெடுப்பார் அதனை
நல்லணிபொன் னாரிழையில் மாலை தொடுப்பார்
நல்லுடலம் தான் வளர்க்கும் தானிய முத்தே - அது
நானில வேளாண்மை தரும் வாணிப முத்தே
சொல்முத்த ழகர்மொழி ஞான முத்துக்கள் - அருட்
ஜோதி உயிர் உய்விக்கும் வானமுத்துக்கள்
பல்முத்தர் சித்தர்களை ஈன்ற அருள்மான் - இந்தப்
பாலருகில் மெய்வழியைத் தந்த பெருமான்

மூத்தபள்ளி லோகசௌந்தரி தோன்றுதல்

கலிப்பா

கட்டுடலாள் யாவருமே கண்டவுடன் தாமயங்கும்
மட்டில்லாப் பேரழகி வஞ்சகமாய் நோக்குவரை
வெட்டிவிடும் கூர்நோக்காள் வீணரைத்தாட் சண்யமின்றி
பட்டெனப்பே சிச்சினக்கும் மூத்தபள்ளி வந்தனளே

அறுசீர் விருத்தம்

மின்னலால் மேனி செய்து
மேகத்தைக் கூந்தலாக்கி
பொன்மதி வதனம் கூர்வேல்
போல் நயனத்தாள் அல்லி
தன்னை நேரிதழாள் முத்துச்
சரமென அழகுப் பல்லாள்
கன்னல் நேர் மொழியாள் லோக
சௌந்தரி வந்தாளன்றே.

சிந்து

காரார் கூந்தலினை நேராய் வகிடெடுத்துச்
சீவியே - அதை
ஓரக் கொண்டையிட்டு ஒய்யாரமாயதை

நீவியே

சீராய்த் தாம்பூலம் வாயில் சிவக்கச் சிவக்க அவள்
மெல்லுவாள் - தொழில்
செய்யாத பெண்டுகளை சீறிப் பேச்சினாலே

வெல்லுவாள்

யாரென்றாலும் முறை தவறிப் பேசில்மிகக்
கண்டிப்பாள் - உயிர்க்
கினிய கணவனேனும் சொல்இடறினால் உடனே
துண்டிப்பாள்

தேரும் பண்ணைத் தொழில் சிறக்க யோசனைகள்
செப்புவாள் - ஏது
செய்தாலும் லாபமே சேர வந்தால் மட்டும்

ஒப்புவாள்

நெற்றியில் கீற்றாக நீறிட்டுப் பொட்டிட்டு
நின்றனள் - பள்ளன்
நெஞ்சினில் இன்பக் களிபொங்க அவன் மனதை

வென்றனள்

முற்றும் சரிகையிழை மேகவர்ணப் பட்டுச்
சேலையே - கட்டி
மெல்லியள் வந்தனள் அன்னவள் பூமலி

சோலையே

வெற்றிபெ றும்பள்ளன் வேளாண்மைக்கே அவள்
மந்திரி - இவள்
விளைவில் நிறைவும் அவை விற்பில் திறமும் மிக்க

தந்திரி

குற்றம் குறைகள் சற்றுக் கண்டாலும் கணவனைக்
கோபிப்பாள் - அந்தக்
கோபத்தால் தான்கொண்ட கொள்கை சரியெனவே
ஸ்தாபிப்பாள்

செல்வம் நகைகள் வேண்டும் என்றவள் அடிக்கடி
வாதிப்பாள் - இன்றேல்
செல்லாத காசுநீ எனப்பேசி வாங்கியே

சாதிப்பாள்


பல்வித மாயின பாத்ரம் பண்டம் சேலை
வாங்குவாள் - குடும்பப்
பாங்கிது தானென்று புருஷனைச் சொல்மிஞ்சி

ஓங்குவாள்


எல்லாச் சம்பாதனையும் என்னிடம் தாவென
வேண்டுவாள் - எனக்
கேதும் தெரியாமல் செய்யக் கூடாதென்று

தாண்டுவாள்


செல்லும் திசை பணிகள் செலவு வரவனைத்தும்
சொல்லென்பாள் - தனக்குத்
தெரியாமல் செய்திட்டால் வீட்டுக்குள் வாராதே
நில்லென்பாள்

பின்னால் தனக்கு வேணும் என்று சிறுவாடு
தேடுவாள் - அதைப்
பிறர்பால் வட்டிக்கு விட்டு மீட்பறியாமல் திண் -
- டாடுவாள்

பன்னாள் பாடுபட்டும் பயனில்இச் செய்கையைப்
பார்த்தனன் - பள்ளன்
படிப்படி யாய்ப்புத்தி சொல்லியும் கேட்டிலள்

வேர்த்தனன்


என்பாட்டில் சேர்த்தனன் ஏதும் செய் வேனென்று
ஓதுவாள் - முறையை
இனிமையாகச் சொன்ன போதும் கடுஞ்சொல்லால்

மோதுவாள்


தன்பாட்டில் செல்லுமிப் பண்பாட்டைப் பார்த்து
வருந்தியே - அவள்
தானே உணர்ந்து வரவிட்டான் நன்கு

திருந்தியே


தன்னாலேதான் எல்லாம் நடக்கிற தென்றவள்
எண்ணுவாள் - மேலும்
தன்புருஷன் தனது கைக்குள் எனக்கணக்குப்

பண்ணு வாள்


தன்னாலியன்ற மட்டும் தானே அனுசரித்துப்
போயினன் - அன்புத்
தாரத்தின் குணவேறு பாட்டினைக் கண்டுளம்

மேயினன்


பன்னாளும் பாரியாள் பண்பைத் திருத்தியிடப்
பார்த்தனன் - சற்றும்
பணியாத பண்புகண் டேயுள்ள மேமிக

வேர்த்தனன்


மின்னாளி வளடக்கு ஒடுக்கில் குடும்பன் மனம்
நொந்தனன் - சற்று
வேறுபட்டுப் புதிதாயோர் மணம் கொண்டு

வந்தனன்

குடும்பன் மூத்தபள்ளி சம்வாதம்

அறுசீர் விருத்தம்

திருமணம் கொண்டான் சாலைத்
தெய்வத்தின் அடிமை யாகி
அருள்மணம் கொண்டான் என்று
ஆங்குரை கேட்டாள் பள்ளி
பெருஞ்சினம் கொண்டு அங்ஙண்
பேச்சு மூச்சிரைக்கப் போந்து
புருடனை வைது வாது
புரியவும் தொடங்கினாளே

மூத்தபள்ளி:
இப்படி செய்திட எத்தனை நாள்தவம்
கொண்டீர் நாதா கொண்டீர்
ஒப்பியதோ மற்றோர் பள்ளியையும் மணம்
செய்தீர் உயிர் கொய்தீர்
குடும்பன்:
ஆமாம் மணம் கொண்ட துண்மையடி பேதை
மாதே கோபிக்காதே
நீமாது கோபித்தல் வேண்டாமடி அது
தீதே பெரும் வாதே
மூத்தபள்ளி:
ஓர்மரத்தில் இரண் டானையைக் கட்டுதல்
நன்றோ இது நன்றோ
சீரழிந்து போகவோ இன்னோர் பெண்கொண்டீர்
இன்றே இது நன்றோ
குடும்பன்:
ஒருவண்டி தன்னில் இருமாடு கட்டுதல்
போலே இனிமேலே
மருவியே மூவரும் வாழ்ந்திட லாமடி
தேனே இள மானே
மூத்தபள்ளி:
சாமர்த்தி யப்பேச்சுபேசி எனைஏய்க்க
வேண்டாம் நாதா வேண்டாம்
ஏமாற்றி என்வாழ்வை இப்படியும் கெடுத்
தீரே வஞ்சித் தீரே
குடும்பன்:
ஏமாற்ற அல்ல இதைமுறையாகவே
செய்தேன் அன்பே செய்தேன்
நீமாது சற்று நிதானித்து யோசித்துப்
பேசு அன்பாய்ப் பேசு
மூத்தபள்ளி:
என்னகுறை வைத்தேன் என்றுரை சொல்லுவீர்
நாதா எந்தன் நாதா - நீங்கள்
என்னவர் மட்டுமே என்றிருந் தேமாந்து
போனேன் அபலை ஆனேன்
குடும்பன்:
உன்னவன் தானடி உத்தமியே சற்று
பொறுப்பாய் பேசேல் வெறுப்பாய்
சின்னவள் தன்னையும் சேர்த்துக்கொண்டே அன்பாய்
இருப்பாய் பெரும் பொறுப்பாய்
மூத்தபள்ளி:
புருஷனைப் பங்குதந்ததார் பெண்ணாள் பூமியினி
லுண்டோ கண்ட துண்டோ
வரிசைதப்பி விட்டீர் வாய்ச்சாலம் பேசுவ
தேனோ முறை தானோ
குடும்பன்:
அன்று சிவனார் கிருஷ்ணர் முருகரும்
ரெண்டு பெண்டு கொண்டார்
இன்றது போல் நானும் இரண்டு மணம் கொண்டேன்
மாதே கோபிக் காதே
மூத்தபள்ளி:
என்ன உதாரணம் ஏது சொன்னாலும் நான்
ஒப்பேன் நாதா ஒப்பேன்
வின்னப்படுத்திஎன் வாழ்வைக் குலைத்திட்டீர்
நாதா இது தீதே
குடும்பன்:
தீதெது நன்றெது தேர்ந்தறிந்துள்ளாயோ
பெண்ணே எழில் மின்னே
வேதனை செய்த விபரம் நினைந்திலை
மானே அடி தேனே
மூத்தபள்ளி:
அக்கினி சாட்சியாய் அனைவர்முன் கைவிரல்
தந்தேன் இன்று நொந்தேன்
சொக்கிநீர் மற்றொரு தோகையைக் கைக்கொள்ள
லாமோ நல மாமோ
குடும்பன்:
வீட்டுக்கு வந்தபோ தெல்லாம் வெறுப்புடன்
பேசி எனை ஏசி
தோட்டத்திற் கேகெனத் துரத்தினை அன்பினைக்
காணேன் வெறுப் பானேன்
மூத்தபள்ளி:
பண்ணைத் தொழில்பக்கு வம்மாகச் செய்யாமல்
போனால் நட்டம் ஆனால்
பண்ணையாரின் கோபம் பாய்ந்திடும் என்றல்லோ
சொன்னேன் பிறிதெண்ணேன்
குடும்பன்:
வேளாண்மை செய்ததில் என்றும் குறைவைத்த
தில்லை உழைப்பெல்லை
ஆளாண்மை கொள்ளவே ஆணவத்தால் செய்தாய்
தொல்லை அளவில்லை
மூத்தபள்ளி:
பண்ணும் உணவினில் பக்குவம் இல்லையோ
நாதா பிராண நாதா
எண்ணம் வெறுத்து வேறோர் பெண்ணை ஏற்றது
ஏனோ முறை தானோ
குடும்பன்:
உண்ணல் உறங்கலில் ஒன்றும் குறைவில்லை
பெண்ணே எழில்மின்னே
பண்ணும் செயல் கொடும் சொல்லை வெறுத்தனன்
மானே அடி தேனே
மூத்தபள்ளி:
கனவிலும் பிறரை நான் கருதியதேயில்லை
என்றும் கற்பு குன்றும்
நனவினில் வேறே ஒருத்தியைக் கைபிடித்
தீரே இது நேரோ
குடும்பன்:
காம நயப்பும் வியப்புமிலை - இங்ஙன்
மாதே அன்பு மாதே - உயிர்ச்
சேம விருப்பினில் தேர்ந்த உறவடி
தேனே அன்பு மானே
மூத்தபள்ளி:
மலைபோ லுமைநம்பி வாழ்வில் மகிழ்ந்திருந்
தேனே பேதை நானே
குலைவுறச் செய்தெந்தன் குடியில் பழிசெய்தீர்
பாவம் கொடும் பாவம்
குடும்பன்:
நம்பிக்கை தந்தாயதில் குறை வாராது
பெண்ணே நன்று எண்ணே
வெம்பிட வேண்டாம் நீ என்றும்போல் நாமினி
வாழ்வோம் இன்பத் தாழ்வோம்
மூத்தபள்ளி:
இந்த வித்தாரத்திற் கேதும் குறைவில்லை
நாதா எந்தன் நாதா
எந்த விதத்தாலும் மாறா இடர் செய்தீர்
தோதா பெருஞ் சூதா
குடும்பன்:
வீட்டுக்கு வந்ததும் வெடுக் கெனச் சீறுவாய்
மனையே செய்தீ வினையே
காட்டுப்புலி யெனக் காய்ந்து பாய்ந்து இடர்
செய்யும் மனம் நையும்
வெட்டு வெடுக்கெனப் பேசி வெறுப்பினை
ஏற்றி எனைத் தூற்றி - மனை
விட்டு அப்பன் வீட்டுக் கேகினை பன்முறை
மீறி குணம் மாறி
சின்னச் சமாச்சாரத் திற்கெல்லாம் சிணுங்கிநீ
கொள்வாய் வார்த்தை விள்வாய்
சொன்னபடி கேட்டால் திரும்பி வருவதாய்ச்
சொல்வாய் சொல்லால் வெல்வாய்
பண்ணைவேலை நிறை யாயிருக்கும் போது
போவாய் கோப மாவாய்
வெண்ணை திரள்கையில் தாழி உடைத்தாற்போல்
செய்வாய் மிக வைவாய்
மட்டு மரியாதை விட்டுவிட்டு மிகப்
பேசி என்னை ஏசி - மானம்
கெட்டிட ஊரார் சிரிக்கச் செய்தாயடி
யோசி மனம் யோசி
போராடிச் செல்வதும் சீராடிச் செல்வது
மாக வழக்கமாக - நெஞ்சை
வேரோடு கல்லிய போலிடர் செய்தனை
பெண்ணே அடி பெண்ணே
பண்டை வினையுன்னைப் பாரியெனக் கொண்டேன்
மாதே அடி மாதே - நீயும்
கொண்ட கருத்தினால் கொஞ்சமும் மாறிலை
தீதே பெருந் தீதே
ஓயாது காசே குறியென வாழ்ந்தனை
பெண்ணே அடி பெண்ணே - என்றும்
மாயாத வாழ்வின் வழிசொன்னேன் - ஏற்றிலை
முன்னே எழில் மின்னே
தெய்வீக மெய்வழி தன்னைப் பன்னாளுன்பால்
சொன்னேன் பண்பாய் சொன்னேன் - அதில்
ஐயம் கொண்டாயன்றி ஆர்ந்து தொடர்ந்திலை
நீனே வெறுத் தேனே
சொன்னாலும் கேட்டிலை தன்னாலும் மாறிலை
மங்கை அன்பில் நங்கை
பன்னாளும் பார்த்துப்பின் பெண்ணாளி வள்தனைக்
கொண்டேன் துணை கொண்டேன்
ஆம்பிள்ளை போல் பெண்கள் செய்திடில் ஊரொப்பு
வாரோ இது நேரோ
தீம்பலவோ என்னைத் தேற்றிக் காப்பாற்றுவ
தாரோ இனி யாரோ
எத்தனை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளேனினி
கணவா கொடும் குணவா - அந்த
வித்தாரக் கள்ளியை என்ன சேதியென்று
கேட்பேன் சென்று கேட்பேன்
ஏற்கனவே நான் இருப்பதைத் தானறி
யாளோ கொட்டும் தேளோ
பாற்குடி யேனெனும் பூனைபோல் வாளந்தத்
தருக்கி பேதைச் சிறுக்கி
தலைக்கு மேல்போயிற்று சாணென்ன முழமென்ன
போகட்டும் ஆன தாகட்டும்
குலையில் நெருப்பள்ளிக் கொட்டியது போலே
ஆச்சே மானம் போச்சே
பண்ணையார் தன்னிடம் இத்தை முறையிடப்
போறேன் அங்கே போறேன் - உம்மைத்
திண்ணமாய்க் குட்டை மரத்தினில் மாட்டிடச்
செய்வேன் இனிச் செய்வேன்

அறுசீர் விருத்தம்

இங்ஙனம் சினந்த லோக
சௌந்தரி என்னும் மூத்தாள்
செங்கனல் போலே சீறிச்
சென்றனள் பண்ணை யார்சீர்
தங்கிடும் மனைக்குத் தன்னந்
தனியளாய்க் குமுறலோடு
பொங்கும் காட்டாறு மற்றும்
புயலினை ஒத்தாள் மாதோ

பண்ணையார் வருகை

கொச்சகக் கலிப்பா

முசுமுசுவென் றேமுக்கால் முகத்தினையே மூடிவளர்
கசமுச மீசைக்காரர் காரார்ந்த மேனியினார்
தசைத்தூண்போல் தான் வளர்ந்து சரிந்தவயிறும் துருத்தி
அசைந்துகுட்டி யானையென அழகுபண்ணைக் காரர்வந்தார்

அறுசீர் விருத்தம்

கேளாதகடன் தலைவன் பாராதபயிர்
வாரா தென்றாற் போலும்
ஆளாட்கள் எத்தனைதான் உழைத்தாலும்
மேற்பார்வை வேண்டு மென்று
வேளாண்மை மிகவிளங்கி மேதினிதான்
துலங்குதற்குத் துரித மாகத்
தோளாண்மைமிக்க பண்ணையார் தமது
பண்ணைக்கு வந்தார் தாமே

சிந்து

அடிக்கடிதன் மீசை தன்னை
அமுக்கி நீவுவார் - அதனை
அரிகொள் நாத்துப் போல முறுக்கி
அன்பாய்ப் பாவுவார்
படிக் கொருகால் குடுமிதன்னைத்
தொட்டுத் தொட்டுப் பார்ப்பார் - பெண்கள்
பார்க்கிறாரோ என்று சற்றுச்
சுற்றுமுற்றும் பார்ப்பார்
ஜரிகைப் பட்டு வேட்டி தன்னைச்
ஜோராய்க் கட்டிக்கிட்டார் - அழகு
ஜொலிக்குமாறு அங்கராக்குத்
தானும் மாட்டிக்கிட்டார்

அவிழும் வேட்டி தன்னை எடுத்து
அடிக்கடி கட்டும் - அவர்
அங்கவஸ்திரம் பின்னால் தொங்கித்
தரையிலே முட்டும்

பட்டுமுண்டா சொன்று கட்டிக்
கண்ணாடி பார்ப்பார் - தன்னைப்
பேரழகன் என்று நினைத்துப்
பின்னாடி பார்ப்பார்

வெற்றிலைக் காவி ஏறிய பற்களை
வெளியிலே காட்டிச் - சிரித்தால்
மேலும் கீழும் தொந்தி குலுங்கி
வேடிக்கை காட்டும்

கவிழும் தொந்தி தன்னை நீவிக்
கொண்டே கணைப்பார் - தன்னைக்
கட்டழகன் என்று மனத்தில்
தானே நினைப்பார்

பண்ணை யாட்கள் வேலையைப் பார்த்துக்
குறைகள் கூறுவார் - மாதர்
பார்த்து வியக்க வேண்டி அவர்கள்
பக்கம் மாறுவார்

வண்ண வண்ண மாகப் பேசித்
தானே நகைப்பார் - சுருட்டை
வாயில் வைத்து ரயிலைப் போல
வீணே புகைப்பார்

வைத்ததுதான் சட்ட மென்று
வாது புரிவார் - தன்றன்
வயல் வெளியில் குதிரையைப் போல்
தானே திரிவார்

கைத்தடியைத் தரையில் தட்டிக்
கட்டளையிடுவார் - கூலிக்
கணக்குப் பார்த்துக் கொடுத்துஅதனில்
லாபத்தைத் தொடுவார்

காதில் கடுக்கண் மேல் முருகும்
குலுங்கப் பேசுவார் - வேலைக்
காரர்கள்பால் குறைகள் கண்டு
கடிந்து ஏசுவார்

சேதமின்றி விளைவைச் சேர்த்து
வைக்கச் சொல்லுவார் - தெய்வ
சித்தப்படி ஆகட்டுமென்றும்
வார்த்தை விள்ளுவார்

நீதி மொழிகள் கதைகள் சொல்லி
நியாயம் உரைப்பார் - மாசில்
நெஞ்சினிலே நீதி தன்னை
நிறுத்த உரைப்பார்

மேதினியில் உயர்ந்த உழவின்
மேன்மை செப்புவார் - இந்த
விரிந்து பரந்த உலகைக் காக்கும்
தொழிலென் றொப்புவார்

காலநேரம் பார்த்து விதைத்தல்
அறுவடை செய்தல் - தான்யம்
களஞ்சியத்தில் வைக்கவெல்லாம்
ஜோதிடம் பார்ப்பார்

காலநேரம் பார்க்காமலே
உழைக்கணும் என்பார் - என்றும்
கடின உழைப்பு வாழ்வு சிறக்கும்
வழிவகை யென்பார்

சீலமோங்க ஊக்கம் உழைப்பு
உண்மை நேர்மையும் - வாழ்வு
சிறந்திட வேதுணைதரும் நற்
குணமென் றுரைப்பார்

சேர்ந்த பணத்தில் கொஞ்ச மேனும்
சேமிக்கச் சொல்வார் - பின்னால்
சமயத்திற்கு ஆகுமென்று
அறிவுரை விள்வார்

உழைப்பவர்கள் ஒற்றுமையாய்
இருக்கணும் என்பார் - அவர்க்குள்
உட்பூசல் வாரா வண்ணம்
காபந்து செய்வார்

மூத்தபள்ளி பண்ணையாரிடம் முறையிடல்

சிந்து

மூத்தபள்ளி:
கும்பிடுகிறேன் ஆண்டே கும்பிடுகிறேன் - எங்கள்
குலத்தின் தலைவருமைக் கும்பிடுகிறேன்
வம்பிடுகின்றான் குடும்பன் வளமைகெட்டான் - இங்கு
மறு பெண்டு கொண்டுவந்து மதிப்புங்கெட்டான்
வெம்பிடுகிறேன் மனதில் வேதனையுற்றேன் - பண்ணை
வேலையைப் பாராமல் நாளை வீணடிக்கிறான்
அம்பிடுகின்றான் நெஞ்சில் அன்பு சற்றில்லான் - இந்த
அநியாயம் கேட்பதற்கு ஆருமில்லையோ?

வீட்டுக்கு வாரான் இளையாள்வீட்டுக்குப் போறான் - எனக்கு
வேதனை தந்தான் இளையாள் போதனை கொண்டான்
மாட்டுத் தொழுவம் பண்ணை ஆட்டுக்கிடையும் - பாரான்
மதிப்பதில்லை என்வாசல் மிதிப்பதில்லை - பண்ணை
மேட்டுக்கு வாரான் தன்றன் பாட்டுக்குப் போறான் - வயல்
விளைவையெண்ணான் பண்ணையின் மேன்மை கருதான்
ஆட்டுக்கு ஆடும் இளையாள் கூட்டினைத் தேடும் - அவள்
மந்திரம் செய்தாளோ மையால்தந்திரம் செய்தாளோ

அறுசீர் விருத்தம்

பண்ணையார்:
ஏதுநீ உரைத்தாய் பள்ளி
இருந்தனன் ஒழுங்காய்ப் பள்ளன்
சேதிநீ உரைத்த தெல்லாம்
சத்தியம் தானா பெண்ணே
மாதுநின் வழக்கு கேட்டு
மனதினில் சினமுண்டாச்சு
தீதவன் செய்த துண்டேல்
தண்டனை தருவேன் காண்பாய்

சிந்து

பண்ணைத் தொழில் நன்கு செய்வான் - வேலைப்
பாங்கிலாத பேரை யேமிக வைவான்
திண்ணைச் சோம்பேறியு மல்லன் - அவன்
செய்தொழில் யாவினு மேமிகவல்லான்
இன்னொரு பெண்மணம் கொண்டான் - என்று
இன்னாத சொன்னாய் என்னமதி கொண்டான்
முன்போல் பொறுப்பிலை இன்று - இந்த
மாற்றத்தின் காரணம் நீயுரை நன்று
மூத்தபள்ளி:
செங்குட்டைக் காடென்றோர் தோட்டம் - சாலை
சேர்ந்த பண்ணையா ரிடமிவன் நாட்டம்
அங்கு மெய்வழி சுப்பராய - அனந்தர்
அவருக்கு இவனிடத் தன்பான நேயம்
சங்காது மெய்வழி சொல்லும் - சாந்தப்
பேச்சாலே குடும்பனின் உள்ளத்தை வெல்லும்
அங்கவ ரோடிணைந் தேகி - சாலை
ஆண்டவர் பாதத்தைப் போற்றினன் பள்ளன்
ஏலவல்லார் சாலை தெய்வம் - ஏற்க
இவணங்கமாயினன் இனிதருள் பெற்று
கோலத் தலைப் பாகை கட்டி - அதன்
கூடப்பஞ்சகச்சம் இடைக்கச்சும் கட்டி
சீலமாய்ப் பூணூ லணிந்தான் - எல்லாம்
தெய்வத்த யவென்று சொல்வான் பணிந்து
காலமெலாம் நாம் வணங்கும் - தெய்வக்
கோவிலுக்கு வரலில்லான் பிணங்கும்

காட்டுக் கருப்பர் காளிக்கும் - ஆட்டுக்
கடா வெட்டிப் பொங்கல் இடுவதுமில்லை
வீட்டில் கறிபுளி தள்ளி - கள்ளை
வேண் டுவோரை மிகவைதிடும் எள்ளி
தீட்டுத் துடக்கெனில் நீங்கும் - பீடி
சிகரெட்டுப் பிடிப்போரைக் கண்டால் ஒதுங்கும்
பாட்டு வேதங்கள் படிக்கும் - எங்கள்
பள்ளர் குடும் பத்திற் கிதுவோ பிடிக்கும்.

பண்டுநாம் செய்திட்ட பூசை - ஏதும்
பண்ணாது விட்டுவிட் டானதிலாசை
விண்டுரை செய்வதுமில்லை - என்னை
மெய்வழி வாவெனச் செய்தானே தொல்லை
கண்டுங்காணம லிருந்தேன் - சற்றுக்
கடுமையாகச் சில வாதும் புரிந்தேன்
பெண்டொன்று கட்டியும் வந்தான் - ஏழைப்
பேதை யென்நெஞ்சில் நெருப்பினைத் தந்தான்

சாவுச் சடங்கிற்குச் செல்லான் - நாலு
சாதிசனங்கள் நமக்கு வேண்டாமோ
சாவில் இருவிதம் என்பான் - அதில்
சொர்க்க நரக அடையாளமுண் டென்பான்

தேவன் ஒருவரே என்பான் - நம்ம
தெய்வங்க ளெல்லாம் சிலை கற்கள் என்பான்
ஆவாஇது முறையாமோ - இதனை
அடுத்தவர் கேட்டா என்னசொல்வார் ஆண்டே

மேல்கீழ்ச் சாதியில்லை என்பான் - இதனை
மேல்சாதி யார்கேட்டால் என்ன செய்வாரோ
நால்வகைச் சாதிமதங்கள் - எல்லாம்
நன்றவை ஒன்றென நாட்டியே பேசும்
சீலமெய் வேதம் படிக்கும் - பள்ளர்
சாதிக்கு வேதம் தகுதியோ சாமி
காலம் மிகக் கெட்டுப் போச்சே - எந்தன்
கணவன் பள்ளன் புத்தி இப்படி யாச்சே

முன்போ லென்பால வனில்லை - பண்டை
மோகம் தாகம் வேகம் எதுவுமே இல்லை
அன்பாய்த் தொட்டுவிட்ட போதும் - என்னை
அப்பவே குளித்திட வற்புறுத்திடுவான்
இன்பமாய்ச் சோறிட்டு வைத்தால் - அதற்கு
ஏதோநீர் சுற்றிட்டு மந்த்ரம் சொல்கின்றான்
என்பால் செக்குமாடு போலே - சுற்றி
எப்போதும் வந்தவன் இப்போது இல்லை

தெய்வமே குருநாதா என்று எதனைச்
செய்தாலும் சொல்கிறான் என்ன பைத்தியமோ
உய்வமே மெய்வழி சென்றால் - என்று
உளறுகிறான் நெஞ்சைக் கிளறுகின்றானே
மெய்வழி வேதாந்தம் என்று - ஏதோ
மிகப்பெரும் புத்தகம் ஓயாது படிக்கும்
வைதலும் வாழ்த்தலும் இல்லை - புது
வழக்கங்கள் ஏதேதோ செய்கிறானாண்டே

கூத்துசினிமா வேடிக்கை - என்று
கூட்டிப் போய்க் காட்டிடும் வழக்கமே இல்லை
சேர்த்தொரு சிவப்பு முண்டாசு - கட்டிச்
செகசோதியாய் வாரான் நல்லாத்தான் இருக்கு
ஆர்த்திடும் பள்ளர் வழக்கம் - எல்லாம்
அடியோடு மாற்றிவிட்டானுங்க ஆண்டே
நீர்த்துப்போச்சு தெந்தன் வாழ்வு - எந்தன்
நெஞ்சில் வந்து விட்டதே மிகத் தாழ்வு

காசு கொடுப்பதுமில்லை - அந்தக்
கைகாரிக்குத் தரும் காசள வில்லை
நேசமெல்லா மவள்மேல் தான் - பள்ளன்
நெஞ்சார வஞ்சம் செய்கிறான் ஆண்டே
பாசமில் லாமலே செய்தாள் - அந்தப்
பழிகாரி மைவைத்தென் வாழ்வினைக் கொய்தாள்
வாசமற்றுப் போச்சென் வாழ்வு - ஒரு
வழிசெய்து பள்ளனை மாற்றுவீர் ஆண்டே

காசு கிடைத்திட்டால் போதும் - அந்தக்
கள்ளிக்கும் சாலைக்கும் செலவு செய்கின்றான்
மாசில்லாமல் தானிருந்தான் - அந்த
மாபாவி பள்ளியால் குடும்பம் ரெண்டாச்சே
பூசைக்கு வைத்திட்ட பாலை - திருட்டுப்
பூனை குடித்திட்ட கதைபோல ஆச்சே
ஈசற்குப் படைஒரு சந்திப் பொங்கல்
ஈனநாய் வாய்வைத்த போலுமே போச்சே

சாராயம் தினம் குடித்தாலும் - என்னைச்
சக்கையாய் அடித்தாலும் ஏற்பேன் நான்ஆண்டே
பாரா முகமாகச் சென்று - வேறு
பள்ளியைப் பெண்கொண்டான் பொறுக்கேன்நான் ஆண்டே
தேர்போலே நானுள்ளபோது - இந்தத்
தெருவோடு போவாளைக் கொண்டானே பள்ளன்
யாரும் பொறுக்கமாட்டார்கள் - அவனுக்கு
இப்பவே தண்டனை கொடுங்களென் ஆண்டே

என்ன செய்வேன் எங்குச் செல்வேன் - வயிறு
எரிகிறதே நெஞ்சு வெடிக்கிறதாண்டே
பின்னப்பட்டுப் போச்சு வாழ்வு - கெட்ட
பேர்வந்த தேஎனக் குற்றதே தாழ்வு
என்ன செய்தாகிலும் ஆண்டே - அந்த
ஈனக் கைகாரியைத் துரத்துங்கள் ஆண்டே
என்னோடு மட்டும் என் குடும்பன் - என்றும்
இருந்திட ஏதானும் வழிசெய்வீர் ஆண்டே

பட்டையாய் அடித்தாலும் சரியே - எந்தன்
பள்ளன் புத்திமட்டும் மாறினால் போதும்
குட்டையைப் போடுங்கள் ஆண்டே - பள்ளன்
கொழுப்பட ங்கிவிட்டால் போதுங்க ஆண்டே

இட்டமாய் எனைப் பிரியாமல் - என்றும்
இருந்தானே இப்படி மாறிவிட்டானே
துட்டச் சிறுக்கி வந்தாளே - எந்தன்
சுகமெல்லாம் போச்சுதே என் செய்வேன் ஆண்டே

அறுசீர் விருத்தம்

இப்படிப் பள்ளி யங்ஙண்
இயம்பிடப் பண்ணையார் தான்
அப்படி ஆச்சோ என்று
ஆசாரி தனைய ழைத்து
தப்பு செய்கு டும்பன் தன்னைத்
தண்டிப்பாய் குட்டை மாட்டி
ஒப்புடன் பின்னாள் அன்னோன்
ஒழுங்குறும் என்று சொன்னான்

ஆசாரியார் வருகையும் செய்கையும்

நீறு நெற்றியில் நிறையப் பூசி
நன்கு சவ்வாதுப் பொட்டுமிட்டு
கீறு சந்தனம் பூணூல் மேனியில்
காதில் கடுக்கன் துலங்கவே
கூறுவாச்சி தச்சுத் தகட்டுளி
கொட்டாப் புளியும் கொண்டுமே
ஏறுபோலே ஆசாரி நடந்து
இங்கிதமாக வந்தனனே

நன்னய மாகவே பண்ணையார் தன்னிடம்
நமஸ்காரம் சொல்லி வந்து நின்றான்
என்னை வரச்சொன்ன சேதியென்ன ஆண்டே
இப்பவே செய்து முடிப்பே னென்றான்
சொன்னபடி கேளாப் பண்ணைப் பள்ளன் தனைத்
திருத்தக் குட்டை மரம் மாட்டிட்டு
சின்னத் தனம் நீங்கப் பண்ணைத் தொழில் செய்ய
தண்டிக்கச் சொன்னேன் ஆசாரியாரே

ஆரடா ஆள்க்காரன் கோல்காரன் வாருங்கள்
அந்தப் பள்ளன் தனைப் பத்திவந்து
சேரடா ஆசாரி கிட்டே குட்டை மரம்
செமத்தியாக வேபோட்டிட ட்டும்
சீராகப் புத்தி திருந்தி வருமட்டும்
ஜென்ம தண்டனை என்று சொல்லு
பாராமல் பள்ளியைத் தவிக்க விட்டானவன்
புத்தி திருந்தினால் போதுமென்றார்

அறுசீர் விருத்தம்

பண்ணையார் இங்ஙன் சொல்லப்
பாங்குடன் ஆள் கொண்டேகி
வண்ணமாய் இளைய பள்ளி
மனையினில் இருந்த பள்ளன்
எண்ணமே நடுங்கக் குட்டை
எனுமரம் காலில் சேர்த்துக்
கண்ணிணீர் சொரியத் துன்பம்
கடுக ஆசாரி சென்றான்

இளைய பள்ளி ஞான சௌந்தரி

கலிப்பா

வண்ணமயில் மின்னெழிலாள் மாந்தளிர்போல் மேனியினாள்
பெண்ணணங்கு பேர்ஞான சௌந்தரியாம் நாற்குணத்தாள்
மண்ணனைய நற்பொறுமை மாந்தரிடம் பணிவுடையாள்
எண்ணமெலாம் இறைநெறியுள் கணவர்பணி என்றுறைவாள்

சிந்து

அமுதெலாம் குவித்தோர் இடத்தில்
பொதிந்து வைத்த பெட்டகம் - மதன்
அழகெலாம் திரட்டிக் கட்டி
வைத்த எழில் கட்டகம்

எமது மேனியென அரம்பை
ஊர்வசி சொல் பிம்பமோ - எழில்
இலங்கும் வானவில்லே
இனிது குழைத்து வந்த கம்பமோ

அமைதி கூடி வந்து
அறிவும் நாடி வந்த கூட்டமோ - தேவ
அறமும் பாடிஇன்ப
அன்பின் சேடிநின்ற தோட்டமோ

இமைக்க வேண்டிலாத
எழிலின் காட்சிதிகழ் ஓவியம் - அற்றை
இறவாப் புகழ்ப் புலவோர்
இனிதுகூடி வரை காவியம்

சாலை வாழனந்தர்
பிள்ளையாக வளர் செல்வியாள் - சாலைச்
சற்சனர்க்குரிய சற்குணமே
நிறைந்த கல்வியாள்

சீலமோங்கு சாலை
வேத நான் கினிலும் தேர்ந்தவள் - அன்பால்
திருந்து வாய்மொழியும்
பொருந்து பண்புகளும் ஆர்ந்தவள்

காலநேர மெடுத் தையர்
மான்மியத்தை ஓதுவாள் - எந்தக்
காலச் சூழலிலும் பொறுமை
கைவிடாத நீதத்தாள்

கோலமா மயிலாள் குடும்பன்
குணமறிந்த தன்மையாள் - கெட்ட
கொடுமை யாளரையும்
அடிமையாக்கும் சொல்லின் வன்மையாள்

சொல்லுக்குச் சொல்லவள்
ஆண்டவர் தயவென்று சொல்லுவாள் - என்றும்
சிந்தை தனில் தெய்வத்
திருவும் புகழும் மிகக் கொள்ளுவாள்

நல்ல குடும்பத்தில் ஏற்றிவைத்த
குல விளக்கனாள் - தன்னை
நாடிவந்த பெண்டிர் துக்கம்
துயரங்களை விலக்குவாள்

கள்ளம் கபடில்லாமல்
கணவர் பணியனைத்தும் புரிபவள் - தந்த
காசில் சிக்கனமாய்
செலவு செய்து மீதம் தருபவள்

உள்ளந்தனில் உயர்ந்த
பண்பு சிறந்திடும் பெண்டிவள் - குடும்பன்
உள்ளம் கவர்ந்து மிக
இனித்துக் கிடக்கும் கற்கண்டிவள்

அப்பன் வீட்டுப் பெருமை
புருஷன் வீட்டில் பேசாப் பெண்மையாள் - கொண்ட
புருஷன் வீட்டின் குறை
அப்பன் வீட்டில் கூறாப் பண்பினாள்

செப்பமாகத் தன்றன்
குடும்பம் நடத்திவரும் சீர்மையாள் - உள்ளம்
சிறிதும் கோணலிலாக்
கற்பு நெறியில் நிற்கும் நேர்மையாள்

கணவன் சொல்லைச் சற்றும்
கடந்திடாது கடைப் பிடிப்பவள் - கொண்ட
கணவர்க் கேதும் நேர்ந்தால்
கனலில் புழுப் போலே துடிப்பவள்

கணமும் தெய்வம் மறவாது
பணிகள் செய்யும் தங்கமாம் - ஞானம்
கனியும் சௌந்தரியாள்
கணவன் உயிரில் இணை அங்கமாம்

வாசல்தேடி வந்த பேரை வரவேற்கும்
பண்பிணாள் - யார்க்கும்
மரியாதை மிகத்தந்து வரிசையாய்ப் பேசிடும்
நண்பினாள்

நேசமிலா நெஞ்சம் நன்கிளகிடச் செய்யும்
பணிவினாள் - கொடும்
நீசச்சொல் லுரைப் போரும் வாசம் பெறஉரை செய்
கனிவினாள்

பிறர்குறை தன்னையே பெரிது படுத்திப்பேசும்
தீங்கில்லாள் - தன்றன்
பிழைதன்னை எண்ணியே பண்பாய்த் திருத்திக்கொள்ளும்
பாங்குள்ளாள்

அறமிளிர் சாலைமெய் ஆண்டவர் பாதத்தில்
அன்பினாள் - நெஞ்சில்
அனந்தர் குலப் பண்பு அனைத்தும் விளைந்திருக்கும்
தென்பினாள்

எப்பணி செயும் போதும் இறைவர் பாசுரம் வாயில்
இசைப்பவள் - இவள்
எவர்க்கும் எப்போதும் தீங்கு எள்ளளவும்
எண்ணா இசைவினாள்

செப்பமுறும் தெய்வச் சீர் பத்யம் மாறாத
சிந்தையாள் - தெய்வச்
சீரோங்கு பெருமையைப் பாரெங்கும் பேசிட
முந்துவாள்

சோம்பல் தூக்கம் வஞ்சம் சுவையில் வெறியெதுவும்
அற்றவள் - என்றும்
சுறுசுறுப்பாய் தெய்வ நினைவோடு பணிசெய்யக்
கற்றவள்

ஆம்பல் மலர்வதுபோல் அகமும் முகமும் என்றும்
மலர்பவள் - தேவ
அறஞ்செய் அனந்தர் குலப்பூங்காவில் மலர்ந்துள்ள
மலரிவள்

குடும்பன் சிறைப்பட்டது கண்டு இளைய பள்ளி வருந்துதல்

அறுசீர் விருத்தம்

குடும்பனைக் குற்றம் சாட்டி
குட்டையைக் காலிற் பூட்டி
இடும்பியற் றியது கண்டு
இளையவள் அச்சம் கொண்டு
நடுங்கினள் நெஞ்சம் நீதி
நவில்பவ ரிலையென் றேங்கி
குடும்பனை மீட்க வேண்டிக்
குலதெய்வம் தன்னை வேண்டும்
இளையபள்ளி:
ஆதிமெய் வழிசாலை ஆண்டவர் சன்னிதிமுன்
அனந்தாதியர் சபையில் அன்பாய்ச்சம் மதம் கூறி
நீதித்திருமணம் கொள் நன்மன நாதரே! என்
நெஞ்சம் கவர் உறவே நேசக் கணவரே!உம்
மீதில் குற்றம்சுமத்தி மெய்யாய் விசாரியாமல்
விலங்கிட்டுச் சிறைவைத்த வேதனை என்சொல்லுகேன்
மேதினி தனில் பெண்ணால் ஆவதும் அழிவதுமாம்
விளம்பும் மொழிமெய்யாச்சே வாழ்வில் இடர்உண்டாச்சே
உன்னாலே வந்தவினை என்றிகழ் கின்றார் எனை
உற்றமெய் யறியார்க்கு உண்மை விளங்கலுண்டோ
என்பால்மி கச்சினமாய் இருக்கின்றா ளுங்கள் மூத்தாள்
என்றுரை கேட்கும் நெஞ்சம் இடர்பட்டு மிக்க அஞ்சும்
தன்பால்உள் ளகுறைகள் சற்றும் எண்ணாத பெண்ணாள்
தான்பண்ணை யாரை வேண்டித் தந்ததிந்த தண்டனை
அன்பால் பெறும்சுகத்தை அதிகாரம் தரல் உண்டோ
அதனை உணரா மங்கைக் கடியாள் என்ன சொல்லுகேன்

துன்புற்று நீங்கள் இங்கே துடிக்கின்றீர் அந்தோ நாதா
சுக்கு நூறாயென் நெஞ்சம் வெடிக்கிற தென்னசெய்வேன்
அன்போர் உருவாய் மெய்யாம் அறிவோர் வடிவாவோம் நங்கள்
ஆண்டவர் திருத்தாளை அடியேம் துதிப்போம் நாதா
தென்பாய் இருங்கள் சாமி தெய்வத்தைத் தோத்தரிப்போம்
தீரா வினைபவங்கள் தீர்க்கும் மெய்வழிதெய்வம்
முன்போலும் மூத்தாள் நும்பால் மிக்கன்பாய் வாழ்ந்திருக்க
வேண்டித் துதித்திடுவோம் மிக்க நலம் பெறுவோம்
குடும்பன்:
காய்த்த மரத்திற்குத்தான் கல்லிடென்பார் உலகோர்
கனிந்த அறிவினோர்க்கே கடுஞ்சோதனை வரும்மெய்
வாய்ந்த நமக்கு இங்கே வந்தஇடர் விலகும்
மாதவச் சாலை தெய்வ மகிமையால் மெய்துலங்கும்
ஆய்ந்தறி யாமல்பண்ணைக் கதிபர் செயும் கொடுமை
அனைத்தும் விடியும்நாளை அணுவும்துயர் கொள்ளாதே
தீய்க்கும் பிறவிப்பிணி தீர்க்கும் இறைவர் இந்தத்
துன்பம் தூசுபோலாக்கும் தெய்வம் நன்மையே ஆக்கும்

வருந்தாதே பெண்ணே இந்த வயிற்றுப் பாட்டுக்கிங்குற்றோம்
மெய்யறி யாதமாந்தர் விளைத்திட்ட துன்பமுற்றோம்
பெருந்தேவ தேவேசர்நம் பெம்மான் பொன்னரங் கையர்
பேரெழில் சாலை செல்வோம் பணியங்கண் செய்து உய்வோம்
அருந்தவச் சாலை சார்வோம் அருமை வளங் கொழிக்கும்
அரிய வயல்களுண்டு அங்ஙண் பணிகள் செய்வோம்
பொருந்தும் இகபரத்தில் புரியும் பணியங்குண்டு
பெறலாம் அருளமுதம் பேரின்பம் யாவும் நன்று.

என்னதான் நேர்மையாக உழைத்தாலும் எண்ணிடார்காண்
இரும்புநேர் நெஞ்சர் வஞ்சர் இவரை நம்பிடல் வேண்டேம்
என்ன ஏதெங்கு எவ்வா றிடர்நேர்ந்த தென்று ஓரார்
ஏந்திழை பேச்சைக் கேட்டு இச்சிறை செய்தாரன்றே
வின்னம்பட் டதேநெஞ்சம் மெய்யறிவிங்கு பஞ்சம்
மெய்யர்தாள் ஆவோம் தஞ்சம் வேறெதற்குமே அஞ்சோம்
தென்னன் பெருந்துறையார் திருவார் பொற்றாளே போற்றி
சிந்தைசொல் செயல்யாவும் திருப்பணிக் கென்றே சாற்றும்

குருச்சேத்ரச் சாலை தன்னில் குடியிருப்பது புண்யம்
குருகுல வாசம் செய்தால் குறையாவும் தீர்வு எய்தும்
அருட்சாலை செல்வோம் மாதே அணுவும் வருந்திடாதே
அநியாய கலியன் செய்கை அறவோர்க்கு நச்சுப் பொய்கை
இருட்சாரும் இவ்வுலகோர் இன்பம் என்பர் பொய்க்காட்சி
இணையில் தவத்தோர் மாட்சி எண்ணிடார்க்கேது மீட்சி
பொருட்சார் வெறிமீக் கொண்டோர் பொருந்தார் மெய்ஜீவசாட்சி
பொன்மானே அஞ்சேல் நாமும் பெறும் தெய்வத் திருக்காட்சி
இருவரும்:
தேவாதி தேவே! எங்கள் திருக்கைலாச வாசா!
திருவாரும் பொன்னரங்கா! திவ்ய மெய்குண்ட நேசா!
தேவப ரமண்டலப் பிதாவே! திருவையாறா!
திரண்டனைத்தும் ஓருரு வானமெய்வழித் தேவே!
மூவா முதல்வா! உங்கள் மெய்யடி யார்கள் நாங்கள்
மிக்கிடர் படுகின்றோம் மீட்பருள் வீர்கள் தேவே!
ஓவா வயிற்றுப் பாடும் உண்மையறியா நெஞ்சும்
உடையோரால் உறும்துன்பம் விலகிட அருள் செய்வீரே!

மூத்தபள்ளி இளைய பள்ளியின் மனைக்கேகி அவளுடன் வாதிடுதல்

கொச்சகக் கலிப்பா

மூத்தாள் இளையவளை மொய்த்து வழக்கிடவும்
ஆர்த்தாள் அவள்மனைக்கே ஏகி அழைத்தவள்பால்
வேர்த்தாள் மிகச்சினந்தாள் வெவ்வுரைகள் மிக்குரைத்தாள்
பார்த்திளையாள் பண்பறிந்து பேரன்பும் கொண்டனனே!

சிந்து

மூத்தபள்ளி:
ஆரடி குச்சுக்குள் அடியே வெளியிலே
வாடி பதில் தாடி - எந்தன்
அன்புக் கணவனைக் கைக்கொண்டாய் என் செய்தாய்
மோடி மாய மாடி
இளையபள்ளி:
வாருங்க ளக்கா நீர் வந்து உள்ளே குந்திப்
பேசும் பின்னர் ஏசும்
வந்த களைப்பாற மோர்தருவேன் கொள்வீர்
பண்பால் சற்று அன்பால்
மூத்தபள்ளி:
அடடா உபசாரம் அளவில்லை மாய்மாலக்
கள்ளி நெருப்புக் கொள்ளி
அநியாயம் செய்திட்டு நடிக்கிறாயோடி நீ
பள்ளி நில்லு தள்ளி
இளையபள்ளி:
அடுக்காத வார்த்தைகள் சொல்லாதீர்கள் நீங்கள்
அக்கா அன்பு அக்கா
அநியாயம் செய்திலேன் அமைதியாய் யோசித்துச்
சொல்வீர் பின்னர் செல்வீர்
மூத்தபள்ளி:
முன்னே ஒருத்திநான் இருப்பதை நீயறி
யாயோ பெரும் பேயே
மிக்கன்பு கொண்ட என் கணவனை மயக்கிவிட்
டாயே அடி நாயே
இளையபள்ளி:
முன்னே நீங்கள் வந்த தையறி யேனவர்
வந்தார் அன்பு தந்தார்
மூத்தோரென் பெற்றோர்சம் மதம்கேட்டு நன்மணம்
கொண்டார் பின்னர் விண்டார்
மூத்தபள்ளி:
பொய்பேசி உனைமணம் கொண்டானோடி அந்தப்
பள்ளன் பெரும் கள்ளன்
புளுகாதேடி நல்ல ஆள்கிடைத் தானென்று
கொண்டாய் சுகம் கண்டாய்
இளையபள்ளி:
மெய்பேசும் சாலை வளர் மங்கை நானுங்க
அக்கா அன்பு அக்கா
மிக்கச் சினந்துரை ஆடாதீர் இதுபெரும்
பாவம் ஏதோ தாபம்
மூத்தபள்ளி:
காட்டுக் கருப்பனார் முனியப்பன் ஐயனார்
காளியொடு மாரி
கையில் வேலேந்திய முருகர் - கணபதி
சிவனாரொடு பெருமாள்
மீனாட்சி, காமாட்சி அங்காளம்மன் வீர
மாத்தி யொடு காத்தி
வில்லேந்தும் ராமரும் கிருஷ்ணரும் எத்தனை
சாமி இங்கு உண்டு
இத்தனை சாமிக ளிங்கிருக்க அங்கென்
கண்டான் புதுமை கொண்டான்
இத்தனை பேர் காணா புத்தறிவிவனுக்கு
வந்ததோ கதி தந்ததோ
இளையபள்ளி:
ஆயிரம் ஆயிரம் தெய்வங்களில் லைங்க
அக்கா அன்பு அக்கா
அண்டம் புவனம் அனைத்திற்கும் தெய்வமே
ஒன்றே அறி நன்றே
ஆயிரம் ஆயிரம் ஒரு தெய்வத் திற்குற்ற
நாமம் திரு நாமம்
அன் போடறிவோடு யோசித்துப் பார்த்தாலே
தெரியும் நன்கு புரியும்
தண்ணீரைப் பாணி நீலு வெள்ளம் என்றுரை
சொல்வார் வார்த்தை விள்வார்
தாயை அன்னை மாதா தல்லி யென்றெல்லாரும்
ஓதும் பாஷை பேதம்
மூத்தபள்ளி:
இத்தனை கோயில்கள் ஏதுக்குண்டாக்கினார்
சான்றோர் என்னும் ஆன்றோர்
இதனையெல்லாம் விட்டு அங்கே சென்றெதனை
வணங்கும் பணிந்தி ணங்கும்
சாமி சிலையங்கு இல்லை யென்று சொல்லு
கின்றார் அது நன்றோ - எந்தச்
சாமியை நீங்கள் வணங்கு கின்றீர்களோ
சொல்லுவீர் பதில் விள்ளுவீர்
இளையபள்ளி:
தன்னுள் இருக்கும் தலைவர் இறைவனை
அறிய நன்கு தெரிய
தானொரு தூண்டுகோ லானவை இத்தகு
தலங்கள் மற்றும் சிலைகள்
தன்னைத் தலைவரை தான்காட்ட மாட்டாஇக்
கோவில் இந்தப் பூவில்
தன்னை அறிந்திடச் சற்குருவாய் வரும்
தெய்வம் தயை செய்யும்
பக்குவம் வாராத சின்னப்பிள் ளைகட்குத்
தெய்வம் பற்றிக் கூற
பண்டைப் பெரியோர்கள் பண்ணிவைத் தார்களிக்
கோவில்கள் என்னும் தலங்கள்
பிள்ளைகட்குச் செய்த பொம்மைகளைப் பெரி
யோர்கள் முதிர்ந் தோர்கள்
போற்றிப் பணிந்திடில் தன்னை யறிந்திட
லாமோ வழியாமோ
காலகாலம் வந்த கர்த்தரே சற்குரு
வாகி உரு வாகி
கனிந்தின்று மெய்வழி சாலை ஆண்டவரென்று
வந்தே அருள் தந்தார்
மூத்தபள்ளி:
பண்டிகை யென்றாலே வானவேடிக்கை பல்
ஆட்டங்கள் கொண் டாட்டங்கள்
பொய்க்கால் குதிரைகள் வேஷங்களும் கலைக்
கூத்துக்கள் நாங்கள் பார்த்திடும்
பண்டிகைக் காலத்தில் அங்கிங்கு போல் காட்சி
இல்லையாம் ஏதும் இல்லையாம்
பல்வகை மேளதா ளங்களும் வேடிக்கை
இல்லையாம் புதிய எல்லையாம்
இளையபள்ளி:
வேஷம் வேடிக்கை வினோதங்களுக் கிடம்
இங்குதான் அறிவு மங்குந்தான்
வேஷங் கழன்றிடும் ஏமன் வந்தால் அப்போ
என் செய்வீர் அக்கா என் செய்வீர்
கலையும் நிகழ்ச்சிகள் என்ற உங்கள் செய்கை
கலைக்கும் பண்பைக் குலைக்கும்
கண்டகுடி வெறியாட்டங்களால் நெறி
குலையும் அறி வழியும்
மூத்தபள்ளி:
கறிபுளி தின்னாதே என்ற கட்டுப்பாடு
உண்டாம் அங்கு உண்டாம்
கறிவிட்டால் சத்தேது எப்படி வயலில்
உழைப்போம் நன்கு பிழைப்போம்
இளையபள்ளி:
மாமிசம் உண்ணாத குதிரை மாடு யானைக்
கில்லையோ பலம் வல்லையோ
மாமிச பட்சிணி புலி சிங்க நரிகளால்
பயனுண்டோ ஏதும் பயனுண்டோ
மூத்தபள்ளி:
மாமிசம் தின்பதால் ஆடுமாடு கோழி
விருத்தி இன விருத்தி
மாமிசம் தின்னாட்டால் இந்த உயிர்களின்
இனமே குறைந் திடுமே
இளையபள்ளி:
ஆடு நனையுதென்று ஓநாயும் அக்கரை
கொண்டதாம் வார்த்தை விண்டதாம்
அதுபோலே அவ்வின விருத்தி சுயநலம்
ஆகும் நரகில் வேகும்
மூத்தபள்ளி:
மனிதனுக் காகவே அவற்றை இறைவனும்
படைத்தான் நன்கு வளர்த்தான் - என்று
மதபோத கர்களும் பூசாரி சொல்கேட்ட
துண்டு கேட்ட துண்டு
இளையபள்ளி:
ஏமாற உன்னையும் ஏமாற்ற என்னையும்
படைத்தார் இறைவன் படைத்தார் - என்று
எத்தன் சொல்லுகின்றான் என்னபதில் சொல்லு
வீரே நன்று தேரே
மாமிசம் என்னும் ஊன் செத்த பிணமென
அறிவாய் நன்கு தெரிவாய்
மற்றதைப் புதைக்கும் உன் வயிறுபிணக்
குழியோ அழி குழியோ
ஊனெனும் மாமிசம் உண்பதால் ராட்சஸ
குணமே வெறிக் குணமே
ஓங்கி வளர்ந்திடும் பாங்கிது நீங்கள்
அறிவீர்கள் அக்கா புரிவீர்கள்
மூத்தபள்ளி:
பால் நெய்யை வேண்டாமல் பத்தியம் என்கிறான்
பித்தனோ பள்ளன் சித்தனோ
பால் நெய்யை அமிர்தமென் றழைக்கின்றார்கள் அது
புரியாதோ உனக்குத் தெரியாதோ
பால் நெய்யபிஷேகம் பகவானுக் குகந்தது
பார்த்திலை நீயும் கேட்டிலை
பாலால் விளைந்திடும் குற்றமென்ன சொல்வாய்
பதிலே உடன் பதிலே
குழந்தைகள் முதியவர் நோயாளி யாவரும்
கொள்ளும் சத்து உணவு
கொழுமைதரும் பாலை வேண்டாமென்று சொல்லல்
சரியோ இது முறையோ
இளையபள்ளி:
பாலது வெள்ளை இரத்தமென் பதை
புரிந்துகொள் அக்கா அறிந்துகொள்
பால் காமம் ஓங்கிடச் செய்யும் உணவென
தள்ளுவர் தெய்வம் விள்ளுவர்
பாலுண்ணோம் நெய்யுண்ணோம் என்று ஆண்டாளம்மை
நாச்சியார் கூற்று கேட்டிலை
பாலது சாத்வீக நெறியினர்க் காகாத
பண்டமே என்று விண்டனர்
மூத்தபள்ளி:
கூத்து சினிமாவை வேண்டாமென்று தள்ளி
வைக்கிறான் போனால் வைகிறான்
கூத்து கலைதானே தப்பதில் என்னென்று
கூறுவாய் பதில் கூறுவாய்
டி.வி.யில் எத்தனை புதுமைக் கருத்துகள்
காண்கிறோம் தினம் காண்கிறோம்
டி.வி. வேண்டா மென்று சொல்லித் தடுக்கிறான்
அநியாயம் இது அக்ரமம்
இளையபள்ளி:
கலையென்று சொல்லியே காம அராஜகக்
காட்சிகள் பண்பின் வீழ்ச்சிகள்
காட்டுகின்றா ரதைக் காண்பது ஜீவனைக்
கெடுத்திடும் துன்பம் கொடுத்திடும்
பதினெண் வகைக்கறி வைத்தொரு மூலையில்
நரகலை வைத்துப் படைத்திடில்
பசியாற முடியுமோ அதுபோல டி.வி.யில்
பலதீய காட்சி உளவாகும்
மூத்தபள்ளி:
ஓட்டலில் சாப்பிட மாட்டேனென்று அவன்
மறுக்கிறான் ரொம்பத் திருக்கிறான்
ஓட்டலில் தின்னாமல் எங்கே வெளியிலே
உண்பதாம் உணவுண்பதாம்
இளையபள்ளி:
தெய்வபிரம்ம உபதேசம் பெற்றாரவர்
ஆதலால் தெய்வக் காதலால்
தீட்டுத் துடக்கிலாச் செந்நெறி கைப்பிடி
தோதெனத் தெய்வம் ஓதினர்
உத்திரவுப் படி செய்தல் கடனென
ஓர்ந்தனர் நன்கு தேர்ந்தனர்
உத்திர வேனென ஓர்ந்திலர் நாயகர்
ஓங்கினர் பண்பில் தேங்கினர்
மூத்தபள்ளி:
சாவுச் சடங்கில் கலந்து கொள்ளானிவன்
ஏன்சொல்லு நன்கு தான்சொல்லு
செல்லாவிட்டால் உற வற்றிடும் என்பது
தெரியாதோ இவனுக்குப் புரியாதோ
இளையபள்ளி:
சாவில் இருவிதம் ஒன்று நற்ஜீவனின்
பயணம் மற்றது மரணம்
சற்சனர் பத்தடையாள மவற்றிற்கும்
உரைக்கும் நன்கு தெளிக்கும்

நாறாது விறைக்காது அழுகாது கனக்காது
வீங்கா நிலை ஓங்கும்
மாறாது பசுமஞ்சள் வண்ணமது பூக்கும்
வியர்க்கும் சூடு உயிர்க்கும்

கோரப் படாமுகம் தெய்வத் தீர்த்தம் தந்தால்
ஏற்கும் வர வேற்கும்
கூறுமிந்தப் பத்து அடையாள முள்ளவர்
சாகாதோர் நரகே காதோர்

இப்படிப் பத்தடை யாளங்கள் ஓங்கிடல்
இனிதாம் இறை தயவாம்
இந்தப் பெருவரம் பெற்றிடத்தான் தெய்வம்
ஏற்றுறோம் அன்பாய்ப் போற்றுறோம்

மூத்தபள்ளி:
சாமியாடி குறி வாக்குச் சொல்லல் இங்கு
உண்டு அங்கு இல்லை - உங்கள்
சாமிவாக்குச் சொல்லல் உண்டாமோ அதனைச்
சொல்லுவாய் சொல்லி வெல்லுவாய்
இளையபள்ளி:
எங்கள் சாமி திரு வாக்கினால் ஜீவர்க்கு
இறவாப் பெரு வரமாம்
ஈரேழுலகிலும் ஈடிணையில் திரு
வாக்கியம் பெரும் பாக்கியம்
மூத்தபள்ளி:
துள்ளும் முறுக்கிய மீசைகண்டால் மனம்
அள்ளுமே ஆசை கொள்ளுமே
துப்புற வாகத்துடைத் துவிட்டான் பெண்போல்
தோற்றமே பெரு மாற்றமே
இளையபள்ளி:
மீசை மயிரினில் ஆசை யென்னங் கக்கா
மென்மையே மிகும் தன்மைக்காய்
மீசையெடுத்து மினுக்கல் ஒழித்திட்டார்
விடுங்கள் மீசை ஆசை
மூத்த பள்ளி:::பூணூலெதுக்கடி போட்டுக்கிட்டான் ஐயர்
செட்டியோ இவன் தட்டானோ
பூணூல் நம்ம குலவழக்க மில்லைஅதைப்
போடவோ மேனி சூடவோ
இளையபள்ளி:
பிரம்மப் பிரகாசப் பூணூல் உயிரினில்
பார்த்தனர் மிக ஆர்த்தனர்
பெருமான் தயவாலே பிராமண னாகினார்
போட்டனர் பூணூல் ஏற்றனர்
மூத்தபள்ளி:
காசு பணத்தினால் ஆசையில்லாமலே
கொண்டதே போதும் என்கிறான்
காசு பணமின்றேல் குழந்தைகளை யெங்கன்
காப்பது வாழ்வு சேர்ப்பது
இளையபள்ளி:
போதுமென்ற மனம் பொன்செய் மருந்தென்பர்
உள்ளதே போதும் நல்லதே
பொன் மனத்தார் மிக நன்மனத்தார் என்றும்
பெற்றிடும் வாழ்வில் வெற்றியே
ஈசன் அளந்த படிக்குமேல் நாமென்ன
ஏற்றிடும் செல்வம் சேர்ந்திடும்
இறைவர் தரும் செல்வம் என்றும் குறையாது
ஏன்ஆசை அக்கா வீண்ஆசை
மூத்தபள்ளி:
பூனை கருவாட்டைத் தள்ளியது போல
பேசுறாய் வார்த்தை வீசுறாய்
பணமில்லா விட்டாலே உறவு மதிக்குமோ
பித்தனுக் கேற்ற பித்திநீ
இளையபள்ளி:
பணம் பணம் என்று பயித்திய மாய்ப்பேசு
கின்றீர் கோபம் கொண்டீர்
பணமே குறிகொண்டால் குணம்மறந்து போகும்
அக்கா அன்பு அக்கா
கொண்ட கணவரை அவன்இவன் என்றேக
வசனம் தரும் விசனம்
கொஞ்சம்கூட மட்டு மரியாதை இல்லாத
பேச்சு உங்கள் பேச்சு
பண்பாய் பேசுங்கள் பலதடவை கேட்டேன்
கடுஞ்சொல் நெஞ்சைச் சுடுஞ்சொல்
பண்பில்லையேல் வாழ்வு பாழாகும் கொள்ளுங்கள்
பணிவு கூட இன்சொல்
அகங்காரம் நல்வாழ்வைக் குலைத்திடும் இன்பத்தை
அழிக்கும் பின்நாம் விழிக்கும்
அன்பு தானக்கா அனைத்துயிர்க்கும் நன்மை
கொழிக்கும் செல்வம் செழிக்கும்
மூத்தபள்ளி:
மெய்வழிச் சாலையில் மைவைத்து மயக்கிவிட்
டாயே அடி நாயே - என்பால்
மிக்க அன்பான புருஷன் பயித்திய
மானான் மாறிப் போனான்
இளையபள்ளி:
மையும் மயக்கலும் அங்கில்லை மெய்யுண்டு
அக்கா அன்பு அக்கா
வீணாம் வதந்திகள் நம்பி கோபிக்காதீர்
இருங்கள் சற்றுப் பொறுங்கள்
மூத்த பள்ளி:::சோற்றில் பங்குகேட்டால் தட்டோடு தந்திருப்
பேண்டி மிக வேண்டி - எந்தன்
சுகத்தில் பங்கு கேட்டு வந்திங் கிருக்கிறாய்
கோபம் பெருந் தாபம்
இளையபள்ளி:
சோற்றுக்கும் உங்கள் சுகத்திற்கும் நான்வர
வில்லை அன்பு எல்லை
தெய்வ அடியார் பணியென்று நான் மணம்
கொண்டேன் அன்பு விண்டேன்
மூத்தபள்ளி:
வித்தாரக் கள்ளியே எல்லாம் விசாரித்து
விட்டேன் நம்பிக் கெட்டேன்
வீணாச்சு என் வாழ்வு தேனாச்சு உன்வாழ்வு
பாவி கொடும் பாவி
இளையபள்ளி:
மெத்தவும் கோபித்தால் மெய்யை அறிந்திட
லாமோ துன்பம் போமோ
மென்மையாய்ப் பேசுங்கள் உண்மை உணருங்கள்
வாரும் அன்பு கூரும்
மூத்தபள்ளி:
வாழ்வு பறிபோகும் போது கோபம் வாரா
தோடி செய்தாய் மோடி
வந்து சக்காளத்தி உயிரைப் பறித்துவிட்
டாயே அடி நாயே
இளையபள்ளி:
தாழ்வு தரும் கோபம் தகுதியற்ற பேச்சு
வேண்டாம் இங்கே வேண்டாம் - உங்கள்
சொந்தக் கணவரை நீங்கள் கைக்கொள்ளுங்கள்
போறேன் சாலை போறேன்
மூத்தபள்ளி:
நீபோனால் தானடி நான் வாழவழி வரும்
பெண்ணே பேதைப் பெண்ணே - பள்ளன்
நீசத்தன மெல்லாம் நீங்கும் அதற்குப் பின்
னாலே அத னாலே
இளையபள்ளி:
தாப மிகுதியாய் தாறுமாறு பேசு
கின்றீர் சொல்லால் வென்றீர் - எந்தன்
சற்குணக் கணவரைச் சந்தித்துச்சொல்லி நான்
ஏகும் தெளி வாகும்

தெய்வத் திருமுன்னர் சான்றோர் சபையினில்
வந்தார் சத்யம் தந்தார்
சாந்தகுணம் கண்டு கைகொடுத்தார் அன்று
அக்கா அன்பு அக்கா

திக்கற்ற வர்போல சிந்தை நொந்துமிக
வருந்தி அங்கு இருந்தார்
தெய்வத்திருவுள உத்திரவு கேட்டுக்
கொண்டார் மணம் கொண்டார்

என்ன உங்கட்குள்ளே இருந்த பிணக்கெதும்
அறியேன் ஏதும் தெரியேன்
இங்கு வந்த பின்னர் இத்தனை செய்தியும்
தெரிந்தேன் சிக்க லறிந்தேன்

என்னாலே உங்கள் வாழ்வினில் இடரெதும்
வேண்டாம் இனிவேண்டாம் - அவர்
சொன்னால் விலகிநான் செல்கிறேன் நீங்களே
வாழ்வீர் இன்பத் தாழ்வீர்

கோபம் பிடிவாதம் கொண்டால் சுகம் வாழ்வில்
இல்லை அன்பு எல்லை - நான்
கொண்ட கணவரின் தெய்வ குணத்திற்கு
ஈடு இணை யில்லை

உத்தமர் நற்குணம் உயர்ந்த பண்பாளர் நம்
கணவர் நல்ல குணவர் - பக்தி
ஓங்கி வளர்ந்தவர் அன்பும் பணிவுடை
சீரோர் நல்ல பேரோர்

இத்தனை நல்லவர் மேலுங்கட் கேனக்கா
கோபம் பெருந்தாபம் - தெய்வ
சத்திய சீலர்தான் செய்த குற்றமென்ன
அக்கா அன்பு அக்கா

கொண்ட கணவரே தலைவரென்றே மிக
வணங்கி அன்பாய் இணங்கி - வாழ்ந்தால்
கோபம் தாபம் குறை யேதும் வாராதுங்க
அக்கா அன்பு அக்கா

அண்டி அன்பாக அவர்சுக மேபெரி
தென்றால் அது நன்றாம்
ஆதரவாய் நம்பால் ஆசைகொண்டே அன்பு
தருவார் இன்ப முறுவார்

உழைத்துக் களைத்துண வோய்வு கொள்ளவரும்
போது மனை மாது
உள்ளன் போடினி துபசரித்தாலது
போதும் இன்பம் மோதும்

சீறி விழுந்திட்டால் மாறிவிடும் அன்பு
தீங்கே விளை வாங்கே
சிரிப்பும் களிப்புமாய் சேர்ந்திருந்தால் வரும்
பாங்காய்ச் சுகம் ஓங்கும்
கண்அவர் நாம் அந்தக் கண்ணினுட் பாவையென்
றுரைப்பார் சான்றோர் உரைப்பார் - அன்பு
கருதாது கோபமுற்றால் நமக்கில்லையே
வாழ்வு வரும் தாழ்வு.

விண்ணவர் போலும் என் வேந்தர்பால் குற்றமும்
காணேன் ஏதும் காணேன் - நீங்கள்
வேகமுடன் வந்து பேசுதல் கேட்டுளம்
அஞ்சும் துன்பம் மிஞ்சும்

கணவர் சுகமேநம் சுகமெனக் கொண்டிடும்
கருத்தை நெஞ்சில் பொருத்தி
கண்ணுக்குக் கண்ணாகக் கணவனைக் காப்பவள்
மனைவி பெரும் துணைவி

தாய்க்குப் பின் தாரமே தாய்போல அன்பு கொண்
டிருப்பாள் பெரும் பொறுப்பாய்
சகல காரியத்தும் துணைசெய் சினேகிதி
தந்திரி நல்ல மந்திரி

வாய்க்குநல் லுணவும் மனதுக்கு யோசனை
தருவாள் அன்பு பெறுவாள்
நோய்க்கு மருந்தவள் இன்பவிருந்தவள்
நல்லவள் அன்பு உள்ளவள்

கொண்ட கணவனைக் கனிவாய்க் காக்கும்பெண்ணே
சுவர்க்கம் வாழ்வின் நல்வர்க்கம்
கண்ட படிபேசும் காதகி கணவர்க்கு
நரகம் கெட்ட கிரகம்

கோடி கொடுத்தாலும் கொண்ட கணவர்க்கு
நிகரார் யாரும் பகரார்
குணமுள கணவரே இறைவன்தந்த நல்ல
பரிசு உயர் பரிசு

கணவர்க்கு முன்னெழுந் தேபணி செய்பவள்
பத்தினி தர்ம பத்தினி
கணவன் உறங்கிய பின்னுறங்கும் பெண்ணே
நல்லவள் வாழ்வில் வல்லவள்

கணவன் உண்டபின்னர் உண்பதுதான் நல்ல
முறைமையாம் வாழ்வின் தரமதாம்
கணவர்க்கு முன்னுண்டு கழுவிவைப்பாள் கொடும்
அரக்கியாம் தீய சிறுக்கியாம்

கணவர்க்குத் தெரியாமல் ஏதும் செய்யாள் நல்ல
உத்தமி பெரும் உத்தமி
கண்டும் காணாமலும் சிறுவாடு சேர்ப்பவள்
காதகி பெரும் பாதகி

கணவனின் கௌரவம் சொத்து சுகமெல்லாம்
மனைவியே நல்ல துணைவியே - அந்தக்
கணவனின் பெருமையைக் குறைக்கும் செயல்செய்தால்
துரோகமாம் அவள் நரகமாம்

அன்புகுறையாமல் கணவனைக் காப்பவள்
சீதேவி நல்லமாதேவி - அவனை
அடிக்கடி முறைத்துப் படிக்கொரு குறை சொல்வாள்
மூதேவி கொடிய மாபாவி

கணவன் மனைவி என்போர் கருத்தொரு மித்திட்டால்
சொர்க்கமாம் நல்ல வர்க்கமாம்
கருத்தில் பொருத்தமின்றி வருத்தம் இடைபுகுந்தால்
நரகமாம் வாழ்வு நரகமாம்

அடுத்தவர்க் கொப்பிட்டு கணவனைக் குறைகூறல்
பாதகம் பெரும் பாதகம் - மிக்க
அன்பாய் இருவர் சேர்ந்து அகமும் முகம் மலர்ந்தால்
சாதகம் வாழ்வே நீதமாம்

தீனிஓயாதுண்டு தெருப்பண்டம் வாங்கியுண்டு
வாழ்பவள் வாழ்வில் தாழ்பவள் - நன்கு
தின்று தூங்கிவிழும் பெண்ணே குடும்பத்திற்குக்
காலனாம் கொடுங் கோலனாம்

தனைச் சார்ந்தோர் கணவனைச் சார்ந்தோர் எனப்பேதம்
செய்பவள் வாழ்வைக் கொய்பவள்
சர்வத்தி ராளுக்கும் சமஅன்பு செய்பவள்
பாங்குளாள் வாழ்வில் ஓங்குவாள்

மேனிமினுக்கிப் பிறர் வியக்க வேண்டுமென்று
நினைப்பவள் வீணாய்க் கனைப்பவள் - அவள்
வேசியென் றுரைசெய்வர் அன்னவளே கெட்ட
கள்ளியாம் வாழ்வில் கொள்ளியாம்

ஆயிரம் தொழில் செய்து அலுத்துக்கணவன் வந்தால்
அன்புரை கூறு தென்புரை
அழகாய் உபசரித்தால் அவனின் வலிமைமிகும்
ஆர்த்திடும் செல்வம் சேர்ந்திடும்

சமைத்த உணவைத் தெய்வ சமர்ப்பணம் செய்துதான்
பரிமாறும் பின்னர் பசியாறும்
தனக்கிறை தந்தது இதுபோதும் என்றுளம்
நிறைவுறும் வாழ்வின் துறைபெறும்

தன்வீட்டுச் சங்கதி பிறர்க்குரைத் திகழாதாள்
கண்மணி நல்ல பெண்மணி
சார்ந்து பிறர்குற்றம் கூறாத பண்பினள்
நன்மணி சேர்ந்த பொன்மணி

இருப்பதே போதுமென் றெண்ணம் கொண்டாள் உலகின்
நேர்மையாள் மதிக் கூர்மையாள்
இல்லாத தற்கேங்கும் பொல்லாத ஆசையாள்
ஈனத்தாள் அவ மானத்தாள்

தாயும் சேயும் போல நேயம்கொண்டு வாழ்தல்
இன்பம் வீயும் துன்பம்
சற்றும் ஏறுமாறு வந்திட்டால் வந்திடும்
தாழ்ச்சி வாழ்வில் வீழ்ச்சி

பெண்ணைக் கண்போல் நன்கு பேணும் கணவனே
பெரியோன் வாழ்விற் குரியோன் - பெண்ணைப்
பெரிதும் துன்புறுத்தித் துரோகம் செய்வோன் வாழ்வில்
கடையன் பெரும் மடையன்

நீவாபோ அவனிவன் என்றேக
வசனம் தரும் விசனம்
நீங்க வாங்க என்ற மரியாதைச்சொல் வாயில்
புழங்கில் நன்மை வழங்கில்

சரிசரி வீண்பேச்சேன் சத்திய சீலர்பால்
சென்று பணிந் தின்று
சம்மதம் கேட்டு நான் சாலைக்குச் செல்கிறேன்
தாயே அன்புத் தாயே

என்னாலே வாழ்வு கெட்ட தென்றே உங்களின்
பேச்சே துன்ப மாச்சே
எனக்கு வேண்டாம் பாவம் இன்பமாய் நீங்களே
வாழுங்கள் அன்பில் ஆழுங்கள்

போய் வருகின் றேன்நீங் கள்மக ராசியாய்
இருங்கள் இன்பம் பெறுங்கள்
பொன்னரங்கர் சாலை தெய்வத்தைப் போற்றிசெய்
திருப்பேன் இனி திருப்பேன்

மூத்தபள்ளி:
நில்லடி தங்கையே நீயெங்கும் சென்றிட
வேண்டாம் செல்ல வேண்டாம்
நின்பணி வன்புடைப் பேச்சும் நிதானமும்
நன்று எனக் கண்டேன்

கொல்லும் குணமெனும் முன்கோபக் காரிநான்
பாவி கொடும் பாவி
கொண்ட கணவரைக் கண்டபடி பேசி
விட்டேன் அதனால் கெட்டேன்

எல்லாம் என்கைக்குள் இருக்க வேண்டும் என்ற
எண்ணம் செய்த பின்னம் - பின்னர்
இத்தனை வம்பும் வழக்கும் துன்பம் வர
லாச்சே சுகம் போச்சே

இல்லாத தற்கெல்லாம் ஏகமாய்ச் சண்டைகள்
செய்தேன் மிக வைதேன் - மற்றும்
ஏதேதோ பேசி மனம் மிக நொந்திட
வைத்தேன் மனம் கைத்தேன்

கொண்டுவந்த காசைக் கோளாறாய்த் திருடியும்
கொள்வேன் ஞாயம் விள்வேன் - அதைக்
கண்டுகேட்டாலும் அதற் கொரு காரணம்
உரைப்பேன் மிக முறைப்பேன்

புருஷன்வீட்டில் திருடி அப்பன் வீட்டில் தந்து
சீதனம் எங்கப்பன் மாதனம் - என்று
வரிசையாகக் கொண்டு வந்தடிப் பேன்பெரும்
தம்பட்டம் அது என்னிட்டம்

புருஷன் வீட்டை இகழ்ந்தப்பன் வீட்டில் பேசிச்
சிரித்தேன் கர்வம் தரித்தேன்
வரிசை தப்பி எந்தன் வாழ்வின்முன் னேற்றத்தைச்
சரித்தேன் என்னை எரித்தேன்

புருஷன் சொல்லி என்ன பெண்டாட்டி கேட்பது
போங்கடி ஏமாளி நீங்கடி
புருஷன் உச்சியைப் பிடித்தாட்டுவதிக்காலம்
நாங்கடி குடும்பப் பாங்கடி

ஆம்பிள்ளை என்னடி கொக்கா எனத்திமிர்
பேசினேன் நாவும் கூசிலேன்
நாம்வைத்த தேசட்டம் என்றசம் பாவமாய்த்
திரிந்தேன் இன்று புரிந்தேன்
மட்டுமரியாதை யின்றிப் பேசிமனம்
நோக வெறுப் பாக
வஞ்சம் நெஞ்சில் வைத்துத்துன்பம் மிகத்தர
லானேன் வீணாய்ப் போனேன்

சமைக்கும் போதே நன்றாய்ச் சாப்பிட்டு மீதிதான்
கணவர்க்கும் அவர்துணைவர்க்கும்
இமைக்கும் முன்னே பண்டம் எடுத்துமறைத்து வைப்பேன்
தெரியாமல் யார்க்கும் புரியாமல்

சோறு வட்டிலிலிட்டுச் சுறுக்குச் சுறுக்கெனப்
பேசி ரொம்ப ஏசி – அவர்
சரியாக உண்ணாமல் எழுந்துபோகச் செய்த
பாவி படு பாவி

சாலைக்குப் போகிறேன் என்றால் தலைவலி
யென்பேன் துன்பம் என்பேன் – புதுச்
சேலைவேண்டும் என்று வாதாடிப் போகாமல்
தடுப்பேன் மிகக் கெடுப்பேன்

தலைவலி மருந்தைத் தடவிப் போர்த்திக்கொண்டு
படுப்பேன் படுத்தே கிடப்பேன்
தலைவன் மனமிரங்கி சமைக்கும் போதுள்ளுக்குள்
சிரிப்பேன் நெஞ்சில் களிப்பேன்

மூலையில் முக்காடிட் டேகிடந்தே நோய்போல்
நடிப்பேன் மிகத் துடிப்பேன்
மிக்காணவமாக நடந்து கொண்டேனம்மா
அரக்கி தீய சிறுக்கி

மாமி மைத்துனிகளை மரியாதை யின்றிப்பேசி
வெறுப்பேன் சேர்க்கா தொறுப்பேன்
மாமனார்க்குக் கூட மரியாதை செய்வதாய்
நடிப்பேன் பின்னால் வெடிப்பேன்


அக்காள் தங்கையிடம் வீட்டில் நான் ராணியென்று
பீற்றுவேன் எனைநானே போற்றுவேன்
எக்காலும் புருஷனை மிஞ்ச விடேனென்று
பேசுவேன் வார்த்தை வீசுவேன்

எவளென்னைவிட அழகியென்றென் மனத்
தெண்ணு வேன்அலங்காரம் பண்ணுவேன்
எவளையும் மதிக்காது திமிர்த்தன மாகவே
அலைந்தேன் வாழ்வில் குலைந்தேன்

எனைவிட யாரும் நன்றாயிருக்கக் கூடாதென்று
எண்ணுவேன் சண்டி பண்ணுவேன்
தனக்கு மிஞ்சித் தானே தரும மென்றுதவிட
மறுப்பேன் பிறரை வெறுப்பேன்

வாய்திறக்கும்முன்னே வாயடைக்க வைக்கும்
வாயாடி பெரும் பேயாடி
தூய அவர் மனத்தில் துன்பம் நிறையச் செய்த
பாதகி பெரும் காதகி

கொட்டுக் கொட்டென்றுகாலை கொட்டிக் குதிரைபோல
நடப்பேன் படபடப்பேன் - பேச்சில்
வெட்டு வெடுக்கெனப் பேசி கழுதை போலக்
கத்துவேன் கேட்டால் மொத்துவேன்

பண்ணையாரிடம் சொல்லி இந்தத்துன்பம் நான்தான்
செய்தேன் அந்தோ செய்தேன் - பாவி
பெண்ணாய்ப் பிறந்திட்டேன் பேயாய் நடந்திட்டேன்
பேதை பெரும் வாதை

மண்போற் பொறுமையும் அன்பும் கொண்டசாலை
நங்காய் அன்புத் தங்காய்
மாறாக உன்னைக் கருதித் துரத்திட
நினைத்தேன் தப்பாய் நினைத்தேன்


வந்தாள் சக்களத்தி என்றுனை நான் மிக
வைதேன் துரோகம் செய்தேன்
வந்தெனக் கேநல்ல வாழும் வழிவகை
சொன்னாய் அன்புப் பெண்ணாய்

சாலை நெறியென எத்தனை யோஅவர்
உரைத்தார் நானோ முறைத்தேன் - வேறு
வேலையில்லை போவென்றுரைத்தே சொல்லை
மறுத்தேன் மிக வெறுத்தேன்

உலகம் தெரியாத பேதை நான் செய்தேனே
கொடுமை கொடும் மிடிமை - மிகக்
கலகம் செய்து கொண்ட கணவர்க்குச் செய்தேனே
தீது அறி யாது

போனது போகட்டும் ஆனது ஆகட்டும்
வாம்மா அன்பு தாம்மா - கூடிப்
போய்ப் பண்ணை யாரிடம் வேண்டிக் கணவரை
மீட்போம் அன்பாய்க் காப்போம்

தெய்வத் திருவருள் செய்த அதிசயம்

இளையபள்ளி:
அக்கா அன்பு அக்கா - உங்கள்
சிந்தை கனிந்து திருந்திப் பொருந்தினீர்
அன்பாய்ப் பெரும் பண்பாய்

என்ன செய்வோமினி எங்குச் செல்வோமென
எண்ணினேன் கண்ணீர் சிந்தினேன்
என்குல தெய்வத் திருவருள் செய்தது
விந்தையே பெரும் விந்தையே

என்னவர் வாழ்வினி என்னுறுமோ என்று
ஏங்கினேன் மிகத் தேங்கினேன் - தெய்வ
இன்னருளால் மனம் மாறி இணைந்தனிர்
அம்மையே உம்முள் செம்மையே
உய்வழி தந்திடும் மெய்வழித் தெய்வமே
போற்றினேன் மிக ஏற்றினேன்
உற்ற சகோதரி ஓங்கும் பண்புபெறச்
செய்தீரே அருள் பெய்தீரே

ஒருமேனி இருகைகள் இருகால்கள் இருகண்கள்
போலே இனிமேலே
உற்ற கணவரைப் பேணி இனிதிங்கு
வாழ்வோம் இன்பத் தாழ்வோம்

திருவோங்கு தெய்வத் திருப்பணிக் கேநல்ல
குடும்பம் நம்மின் குடும்பம்
சீரும் சிறப்பு மாய்ச்சாலைத் தெய்வம் போற்றி
இருப்போம் இனிதிருப்போம்

மூத்தபள்ளி:
ஏதேதோ எண்ணிக் கொண்டிங்கு வந்தேன் அது
போச்சு மாறிப் போச்சு - நான்தான்
எண்ணியது தவறென்று தெளிவுற
லாச்சு நன்மை ஆச்சு

மாதே உனது பேர் என்னென்று சொல்லுவாய்
மங்கை நல்ல தங்கை
வாயில் வந்தபடி வைதேன் வருந்தாதே
பெண்ணே அன்புக் கண்ணே
இளையபள்ளி:
தெய்வம் சாலைஞான சௌந்தரி எனப்பெயர்
சூட்டி அருள்காட்டி - எனைச்
சாலைத்திரு வேதம் ஓதி வளர்த்தினர்
சீராய் உள்ளம் நேராய்

உய்யும் வழியருள் ஓங்கும் தெய்வத்தய
வாலே இனிமேலே - நாம்
ஒன்றாக இருந்து மெய்வழிக் குடும்பமாய்
விளங்கி மிகத்துலங்கும்

 பசியாறுங்கள் அக்கா பர்த்தாவைப் போய்ப்பார்த்து
வருவோம் அன்பு பெறுவோம் - அவர்
படுகின்ற துன்பத்தைப் பார்க்க முடியலை
மீட்கும் வழி பார்ப்போம்
மூத்தபள்ளி:
கூப்பாடு போட்டு நான் கோபிப்பதற்கிதோ
பரிசு அன்பு பரிசு
சாப்பாடு போடும் உன் சற்குணத்திற் கென்ன
கூறுவேன் அன்பாய் மாறுவேன்
இளையபள்ளி:
சாப்பாடு அல்லங்க பசிப்பாடு என்றினி
சொல்லுங்க அன்பால் வெல்லுங்க
சற்சனர் வாழ்சாலைப் பண்பாடு எதிலுமே
ஆக்கமாம் மெய்யில் ஊக்கமாம்
மூத்தபள்ளி:
சாலை வாழ்வோர் இங்ஙன் சாந்தகுணம் கொள்ளு
வாரோ பெறும் சீரோ - எந்தன்
சண்டாளத் தனமெல்லாம் தீர்ந்ததினிச் சாலை
சாருவேன் மெய்யில் மாறுவேன்
இளையபள்ளி:
சத்திய தேவ பிரம்ம குலத்தினர்
நாங்கள் பண்பில் ஓங்கி
சகலர்க்கும் எடுத்துக் காட்டாக விளங்குவோம்
தாயே அன்புத் தாயே
அனந்தர் குலப்பெண்கள் அகிலத்திலே உயர்ந்
தோர்கள் பெரும் சீர்கள் - நாங்கள்
அன்பும் சத்தியம் சாலை ஆண்டவர் பக்தியும்
உடையோர் பண்பு நடையோர்

நல்லது கணவரைச் சிறைமீட்கச் செல்லுவோம்
வாங்க அன்பு தாங்க - அக்கா
நம்மிரு வருக்குமே ஒருசொத்து நம்முயர்
கணவர் நல்ல குணவர்

கணவர்க்குப் பிடித்திட்ட உணவைச் சமைத்துநான்
தருவேன் அன்பாய்த் தருவேன் - உங்கள்
கையால் அவர்க்கிட்டு கனிவாய் அவரன்பைப்
பெறுங்கள் நேசம் உறுங்கள்

மூத்தபள்ளி:
இத்தனை நற்குணம் எப்படிக் கொண்டாய் நீ
கண்மணி தெய்வப் பெண்மணி - இனி
என்னை மன்னித்திடு இருவரும் போவோம்வா
ஏந்திழை கனி வார்ந்தனை

மூத்தவள் கணவனுக்கு உணவு கொண்டு செல்லல்

அறுசீர் விருத்தம்

இங்ஙனம் இருவர் பெண்டிர்
இசைந்துளம் இணைந்தார் பள்ளன்
அங்குறு சிறைக்கு நல்ல
அமுது கொண்டேக லுற்றார்
அங்குகால் குட்டை மாட்டி
அவனவஸ் தையால் நொந்தான்
பொங்கியே சினந்தான் மூத்தாள்
பார்வையில் பட்ட போதே

சிந்து

குடும்பன்:
இப்படிச் சிறையிலென்னை மாட்டிவிட்டாயே - உனக்கு
இப்பொழுது சந்தோஷமா யிருக்கிறதோடி
எப்படி முகத்தில் விழித்திட வந்தாயோ - என்னை
ஏளனம் செய்திட்டுத் துன்பம் பார்க்க வந்தாயோ
ஒப்பியே மனம் துணிந்து பண்ணை யாரிடம் - நீயும்
உள்ளதில்லா தெல்லாம் சொல்லிச் சிறையிலிட்டாய்
தப்புசெய்த தாரடிசற் றெண்ணிப் பாரடி - இந்த
தாரணியில் நானிழைத்த குற்ற மென்னடி
மூத்தபள்ளி:
உங்கள் குணம் உத்தமத் தன்மைகளறியேன் - இங்கு
உற்றபிழை செய்கைதனை மன்னித்திடுங்கள்
தங்கமென நானறியேன் தரையிலிட்டேன் - இன்றென்
தங்கையு ரையால் திருந்தி உண்மையறிந்தேன்
உங்கள் மனம் ஒப்பிஎனை ஏற்றுக் கொள்ளுங்கள் - இதோ
உணவு கொணர்ந் தேனதனை உண்டருளுங்கள்
இங்கிப்போதே பண்ணையார் பால் ஏகியுரைத்து - உங்கள்
இன்னல் களைந்திடச் செய்வேன் என்னினியரே!
குடும்பன்:
உந்தனுக்கு இந்தக்குணம் எப்பவந்தது - மனம்
ஒப்பினாயோ இளையவனைத் தங்கையென்றுநீ
எந்தனுக்கு ஆச்சரியம் மெத்தவாச்சுது - தெய்வம்
எந்தனுயிர் நாயகர் தயவாலாச்சுது
சந்தேகப் புத்தியெல்லாம் மாறிப்போச்சுதோ - வெட்டிச்
சக்களத்திச் சண்டை யெல்லாம் தீர்ந்து போச்சுதோ
வந்தவளும் நீயுமொன்றாய் மகிழ்ந்திருந்தால் - இந்த
மாமலையை ஓர்கடுகாய்த் தூக்கிடுவேண்டி
மூத்தபள்ளி:
வெந்துமனம் நொந்ததுண்டு முந்த நாளிலே - இந்த
மெல்லியலாள் மாற்றிவிட்டாள் இந்த நாளிலே
கந்தையாய்க் கிழித்தெறியக் கோபமாய்ச் சென்றேன் - அவள்
கனிவுடனே உபசரித்து அன்புடன் நின்றாள்
சிந்தையிலே சிக்கலெல்லாம் தீர்ந்துபோனது - மனம்
தெளிந்துவிட்டேன் சமாதானம் மிக்க ஆனது
இந்த உணவேற்றுக் கொண்டு பசியாறுங்கள் - நானும்
இப்பவேபண் ணையாரிடம் உண்மை உரைப்பேன்
குடும்பன்:
மைமருந்து சொக்குப் பொடி போட்டாளென்றாயே - அந்த
மைமருந்தை உந்தனுக்கு வைக்கவில்லையோ
செய்பணிகள் தவறாமல் செய்யும் பொன்மகள் - தெய்வச்
சிந்தையொடு வாழுகின்ற நல்ல விண்மகள்
ஐயமெதும் யாரிடமும் கொண்டு பழகாள் - அவர்
அனந்தர்குலப் பண்பினில் சிறிதும் வழுவாள்
துய்யமலர் நன்மணம் போல் நல்ல அன்பினாள் - மனம்
சோர்ந்தவர்க்குத் தேறுதல் சொல்ஓங்கும் பண்பினாள்
மூத்தபள்ளி:
பால்வடியும் வெண்ணிலவு போல்முகத்தினாள் - அந்தப்
பைங்கிளியாள் பொற்புயர்ந்த சீர்அகத்தினாள்
நால்வகைக் குணங்கள்மிக்க நாரீமணியாள் - என்னை
நல்வழிப் படுத்திவிட்ட அன்பின் இனியாள்
சீலமிகும் நல்லனந்தர் சற்குணமெலாம் - இன்று
சேர்த்து வைத்த பெட்டகமே இவள் எனலாம்
ஏலவல்லார் தெய்வம்தந்த நல்லசன்மானம் - என்று
ஏற்று நாமொன்றாயிருந்து இன்பமுறுவோம்
குடும்பன்:
பருத்தி புடவையாகக் காய்த்திட்ட தோடி - ஞானப்
பழம் நழுவி மெய்ப்பாலில் விழுந்திட்டதோடி
ஒருத்தி உன்குண மெண்ணி அஞ்சியிருந்தேன் - தெய்வம்
உன்குணத்தை மாற்றினார்கள் நீசுவைச் செந்தேன்
திருத்திஉன் பண்புமாறச் செய்தாள் இளையாள் - அவள்
தெய்வபதம் போற்றுதலில் யார்க்கும் இளையாள்
கருத்தில் மெய்வழிதெய்வம் நிறுத்தி யிணங்கும் - நாளும்
காலனணு காவரம்கேட் டினிது வணங்கும்
மூத்தபள்ளி:
என்னருமைக் குடும்பனாரே பண்ணைக்குப் போறேன் - அங்கு
என்தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர
வின்னமுற்ற வாழ்விலினி நன்மை தேடுவேன் - அந்த
விண்மக ளோடிணங்கி நானும் ஒன்று கூடுவேன்
என்னிளையாள் ஞானசௌந்தரி யென்பாளை நான் - அன்று
ஏதேதோ பேசிவிட்டேன் மன்னிக்க வேண்டும்
தென்னரங்கர் சாலைவந்து தாள்பணிந்து நான் - தெய்வச்
சேவை செய்து என்னுயிரும் உய்யப் பெறுவேன்
குடும்பன்:
ஆண்டவர்கள் தயவினுக்கு ஈடிணையுடண்டோ - எந்தன்
அச்சமெலாம் தீர அருள் பாலித்த தின்று
வேண்டும் வரம் தந்துஅருள் மிக்க வழங்கும் - தெய்வ
வான் புகழைப் போற்றி உலகெங்கும் முழங்கும்
ஈண்டு எந்தன் வாழ்வினிலே எத்தனைசிக்கல் அவை
யாவும் தீர்ந்து நன்மை வந்த தெந்தனின் பக்கல்
பூண்டு தெய்வப் பாதம்சிர மீது போற்றுவோம் - எங்கள்
பொன்னரங்கர் மாட்சிஓங்கப் பணிந்து போற்றுவோம்
மூத்தபள்ளி:
இவ்வுலக அற்பசுகம் தன்னை எண்ணியே - அந்தோ
ஏதேதோ தவறுகளை நானும் பண்ணினேன்
செவ்வைநெறி யுள்ளதென்று நீங்கள் சொல்லியும் - காது
செவிடாகி மறுத்துரைத்த தீயகள்ளி நாள்
பவ்வியமாய் என்னருமைத் தங்கையுரைத்தாள் - தீய
பண்புகளை மாற்றி நல்ல பண்பை நிறைத்தாள்
எவ்வகையும் தீங்குவாரா மெய்வழியிலே - உங்கள்
இருவரொடும் சேர்ந்து வாழ்தல் செய்வழி யென்பேன்

மூத்தவள் பண்ணையாரைச் சந்தித்து, மன்னிப்பு கோரி, குடும்பனை விடுவிக்க வேண்டல்

கலிப்பா

தன்பழைய பண்புகளைத் தான்விட்டு மெய்வழியே
தன்வழியென் றுள்ளமதில் தானுறுதி கொண்டுவிட்ட
பொன்மலர்தான் வாசமது பெற்றதுபோன்ம் மூத்தவளும்
தன்கணவர்ச் சிறைமீட்கப் பண்ணையார்பால் தானேகும்
மூத்தபள்ளி:
நமஸ்காரம் பணிந்துரைத் தேன் பண்ணையான்டே-உமை
நாடிவந்து வேண்டுகின்றேன் பண்ணை யாண்டே
மமகாரம் ஓங்கியதால் பண்ணையாண்டே - நான்
மனங்கசிந்து வாடுகின்றேன் பண்ணையாண்டே
பண்ணையார்:
உந்தனுக்கு வந்ததென்ன பள்ளியாரே - அதை
உரைத்திடுவாய் சீக்கிரமாய்ப் பள்ளியாரே
எந்தன் முன்னே முகம்சோர்ந்து பள்ளியாரே - நீயும்
இளைத்துமிக வந்ததென்ன பள்ளியாரே
மூத்தவள்:
பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லுவார் - அது
பொய்யில்லை மெய்தாங்க பண்ணையாண்டே
கண் போன்ற என்கணவன் சிறையிலிருக்க - நானே
காரணமாய் ஆகிவிட்டேன் பண்ணையாண்டே:
பண்ணையார்:
நீதானே சாடி சொல்லிக் குற்றங்கள் சாட்டி - அவன்
நெடுந்துயரம் கொள்ளச் செய்தாய் பள்ளியாரே
தோதாய் பலகுறைகள் சொன்னதாலே - அவன்
துன்பமுறச் சிறையிலிட்டேன் பள்ளியாரே
மூத்தவள்:
எனதாசைப் புருஷனின்மேல் பண்ணையாண்டே -நான்
இல்லாத குற்றமெல்லாம் சொன்னேனாண்டே
மனதாரப் பொய்யுரைத்தேன் மன்னிக்கவேணும்-தாங்கள்
மனதிரங்கி விடுவிக்கணும் பண்ணையாண்டே
பண்ணையார்:உன்பேச்சைக் கேட்டல்லவோ பள்ளியாரே - ஒரு
உத்தமனைச் சிறையிலிட்டேன் பள்ளியாரே
அன்பனவன் குற்றமதை ஆய்ந்துபாராமல் - பாவம்
அநியாயம் செய்துவிட்டேன் பள்ளியாரே
மூத்தவள்:
பண்ணை வேலை செய்ததிலும் குற்றமுமில்லை -பண்ணைப்
பாங்குகளில் எள்ளளவும் குற்றமுமில்லை
பெண்ணொருத்தி மறுதாரம் கொண்டு வந்ததால் - புத்தி
பேதலித்துச் சாடி சொன்னேன் பண்ணையாண்டே
பண்ணையார்:
பெண்ணாசை கொண்டவனென் றேயுரைத்தாயே - அவன்
புத்திகெட்டான் என்றுரைத்தாய் பள்ளியாரே
விண்ணானக் கள்ளியுந்தன் பேச்சினைக் கேட்டு - நான்
வீண்பழியை ஏற்றுக் கொண்டேன் பள்ளியாரே
மூத்தவள்:
காசாசை கொண்டவள்நான் பண்ணையாண்டே - சற்றுக்
கடுகடுத்தே பேசிவந்தேன் பண்ணையாண்டே
ஏசிமனம் நோகச் செய்தேன் பண்ணையாண்டே - அவர்
இதயம்மிக நொந்துபோனார் பண்ணையாண்டே
பண்ணையார்:
அழுதனையே தொழுதனையே பள்ளியாரே - உந்தன்
அகமுடையான் பாவியென்றாய் பள்ளியாரே
பழுதுடையான் என்று சொல்லி அழுததாலே - அவனைப்
பாராமல் சிறையிலிட்டேன் பள்ளியாரே
மூத்தவள்:
அன்பில்லா நடக்கையாலே பண்ணையாரே - அவர்
அன்பு மனம் வேறுபட்டார் பண்ணையாரே
என்பொல்லாக் குணத்தாலே பண்ணையாரே - ஒரு
இளையவளும் வரலாச்சு பண்ணையாரே
பண்ணையார்:
சற்றேனும் யோசியாமல் பள்ளியாரே - உந்தன்
சாடிச் சொல்லால் பாவம் செய்தேன் பள்ளியாரே
குற்றமில்லா உத்தமனைப் பள்ளியாரே - நானும்
கொடுமை செய்து பாவம் கொண்டேன் பள்ளியாரே!
மூத்தவள்:
தப்பு தப்பு மன்னிக்கோணும் பண்ணையாரே - எந்தன்
தலைவரையே விடுவியுங்கள் பண்ணையாரே
ஒப்பிமனம் புண்படுத்தி விட்டேனாண்டே - அந்த
உத்தமரை விடுவியுங்கள் பண்ணையாண்டே
பண்ணையார்:
செப்பமுள்ள நல்லவனைப் பள்ளியாரே - நானும்
சிறையிலிட்டேன் உன்மொழியால் பள்ளியாரே
தப்பதுதான் சிறைவிடுத்தேன் பள்ளியாரே - உந்தன்
தலைவனையிங் கழைத்து வாராய் பள்ளியாரே
மூத்தவள்:
கோடிகோடி நமஸ்காரம் பண்ணையாண்டே - உங்கள்
குலம் விளங்க வேணுமுங்க பண்ணையாண்டே
நாடி வந்து வேண்டிக்கொண்டேன் பண்ணையாண்டே - எனக்கு
நன்மை செய்தீர் நமஸ்காரம் பண்ணையாண்டே
பண்ணையார்:
இடக்குநீ செய்ததாலே பள்ளியாரே - உனக்கு
இந்தவினை வந்ததுகாண் பள்ளியாரே
நடக்குங்கால் இடறலுண்டு பள்ளியாரே - அந்த
நல்லவனை அழைத்திங்குவா பள்ளியாரே

அறுசீர் விருத்தம்

ஆரடா கோல்க்காரன் போய்
ஆசாரிதனைக் கொணர்ந்து
சீருடைக் குடும்பன் தன்னைச்
சிறைவிடுதலைசெய் பின்னர்
பேருயர் பண்பி னானைப்
பண்ணைக்கு வரச் சொல்வாயே
பாரிடை நல்லோ ரென்றும்
பழுதுறார் என்றார் பண்ணை

குடும்பன் பண்ணையார் சந்திப்பும் உரையாடலும்

சிறைமீண்ட சீர்குடும்பன் தெய்வபதம் தோத்தரித்து
இறைதயவால் மீட்சியுற்றேன் என்மனையர் இருபேரும்
நிறைமனத்தோ டுறைகின்றார் நற்பண்ணை யாருரைக்கு
மறுமொழியும் செய்பணியும் மகிழ்ந்துரைக்க விரைகுவனே
குடும்பன்:
நமஸ்காரம் நமஸ்காரம் பண்ணையாண்டே-தங்கள்
நல்லபண்ணைக் குடும்பன் நான் வந்துள்ளேன் -ஆண்டே
உமதாணை என்னவென்று சொல்லுங்கள் ஆண்டே - அதை
உங்கள் உள்ளம் நிறைவுறச் செய்குவேன் ஆண்டே
பண்ணையார்:
நமஸ்காரம் சொன்னதெல்லாம் நன்றுகுடும்பா- உன்னை
நான் மெத்தத்துன்பம் செய்தேன் அன்புக் குடும்பா
நாரியர்தம் பேச்சை நம்பிச் சிறையிலிட்டேன்- அதை
நினைத்து நினைத்து நெஞ்சில் நிம்மதி கெட்டேன்
குடும்பன்:
நடந்ததை எண்ணி நெஞ்சில் வேதனை வேண்டாம்- உங்கள்
நல்ல மனம் நானறிவேன் அன்புள்ள ஆண்டே
நடப்பது தெய்வச்செயல் என்று தெளிவாய்-எந்த
நாளும் நம்பியிருப்ப தென்குணம் ஆண்டே
பண்ணையார்:
ஊரிலில்லாத தொரு புதுவழக்கம்-நீ
உருமாலை குருமாலை கட்டிக் கொண்டனை-உன்
பேரில் பலகுறைகள்பள்ளி சொன்னதால் - நான்
போடவேண்டிய தாச்சு சிறைதனிலே
குடும்பன்:
மெய்வழிச்சாலை தெய்வ மெல்லடியிலே - நானும்
மிக்கடிமை ஆகியுள்ளேன் பண்ணை ஆண்டே
தெய்வத்திருச் சின்னந்தான் இந்த உருமால் - ஐயர்
சர்வேஸ்வரர் தயவால் தந்த அருள்மால்
பண்ணையார்:
மெய்வழி என்றால் என்ன சொல்லுதெளிவாய் - அதன்
மேன்மை சிறப்புகளை விள்ளு முறையாய்
பொய்வழியோ உலகில் உள்ள மற்ற வழிகள் அதனைப்
பூரணமாகச் சொல்லு சற்றுவி ரைவாய்
குடும்பன்:
புழுக்கம் வித்து, அண்டம், சினை என்று நால்வகை - உயிர்ப்
பிறப்பிடங்கள் சொல்லுவார்கள் பண்ணைஆண்டே - அதில்
பிறக்கும் உயிர்கள் ஏழுவகை ஆண்டே - அரிய
பிறப்பு மானிடப் பிறப்பானது ஆண்டே
தருக்கினம் புள்ளூர் காலி ஜலம்வாழ் ஜந்தும் - இவை
தானைந்து பிறப்பினம் ஆனது ஆண்டே
அருள்பெற்று உய்வைப் பெறும் மனிதஇனம் - இது
ஆறாவது பிறப்பு ஆனது ஆண்டே
மனிதனே சற்குருவால் தன்னையறிந்து - உயிர்
மெய்ம்மை பெற்றுத் தலைவரைத் தானறிந்திடில்
இனிது ஏழாம் பிறப்பாம் அமரர் என்பார் - இதை
எய்துவதே மனிதனின் கடமை என்பார்
அமரர் பிறப்புறுதல் மனுக்கடமை - இதை
அறியாத மாந்தரெல்லாம் ஏமன் உடமை
இமையவர் தெய்வம் ஒரு குருவுருவாய் வந்து
இன்னமுதம் தந்தருளும் மனிதனுக்கு
ஆதியிலே சைவம் வந்திச் சேதி சொன்னது - மனு
அமரராம் மெய்ந்நெறியாம் நீதி சொன்னது
பாதியில் பாதகர் பொய்யர் பாசாண்டியரும் - இடையில்
புகுந்துநக லாக்கிவிட்டுப் போயொழிந்தனர்
அடுத்துவை ணவம் என்னும் பெயர் சூட்டியே - அதே
ஆதிநாராயணர் சீர்பாதை காட்டியே
எடுத்துரை செய்து மனுக்கின்னருள் செய்தார் - அதும்
இப்படியே போலியரால் மெய்ம்மறந்தது
சமணம் பௌத்தம் கிறிஸ்து இஸ்லாம் என்றும் - சீன
கான்பூசி லாவோட்சே ஷிண்டோ என்றும்
சமயம் பலபலவாய் நாமமிட்டுமே - அந்த
சன்மார்க்கம் வந்துமெய்யாம் வழி தந்தது
எத்தனைஎத்தனை பெரியோர்கள் வந்துமே - மெய்யை
இவ்வுலகோர் பெற்று உய்ய நீதி சொல்லியும்
பித்துடைய பொய்ந்நெறியார் இடைப்புகுந்தே - அந்தப்
பெரியோர்க் கிடுக்கண் செய்து துன்புறுத்தினர்
சித்தர்முத்தர் கர்த்தர்யோகி ஞானியரென்போர் - மெய்யைச்
செகத்தோர்க் குரைத்தும் அவர் செவியேற்றிலர்
அத்தனை பேரும் ஆதி அம்பலம் சென்று - தாங்கள்
அவதாரம் செய்வீர் என்று வேண்டிநின்றனர்
ஆயிரம் ஆயிரம் தீர்க்க தரிசி மார்கள் - ஆதி
ஐயர் மெய்வழி தெய்வ வருகை சொல்லி
பாயிரம்கூறி நின்று பார்த்திருக்க வும் - அந்தப்
பரமரே உருவெடுத்து வந்து நின்றனர்
மெய்வழிச்சாலை யென்றோர் ஆசிரமமாம் - அதில்
மேலாம் பொன்னரங்கமெனும் மெய்குண்டமாம்
உய்வழி தந்தருளும் உத்தியோவனச் சோலை
ஓங்கும் தங்காபரணர் தெய்வம் இலங்கும்

ஏகாட்சரம் முதலாம் பஞ்சாட்சரம் சடா
அட்சரம் அஷ்டாச்சரம் என்றுபல வாம்
ஏகாப்பெரு வெளிக்கு ஏக அருள்செய் - எல்லா
இனிய மூலமந்திரம் எழில்துலங்கும்

 வந்தபல பல மதங்களின் மெய்ம்மை மிளிரும் - வான
வைப்புகள் மறைகள்தெளி வாக ஒளிரும்
எந்தை மெய்வழி தெய்வம் இன்னருள்தர - இங்கு
எல்லா மதங்களின் சீர்மாட்சி பெருகும்

சாதி மதங்களெல்லாம் ஒன்று என்றெங்கள் - தெய்வம்
சாலை ஆண்டவர்கள் மெய் சாதித்தருளும்
நீதியுகம் புரக்க வந்த தெய்வமாம் - எங்கள்
நித்தியர் தாள் பணிந்து வாழ்ந்திருக்கிறோம்
பண்ணையார்:
மேல்ச்சாதி கீழ்ச்சாதி இல்லை யானதோ - அவர்
வாழ்வு வளர்முறைகள் வேறுபட்டதோ
நால்வகை வருணமென்று நாட்டிய தெல்லாம் - ஒன்றாய்
நாட்டின் நடைமுறைக்கு ஒத்து வருமோ?
குடும்பன்:
பிறப்பு வகையில் ஏதும் பேதமேயில்லை - அவர்
பெறும்ஆசா பாசங்களில் வேற்றுமை காணோம்
சிறப்பு அவரவர்தம் செய்ந்நடை முறை - இதைச்
சிந்தித்துப் பார்த்தறிந்தால் வேற்றுமை வாரா
உண்ணல் உறங்கல் பெண்டிர் மயலுழல்தல் - பின்னர்
ஒடுங்கி அடங்குதல் ஓர்வகையதால்
திண்ணமாய்க் கண்டிருக்க வேற்றுமை யெங்கே - ஒரு
திணையளவும் பேதமிங்கு இல்லை யானதே
மெய்ஞ்ஞான இச்சையில்லான் சூத்திரனாகும் - ஒரு
மெய்க்குரு பிரான் பெற்றோன் வைசிய னாகும்
மெய்யுணர் வைராக்கியனே சத்திரியனாம் - ஞான
மெய்யுபதேசம் பெற்றோன் பிராமண னாகும்.
இன்று நடைமுறையில் உள்ள வழக்கம் - தெய்வம்
ஏற்றிவைத்த தல்லஇவர் செய்த பழக்கம்
நன்றிதைத் தெளியவைத்த தெய்வதயவை - தெளிந்து
நன்கறிந் துய்ந்தவர்கள் ஞானமணியாம்
பண்ணையார்:
தத்தம் சமய நெறி தாமுணர்ந்தவர் - அதைத்
தள்ளிவிட்டு மெய்வழிக்கு வந்திடுவரோ - இது
புத்தம்புதிய நெறி நீயுரைத்தனை - இந்தப்
புதுமையைப் பூவுலகம் ஏற்றுக் கொள்ளுமோ?
குடும்பன்:
மதங்களின் நோக்கமெலாம் ஒன்றுதானாண்டே - அது
மறலி எனும எமனின் வாதைகடத்தல் - கோடா
யிதக்கூர் கொண்டதை வெல்லாதேகிவிடிலோ - மதம்
ஏதும் பயனற்றதாய் வீணில் முடியும்
மெய்ச்செயலின் றெங்கும் எவர் பாலுமில்லையே - இது
மெய்யாயி லங்குவது சாலை எல்லையே - எங்கும்
பொய்ச் செயல் வேடதாரி செய்யும் தொல்லையே - பெருகிப்
போனது கலியுகத்தில் தீங்கு கொள்ளையே
சைவனெனில் சிவனை இருதயத்திலே - தரி
சனைசெய்ய வேண்டுமென முடிவுரைத்தார்
வைணவர் ஹிருதய கமலவாசன் - என்றுஸ்ரீ
மன்நாராயணன் தனை தரிசிக்கணும்
கிருஸ்தவ மதத்திலும் இருதயப்படம் - அதில்
கிளரொளி இலங்கிட வேண்டுமென்பர்
வருஇஸ்லாம் மதத்திலும் கல்பென்கிற - இதயம்
வளரொளி கிளர்ந்திட வேண்டுமென்பர்காண்
நான்கு மதங்களிலும் தெய்வம் இலங்கும் - ஸ்தானம்
நன்றாக ஒன்றாகக் காட்டினார்களே - அதைப்
பாங்குறக் காட்டியருள் வோருளரோ - இந்தப்
பாரில் மெய்வழியன்றி புகல் வேறில்லை
ஓதென மந்திரச்சொல் ஒன்றுளறுவான் - இன்றேல்
உனக்குத் தகுதியில்லை என்று பிதற்றும்
தீதவர் தம்மைப்பின் பற்றுவதாம் - மெய்யாம்
தெய்வ நெறியைச் சொல்வோர் எவருமில்லை
மெய்வழி ஒன்றேஎல்லா மதங்களுக்கும் - மூல
மந்திரம் தெளிவாக்கி மெய்ம்மையருளும்
உய்வழி இதுவன்றி உலகிலிலை - ஆண்டே
உத்தமர்கள் சற்சனர்கள் கூடும் பதி
முழுமுதற் பொருளுக்கு நாமமாயிரம் - அதை
மெய்யாய்த் தரிசித்தல் மனுக்கடமை - மெய்
வழியது வன்றிவேறு மாகதியில்லை - இதை
மனதிலிருத்தித் தரிசனம் செய்யணும்
அவரவர் மதத்தினில் பற்று உடையோர் - தெய்வம்
அம்பலத்தே இலங்கிடும் தெம்பும் வளர்வும்
சிவன் திருமால் பர மண்டலப்பிதா - தீன்தீன்
செப்பிடும் அல்லாஇறை சூல் தரிசிக்கணும்
பத்தியம் ஏழாம் அவற்றைக் கைப்பிடிக்கணும் - அவை
புலை, கொலை,கள், காமம் பொய்களுடனே
நித்தியம் காணும் சினிமாவும் புகையும் - நீக்கி
நெறியுடன் நன்றாகக் காட்சி பெறணும்
புலை முதல் ஏழ்பாதகம் தள்ளியினிதே - தெய்வ
பத்தியத்துடன் வைராக்கியம் வேண்டும்
சிலைகளில் மூர்த்தி தலம் தீர்த்தங்களிலே - தெய்வம்
தங்கிடவில்லை உம்முள் சிறந்துளர்காண்
பண்ணையார்:
பஞ்சமா பாதகமென்றாய் அதுசரி - மேலும் புகைசினி
மாவினாலே என்னதவறு
கொஞ்சமா டி.வி. சினிமாவில் கருத்து - அவை
காட்டும் பல விஷயம் ஆச்சரியமே
குடும்பன்:
தட்டிக் கொட்டிக் காசு பறித்துச் செல்லும் ஒரு
தாசியைப் போல்வந்ததிந்த டி.வி. சினிமா
நெட்டிப் படுகுழியில் தள்ளும் காமக்காட்சிகள் - பல
நேரிய உள்ளம் கெடுத்திடும் சூழ்ச்சிகள்
போகமது எவ்விடத்தே சாருகின்றதோ - அதில்
போயடங்கும் ஆருயிர்தான் என்றுபுகல்வர்
தாகமோகத் தீய வேகக் காமக்காட் சியில் - இவன்
தன்னுயிரும் சாரும் நர கேகி யழியும்
ஏற்றாலும் மறுத்தாலும் இது உண்மையே - இதனை
எத்தனைபேர் மத்தியிலும் செப்பும் செம்மையாய்
மாற்றான ஐந்தெனும்பா தங்களுக்கும் - தாய்
மாபாவி சினிமாவும் டி.வி.யும் தீமை
பண்ணையார்:
புகையினால் என்ன தப்பு புகன்றிடுவாய் - அந்த
புகையிலை பிரம்மப் பத்ரி என்று சொல்லுவார்
சுகமாக இருக்கிறது புகைத்திடும் போது - அது
செய்யும் கெடுதலென்ன சொல்லு குடும்பா
குடும்பன்:
புகை உயிருக்குப் பகை என்பதறிவீர் - அது
போகும் நரகத்திற்கு உற்ற துணையாம்
அகத்தில் இருள்பெருக அது உதவும் - அதில்
ஆசை கொள்வோர் புற்றுநோய் நேசராகுவர்
சுகம் போலக் காட்டித் துக்கச் சேற்றிலழுத்தும் - அந்தத்
தீய புகைப்பழக்கம் விடுங்கள் ஆண்டே
சகத்தில் ஒருபகுதி மக்களழியச் செய்யும்
சரியான எமதூதன் புகைதானாண்டே
பண்ணையார்:
அப்படியா சொல்லும் போதே அச்சம் வருது - எனக்கு
அந்தப் புகைப்பழக்கம் கொஞ்சம் இருக்கு
செப்பமுறச் சொன்னதெல்லாம் சிந்தையில் கொண்டேன்
இந்த தீப்பழக்கம் விட்டிடுவேன் அன்புக் குடும்பா
ஏதோ உருமாலை கட்டியுள்ளனை - இது
எதற்கு உனக்கு ஊரிலில்லா வழக்கம்
சாதாரணமாய்த் துண்டு தலையில் கட்டு - ஆனால்
தலைப்பாகை இவ்வாறெல்லாம் வேண்டாம் குடும்பா
குடும்பன்:
எண்சாண் உடம்புக்குப் பிரதானம் சிரசு - அதில்
இருக்கின்றன செவி மூக்கு வாய் கண்கள்
திண்ணமாக மூளையதும் அமைந்திருக்கும் - அந்தச்
சிரசுக்கு ஆபரணம் இந்த உருமால்
எந்தை மெய்வழி தெய்வம் தந்த உருமால் - இது
ரட்சிப்புச் சீராவெனும் வரம் அருள்மால்
விந்தை உமக்கு மனம் ஏற்கவில்லை தான் - அதற்காய்
விட்டுவிட மாட்டேனிந்த மெய்யின் உருமால்
ஆண்டவர்க்கு வேண்டுதலை இந்த உருமால் - என்னும்
அடுத்தவர்க்கு அஞ்சிக் கழற்றாத உருமால்
மாண்டு உடல் சாயும்வரை கட்டியிருப்பேன் - தேகம்
மண்ணடக்கம் ஆகும்போதும் கட்டியிருப்பேன்
எமனுக்கு டேஞ்சர் இந்த செவ்விய பாகை - மெய்யை
என்னவென்று கேட்கச் செய்யும் இந்த உருமால்
சமன்செய்து சீர்தூக்கும் நீதியரசர் - எனக்குத்
தந்த விந்தைப் பரிசாகும் இந்த உருமால்
உங்களுக்கிவ் வுருமாலால் என்னஇடைஞ்சல் - இந்த
ஊருக்கென்ன பேருக்கென்ன துன்பம் வந்தது
தங்களுள்ளம் ஏற்காவிட்டால் நானென்ன செய்வேன்-கொஞ்சம்
தயவுசெய்து இதிலே தலையிடாதீர்
பண்ணையார்:
பூணூல் எதற்காக நீ போட்டிருக்கிறாய் - இந்தப்
புதுவழக்கம் உங்கள் சாதிக்கில்லையே
காணாத தென்ன நீயும் கண்டுவிட்டனை - இதைக்
கழற்றிடு உனக்கிது வேண்டுவதில்லை
குடும்பன்:
தன்னை அறிந்தவர்கள் அணிவதிது - தெய்வத்
திருப்பதியில் விளங்கும் ஜோதிவடிவம்
முன்னை முழுமுதல்வர் தயவருள் செய் - இந்த
மேன்மைப் பரிசாலு மக்கென்ன கஷ்டமோ
பரமர் மெய்வழி தெய்வம் தந்த பரிசு - இதைப்
பவ்யமாய் அணிந்துள்ளேன் நானுங்க ஆண்டே
சிரமம் பிறர்க்கதினால் என்ன சொல்லுங்க - உங்கள்
சிந்தையில் நெருடுவ தென்னங்க ஆண்டே
பண்ணையார்:
ஐயர் செட்டியார் தட்டான் அணிவதிது - நீயும்
அடிமைக் குடும்பன் உனக் கேதுக்கு இது
செய்யாப் புதுவழக்கம் ஏண்டா செய்கிறாய் - எனக்கு
சிறிதும் பிடிக்கவில்லை விட்டுவிடடா
குடும்பன்:
ஜோதி தரிசனத்தைக் கண்டவர்கட்கு - தெய்வம்
தயவாய் அணிவிப்பது இந்தப் பூணுநூல்
ஜாதி வழக்கமென்று சொல்லில் பொருந்தா - அதைச்
சரிதவறென்று சொல்லேன் நானுங்க ஆண்டே
பாருங்க தலைப்பாகை பூணூலையென்று - இந்தப்
பாரிலுள்ள ஜனங்களுக்குச் சொல்லுகின்றேனா-
நேராயிருப்பதுங்கள் நெஞ்சு பொறுக்க - இல்லை
நானென்ன அதற்குச் செய்வேன் விடுங்களாண்டே
பண்ணையார்:
பட்டைக் கோவணம் போட்டுக் கட்டியுள்ளனை - நீதான்
பார்ப்பானோ என்ன இந்தப் புதுவழக்கம்
சிட்டைப் பிடித்து உன்னை ஆட்டுவேன்பாரு - இனி
ஜாக்கிரதை இது வேண்டாம் விட்டுவிடுநீ
குடும்பன்:
பட்டைக் கோவண மல்ல பஞ்சகச்சம் - இது
பஞ்சலிங்கேஸ்வர் தந்த பரிசு
நட்டம் உங்களுக்கித னாலென் வந்தது - என்பால்
நேசம் மறந்து கோபம் கொண்டதேன் ஆண்டே
ஜம்பத்துக் காகஇதை அணியவில்லைங்க நீங்கள்
சற்றும் சினக்க வேண்டாம் பொறுங்கள் ஆண்டே
செம்பொருள் தெய்வம் தந்த சீதனமிது - எவர்க்கும்
சரிதவ றென்று சொல்ல உரிமையில்லை
பண்ணையார்:
இடுப்பிலே என்னடா இப்படிகட்டு - இதை
எதற்காகக் கச்சை போலே கட்டிக் கொண்டாய் நீ
கடுப்பா யிருக்குதடா பார்க்கப் பார்க்க - இதன்
காரணத்தைச் சரியாகச் சொல்லு குடும்பா
குடும்பன்:
கடுப்பும் சினமும் வேண்டாம் கேளுங்க ஆண்டே - இடைக்
கச்சு என எனது சாமி தந்த பேர் - என்றும்
படைப்புக் கர்த்தா எனக்குள் இருப்பதாலே அவர்க்குப்
பணிவு காட்ட இடையில் அணியும் கச்சு
பண்ணையார்:
பெரிய புத்தகம் ஒன்று வைத்திருக் காயாம் - அதன்
பேரென்ன உனக்கெல்லாம் படிப்பெதுக்கு
சரியாகப் பண்ணையிலே வேலை செய்யடா - அந்தச்
சங்கீதம் கிங்கீதம் வேண்டாம் குடும்பா
குடும்பன்:
பெரியது ஒன்றல்ல நான்கு வேதங்கள் - ஆதி
மெய்உதய பூரணவே தாந்தம்,மான்மியம்
அரியது எமபடர் அடிபடுகோ
டாயுதகூர் மெய்ஞ்ஞான, வான்மதிக்கொரல்
வானரசு முழுமுதல் மெய்வழி தெய்வம் - இந்த
வையகமும் வானகமும் ஆற்றலரிதாம்
ஞானமணி யாபரணப் பேழையிவைகள் - எங்கள்
நல்லனந்தர் குலம் பெற்ற தேனமுதங்கள்
தெய்வநூலைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவே - உங்கள்
சிந்தையிலே எப்படித்தான் எண்ணம் வந்தது
வையகத் தோர்க்கெங்கள் தெய்வம் தந்தபரிசு - இதை
வணங்கினாலே போதும் ஏமன் வாரானுங்காண்டே
நல்லதெல்லாம் இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளாது - பண்டை
ஞானிகளைத் துன்பம் செய்த உலகந்தானாண்டே
வல்லவரென் றேநினைத்துக் கொள்ளுவோர்களை - ஏமன்
வரவேற்கக் காத்திருக்கான் அறியுங்களாண்டே
சரிசரியுங் கள்கணக்கை வழக்கைப் பாருங்கள் - நானும்
சாலையம் பதிக்குக் குடியேறப் போகிறேன்
பெரியவுங்க நீங்கள் செய்த உதவிக்கெல்லாம் - ரொம்பப்
பெரிய நன்றி சொல்லிக்கிறேன் போகிறேனாண்டே

பண்ணையார் நெல் கணக்கு கேட்டல்

அறுசீர் விருத்தம்

தில்லை சேர் நந்தன் போலும்
சாலை சேர் விருப்பம் கொண்டாய்
நல்லது குடும்பா நீ சொல்
ஞாயங்கள் சரிநம் பண்ணை
நெல்வகை விளைச்சல் அத்துள்
நீசெய்த செல விருப்பும்
சொல்லிவா பிசகில் லாமல்
செலவிற் காதாரத் தோடே

குடும்பன்

கலிப்பா

நெல்வகையும் விளைவுடனே செலவினமும் மீந்திருப்பும்
பல்வகையாய்ப் பகர்ந்தினிது பதிந்தரசீ ததும்காட்டி
தொல்புகழ்சேர் மெய்வழிதெய் வத்திருத்தாள் தோத்தரித்து
நல்வேளாண் மைக்குடும்பன் நனி பண்ணையார்க்குரைக்கும்

குடும்பன் நெல் வகை கூறல்

சாலை தெய்வத்திருத் தாள்மலர் என்சிரம்
சூடி புகழ் பாடி
செப்பிடும் தங்களுள் ஒப்பிடும் நல்விடை
ஆண்டே அன்பு ஆண்டே

கோலமா கவிளை செஞ்சாலி குங்குமச்
சம்பா புனுகு சம்பா
கல்முத்தான் மல்லிகைச் சம்பாவும் கிச்சிடிச்
சம்பா மணல் வாரி

பொன்னிவெள்ளைப் பொன்னி அம்பா சமுத்திரம்
முல்லைப் பூவார் சம்பா
புரட்டாசிக் காரோடு சித்திரைக் கார்குதிரை
வாலன் பூம் பாளை

சின்னச் சம்பாசீர கச்சம்பா செந்தாழை
முத்து ராம பாணம்
சித்ரவண்ணன் தோட்டச் சம்பாவும் மங்கலப்
பிச்சை நாக ராஜன்

பெங்களூர்ச் சம்பாமுத்து விளங்கி மட்டைக்
காரும் குட்டை சிகப்பன்
பக்கிரிச் சம்பாவும் குறுவையும் சர்க்கரை
வண்ணன் கஸ்தூரியும்

பொங்கிவிளை வெள்ளை சம்பாவும் முள்ளுக்
குறுவை பனை முகரி
பாகோடா ளம்பள்ளி கொண்டான் பூசைப்பெட்டி
காரும் கல்லுண்டை

அலங்காரப் பொன்னன் சிவப்பழகி கருணை
வாலன் சல கண்டன்
அதிகம் விளைசிறு மலைமுண்டன் குட்டைச்
செகப்பன் ஆனைக் கொம்பன்

இலங்கும் பொற்சாலிகண் ணாடிக்கூத்தன் அல்லிப்
பூவார் அழகு சம்பா
இனிய மிளகு சம்பா இடைக் காட்டன் மணவாளன்
இன்பத் தேன் சம்பா

இப்படி நூற்றுக் கணக்கான நெல்வகை
உண்டு நல்லது கண்டு
இரவுப கலாய் உழைத்து விளைத்துக்
குவித்து வைத்துள்ளேன்

செப்பும் வகைக்கலம் ஆயிரம் ஆயிரம்
சேரும் நெல்சேர் மீறும்
சேர்ந்ததும் செய்த செலவினம் யாவுமே
கூறும் நலம் சேரும்

நெல் வரவு செலவு கூறுதல்

சீரங்க நாதருக்கோர் ஆயிரம்கலம் - அந்தத்
திருவானைக் கோவிலுக்கும் ஆயிரங்கலம்
பேராரும் சிதம்பரத்திற் காயிரங்கலம் - இங்கு
பழனி முருகனுக்கு ஆயிரங்கலம்
நேரும் சீர்காழி திருவையாறுக்கும் - அங்கு
நித்தப்படி பூசைகட்கு ஆயிரங்கலம்
சீராகச் சத்திரத்தில் அன்னதானங்கள் - தங்கள்
சித்தப்படி நிறைய நெல்லை யளந்தேன்

உழுது பயிரிட்ட உழவர்கட்கும் - உடன்
உழைத்தவர்கள் நாற்றுநட்ட பெண்டுகளுக்கும்
பழுதுவராதறுத்து ஒப்படி செய்து நம்ம
பண்ணையிலே நெல்குவித்த பாட்டாளிகட்கும்
பொழுது கருதாதுழைத்த பண்ணையாள்கட்கும் - தச்சு
பணிசெய்தோர் கொல்லர்கட்கும் குருக்களுக்கும்
முழுதும் முறைமுறையாய் நெல்லை யளந்தேன் - செலவு
முற்றுக்கும் ரசீது வாங்கிவைத் துள்ளேன்.

முதலாகக் கந்தாயம் கட்டினேனாண்டே - பண்ணை
முறைப் பணி செய்துழைத்து காத்துக்கிடந்த
பதினெட்டு சாதிகட்கும் நெல்லையளந்து - மிகப்
பக்குவமாய் விதை நெல்லும் சேர்த்து வைத்துள்ளேன்
இதமாக வாணிகர்க்கு நெல்லினை விற்ற - தொகை
இந்தாருங்கள்பெற்றுக் கொள்ள வேணுங்க ஆண்டே
மதியோங்கு மெய்வழிக்குப் போகிறே ணாண்டே - சற்றும்
மறுப்பின்றி வழியனுப்பி வையுங்க ளாண்டே

பண்ணையாரே உங்கள் மனை மக்கள் சுற்றமும் - எதிர்
பார்த்திருக்கும் ஏழைபாழை அத்தனைபேர்க்கும்
பண்கனிந்த கவிபாடும் பாவலர் கட்கும் - மற்றும்
பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் மடங்களுக்கும்
திண்ணமாகத் தந்துமிச்சம் நெல்சேரிலே - நன்கு
சேமித்துப் பாதுகாப்பாய் வைத்துளே னாண்டே
வண்ணமாகத் தாங்கள் சொன்ன வரிசைப்படி - நெல்லை
வகையாக நானனுப்பிக் கணக்கு வைத்தேன்

ஏர்கலப்பை பரம்புகள் நுகம் மேழிகள் - மற்றும்
ஏற்றம் இறைக்கும் பரிகள் வடங்களொடு
சீருழவு மண்வெட்டி கடப்பாறைகள் - கொழு
சிறுபெரு கொடுவாள்கள் களைக்கொத்துகள்
கூரான குந்தாளம் கோடரிகளும் - மாடு
கட்டும் தலை, மூக்கணாம் கண்ணிக்கயிறு
வாரும்தட்டு, சாட்டு கூடை, சாக்கு கட்டுகள்
வரிசை வரிசையாக வைத்துளேணாண்டே

வண்டிகளும் வாகனங்கள் ஏணிமரங்கள் - மேலும்
மாடுகளும் ஆடுகளும் பட்டி குடிசை
விண்டுரைத்த அத்தனையும் பார்த்துக்கொள்ளுங்கள் - நான்
வேதமலர் பூத்திருக்கும் சோலை செல்கிறேன்
எண்டிசைகள் தெய்வமது கண்டுதெளிய - அருள்
ஈயும் கொடைவள்ளல் பதம் சாரச்செல்கின்றேன்
பண்டுபெரி யோர்கள் எதிர் பார்த்த பதியாம் - எங்கள்
பாண்டியர் மெய்வழி தெய்வப்பிள்ளை நானாண்டே

விருத்தம்

இப்படிக் குடும்பன் சொல்ல
இனிது கேட்டயர் பண்ணையார்
ஒப்பிலா உவகை கொண்டு
“உத்தமா எனைப் பிரியேல்
ஒப்பிடேன் பணிசெய் மீண்டும்
உனக்கொரு குறையும் வையேன்
எப்பவும் போல இங்கு
இருஇரு” என்று வேண்டும்

குடும்பன் விடை கேட்டல்

மன்னிக்க வேணுங்க ஆண்டே - சிறு
மாற்றமுமில்லை முடிவினில் ஆண்டே
முன்னை முழுமுதல் தெய்வம் - தயை
மிக்கெனை ஆண்டருள் பாலிக்கும் தெய்வம்
தென்னன் பெருந்துறைச் சீமான் - சாலை
தெய்வத் திருப்பணிக் கேகுவே ணாண்டே
என்னப்பன் என்சாமி துரையின் - வயல்
ஏராளமாய்ப் பணிக்கிருக் கிறதாண்டே

தேவாதி தேவரென் தெய்வம் - இன்று
தென்னாடகத்தே திகழுமெய் தெய்வம்
மூவா முதல்வரென் தெய்வம் - அந்த
முப்பத்து முக்கோடி தேவர்க்கும் தெய்வம்
சாவா வரந்தருந் தெய்வம் - அந்த
சித்தர் முத்தர்களின் தலைவரென் தெய்வம்
ஓவா தறம்புரி தெய்வம் - எங்கள்
உயிர்ப்பயிர் உழவு பாடாற்றிடும் தெய்வம்

கற்பகத் தாரு என் தெய்வம் - வீணக்
கசடர்கண் காணாத் தங்கமேரு தெய்வம்
பொற்பகத் தயவுயர் தெய்வம் - இந்தப்
பூதலத்தோரை வானேற்றிடும் தெய்வம்
நற்பதந்தந்திடும் தெய்வம் - இந்த
நானிலத் தானந்த நடம்புரி தெய்வம்
அற்புதம் காட்டிய தெய்வம் - திரு
அருளாலே எனையாதரித்தாண்ட தெய்வம்

தாயா யிலங்குமென் தெய்வம் - தனித்
தந்தையுமாகித் தயைபுரி தெய்வம்
சேயெனை யெடுத்தணை தெய்வம் - ஞான
சிதம்பர ரகசியம் காட்டிய தெய்வம்
தூயமெய்ச் சற்குரு தெய்வம் - என்றும்
துணையாக எங்குமிலங்கிடும் தெய்வம்
ஆய்கலைக் கதிபர்என் தெய்வம் - சீரார்
அனந்தர் குலத்தந்தையாகிய தெய்வம்

பிறவிப் பிணிதவிர் தெய்வம் - அந்தப்
பெருவெளிக் கேற்றிமெய் காட்டிய தெய்வம்
அறிவுரு வானஎம் தெய்வம் - பெரும்
ஆனந்த வாரியில் ஆழ்த்திடும் தெய்வம்
மறலியிடர் தீர்த்த தெய்வம் - எந்த
மதிப்பிலும் அடங்காத மாணிக்க தெய்வம்
அறமொரு திருவுரு தெய்வம் - மெய்யாய்
அன்பு கொண்டோர்க் கென்றும் ஆம்துணை தெய்வம்

வேதபுரியீசர் தெய்வம் - மறை
விளக்கியெமைத் தெளிவித்திட்ட தெய்வம்
பேதங் கெடுத்திட்ட தெய்வம் - இந்தப்
பிறவிப் பயன்பெறப் பொருள்தரு தெய்வம்
நீதியரசரென் தெய்வம் - எற்கு
நித்திய வாழ்வினை நல்கிடும் தெய்வம்
சீதனம் தந்திட்ட தெய்வம் – என்னைச்
சிற்பர வெளிதனி லேற்றிய தெய்வம்

முத்தாபம் தீர்த்திட்ட தெய்வம் - காம
மோகம் தவிர்த்திட்ட மாண்புயர் தெய்வம்
சித்தமலம் அறும் தெய்வம் - வானச்
சேமநிதி வாரித் தந்தருள் தெய்வம்
நத்தியோர்க் கின்பருள் தெய்வம் - ஞான
நாற்காரண ராஜ நிலையினர் தெய்வம்
வித்தில்லா வித்தெங்கள் தெய்வம் - உயர்
வித்து நாயகமாக விளங்கிடும் தெய்வம்

பொன்னாட்டு மனுமகன் தெய்வம் - எம்மைப்
போற்றிக் காத்துஅருள் பாலிக்கும் தெய்வம்
அன்னாட்டு வித்தெடுக்கின்ற - சாலை
அம்பலத் தாடிடும் ஆனந்த தெய்வம்
இன்னாட்டில் எமபடர் மாற்றி - எமக்கு
இறவாப் பெருவரம் நல்கிடும் தெய்வம்
தென்னாடு டைசிவம் தெய்வம் - தனித்
தலைமைப் பெரும்பதி சாலைமெய்த் தெய்வம்

ஆலகால விடமுண்டு சர்வ
அண்ட சராசரம் காத்திடும் தெய்வம்
காலம்பொற் காலமிக் காலம் - எங்கள்
கர்த்தாதி கர்த்தர் கருணை செய்காலம்
ஏலவல்லார் சாலைதெய்வம் - பொன்னார்
இணைதிரு மலரடி போற்றி செய்திடவே
பூலோக கைலாயம் சாலை - அந்தப்
பொற்பதிக் கேகித் திருப்பணி புரிவேன்

இடையறா இன்பத்தேன் பொங்கும் - ஈடில்
ஈகை வழங்கிடும் வான்வள்ளல் தெய்வம்
மடைதிறந்தே பாயும் அமுத - வெள்ளம்
வற்றாதி லங்கிடும் வான்வள்ளல் தெய்வம்
தடையேதும் சொல்லிட வேண்டாம் - இங்கு
தரிக்கலாற்றேன் சாலை வாசியாகின்றேன்
விடை கொடுத்திடுங்களென் ஆண்டே - அந்த
விடையேறும் பெருமாளைச் சேவிக்கப் போறேன்

பண்ணையார் கருத்து

கலிப்பா

எல்லையிலா அன்புதிறன் இனிதுடைய குடும்பா நின்
நல்லமனம் நோகஇடர் நான்புரிந்தேன் பொறுத்திடுவாய்
தில்லைசென்ற நந்தனைப்போல் திருமிகுமெய் வழிசேர்வாய்
நல்லவனே அப்பதிக்கு நானும்வர வேண்டுவனே
நூறுகலம் நெல்கொள்நின் நற்செலவி னுக்குப்பொருள்
மாறுகொளா நெஞ்சுடனே மகிழ்ந்தேற்றுக் கொள்ளய்யா
ஊறுபடா வாழ்வுபெற உயர்பதிக்குச் செல்லுகின்றாய்
ஆறுதலாய் நான்வாழ அகங்கனிந்தோர் வாழ்ந்துரைப்பாய்

குடும்பன் விடை பெற்றேகல்

நகமுளைத்த நாள்முதலாய் நானுழைத்தேன் ஆண்டே
நம்பியெனை ஆதரித்தீர் நல்லபண்ணை ஆண்டே
சுகதுக்கம் அத்தனையுள் பங்குகொண்டீர் ஆண்டே
சுகமாய்நீர் வாழ்ந்திருக்க தெய்வபதம் பணிந்தேன்
இகவாழ்வின் சுகமறிவீர் பரசுகத்தை அறியீர்
எம்பெருமான் பதம்சார்ந்தால் இனிதனைத்தும் அறிவீர்
சகமிதிலே எமபயத்தைக் கடத்தும்எங்கள் தெய்வ
தாள்தனிலே தஞ்சமுற்றால் தருமநெறி துலங்கும்

தூரமிலை செலவுமிலை தெய்வநெறி சார
துக்கமற்ற வாழ்வடையத் துணைதருமென் சாமி
ஆரவார மற்றதொரு அருள்மெய்வழி சார்ந்தார்
அறம்பெருகும் மதியமுதம் பொங்கி உயிர்வளர்க்கும்
சீருயர்த்த தேவாதி தேவரெங்கள் தெய்வம்
சாவாத வரந்தருமெம் சாமியெங்கள் தெய்வம்
வாருமிந்த மெய்வழிக்கு வகைபிறிதொன் றில்லை
வாழ்வாங்கு வாழவழி மெய்வழியென் றேதான்

ஆயிரம்ஆண் டிவ்வுலகில் அனைத்துசெல்வம் படைத்து
அழகுறவே வாழ்ந்தாலும் யாதுபயன் ஆண்டே!
தாயாதி மனைவிமக்கள் சொத்துசுற்றம் மதிப்பு
தடுப்பதுண்டோ எமபடரை சற்றெண்ணுவீர் ஆண்டே!
ஆயகலை அறுபத்து நான்கினுக்கு மேலாம்
அரியகலை சாகாத கலையொன்றுண்டு அறிவீர்!
தூயமனத் திருஅனந்தர் தொழுதெழுமெம் தெய்வத்
தாள்பணிந்தோர் சாவாத வரம்பெறுவார் ஆண்டே!

தரமுடைய யோக்கியர்கள் சாருமிந்த வழியில்
சர்வமதம் குலம்சாதி சங்கமிக்கும் ஒன்றாய்
பரயோகம் நுகரமுத்தி பாலிக்கும் வழியாம்
பற்றிநின்றோர் வெற்றிபெற பரிசளிக்கும் துறையாம்
இரவுபகல் ஓயாதவணக்க நிகழ் பதியாம்
எக்காலும் எங்குமிலா இணையிலாமெய் வழியாம்
வரதரெங்கள் சாலைவள நாடரருட் தேவர்
மலரடியைப் போற்றிசெய்து வாழ்ந்திருப்போம் ஆண்டே

வேதமறை ஆகமங்கள் மெய்துலங்கும் வழியாம்
விண்ணகத்தோர் ரகசியங்கள் விளங்குதிரு நெறியாம்
போதமுயர் பொன்னரங்கர் பெருந்தயைசெய் வழியாம்
பூதலத்தோர் மேதலத்திற் கேறுதுறை நெறியாம்
நாதரெங்கள் நன்மார்க்க ராஜரிஷி செங்கோல்
நன்குபுரி நற்றவத்தபோவனமிவ் வழியாம்
மூதறிஞர் முனிவர்சித்தர் யோகியர்பல் லோரும்
முழுதிணைந்து மெய்வாழ்வில் உய்திபெறும் வழியாம்

குடும்பன் சாலை சார்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இங்ஙனம் குடும்பன் கூறி
இனிதிரு மனைவி மக்கள்
தங்கமா மேரு தெய்வம்
சாலை ஆண்டவர்ப திக்கு
பொங்கிடும் ஆர்வத்தோடு
போய்த்திரு முன்னர் சார்ந்து
செங்கமலப் பொன் னாரும்
திருவடி பணிந்து நின்றான்

ஸ்தோத்திரம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கருமுதல் காத்து கருணைமெய்த் தயவால்
கனிந்தினி தேற்ற மெய்த்தேவே!
அருமறை வடிவே! அன்னை பிதாவும்
ஆன்ற சற்குருவுமாய் இலங்கும்
திருவர மருளும் தெய்வமே! தங்கள்
திருமலரடி சிரம் புனைந்தேன்
அருள்கயிங் குறையத் திருப்பணி வணக்கம்
ஆற்றிடப் பணிந்தனன் தஞ்சம்

தரிசினை யருளும் தனிப்பெருந் தயவே!
சாலைமெய் முழுமுதல் இறையே!
கரிசனை யோடென் குலுமுழு தாளும்
கனிதவப் பெருங்குணக் குன்றே!
பெரியரில் பெரிய பொன்னரங் கரசே!
பேதை யேன் இங்கினி துறைந்து
அரியநும் தயவுக் காட்பட வரமிக்\
கருள்செயப் பணிந்தனன் துரையே!

உயிர்ப்பயிர் செய்யும் ஒப்பில் வேளாண்மை
உத்தமர் தாள்தனில் தஞ்சம்
பயிர்த்தொழில் புரியும் குடும்பனென் பணியைப்
பரிந்தினி தேற்றிட விழைந்தேன்
அயர்வறுத் தருளும் அரியமெய்த் திருவே
அடியிணை மலர்சிரம் புனைந்தேன்
இயலுமெய் குண்டத் திலங்கிடும் தவமே
எளியன் சொன்மாலை ஏற்றருளே

ஆண்டவர்கள் திருவரமருளல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சண்முகக் குடும்பா! நீயும்
சாலைசார்ந் துவந்தாய் நன்று
விண்மணி யாக இங்ஙண்
வழிவழி யாக வாழ்வாய்
பண்கனி பாசொன் மாலை
படைத்தனை ஏற்றேன் மெய்யார்
ஒண்மணி இளங்கலை யென்
றோங்கிட வரங்கள் தந்தேன்

குடும்பனின் மூத்த மனைவி தெய்வத் திரு முன்னர் பணிந்து விண்ணப்பித்தல்


தெய்வமே உங்கள் பாதம் சரணடைந்தேன் - எந்தன்
தப்புத் தவறுகளை மன்னிக்க வேணும்
ஐயே என்வீட்டுக் காரர்க் கிடைஞ்சல் செய்தேன் - பேதை
அறியாமல் செய்தபிழை மன்னிக்க வேணும்
வைதேன் வழக்கிட்டேன் சக்களத்தியிடம் - பல
வாதும் புரிந்தேன் சாமி மன்னிக்க வேணும்
மெய்வழிச் சாமி என்னை ஏத்துக்க வேணும் - இந்த
மகராசிகளைப் போலே நானும் ஆகணும்

பேதைபுத்தியால் செய்தேன் வம்பும் வழக்கும் - சாமி
பெரிய மனதுவைத்துப் பொறுத்தருளணும்
வாதைஎமனை எண்ணி நடுங்குகின்றேன் - சாமி
மன்னித்து எந்தனையும் ஏத்துக்க வேணும்
பாதம் பணிந்தேன் சாமி ஏத்துக்கொள்ளுங்க - பெற்ற
பாங்கி பிள்ளையைத் தள்ளில் எங்கேபோகுங்க
நீதிமுறையைத் தங்கை நல்லாச் சொன்னாள்ங்க - சாமி
நிச்சயமாய் பணிவாக நடப்பேனுங்க

தெய்வம் திருவுள்ளம் இரங்கி ஏற்றுக் கொள்ளல்

என்பிள்ளைக் காகஉன்னை ஏற்றுக்கொள்கிறேன் - அவன்
எண்ணமறிந்து பணிந்திருக்க வேணும்அன்பாய்
அவன்சொல்வதைக் கேட்டு நடந்தாயானால் - உனக்கு
அவன் செய்த தவப்பலன் பாதியுண்டு கேள்
நின்பால் என்மகனுக்காகயென் நெஞ்சமிரங்கும் - நீயும்
நல்ல மனைவியாக நடந்துகொள்ளணும்
தென்பாய்க் கொடி மரத்தை ஏழ்தரம் சுற்று - சாலைத்
தீர்த்தம் அருளிப்பிராய சித்தமளித்தேன்

இதுஒரு குடும்பம் என்று
எண்ணிநீ ஒழுக்கத் தோடு
இதமுடன் நடந்து கொள்வாய்
இணையிலா மெய்ம்மை ஓங்கும்
கதியெனும் மோட்ச வீடு
கனிந்துயிர்க் கருளும் சீரார்
பதியென அறிவாய் பெண்ணே!
பயபக்தி பணிவு கொள்வாய்

மூத்தபள்ளி சத்தியப் பிரமாணம் செய்தல்

முக்காலும் சத்தியமாய் நடப்பேனுங்க - எந்தன்
மூர்க்கக் குணத்தை யெல்லாம் விட்டுட்டேன் சாமி
எக்காலும் அவர் சொல்லைத் தட்டமாட்டேன்க - எந்தன்
இளையாளுடன் இணங்கியிருப் பேனுங்க
திக்கில்லா ஏழையென்னை உங்கள் பிள்ளையாய் - ஏற்று
சொர்க்கபதிச் சந்ததியாய் ஆக்கணும் சாமி
சிக்காத பெருஞ்செல்வம் என்று உணர்ந்தேன் - தங்கள்
திருப்பாதம் தஞ்சமானேன் அடைக்கலம் சாமி

இளையாள் மூத்தாளுக்கு மெய்வழி தெய்வத் திருப்புகழை எடுத்துரைத்தல்

தேனமரும் செண்பகப் பூ
வாசத்திரு மேனி
தெய்வமக்கா தொழுது கொள்வாய்
சேவை செய் வாயிங்கே
வானவர்கள் மனித உருக்
கொண்டு இந்தப் பதியில்
வணக்கம் புரிந் திறவாத
வரங்கள் பெறுகின்றார்
கானகமென் றெண்ணி யுந்தன்
கருத்தில் தவறெண்ணேல்
கர்த்தாதி கர்த்தர் பதி
கண்டுகொள்வாய் அக்கா
ஞானமாலி சாலைதெய்வம்
நல்லரசு புரியும்
நற்புவி யென்றே உணர்ந்து
நற்கதி கொள்ளக்கா

ஊர்

ஊரான ஊரிதுகாண்
உலகிலில்லா ஊராம்
உயிர்ப் பயிர்மெய் யாண்டவர்செய்
உயர்தனிமெய் யூராம்

பேராரும் பொன்ன ரங்கர்
மண்படியாப் பாதம்
பூமிமிசை நடம் புரியும்
புண்ணிய நல்லூராம்

சீராவாம் ரட்சிப்புச்
செவ்வியநற் பாகை
சிரமணிந்த அனந்தர் குலம்
வாழுமிந்த ஊராம்

கூரான குரு வருளைப்
போற்றும் பிரம்ம குலத்தோர்
குடியிருந்து மெய்வரங்கள்
கொள்ளுமிந்த ஊராம்

பொய், கொலையும், களவு, கள்
காம முடன், சினிமா,
புகையெனும் ஏழ் பாதகமும்
புகுதாத ஊராம்

மெய்யொன்றே நித்தியமாய்
விளங்கு மிந்த ஊராம்
மேதினியில் அதிசயங்கள்
நடக்கு மிந்த ஊராம்

வெய்ய கொடும் எமனணுகா
பரிசுத்த சத்ய
வான்மரபு மெய் வணக்கம்
செய்யுமிந்த ஊராம்

துய்ய மனத் தனியோகர்
தவம்புரியும் ஊராம்
தேவாதி தேவரருள்
மழைபொழியும் ஊராம்

நாடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சாலைவள நாடுஇது சற்சனர்கள் வாழும்
தருமதுரை தனிச்செங்கோல் ஓச்சும்திரு நாடு
வேலைஎழில் சூழ்உலகில் மெய்யர்நிறை நாடு
விமலாதித் யர்ஒளிரும் மாதவநன் னாடு
சீலரெலாம் குடியிருக்கும் செம்பாகு மொழியர்
திருவளரும் தனிக்கருணைத் தெய்வமணி நாடு
ஏலவல்லார் எம்பெருமான் மெய்வழிதெய் வச்சீர்
இனிது பராவிடுமனந்தர் இனிதுறையும் நாடு

வேதமறை ஆகமங்கள் மிக்கொலிக்கும் நாடு
வேதாந்தம் பாசுரங்கள் இசைக்கும் திருநாடு
நீதியர சோச்சும் எங்கள் நற்றவமெய்ந் நாதர்
நித்திய வாழ்வும் வரங்கள் நனிவழங்கும் நாடு
ஆதிபரா பரைஎந்தாய் அருள் பொழியும் நாடு
அகிலமதில் இணையில்லா அணிதிகழும் நாடு
நாதமதி மணிகொழிக்கும் நல்வளஞ்சேர் நாடு
நற்றவர் மெய்யாண்டவர்கள் நல்லறஞ்செய் நாடு

அழகுமயில் ஆனந்த நடம்புரிகா னகமே
ஆரிசைமெல் லிசைக்குயில்கள் கூவிடும் கானகமே
பழகுமுயிர்ச் சாலைத்தமிழ் பயின்றிடு கானகமே
பண்புதிதாய்க் கர்த்தரிசை பொழிந்திடு கானகமே
முழுமுதல்மெய்த் தவம்புரியுத் யோவனகா னகமே
முதுநிறைவான் மதிமொழியார் தெளிவுரை கானகமே
எழுபரித்தேர் கதிரவரா யிரவர்ஒளி விஞ்சும்
ஈடில் பிர காசரிறை உவந்துறை கானகமே

எங்களுயிர்க் குயிர்தெய்வம் இனிதுறைவா னகமே
இன்பநடம் எம்முயிருள் இயற்றிடுதே னகமே
தங்கமகா மேருகிரி சீர்திகழ் வானகமே
தனித்தலைமைப் பெரும்பதியர் தண்ணருட் தேனகமே
பொங்குமதி யருளமுத மழைபொழி வானகமே
பூரித்து அனந்தர்குலம் களித்திடு தேனகமே
சங்கநிதி பதுமநிதி தந்திடு வானகமே
சர்வபரா பரர்தயவால் துளிர்த்திடு தேனகமே

ஊறல் மாமலைச் சாரலிலெங்கும்
ஒழுகு பூம்புனல் ஓடையிலங்கும்
மாறில் ஊற்று வளம்மிகப் பொங்கும்
வந்து ஏரிநிறைந்திடத் தங்கும்
தேறல் நீரில் வழிந்து நெருங்கும்
செழிய தாமரை அல்லி விளங்கும்
ஈறில் மாதவர் மெய்ம்மை துலங்கும்
எம்பெருமான்சா லைவளநாடே

கட்டளைக் கலிப்பா

சோலையெங்கு மெழில்மிக மேவும்
செவியினிக்க வரிக்குயில் கூவும்
கோலமயில்கள் நடமிட்டு லாவும்
குரங்கினம் கனியார்மரம் தாவும்
சீலமோங்கு அனந்தர்கள் நாவில்
தெய்வப்பாசுரப் பண்ணிசை மேவும்
ஆலமுண்டவர் மெய்வழி சாலை
ஆண்டவர்திரு நாடெங்கள் நாடே

ஆலயந் தனில் மல்லிகை வாசம்
அண்ணல் மேனியில் செண்பக வாசம்
கோலமேவு அனந்தர் மெய்நேசம்
கொண்ட மேனியில் சந்தன வாசம்
சாலை மெய்யர் தனித்தமிழ் வாசம்
திருமெய்ஞ்ஞான மறைமணம் வீசும்
ஏலவல்லவர் சாலை ஆண்டவர்
இன்பமேவிடும் நாடெங்கள் நாடே

எழுந்து துந்துபி நாதம் முழக்கும்
ஏழதாகி எக்காள மிசைக்கும்
தொழுது ஆண்டவர் தாளைத் துதிக்கும்
தூய அனந்தர்கள் வேதமிசைக்கும்
பழுதிலாத மெய்வாழ்வில் நிலைக்கும்
பெருவரங் கொளப் பாரவணக்கம்
முழுமுதல் மெய்யாண்டவர் தெய்வம்
மேவுசாலை நன்னாடெங்கள் நாடே

சமரசம் இலங்கிடும் வேதம்
சாதிகள் கர்த்தர்தரு நாதம்
எமபடர் கடந்தேகிடு போதும்
எந்தை சாலையர் தந்திடுநீதம்
அமரராக்கிடு அருட்திருப் பாதம்
அமுதவாரி எம்முள்அலை மோதும்
இமையவர் இறை ஆதியர் கோவில்
இலங்கு சாலைமெய் நாடெங்கள் நாடே

நிறையக் கண்டது நீதியர் ஆட்சி
நிலைக்கக் கண்டது சத்திய மாட்சி
மறையக் கண்டது வன்கொடும் பாவம்
மடியக் கண்டது வஞ்சகம் கோபம்
உறையக் கண்டது உத்தமப் பண்பு
உணரக் கொண்டது தெய்வமெய் யன்பு
பறையக் கண்டது பரமரைப் போற்றி
பாங்குயிர்ச் சாலைநாடெங்கள் நாடே

தேவ தேவரின் தோத்திரப் பாடலும்
சீரனந்தாதியர் அன்பொடு கூடலும்
மேவு மெய்ம்மண ஞான விளக்கமும்
வேத வேதியர் வாக்யத் துலக்கமும்
ஜீவன்தேக முத்திக்கு வணக்கமும்
தெய்வ நேசர்களோடன் பிணக்கமும்
பாவநாசர் பொன்னார் திருமேனியர்
பரமர் சாலைப் பதியுள் நிறைந்ததே
     (459)
வணங்க வாருமென் றார்மணியோசையும்
வாழ்த்திப் போற்றிடு ஸ்தோத்திர பூசையும்
இணக்கமார் எக்காளநல் ஊதலும்
எழுமென் றார்ப்பரிதுந்துபி ஆர்தலும்
கணக்கி லாப்பலன் கைதரு பேர்தயை
கர்த்தர்தாள் புகழ்ந்தேத்து நல்லிசை
கணங்கள் தோறுமெய் காட்சி வழங்கிடும்
காணும் சாலைஉத்யோவன மாட்சியே

எங்கு நோக்கினும் பக்தர் பாசுரம்
இனிதிசைத்திடும் இனிய நாசுரம்
பொங்குமன்பு மிளிர்ந்து திருக்கழல்
போற்றுவோரிடை நேசநெருக்கமும்
அங்கம் ஆருயிர் யாவும் அர்ப்பணித்
தையர்தாள் சிரம் சூடும் நற்பணி
சங்கம் சார்பிர சங்க மெங்கணும்
தங்குசாலை வளத்திரு நாடிதாம்

நான்கு வேதம் நவில்திரு வாயினர்
நல்லனந்தர் தம் வான் மரபாயினர்
தேன்கமழ் மொழி செல்வர் செல்வியர்
தேடு கூடக பாடக ராயினர்
மான்மியம் திருவாக்ய மிக்குரை
மாதவத்தினர் விண்ணக மெக்கினர்
வான்மகதி என்னையர்தம் மெய்ம்மதி
வழங்க ஏற்று வாழ்வாங்கு வாழ்குவர்

கலங்கக் கண்டது கலியனின் வேகம்
கழியக் கண்டது காமனின் தாகம்
இலங்கக் கண்டது எம்மிறை யருளே
இரியக் கண்டது எம்மனத் திருளே
துலங்கக் கண்டது தேவரகசியங்கள்
துவளக் கண்டது கோபதாபங்கள்
நலங்கள் ஓங்கிடும் நற்றவர் மெய்வழி
நாதர் சாலையர் நாடெங்கள் நாடே

ஓடக் கண்டது எமபய மிங்கண்
ஒழியக் கண்டது மதவெறிமங்கி
வாடக் கண்டது மாய்கையின் வளமை
மடியக் கண்டது சூது பொறாமை
கூடக் கண்டது அனந்தர்கள் உள்ளம்
கொழிக்கக் கண்டது திருவருள் வெள்ளம்
நாடக் கண்டது நாதர்நல் லருளை
நலந்திகழ் சாலை நாடெங்கள் நாடே

உய்ய வருகெனத் துவஜம் அழைக்கும்
உவந்து யாவரும் வேதமிசைக்கும்
மெய்வழிக் குலமேன்மை நிறைக்கும்
மேதினிக் கெலாம்மெய்ம்மை உரைக்கும்
ஐயர் சாலையர் அருள்மிகத் தேக்கும்
அண்டி வந்தவர்க்கு ஆரிருள் நீக்கும்
துய்ய மெய்வழி தரணியி லோங்கத்
துவஜம் கட்டிய சாலையெம் நாடே
ஓய்விலாது வணக்கம் புரிகுவர்
உயர் மெய்வேதம் சிறாரும் தெரிகுவர்
மாய்கிலாத வரங்கள் பெறுகுவர்
மாதவர் மாண்பினை எண்ணி உருகுவர்
தாய்தந்தை குருதெய்வம் ஆனவர்
சீரோர் அனந்தர் உயிருட் தேனவர்
ஆய்கலைகள் அனைத்து மாமெங்கள்
ஆண்டவர்திரு நாடெங்கள் சாலையே

ஞானமாலியெம் நாயகர் ஈன்றருள்
நல்லனந்தர்வீ தியெங்கும் தோன்றுவர்
வானில் தேவர் ரிஷிகளும் கூடியே
வணக்கம் செய்வர்தவப்பலன் நாடியே
கானகம் உத்யோவனம் பூமிசை
கயிலை மெய்குண்ட மமரர் வாழ்திசை
தேனமு தெனும் அருள்மழை பொழி
தெய்வ மெய்வழிச் சாலைநாடிதே

இடையறாது விழாக்கள் நிகழ்ந்திடும்
இறப்பிலா வரம்ஈகை திகழ்ந்திடும்
தடையிலாத மெய்ஞ்ஞான வரோதயர்
தருமர் சாலையர் சீரோர் யுகோதயர்
விடைவினாச் சுவைக்கனிகள் குலுங்கிடும்
வேதவேதியர் மாட்சி துலங்கிடும்
மடைதிறந்தமு தக்கடல் பொங்கிடும்
வளமை பொங்கிடும் நாடெங்கள் சாலையே

கூவு குயிலே ஆடு மயிலே

கலித் தாழிசை

தென்னாடு டைசிவனார் சீரோங்கு சாலையண்ணல்
மின்னார் திருமேனிப் பொன்னரங்கர் வான்புகழார்
நன்னாட்டின் நல்வளங்கள் நாவாரப் பாடிமகிழ்ந்து
இன்னிசைப் பூங்குயில்கூவ எழில்மயிலின் நடம்கண்டார்

கண்ணிகள்

ஆதியருட் சோதிமெய்யர் ஆண்டவர் புகழ்
ஆனந்தம் பொங்க ஆர்த்துக் கூவுகுயிலே
நீதியர சாட்சிசெய்ய நீணில மிசை
நித்தியர் வந்தாரென்றினி தாடுமயிலே

மந்திரத்திருவடிவர் மாதவர் புகழ்
மாணடிக ளைத்தொழுது கூவுகுயிலே
சுந்தர சாலைத்தமிழில் சொர்க்கபதியின்
சந்ததி தோன்றிட்டதென்று ஆடுமயிலே

சமரச வேதநாதர் சாதிகள் கர்த்தர்
சாலையர் செங்கோல் புகழ்ந்து கூவுகுயிலே
அமரர் பதித்தலைவர் ஆண்டவர் மாட்சி
ஆழிசூழ் உலகறிய ஆடுமயிலே

சமயங்கள் சங்கமிக்கும் சமுத்திரமென்று
சாலையர் திருப்புகழைக் கூவுகுயிலே
அமுதம் பெருகுமடை ஆனந்த வெள்ளம்
ஆர்ப்பரித்துப் பொங்குதென்று ஆடுமயிலே

சாதிக ளொன்றாயிலங்கி நீதி நிறைக்கும்
சாமிதிரு நாமம் போற்றிக் கூவுகுயிலே
வேதியர் விமலர் மெய்யர் ஆண்டவரென்று
வெற்றிக்களிப் போடு மகிழ்ந்தாடு மயிலே

சாவா வரங்கள்தரச் சாயுச்யர் வந்தார்
சார்ந்து பணிந் துய்ம்மி னென்று கூவுகுயிலே
தேவாதி தேவர்திருச் செங்கோல் ஓச்சிடும்
சீர்திறம் தெரிந்தேமென்று ஆடுமயிலே

பாவசங்கா ரகரணர் பாதம் பணியப்
பாருலகோர் வாருமென்று கூவுகுயிலே
ஜீவனோடு தேகமுத்தி தந்தருள் பவர்
தெய்வ மணி நாயகமென் றாடுமயிலே

பூவுலகம் உய்யவவதாரம் செய்தவர்
பொன்னரங்கர் தம்வருகை போற்றுகுயிலே
தேவரகசியம் தெளி செந்நெறியினர்
சாலை வாழனந்த ரென்று ஆடுமயிலே

கார்க்கும் தீகைக்கொண்ட கர்த்தாதி கர்த்தர்
காசினியில் வந்தாரென்று கூவுகுயிலே
பார்க்குள் பிறவிப் பிணிதீர்க்கு நிலையம்
பண்புயர்ந்த சாலையென்று ஆடுமயிலே

மெய்வழி ஒன்றே உலகம் உய் வழியென்று
மாதவர்நம் தெய்வப் புகழ் கூவுகுயிலே
வையகமும் வானகமும் ஈடிணையில்லா
மெய்ச்செல்வம் இங்குளதென் றாடுமயிலே

கல்லார்க்கும் கற்றவர்க்கும் மெய்க்களிப் பருள்
கல்வியைக்கற் பிக்கும்சாலை கூவுகுயிலே
எல்லவரும் இன்பநிலை எய்தவருள் செய்
ஏகாந்தர் வந்தாரென்று ஆடுமயிலே

தேடரிய செல்வக்குவை தேங்கு கஜனா
திகழும் மெய்ப்பதியென்று கூவுகுயிலே
வாடா நெறிமுழங்கும் மெய்வழி யென்று
வாழ்க வாழ்க என்றுகளித் தாடுமயிலே

என்றும் எங்கும் இணையில் ஏரார்ந்த பதி
எங்கள் திருச்சாலை யென்று கூவுகுயிலே
ஒன்றுகுலம் ஒன்று தெய்வம் என்று காட்டிய
உத்தமர்த போவனமென் றாடுமயிலே

தீங்கறியாப் பாங்கினர்கள் வாழும் சாலையே
திருமறைதெளிபதியென்று கூவுகுயிலே
ஓங்கார முதல்சர்வ மந்திரங்களும்
உண்மையுருக் காட்டுமென் றாடுமயிலே

வந்த பலன் தந்தருளும் வள்ளல் பெருமான்
விந்தைகுரு சாலையென்று கூவுகுயிலே
சந்ததம் நிறைசெல்வக் குவை பொதிந்துள
சேமநிதி சாலையென்று ஆடுமயிலே

எமபடர் கடத்திடும் ஈடில்துணையாம்
எங்கள்குரு கொண்டலென்று கூவுகுயிலே
அமையும் விராட்பதியெம் சாலைஆண்டவர்
ஆர்புகழை ஆர்ப்பரித்து ஆடுமயிலே

குடும்பன் சாலை வளவயலில் உழவுத் திருப்பணி செய்ய தெய்வ உத்தரவு வேண்டல்

அறுசீர் விருத்தம்

தெய்வமெய் யறம்செய் மாட்சித்
திருவருள் வழங்கும் வள்ளால்!
ஐயனே! அரசே! எங்கள்
அருங்குல விளக்கே! நாதா!
துய்யனே தங்கள் பண்ணைத்
திருப்பணி புரிந்து நாயேன்
உய்யுமா றருள் பாலிக்கும்
உத்தரம் விழைந்தேன் தேவே!

சிந்து

சாமியேமெய்ச் சாலை தெய்வமே - பாதம்
சரண்புரிந்து நாங்களுய்வமே - இந்தக்
தாரணிதனில் சீருயிர்ப்பயிர்
பாரகம்உய்ய ஆர்த்தியற்றிடும்
நேமியரே தஞ்சம் தஞ்சமே - தங்கள்
நற்பதம் உயிர்க்கு மஞ்சமே

பூமியில் பசிப்பிணி தனைத் - தீர்க்கப்
புரிதொழில்வேளாண்மை நல்வினை - ஏழைப்
பித்தனேற்கு உத்தாரம் தந்திட
வித்து நாயக பத்தினேன் பதம்
ஆமனு வென்றான மாதனம் - அத்தன்
அடிய னேற்குத் தந்த சீதனம்

வித்தில்லா வித்தான ஐயனே - ஞான
முத்திக்கு வித்தான மெய்யனே - வான
முழுமுதல் உமைத் தொழுதிட வயல்
உழுதிடப் பலன் கொழிதர எனக்(கு)|r}}
உத்தரவு தாரும் நாதரே - மெய்யில்
ஓங்கு நெறி காட்டும் போதரே

சித்தம் சற்றிரங்க வேண்டுமே - ஏழை
சிறுமொழியை ஏற்க வேண்டுமே - ஏரி
முத்துநீர் நிறைத்திங்குண்டு
வித்துமுண்டு சத்துமுண்டு
அத்தன் ஆணையிட்ட ருளுங்கள் - நெஞ்சில்
அளவிலாப் பேரின்பத்தின் பொங்கல்
பால்பசு உழவுமாடுகள் - கன்றுகள் காத்துப்
பண்ணை வயல்காடு மேடுகள் - நன்றாயுழுது
பயிரிடும் உயிர்த் துயர் கெடும்இறை
தயவுறும் எம பயமறும் - வெற்றி
வேல்கைக்கொண்ட மெய்வழித் தேவே - ஏழை
வேண்டுகோளை ஏற்றருள் கோவே

காலங்கள் கடந்த காருண்யா - திருக்
காலங்காட்டி யாண்ட வான்மெய்யா - சாலைக்
கழனியாவினும் முழுமையாய்ப்பயிர்
உழவு செய்திடத் தொழுது வேண்டினேன்
வாலகுரு வாக்கருள்தரப்-பணிந்து வேண்டி
வணங்கினேன் உத்தாரம் தாருமே

உழுதுலகை உண்பிக்கும் பணி - செய்வேன்
பழுதிலாநும் பாதம் நல்லணி - இது
ஊரகம் திரு ஏரகம் கொடு
மாரகம் தவிர் சீரகமிதில்
தொழுதல் சாலை ஆண்டவர் பாதம் - போற்றல்
தூயவர்மெய்ந் நாம நன்னாதம்
வாழிவாழி வான்மகதியே - பணிந்து ஏழை
வந்து பெற்றேன் நல்லகதியே - எங்கள்
மாதவா அருள் ஆதவா நிறை
நீத மோங்குறு வேதநாதரே
மேழிச்செல்வம் தாழ்விலாவழி - சாமி
வாழியுங்கள் வான்புகழ் வாழி

ஆண்டவர்கள் திருவுள்ளம் உத்தரவு அருளல்

ஆர்வமிக் குடையாய் உந்தன்
அன்புகண் டகம கிழ்ந்தோம்
பாரகம் பசிதீர்ந் துய்யும்
பணியுழ வியற்று சாலை
ஊரகத் தினிது வாழும்
உழவியற் றிடுவோர் வாரும்
சீருயில் திருப்பணிகள்
செய்தினி தோங்கி வாழ்வீர்!

சிந்து

தினதினனா தினதினனா தினதினனா தினதினா
அமுதவாக்கு அருள்கொடுக்க அடிபணிந்த குடும்பனும்
அகமகிழ்ந்து அமுதும்பெற்று அனைவரோடும் கூடியே
இமையமேரு தனில்தவம்செய் தினிதெமையாள் தெய்வமே
இனிதுமாரி பொழிகவேஎம் இதயத்தின்பம் வழியவே
நமதுகண்மாய் நிறைகவே பயிர் நலங்கொழிக்க உழுவமே
நமனைவென்ற நாதர்வரம் நல்கநாமும் பெறுவமே
அமரர்பதியிச் சாலைவயலில் அனந்தரெல்லாம் கூடியே
ஆடிப்பாடித் திருப்பணிகள் அங்கம்குளிரப் புரிவமே
(492)

சடுதியாக எறும்புமுட்டை கொண்டுதிட்டில் ஏறவே
தோகைமயிலாட நண்டு சேற்றால்வளையை யடைக்கவே
நெடுமரங்கள் சுழன்றசைய நீர்த்தவளை அழைக்கவே
நீள்விசும்பில் கார்முகில்கள் நெருங்கிநின்று மின்னவே
இடிமுழங்கி மழைபொழிய ஏகவெள்ளம் பெருகவே
ஏரிகண்மாய் குளம்நிரம்பி எங்கும்ஊற்று பொங்குமே
மடையுடைத்து வயல்நிரவி வழிந்துசெல்லும் நதியென
மாதவர்க்குளான பள்ளன் உள்ளம்போலப் பரந்ததே

அருணன்முகம் பார்க்கவென்று அமைத்திட்ட கண்ணாடிபோல்
அழகிலங்க நீர்நிறைந்த சாலைவயல் தோற்றமே
வருணனெங்கள் மாதவர்தாள் வணங்குமபி ஷேகமோ
மழைபொழிந்து ஆலயமுன் முகப்பின்நின்ற நீரதில்
கருணையர்க்கும் காட்டுமுல்லை அரளிவிடத் தாரியும்
காந்தள் காசா நொச்சிசங்கு கிரந்திபூவு அரசனும்
நெருஞ்சியுடன் முள்ளிஅள்ளி செங்கழுநீர் தாமரை
நீரில்மிதந்து பாதபூசை நிகழ்த்திய போற்றோற்றமே

வெள்ளம் பொங்கிப் பெருகுதே - மிக
வேகமாக வருகுதே
துள்ளிக் கெண்டை கெழுத்தி மீன்கள்
தேளி,மயிந்தி, உழுவை மீன்
சள்ளை, மத்தி, வல்லமீனும்
துதிக்கை, முக்கன், பண்ணை மீன்
தெள்ளும் இறால் பொத்தியும்
சின்னாங்குண்ணி கருங்கண்ணி
எண்ணை மீனும் மகரமும் - விசை
எகிறும் திருக்கை பசலியும்
வண்ணக் கடந்தை மடந்தையும் - விளக்
கெரியும் மீனும் பஞ்சலை
எண்ணில் பெருமை சாலை ஐயர்
எழில் பொற்றாளைப் பணிந்தபேர்
பண்கள் பாடி ஆடிக்களித்தல்
போலும் மீன்கள் துள்ளுமே

தருக்கள் மழையில் குளித்துக் களித்துக்
தாங்கள் சபைக்கு வரவென
மருக்கொள் வாசம் தூதனுப்பி
மெய்தெய்வத்தை விழைந்தவே
பெருக்கமாக வளர்ந்த செடிகள்
மரங்கள் கொடிகள் மலைகளும்
அருள்மெய் அரசர் அண்மை நினைத்து
அகம் களித்துச் செழிக்கவே

பாபத்தை அருள் மழையும் கழுவப்
பண்டை வினைகள் நழுவவே - முத்
தாபம் உலரத் தருக்கள் ஒளிர
தவப்பலன்கள் மிளிரவே
ஆபத்தென்னும் மரணம் கடக்க
அருண்மெய் நெறியில் நடக்கவே
மாபத்தான மறையின் முதல்வர்
மாண்பைப் போற்றும் புதல்வர்கள்

குடும்பன் ஏர்பூட்டத் திருஉத்திரவு வேண்டுதல்

அறுசீர் விருத்தம்

குடும்பனும் திருமுன் சென்று
கமலப்பொன் மணித்தாள் பற்றி
இடும்பறச் சிரத்தில் சேர்த்து
இருகரம் ஏந்தித் தேவே!
நெடும்புவி உய்யப் பொன்னேர்
நற்றிருக் கரத்தால் தொட்டு
திடம்பெற உழவு செய்யத்
திருவரம் அருள வேண்டும்

விற்பன வேந்தே மெய்யார்
வித்துநாயகமே வான்மெய்க்
கற்பகத் தருவே எங்கள்
கர்த்தாதி கர்த்தா போற்றி
பொற்கரந் தொட்டு ஏரைப்
பூட்டியிட் டருள்க நாதா
அற்புதம் விளைத்து ஞாலம்
அனைத்துமே உய்யக் காப்பீர்

சிந்து

தன்னேரிலாத தலைவரெங்கள் சாமி
தங்கத் திருக்கரம் தானெடுத்து
பொன்னேரு பூட்டிப் புவியுழவு செய்யப்
பூம்பதம் மண்ணில் நடந்தருள
பின்னேரு பூட்டிக் குடும்பன் உழுதிடப்
பூமித்தாய் மேனி சிலிர்த்திடவே
கன்னல் மறைமொழி நாவேருழ உள்ளம்
களித்துச் செழித்து உய்ந்தனமே
கள்ளம் கபடெனும் கட்டிமுட் டிகளும்
கொழுமுனையில் கலந்துணக்க
உள்ளம் பண்பட்டது ஞானப் பயிர்செய்ய
உத்தமர் வேளாண்மை செய்தனரே!
வள்ளல் சாலையர் வளநாடர் பேரருள்
வையக மாந்தர்கள் உய்ந்திடவே
தெள்ளிய தேன்சாலைச் செந்தமிழ் மாரியில்
சிந்தை செழிக்கப் பொழிந்தனரே!

கட்டித் தயிரைக் கலக்கியே மத்திட்டுக்
காணுமது போலும் சேறுழக்கி
அட்டியில் லாமலே நாலுழவு செய்து
அண்டையை வெட்டி வரப்புக்கட்டி
மட்டாக நாற்புறம் நீர்சமமாய் நிற்க
வளமாய்க் கொளுஞ்சிக் குழைதழையும்
இட்டு மிதித்து எம்பிரான் சன்னதிக்
கேகியே விண்ணப்பம் தான் செயுமே

நாற்று விடுதல்

அறுசீர் விருத்தம்

துய்யமெய் உலக மெல்லாம்
தழைத்திட அருள் பாலிக்கும்
தெய்வமே தங்கள் கொண்டற்
திருக்கொடைக் கரம்நெல் ஏந்தி
வையகம் உய்ய எங்கும்
வளங்கெழு விளைச்சல் பொங்க
ஐயனே விதைவி தைக்க
அடிபணிந் தேத்துகின்றேம்

பொற்பெட்டி கையிலேந்தி
பொன்னொளிர் பூஞ்செஞ்சாலி
நெற்றிரு மணிகள் அள்ளி
நானிலம் நனி வாழ்ந்தோங்க
நற்குவை விளைவது எங்கள்
நாதரும் வரங்கள் பொங்க
பற்குணர் விதைத்தார் மக்கள்
பசிப்பிணி மடிந்த தன்றே!

நாற்று நடுதல்

சிந்து

அறங்க மழும் அனந்தர் குல
ஆருழவர் கூடிவந்து
கூடிவந்து எங்களுட
குலம்விளங்க வேணுமென்று

வேணுமென்று வேளாண்மை
மேழிச் செல்வம் சிறக்க
சிறந்தோங்கச் சேற்றுழவு
சீராக நான்கு முறை

முறையாய் உழவு செய்து
மிக்கவிளை நெல்வகையுள்
வகையான முல்லைச் சம்பா
மிளகுசம்பா புனுகு சம்பா

சம்பா கருங்குருவை
சின்னவங்கி சண்பகப் பூ
பூம்பாளை மகிழ மொடு
பொன்னிகு திரைவாலன்

வாலப் பெரிய வங்கி
மணக்கத்தை கல்லு முத்தான்
முத்தான சித்திரைக்கார்
மூங்கில் சம்பா வெள்ளைப் பொன்னி

பொன்னி மணல் வாரி
பொற்பாளை கஸ்தூரி
கஸ்தூரி பாற்கடுக்கண்
குங்குமச் சம்பா சன்னச்

சன்னக் கிச்சடி அம்பா
சமுத்திரம் என்னும் நெல்லு
நெல்லெடுத்துக் கோட்டைகட்டி
நாள் மூன்று ஊறவிட்டு

விட்டு வயல் நீர்வடித்து
மெய்த் தெய்வப் பொற்கரத்தால்
கரந்தொட்டு எங்களுட
கர்த்தாதி கர்த்தர் திரு

திருவரம் தந்தருள
சிந்தைகனிந் தேவிதைத்து
விதைக்க முடி முளைபோல்
மிக் கெழிலாய்த் தான் முளைத்து

முளைத்துப் பசுமை கட்டி
மென்நாற்று தான் வளர
வளர்ந்தது காண் நெல்நாற்று
மாதேவர் வான் தவம் போல்

தவவேந்தர் தண்ண ளிபோல்
தளிர்நாற்று தான் வளர
வளர்ந்த நாற்றைப் பிடுங்கி
வயல் நடவு செய்யவென

நடவுசெய வேணு மென்று
நங்கையரே வாருங்கம்மா
வாருங்கம்மா நாற்றுகளை
வகையாப் பிடுங்கிமுடி

முடிகட்டி மெய்ச்சாலை
வளமார் கழனியிலே
கழனி நிறைந் திடவே
கணக்காய் முடி விளம்பி

விளம்பும் திருநாமம்
மெல்லடியைத் தான் தொழுது
தொழுது வணங்கி நின்று
செங்கரத்தால் நாற்றெடுத்து

எடுத்து உயிர்க் குணவு
என்றும் நிறைந்திடுக
நிறைய விளைந் தோங்க
நாதா வரமருள் வீர்
வரமருள வேணுமென்று
வாகாய் நடவு செய்தார்
பரமேசர் பாதந்தன்னை
பணிந்து வணங்கி நின்றார்

நாற்று நடும் பாட்டு

ஆதி துணையெனவே - துணையெனவே
                                                                             ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                               அப்படிச் சொல்லு ஐலசா
ஆண்டவரைப் போற்றி செய்வோம் போற்றிசெய்வோம்
                                                                                ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
நீதிநடவு செய்ய - நடவு செய்ய
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                        அப்படிச் சொல்லு ஐலசா
நீணிலத்தில் வந்தவரே - வந்தவரே
                                                                             ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                           அப்படிச் சொல்லு ஐலசா
தார் புனைந்த மன்னவரே மன்னவரே
                                                                            ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                          அப்படிச் சொல்லு ஐலசா
தனிக்கருணை வாரிதியே - வாரிதியே
                                                                             ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                          அப்படிச் சொல்லு ஐலசா
சீருயர்ந்த மெய்வழியை - மெய்வழியை
                                                                           ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                       அப்படிச் சொல்லு ஐலசா
செகமுய்யக் கொண்டுவந்தீர் கொண்டுவந்தீர்
                                                                        ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                     அப்படிச் சொல்லு ஐலசா
பார்புகழும் பொன்னரங்கர் - பொன்னரங்கர்
                                                                                     ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                                 அப்படிச் சொல்லு ஐலசா
பாதம் பணிந்தெழுந்தோம் - பணிந்தெழுந்தோம்
                                                                                   ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                               அப்படிச் சொல்லு ஐலசா
கார்த்திகையர் வான்புகழை வான் புகழை
                                                                                 ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
கனிவோடு பாடிடுவோம் - பாடிடுவோம்
                                                                                ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                            அப்படிச் சொல்லு ஐலசா
நாற்று நடவு செய்ய - நடவு செய்ய
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                          அப்படிச் சொல்லு ஐலசா
நங்கையரே வாருமம்மா - வாருமம்மா
                                                                           ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                       அப்படிச் சொல்லு ஐலசா
கூற்றுதைத்த சேவடியை - சேவடியை
                                                                         ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                     அப்படிச் சொல்லு ஐலசா
கும்பிட்டு நாற்றெடுங்கள் - நாற்றெடுங்கள்
                                                                        ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                    அப்படிச் சொல்லு ஐலசா
வேற்றொருவர் நிகரில்லா - நிகரில்லா
                                                                      ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                  அப்படிச் சொல்லு ஐலசா
மேலாம்மெய் ஆண்டவரை -ஆண்டவரை
                                                                        ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                    அப்படிச் சொல்லு ஐலசா
போற்றிப் புகழ்ந்திடுவோம் - புகழ்ந்திடுவோம்
                                                                       ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                    அப்படிச் சொல்லு ஐலசா
பொற்பாதம் சரணடைவோம் - சரணடைவோம்
                                                                      ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                   அப்படிச் சொல்லு ஐலசா
வேத கலைக்கதிபர் - கலைக்கதிபர்
                                                                                  ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                               அப்படிச் சொல்லு ஐலசா
வித்தாதி கர்த்தரவர் - கர்த்தரவர்
                                                                                  ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                               அப்படிச் சொல்லு ஐலசா
சீத மலர்ப்பதங்கள் - மலர்ப்பதங்கள்
                                                                                 ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                              அப்படிச் சொல்லு ஐலசா
சிரஞ்சூடி உய்ந்திடுவோம் - உய்ந்திடுவோம்
                                                                                ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
நாதிவே றில்லையம்மா - இல்லையம்மா
                                                                                ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                            அப்படிச் சொல்லு ஐலசா
நம்பிப் பதம்பணிவோம் - பதம்பணிவோம்
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                            அப்படிச் சொல்லு ஐலசா
சேதமில்லா மெய்ந்நெறியாம் - மெய்ந்நெறியாம்
                                                                             ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                           அப்படிச் சொல்லு ஐலசா
சீராரும் மெய்வழியாம் - மெய்வழியாம்
                                                                               ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                           அப்படிச் சொல்லு ஐலசா
சாலைவள நாடர் - வளநாடர்
                                                                                ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                              அப்படிச் சொல்லு ஐலசா
சற்குரு பொற்றாள் பணிவோம் - தாள்பணிவோம்
                                                                                ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
மேலைமெய் மருந்துகொண்டு - மருந்துகொண்டு
                                                                                 ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                              அப்படிச் சொல்லு ஐலசா
வான்வரங்கள் கையில் கொண்டு - கையில்கொண்டு
                                                                                   ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                                அப்படிச் சொல்லு ஐலசா
காலங் கடந்தகலி - கடந்தகலி
                                                                                    ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                                 அப்படிச் சொல்லு ஐலசா
கடைநாளில் வந்தருளி - வந்தருளி
                                                                                    ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                                 அப்படிச் சொல்லு ஐலசா
காலன் அமல்கடத்தி - அமல்கடத்தி
                                                                                   ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                              அப்படிச் சொல்லு ஐலசா
கருணையொடு ரட்சித்தார் - ரட்சித்தார்
                                                                                  ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                               அப்படிச் சொல்லு ஐலசா
நந்தாவிளக் கெரிய - விளக்கெரிய
                                                                                  ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                              அப்படிச் சொல்லு ஐலசா
நன்னீரே எண்ணையென - எண்ணையென
                                                                                 ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
சிந்தா குலம்தவிர - குலம்விளங்க
                                                                                 ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                              அப்படிச் சொல்லு ஐலசா
தீபம் ஏற்றிவைத்தவரே - வைத்தவரே
                                                                                  ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                               அப்படிச் சொல்லு ஐலசா
தந்தைதாய் சற்குருவும் - சற்குருவும்
                                                                                 ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
தெய்வமுமாய் நின்றிலங்கும் - நின்றிலங்கும்
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                          அப்படிச் சொல்லு ஐலசா
எந்தைமெய் வழிதெய்வமே - வழிதெய்வமே
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                          அப்படிச் சொல்லு ஐலசா
எம்முயிரைக் காத்தவரே - காத்தவரே
                                                                          ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                       அப்படிச் சொல்லு ஐலசா
தரிசை அடித்துழுது - அடித்துழுது
                                                                                ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                            அப்படிச் சொல்லு ஐலசா
தயிர்போல் மேழிச்சந்தனத்தில் - சந்தனத்தில்
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                           அப்படிச் சொல்லு ஐலசா
வரிசை வரிசையாக இங்கே - ஆகஇங்கே
                                                                                ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
வளர்நாற்றை நடவு செய்வீர் - நடவுசெய்வீர்
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                           அப்படிச் சொல்லு ஐலசா
தரிசனம் தந்தருளி - தந்தருளி
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                            அப்படிச் சொல்லு ஐலசா
தவப்பலன்கள் அள்ளித்தரும் - அள்ளித்தரும்
                                                                               ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
பெரிய திருவுளத்தார் - திருவுளத்தார்
                                                                               ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                           அப்படிச் சொல்லு ஐலசா
பேரான பொன்னரங்கர் - பொன்னரங்கர்
                                                                               ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
ஆண்டவர்கள் திருவயலில் - திருவயலில்
                                                                               ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                             அப்படிச் சொல்லு ஐலசா
அழகாக நடவுசெய்வோம் - நடவுசெய்வோம்
                                                                               ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                            அப்படிச் சொல்லு ஐலசா
மாண்டார்கள் மீண்டெழுந்து - மீண்டெழுந்து
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                           அப்படிச் சொல்லு ஐலசா
வரும்யுகத்தில் வாழ்வுபெற - வாழ்வுபெற
                                                                              ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                            அப்படிச் சொல்லு ஐலசா
ஈண்டு வரமருளும் - வரமருளும்
                                                                                     ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                                  அப்படிச் சொல்லு ஐலசா
எங்கள் குலதெய்வமே- குலதெய்வமே
                                                                                     ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                                  அப்படிச் சொல்லு ஐலசா
பாண்டிய நாடருங்கள் - நாடருங்கள்
                                                                                  ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                              அப்படிச் சொல்லு ஐலசா
பாதம் போற்றி நடவு செய்வோம் - நடவுசெய்வோம்
                                                                                  ஆமாஞ்சொல்லு ஐலசா
                                                                               அப்படிச் சொல்லு ஐலசா

நெல் விளைவு

சிந்து

உத்தமர்தம் உள்ளமெனும் அழகு வயலில் - திரு
வோங்கருள்சொல்லேருழுது அன்புநீர் பாய்ச்சி
முத்தியருள் வித்தென்னும்மெய் தன்னை விதைத்து - தவ
மேவும் வரந் தந்தருள் உரந்தனையிட்டு
சித்தமுயர் ஞானப் பயிர் தன்னை விளைத்து - தெய்வத்
திருநாட்டிற்காகும் விளைவாக விளைந்து
வித்தில்லா வித்தான எம்மான் விளைவு கண்டு - எங்கள்
மெய்வழி தெய்வம் வேளாண்மை புரியும்

வெளுத்துக் கிடந்த பயிர் கரும்பச்சையுற்று -திரு
மாதவர் அருள்பெருக வளர்வுமிக்குற்று
துளிர்த்து வளர்ந்துலகோர் காணுறும்போது - எழில்
தோகை விரித்து நிமிர்ந் தாடலம் செய்து
தெளித்துப் பசுங்காய் முற்றிச் சாலி விளைந்து - தெய்வத்
திருமுன்னர் பணிந்து குனிந்து வணங்கிக்
களித்துக் கிடக்குஅனந்தர் காட்சிகளைப்போல் - அங்கு
காணுற லானது செஞ்சாலிவயலும்

பச்சை மாயாத்திரையும் படர்ந்திருக்க - தெய்வம்
பாலிக்கும் நல்லருளால் மயக்கொழிய
இச்சை தவிர்த்(து) உயிருள் இன்பம் பெருக - எங்கள்
இனிய அனந்தர் குலம் பொன்னொளிர்தல் போல்
பச்சை நிறம் திரிந்து பொன்மைநிறமாய் - சாலிப்
பைங்கூழ் விளைந்து நிலம் தன்னில் படிந்து
அச்சன் ஆண்டவர்வயல் எங்கும் பரந்து - மிளிர
ஆனந்தம் கொண்டு பள்ளன் சன்னிதி சென்றான்

அறுவடை செய்ய தெய்வ உத்தரவு கேட்டல்

கொச்சகக் கலிப்பா

குருநாதா போற்றி! உங்கள் கொழுமலர்ச்சே வடிபணிந்தேன்
திருவோங்கெம் உயிர்விளைந்து திருமுன்னர் கிடப்பதுபோல்
அருளாளா பயிர்விளைந்த(து) அறுவடைக்கு உத்தரவு
தரும்தாதா தவநாதா எனவேண்டும் தமியேனே

அறுவடை செய்தல்

தெய்வ மலர்வாய் திறந்(து) உத்தாரமே - தந்தருள
செல்வ அனந்தர் கனிந்து கூடியே
வையம் செழிக்கும் ஐயர் ஆலயம் - நோக்கி
வணங்கிப் பணிந்து வாழ்த்துக் கூறியே
கொய்வர் அரிவாள் கொண்டு விளைபயிர் - இன்பம்
கொண்டு மகிழ்ந்து ஆடிப் பாடியே
மொய்த்து அறுத்து வரிசைவரிசையாய் - அழகு
மிளிரப் பரப்பும் வயலில் நாடியே

புரிகள் முறுக்கி அரிகள் சேர்த்துமே - கட்டிப்
பொன்னின் அரங்கர் களத்தில் சேர்க்குமே
பெரிதாய் மலைபோல் நெற்கட் டிலங்குமே -அதனைப் பார்த்துப்
பள்ளன் களித்து மகிழ்ந்து குலுங்குமே
அரிவை மார்கள் அரிகளெடுத்துமே - கொடுக்க
ஆடவர்நெல் லடித்துக் குவிக்குமே
தெரிக்கும் பொன்னின் மணிபோல் சிதறுமே - கூட்டிக்
சேர்க்கத் திகழும் தங்கக் குவியலே

பதர்கள் போக நெல்லைத் தூற்றுமே - பாழைப்போக்கிப்
பலன் கொடுக்கும் தெய்வம் போற்றுமே
பதிமெய் மதியர் விதிகடந்த வான் - ஆருயிரைப்
பயிர்செய் உழவர் பரமர் எங்கள் கோன்
மதிவானரசர் அந்த நாட்டிற்கு - வித்தெடுத்து
வைக்கும் பான்மை போல்பின்னாண்டிற்கென
இதமாய் விதைக்கு நெல்லைத் தேர்ந்துமே -எடுத்துவைத்து
இறைவர் திருமுன் பணிந்து ஆர்க்குமே

விளைவுகண்டு குடும்பன் களித்துமே - தேவநாட்டு
வேந்தர் முன்னே குடும்பன் மொழியுமே
அளைந்து நெல்லை ஆர்ந்து அள்ளியே - திருமுன்காட்டி
அகமகிழ்ந்து ஆடும் துள்ளியே
களத்தினுக்குக் கர்த்தர் வருகவே - என்று வேண்டிக்
கனிந்து விழையும் குடும்பன் உருகியே
தளிர்மென் றாள்கள் நடம்பயின்றுமே - எங்கள்சாமி
தருகும் வருகை களத்தினுக்குமே

தெய்வம் பொன்னின் நாழி கொண்டுமே - நெல்அளந்து
திருப்பணிக்குக்கூலி வழங்குமே
துய்ய நெல்லை அளந்தளந்துமே - நெல்சேரில்
சிந்தை கனிந்து குடும்பன் சேர்க்குமே
வைக்கோல் தன்னைத் தாம்படித்துமே - உதறிவாரி
வாரிக்குவித்துப்போரும் அமைக்குமே
வைக்கோல் புடைப்பு மலைபோல் திகழுமே - அனந்தர்கூடி
மெய்யர் திருவைப் பாடிப் புகழுமே

தைப் பொங்கலிட உத்தரவு வேண்டல்

கொச்சகக் கலிப்பா

வையமெலாம் வாழ்கவென வந்ததிரு மாமணியே
உய்யவரம் தந்தருள உவந்தவதா ரம்அருள்செய்
மெய்பிறந்து தைபிறந்த மேன்மைதனைக் கொண்டாடி
தைப்பொங்கல் பாலிக்கத் தயவருள வேண்டுகின்றோம்.

பொங்கல் திருநாள்

இறைவரின் அவ தாரத்திருநாள்
இன்பமாய்க் கொண்டாடியே
இனிய அனந்தர் குலம்பராவி
இறவா வரத்தை நாடியே
மறைமெய் முதல்வர் மாண்பைப் போற்றி
மறுநாள் தையின் முதன்மை நாள்
வான அனந்தர் மனைவி மக்கள்
மகிழ்ந்து பொங்கல் படைக்குநாள்

நிறைமெய்ச் செல்வம் பொங்கப் பொங்க
நிமலர் தாளைப் போற்றியே
நற்பெண்டிருவ ரோடு குடும்பன்
நலமாய்ப் பொங்கல் வைக்குமே

துறைவர் தென்னாடுடைய சிவனார்
செங்கை முக்கூர் கத்தியால்
சீர்மை பொங்கப் பானைப்பலி செய்
திருவைப் பாரும் உலகீரே!

சொக்கர் எங்கள் சாலை தெய்வத்
திருவார் கோவில் சூழ்ந்துமே
சோதி அனந்தர் பொங்கல் படைக்கத்
தேவதேவர் திருக்கரம்

முக்கூர் கத்திகொண்டு கருணை
மிக்குபானைப் பலிகொள
மொய்த்து அனந்தர் அமுதுபெற்று
மெய்ம்மை யோங்க விளங்குமே

திக்கெ லாம்பு கழும்எங்கள்
தெய்வமாட்சி யோங்கவே
சிந்தைகளிக்கப் பொங்கல் கூவி
சீரனந்தர் களிக்குமே

மக்காப் பதியின் மதினா வேந்தர்
வளர்கயிலைக் கதியருள்
மெய்குண்டத்தில் திணிக்க வரங்கள்
மெய்ம்மை யோங்கிப் பொங்குமே

ஆதிதேவர் சாலைத் தெய்வம்
ஆண்டவர்மக் கள் குழாம்
அனந்தர் அன்பு பெருகி இனிய
அமுதுபொங்கல் படைக்குமே

நீதி நடவு ஆதிமூலம்
நித்யர் எங்கள் சத்தியர்
நேமியர் பொற்பாதம் போற்றி
நேயர் பொங்கல் படைக்குமே

வேதநாதர் எங்கள் பாவங்கள்
வினைகள் கருக அருள்செய்து
வெற்றிமேடு ஏற மறலி
விலக அமுது படைக்குமே

காதலாகி எங்களிதயம்
கனிந்து உருகிப் பொங்கியே
கலைகட் கதிபர் கழல்கள் போற்றி
கமழ்மெய்யமுது படைக்குமே

இனிய பொங்கல் கரும்பு மஞ்சள்
இதயத் துவகை பொங்கவே
எமது இறைவர் திருமுன் படைத்து
இணையில் அமுது பெறுவர்காண்

கனிமென் மொழியர் கணவர் மக்கள்
கர்த்தர் புகழைப் பாடியே
கனக நாடர் கருணைப் பெருக்கில்
களித்து இன்புற் றாடியே

தனிகை சுதனார் சாலை அரசைத்
தஞ்சமடைந்த சற்சனர்
சர்வவேதம் தெளிவர் என்றும்
சாவா வரமும் பெறுகுவர்

இனிமெய் இனிமை கனிய அனந்தர்
இகமும் பரமும் துலங்கவே
இணையில் பரமர் எழில் பொற்றாள்கள்
இனிது சிரத்தில் அணியுமே (526)

ஆலய அலங்காரம்

மாவிலை தென்னங் குருத்தோலைத் தோரணம்
வாயிலில் வாழைமரம் சீரதாய்
நிலைத்தூண்களில் குலை வாழையும்
தலைத்தோகைகொள் கழைகாடுடன்
தேவனின் ஆலயம் தானெழிலாய் - முல்லைப்
பூவலங் காரம் நிறை பொழிலாய்

பூவுலகில் முகில் போந்ததுவோ என
பொங்கல் புகையெழ வான் நிறையும்
புகழ்மாதவர் மகிழ்வோங்கிட
நிகரேதெனத் திகழ்சீர்பதி
ஜீவரட்சிப்பார் திரு விளங்கும் - ஞானச்
சீர்வழங்கும் வள்ளல் பேர்துலங்கும்.

ஆவல் பெருகிடப் பொங்கலோ பொங்கலென்(று)|r}}
ஆர்ப்பரிக்கும் ஓசை வானதிரும்
அனந்தாதியர் இனஞ்சீர்தவ
தனம் ஓங்குவர் வனமே இது
தேவர் திருமலர் வாய்குமுதம் - அருள்
ஜென்மசாபல்யம் வழங்கமுதம்

சாவா வரத்தரு சாயுச்ய நாயகர்
சாலை ஆண்டவர்தாள் போற்று பொங்கல்
சத்ய நெறி பத்யம் நிறை
முத்தர் உறை உத்யோவம்
ஓவாது பேரின்பம் இங்கணுறும் - தேவர்
உத்தமர் பத்தியும் பொங்கி வரும்

ஜீவாமிர்தத்தேன் பிலிற்றும் பாரிஜாதச்
சீர்மலர் பூவாது பூத்திருக்கும் - எங்கள்
சிந்தை நிறை சந்தம் தரும்
விந்தைமிகு தந்தை யருள்
மூவா மருந்தளி வான்மறைகள் - ஈயும்
பாவாணர் எங்கள் உயிர் நாயகர்

காவனத் தின்னிசை தான் முழங்கும் - எங்கள்
கர்த்தாதி கர்த்தர் வரம் வழங்கும் - ஞானக்
கனிதேன் சுவை நனியோங்குறு
கமழ் செண்பக மணவாளரின்
சேவை புரிஅனந் தாதியர்கள் - மெய்ம்மை
தேர்ந்துணர்ந் தோதிய வேதியர்கள்

கூவும் குயிலினம் ஆடும் மயிலினம்
கொள்ளை கொள்ளையின்பம் கூடிவரும்
கோடாயிதர் வாடாநெறி
ஈடேதுமில் நீடாழியர்
பூவார்திருமதிப் பொன்வதனம் காணல்
சாவாமை ஈயும் தரிசனமாம்

நாவலந்தீ விந்தச் சாலையம்மா - நாதர்
பூவடி போற்றிப் பொங்கலிடுவோம்
நமதாருயிர் இமவானவர்
அமரர்பதி இதுவேகதி
சேவடிச் சேகரர் வாருங்கையா - தேவர்
தூவடி சென்னியிற் சேருங்கையா

காணும் பொங்கல் கொண்டாடத்

திருவுளம் பற்றுதல்

சங்குசக்கரச் சன்னதமார் திருவிளங்கு கொடைக் கரத்தார்
திங்களொடு கங்கையணி பங்கயப்பொன் வதனமதி
பொங்கருள்நோக் கொடுபூத்துப் பவளஎழில் திருவாயான்
உங்களுளப் பொங்கலினை உவந்தேற்றோம் எனவருளும்

மகவுகளே! மனந்தளிர்மெய் மரபுடையீர் வாருங்கள்!
சகமிதில்பேர் சம்சாரி யாமென்திரு மாளிகைசார்
மகிழ்வுயர்கா ணும்பொங்கல் வானகச்சீர் ஓங்கிடவே
சுகவிளைவு பெறநீங்கள் திருவமுது பெற்றுய்மின்

சண்முகக் குடும்பா வாராய்
சாலைசார் ஆவினங்கள்
வெண்முகில் போல் நீராட்டி
மிக்கு நன்கலங்கரித்து
ஒண்மலர் சாற்றி வண்ணம்
உவந்துடன் கொம்பில் தீட்டி
பண்மிகு சாலை முன்றில்
பிற்பகல் கொண்டு சேர்ப்பாய்

குடும்பன் மாடுகளைத் தயார் செய்தல்

வாரும் சகோதரரே - சாலை
மாட்டுப் பொங்கலிடுவோம்
வானத்திரு முதலோர்
மாதேவர் ஆண்டவர்கள் (வாரும்)

தேனார் திருமலர்வாய்
செப்பும் உத்தரவுப்படி
கானம் உத்யோ வனத்தில்
கங்காளர் பண்ணையிலே (வாரும்)

வானோர் அனந்தர் குல
மக்க்காள் திரண்டிடுவீர்
ஆனிரை அத்தனைக்கும்
அலங்காரம் செய்திடுவோம் (வாரும்)

சாலைத் தொழுவத்தில்
சாரியாய்ச் சோடிகளாய்
வாலைச் சுழற்றி நிற்கும்
மயிலைக் காளை பாருங்கள் (வாரும்)

ஆலாம்பாடி எருது
ஆனைக்குட்டி அக்ரவண்டன்
கால்நெட்டை குட்டைவாலன்
கள்ளக்கடை குட்டிக் காளை (வாரும்)

கூடு கொம்பன் காரி யேழை
கடுநடையன் கொடுமுடியன்
காடுசுற்றி சூடு கொண்டான்
கூடுகுளம் பாடுரஞ்சி (வாரும்)

கட்டுக்காளை உச்சிக் கொம்பன்
கவலைக்காளை செவலை மாடு
முட்டிக் காலன் மஞ்சு வாலன்
வெள்ளைக் காளை துள்ளுக்குட்டி (வாரும்)

ஜல்லிக்கட்டு கோயில் காளை
செம்புலிங்கம் பஞ்சவண்ணன்
செல்லக்குட்டி வள்ள வாயன்
சிறுநிறவன் கருடமுகன் (வாரும்)

ஜல்லிக்கட்டுக் காளையது
துள்ளிவிழும் ஜாக்கிரதை
வல்லவர் இருவர் சேர்ந்து
வாகாகக் கொண்டு வாரும் (வாரும்)

சதங்கைக் கழுத்துப் பட்டை
தங்க நிறக் கொப்பிகளும்
இதமாய்க் குலுக்கி ஆட்டும்
ஏறுவண்டிக் காளைபாரும் (வாரும்)

வள்ள வள்ளப் பால்கறக்கும்
வாகான பாற் பசுக்கள்
துள்ளி வரும் கன்றுக்குட்டி
துரத்திப் பிடி செல்லங்களே (வாரும்)

கழுத்துக் கட்டி மணிகள்
கணகண வென்றே யிசைக்க
பழுத்த நிறத்த வெள்ளைப்
பாற்பசுக்கள் பார்த்திடவே (வாரும்)

கொம்புகளைச் சீவிடுங்கள்
குளிப்பாட்டி வண்ணமிட்டு
தெம்புடனே தெய்வத்திடம்
சுவைப் பொங்கல் அமுதுபெற (வாரும்)

வண்ணத் துண்டு கொம்பு சுற்றி
வகையாகக் கட்டிவிட்டு
திண்ணமாய்ப் புதியதாகத்
தலைக்கயிறு மாற்றிக் கொண்டு (வாரும்)

மூக்கணாங்க யிறுகளை
முக்கியமாய் மாற்றிடுங்கள்
தேக்கிப் பிடிக்க அவை
தோதாகும் ஜாக்கிரதை (வாரும்)

மாடுமேய்க்கும் கோவலர்க்கும்
மற்றும் பண்ணை யாட்களுக்கும்
பாடுபட்ட மற்றவர்க்கும்
புத்தாடை மெத்தவுண் (வாரும்) 531)

விருத்தம்

இப்படி யாய்க்கு டும்பன்
எழில் பசு மாடுயாவும்
ஒப்புடன் குளியலாட்டி
ஒளிபெறு வண்ணம் தீட்டி
செப்பமாய் சாலை தெய்வ
திருமுனர் கொணரும் போது
அற்புத மாய்க்கோ பாலர்
ஆர்வமாய்ப் பாடி யாடும்.

தேடற்கரிய திரவியம்

தேடற்கரிய திரவியம் ஒன்றுண்டு
தெய்வமலர்ப் பதமே - தங்கமே - தெய்வமலர்ப்பதமே
நாடிப் பணிந்து நலம்பெறுவோம் அது
நற்கதி நல்கிடுமே - தங்கமே - நற்கதி நல்கிடுமே

அன்புகளிந்திடத் தென்புதரும் நம
தையர் திருமுகமே - தங்கமே - ஐயர் திருமுகமே
துன்பமறப் பொன்னரங்கர் திருவடி
தோத்தரித் துய்ந்திடுவோம் - தங்கமே- தோத்தரித்துய்ந்திடுவோம்

அண்டினபேர்க்கு அபயம் தரும் கரம்
அண்ணல் திருக்கரமே - தங்கமே - அண்ணல் திருக்கரமே
தண்டிக்க ஏமன் வரும்பொழுதே தடுத்
தாளும் திருக்கரமே - தங்கமே - ஆளும் திருக்கரமே

பாடிப்படிக்கப் பனுவலுண்டு அவை
பண்ணவர் வேதங்களே - தங்கமே - பண்ணவர்வேதங்களே
பாடிப்படிக்கப் பிறவிப் பிணியறும்
பரகதி சேர்ந்திடுமே - தங்கமே - பரகதி சேர்ந்திடுமே

கூடிக்களிக்க உறவினத் தாருண்டு
மெய்வழிச் சோதரரே - தங்கமே - மெய்வழிச் சோதரரே
நாடி நவின்றிட நாமமொன்றே நம(து)|r}}
ஆண்டவர் நாமமதே - மெய்வழி ஆண்டவர் நாமமதே

பாட்டிலுயர்ந்நது மெய்வழிப் பாடலே
பாடிக் களித்திடுவாய் - தங்கமே - பாடிக்களித்திடுவாய்
கேட்டுக் களித்திட கீதமுண்டு அவை
மெய்வழி கீதங்களே - தங்கமே - மெய்வழி கீதங்களே

கூடிக்கனிவுடன் பாடிப் பரவிக்
குலங்கள் செழித்திடுவோம்-தங்கமே-குலங்கள் செழித்திடுவோம்
ஓடிஉழன்றிட வேண்டுதில்லை தெய்வம்
ஒன்றென நன்றறிவாய் - தங்கமே – ஒன்றெனநன்றறிவாய்

உண்டி உறையுள் உடைபிற யாவுமே
உத்தமர் தந்ததன்றோ - தங்கமே - உத்தமர்தந்ததன்றோ
தொண்டுபுரிதலே ஐயர் திருப்பதம்
தோத்திரம் செய்வதுவே - தங்கமே - தோத்திரம் செய்வதுவே

பத்தரை மாற்றுப் பசும்பொன்களே இங்கு
பாடிட வாருங்களே - தங்கமே - பாடிட வாருங்களே
சித்தர் தலைவர்நம் மெய்வழி தெய்வத்தைச்
சேவிக்க வாருங்களே - தங்கமே - சேவிக்க வாருங்களே

முத்தியளிக்கும் நல்மோன சபாபதி
மெய்வழி தெய்வமன்றோ - தங்கமே - மெய்வழி தெய்வமன்றோ
பத்திசெய் தின்புறப் பண்புயர்ந்தோங்கிடப்
பாடிட வாருங்களே - தங்கமே - பாடிட வாருங்களே

கட்டிக் கரும்புகளே இங்கு வாருங்கள்
காத்திடும் தெய்மன்றோ - தங்கமே - காத்திடும்தெய்வமுண்டு
அட்டியில்லாமலே ஆதரிக்கும் தெய்வம்
மெய்வழி ஆண்டவரே - தங்கமே - மெய்வழி ஆண்டவரே

சாலைமணிக் குயில் கூட்டங்களே வந்து
தெய்வத்தைப் பாடுங்களே -தங்கமே-தெய்வத்தைப்பாடுங்களே
காலை மாலையுச்சி கர்த்தரைச் சேவித்துக்
காலனை வெல்லுங்களே -தங்கமே - காலனை வெல்லுங்களே

சின்னச் சின்னக்கிளிக் கூட்டங்களே வந்து
தெய்வத்தைப் பாடுங்களே- தங்கமே-தெய்வத்தைப்பாடுங்களே
பொன்னரங்கர் புகழ் போற்றிடில் சாவிலை
பூரித்துப் பாடுங்களே - தங்கமே - பூரித்துப் பாடுங்களே

வண்ணமயில்களே வள்ளலைப் போற்றியே
ஆடிட வாருங்களே - தங்கமே - ஆடிட வாருங்களே
எண்ணம் களித்தினி ஏமனில்லை யென்று
எக்களித் தாடுங்களே - தங்கமே – எக்களித்தாடுங்களே

தேனுக்குளின்சுவை சிந்தையுட் பேரின்பம்
மெய்வழி ஆண்டவரே - தங்கமே - மெய்வழி ஆண்டவரே
வானில்நின் றன்புடன் மண்ணுலகில்வந்த
வள்ளல் பதம் பணிவோம் - தங்கமே -வள்ளல் பதம்பணிவோம்

நம்மையும் ஓர்பொருளாக எடுத்தணைத்
தாதரித்தார் தங்கமே அருளால் - ஆதரித்தார் தங்கமே
செம்மலர்பாதங்கள் சேவிக்கும் இக்கணம்
ஜென்ம சாபல்யம்தரும் - தங்கமே – ஜென்மசாபல்யம்தரும்

அச்சமில்லையினி அண்ணல் பதம்துணை
=:ஆனந்தம் கொள்ளுங்களே-தங்கமே-ஆனந்தம் கொள்ளுங்களே
மிச்சமெலாம் இந்த மேதினியாவுள்ளும்
மெய்வழி தெய்வமொன்றே -தங்கமே-மெய்வழி தெய்வமொன்றே

வண்ணவண்ணமாக வள்ளலைப் பாடினால்
வாதனை தீர்ந்திடுமே - தங்கமே - வாதனை தீர்ந்திடுமே
எண்ணமெல்லாம் தெய்வ இன்பநாமம் சொன்னால்
ஏமன் ஒழிந்திடுமே - தங்கமே - ஏமன் அழிந்திடுமே

தங்கமணிகளே சங்கு முழங்கியே
தெய்வத்தைப் பாடுங்களே தங்கமே- தெய்வத்தைப் பாடுங்களே
எங்கும் பேரின்பமே தங்கும் மகிழ் பொங்கும்
தஞ்சம் தெய்வப்பதமே - தங்கமே - தஞ்சம் தெய்வப்பதமே

துங்கமணி எழில் தெய்வத்திருப்பதம்
தோத்தரித்தே உய்குவோம்-தங்கமே-தோத்தரித்தே உய்குவோம்
சங்கப்பலகை நம் தெய்வப் பொன்னாரடி
சார்ந்தினி தோங்கிடுவோம்-தங்கமே –சார்ந்தினிதோங்கிடுவோம்

குடும்பனைப் பொலியெருது பாய்தல்

குருபெருமான் திருமுன் கொணர
காளை எருது பசுக்களைக்
குடும்பனும்கோ குலர்கள் கூடி
குலவிப்பாடிக் குதித்துமே
பெருமிசையார் உடுக்கை தாளம்
இசைக்க அரண்டு மிரண்டுமே
பிடுங்கிக் கயிற்றைப் பொலியெருது
பாய்ந்ததுகாண் குடும்பன்மேல்
திரும்பு முன்னே தூக்கி யெறிய
தரையில் விழும் மயங்கியே
திக்குத் திக்காய் அனைவரோட
தெய்வமவர்கள் தேக்கியே
கருணை பெருகத் தீர்த்தம் தெளிக்க
களை தெளிந்த குடும்பனும்
கமல பதத்தைத் தொழுதெழுந்து
கர்த்தர் முன்னே நின்றனன்

குடும்பன் ஸ்தோத்திரம் செய்தல்

மாதவத் தோன்றலே! மெய்
மறைமொழி நிறைநா வேந்தே!
ஆதர வுங்கள் பாதம்
அகிலத்தில் பிறிதொன் றில்லை
பேதையே முய்யு மாறு
பெருந்தய வளித்த பேறே!
கோதறு மணியே! எங்கள்
குலதெய்வ தேவே போற்றி!

நீதி நிறைந்த பரம்பொருளே என்ற சந்தம்

ஆதி முழுமுதல் ஆனவரே!
ஆருயிர்க் குற்ற ஒரே துணையே!
நீதி நடவுசெய் நித்தியரே!
நீணிலத் தோர்க் கொரே மெய்வழியே!
வேதமணி நவ ரத்தினமே!
மேதினி வந்துற்ற வானரசே!
ஓதி உணர்தற்கு ஓர்பொருளே!
ஒப்பில்லா மெய்த்தவம் செய்தவரே!
சீதனம் தந்தெமைக் காத்தருளிச்
செப்பரும் வானிதி ஈந்தவரே!
மாதவ மெய்ம்மருந்தால் பிறவி
வல்பிணி தீர்த்த வரோதயரே!
மூதுரை நாதாமெய் முற்றுணர்ந்த
முத்தர் சித்தர்க் கரசானவரே!
ஏதுமிலாத பரவெளிக்கே
ஏற்றிவைக்கும் எங்கள் ஏந்தலரே!
போதப் பெரும் பொருளான வரே!
பொன்னரங்கையரே புண்ணியரே!
பாத மலரெங்கள் சென்னிமிசை
பாலித்த டைக்கலம் தந்தருள்வீர்!
சேதஞ் செயும் ஏமன் வாதனைதீர்
சீராரும் நற்றுணை யானவரே!
ஏதுமறியா அபலை எமை
ஏற்றருள் பாலித்த காப்பகமே!
ஈதுலகத்திலென் றெங்குமிலா
ஈடிலா மேனிலைக் குற்றவரே!
நாதா எனையுமோர் பிள்ளையென
நற்றய வேற்றதற் கீடுளதோ!
தீதறு செந்நெறி காட்டியெமைத்
தேவருள் ஆக்கிய சீர்வரமே!
பூதலம் வந்தவான் மாதலமே!
பொன்னரங் கையாமெய் ஆண்டவரே!
ஆதரவுங்கள் அருட்தயவே!
அன்பின் நிலையறிவின் துறையே!
நாதி எமக்குங்கள் நன்மலர்த்தாள்
நற்றாய் தந்தை குருவாம் தெய்வமே!
வாதும் வம்பும் வழக்காடி வஞ்ச
வாழ்வில் அழிவில் கிடந்தலைந்த
பேதையெனையோர் பொருளென் றேற்ற
பேதமில் பொற்றாள் அடைக்கலமே

மூத்தபள்ளி ஸ்தோத்திரம் பாடுதல்

எண்டிசையும் கண்டறியா என்ற சந்தம்

ஊணுறக்கம் அற்றதவத் தேறிநின்று
உற்றபலன் உயிர்க்கருளும் தவமேரே!
காணுமுயிர் உலகனைத்தும் கதிபெறவே
கமலபதக் கதியுதவும் கருணையரே!
உடல்பொருளா வியுமூன்றும் உவந்தளிக்கா
ஒண்ணலர்க்கும் உறுதுணையே ஒருதனியே!
மடமையினுச் சியில்கிடக்கும் மாண்பருக்கும்
மதியமுத மளித்தருள்வான் கற்பகமே
இகம்பரமும் எனதென்றே ஏற்றருளி
இணையில்துணை ஈந்தருளும் ஏந்தலரே!
சுகமிதென அறியாது சுழன்றலையும்
சிறியரெமைச் சுகமறிய வைத்தவரே!
வையகமும் வானகமும் இணையில்லா
வான்பொருளை அருள்தயவே வணங்குகிறோம்
உய்யஎமக் கொருவழியே மெய்வழியே
உவந்துதிருக் கமலபதம் வணங்குகின்றோம்
கதியேதெனக் காணாத கடையர்கட்கும்
கதிநிதியாய்க் கைகொடுத்த கழற்போற்றி
விதியெழுத்தை மாற்றிமதி பதித்தருளும்
அதிபதியே அருள்மலர்த்தாள் அடைக்கலமே
வேண்டுவரம் தந்தருளும் பாண்டியரே!
வித்தில்லா வித்தான வித்தகரே!
ஆண்டவரே அம்பொன்மல ரடிபணிந்தோம்
அபயமுங்கட் கபயமையா காத்தருள்வீர்!

இளையபள்ளி ஸ்தோத்திரம் பாடுதல்

சீர்மேவு மெய்ஞ்ஞான என்ற சந்தம்

வையத் துயிர்கள்உய்ய வான்பொருளைக் கொண்டுவந்த
தெய்வத் தவமணியைச் சீரடியை நாம்மறவோம்
துய்யத் திருமணியை சோதிச் சுடரொளியை
மெய்யை வழங்குவள்ளல் மெல்லடியை நாம்மறவோம்
அன்பை அருண்மணியை அறிவுத்திருவுருவை
என்பிளக வான்தவம்செய் இணையடியை நாம்மறவோம்
இன்பவடி வானவரை ஏந்தலராம் எம்முயிரை
துன்பம் துடைத்ததெய்வத் தோன்றலரை நாம்மறவோம்
வாசத்திருமேனி வண்ண வடிவழகர்
நேசம் கொடுத்தாண்ட நித்தியரை நாம்மறவோம்
மாசில் மணிவிளக்கை மதியோங்கறி வொளியை
ஈசர் எமதுயிர்க்காம் இனியவரை நாம்மறவோம்
எமபயத்தைத் தீர்த்து இமயவருள் சேர்ப்பித்த
நமதுயிர்க்கு நாயகரின் நற்றாளை நாம்மறவோம்
சமரசவே தநாதர் சாதிகளின் கர்த்தரின் மெய்
அமலாண்மை ஓங்கும் அருட்தயவை நாம்மறவோம்
வேதம் விளங்கிடவும் மெய்ம்மை துலங்கிடவும்
பாதம் அருள்புரிந்த பண்ணகரை நாம்மறவோம்
நீதித் திருவுருவை நின்மலரைப் பொன்மலரை
மாதவரை வானவரை மாணடியை நாம்மறவோம்
தேவாதி தேவேஎம் திருக்கயிலை வானரசே
கோவே குலதெய்வ கோமானே சீமானே
நாவாரப் பாடி நல்லடியைப் போற்றிசெய்தோம்
சேவடியே தஞ்சமய்யா சேர்ந்தோம் அடைக்கலமே

மூவரும் ஸ்தோத்திரம் பாடுதல்

மஹபூபு சுபஹானி என்ற சந்தம்

குருதேவ தேவர்பதம் கோடிமு றைவணங்கி
திருமா மலர்ப்பதங்கள் சேர்ப்போம்சி ரமிசையே
அருளாரும் வாரிதியே அன்னாய் அடைக்கலமே!

தங்க மகாமேருவே தனிகைவள் ளல்கொடையே
எங்கள் குலதெய்வமே எல்லாம்வல் லஇறையே
பொங்கு மின்பக்கடலே பொற்றாள் அடைக்கலமே!

தென்னன் பெருந்துறையார் என்னும் தனித்தலைமை
மன்னே! எம் மாமணியே வானாடர் கோமகனே!
பொன்னரங் கத்தரசே பேரின்ப வான்கடையே!

சீரார் பெரும்பதியே ஜீவர்க் கொரேகதியே!
பேராரும் வான்மதியே பொங்கும் கங்காநதியே!
நேரும் நிகருமில்லாநற்றாள் அடைக்கலமே!

பண்டு பழுத்தநெறி பார்த்தனார் கண்டகுறி
தொண்டர் விழுங்குமுறி தேவர்கொள் சீர்மெய்ப்பொறி
அண்ட சராசரங்கள் யாவிற்கும் ஓர்விதியே!

சங்கப் பதுமநிதி சாலையனந்தர் பதி
எங்கள் குருபெருமான் பொங்கும்திரு வருள்தேன்
மங்கா மணிவிளக்கே வள்ளால் அடைக்கலமே!

ஊனில் கலந்தவரே! உயிரில் நிறைந்தவரே!
தேனில் சுவையெனவே சிந்தை கனிந்த வரே!
வானோர் தனித்தலைமை மன்னே அடைக்கலமே

அன்பின் திருவுருவே அறிவின் பெருநிலையே!
இன்பப் பெருஞ்சுவையே! ஈடில் தவமேருவே!
என்பு இளகத்தவ ஏற்றத்தில் நின்றவரே!

வஞ்ச எமனுக்கஞ்சா வாழ்வைக் கொடுத்தவரே!
தஞ்சம் அடைந்தவர்க்கு தக்கோர் புகலிடமே!
செஞ்சொல் நல்லாரமுதத் தேன்மாரியின் பொழிவே!

பங்க மிலாநெறியைப் பாரில் வகுத்தவரே
துங்கத் திருமணியே செல்வநிதிக் குவையே
எங்கள் குலமுழுதும் என்றுமும் கொத்தடிமை

பாழ்போகா தெம்முயிரைப் பற்றி நெறிப்படுத்தி
ஏழ்பாவம் தீர்த்துஎமை இன்பத் திருனாட்டில்
வாழ்வாங்கு வாழவைத்த வள்ளால் அடைக்கலமே!

வையகம் உய்யவந்த மெய்வழி ஆண்டவரே
எய்தற்கரிய நிலைக் கேற்றும் வேளாண்மையரே
தெய்வமே உங்கள் பதம் சேர்ந்தோம் அடைக்கலமே!

வாழி வாழி

எம்பிரான் புகழை ஏத்தும்
இனியவாய் சிந்தை வாழி!
அம்புயத் தாள் பராவும்
அனந்தர் மெய்க் குலமேவாழி!
உம்பர்கோன் மாட்சி கேட்டு
உவந்தபே ரெல்லாம் வாழி!
செம்பொன்னார் திருத்தாள் போற்றும்
திருக்குலம் வாழி! வாழி!

சாலையூர்ப் பள்ளு இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!