திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/7.மக்கட்பேறு

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் - இல்லறவியல்

அதிகாரம் 7.மக்கட்பேறு[தொகு]

¶.புதல்வரைப் பெறுதல் என்றும் பாடம். பரிமேலழகர், ‘புதல்வரைப் பெறுதல்’ என்பதையே கொண்டார்.

பரிமேலழகரின் அதிகார முன்னுரை
மக்கட்பேறு:
அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படூஉங் கடன் மூன்றனுள், முனிவர்கடன் கேள்வி$யானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார்கடன் புதல்வரைப்பெறுதலானுமல்லது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தல் பொருட்டு மக்களைப்பெறுதல். அதிகாரமுறைமை மேலே பெறப்பட்டது.

$.கேள்வி- (கேட்கப்படுவது) அதாவது, சுருதி, வேதம்.

திருக்குறள்: 61 (பெறுமவற்றுள்)[தொகு]

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த |பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கட்பே றல்ல பிற. (01) |மக்கள் பேறு அல்ல பிற. (௧)

தொடரமைப்பு: பெறும் அவற்றுள் அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற நாம் அறிவது இல்லை.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) பெறுமவற்றுள் = (ஒருவன்) பெறும் பேறுகளுள்;
அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற = அறிய வேண்டுவன அறிதற்கு உரிய மக்களைப் பெறுதலல்லது பிறபேறுகளை;
யாம் அறிவதில்லை = யாம் மதிப்பதில்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'அறிவது' என்பது, அறிதலைச்செய்வது என அத்தொழின்மேல் நின்றது. காரணமாகிய உரிமை காரியமாகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத்துணிவுபற்றி 'அறிந்த' வென இறந்தகாலத்தாற் கூறினார்.

'அறிவறிந்த' என்றதனான், ‘மக்கள்’ என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது.

இதனாற் புதல்வர்ப்பேற்றினது சிறப்புக்கூறப்பட்டது.

திருக்குறள்: 62 (எழுபிறப்புந்)[தொகு]

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்||எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்புடை மக்கட் பெறின். (02) |பண்பு உடை மக்கள் பெறின். (௨)

தொடரமைப்பு: எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா பண்பு உடை மக்கள் பெறின்.

பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) எழுபிறப்பும் தீயவை தீண்டா = (வினைவயத்தாற் பிறக்கும்) பிறப்பு ஏழின் கண்ணும் (ஒருவனைத்) துன்பங்கள் சென்றடையா;
பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் = (பிறரால்) பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவானாயின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுபவனாயி னென்றவாறாயிற்று.
பிறப்பேழாவன:
"ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம்
நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச்-சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
வந்தமில்சீர்த் தாவரநா லைந்து.#"
தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர்செய்யுந் தானதருமங்கட்கு அவர் நற்குணங் காரணமாகலின், ‘பண்பு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மே னின்றது.

#ஊர்கின்ற உயிர்களின் பிறப்புவகைகள் பதினொரு லட்சம் ஆகும்; மனிதப்பிறப்பு ஒன்பது லட்சம் ஆகும்; நீர் வாழ் உயிர்கள் பத்து லட்சம், பறவைவகை உயிர்கள் பத்து லட்சம், நாற்கால் உயிர்கள் பத்துலட்சம்; தேவர்கள் பதினான்கு லட்சம்; தாவரம் எனப்படும் நிலையான உயிர்கள் இருபது லட்சம்ஆகும். மொத்தம் 84 லட்சம் யோனி பேதங்கள் என்பர். இவையே ஏழுபிறப்பு வகை, தொகை.

திருக்குறள்: 63 (தம்பொருளென்)[தொகு]

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு||தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
டந்தம் வினையான் வரும். (03) |தம் தம் வினையான் வரும். (௩)

தொடரமைப்பு: தம் மக்கள் தம் பொருள் என்ப, அவர் பொருள் தம் தம் வினையான் வரும்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தம் மக்கள் தம்பொருள் என்ப = தம்புதல்வரைத் தம்பொருளென்று சொல்லுவர் (அறிந்தோர்)(;
அவர்பொருள் தந்தம் வினையான் வரும் = அப்புதல்வர் செய்தபொருள் தம்மை நோக்கி (அவர்) செய்யும் நல்வினையானே (தம்பால்) வரும் (ஆதலான்).
பரிமேலழகர் உரை விளக்கம்
’தந்தம்வினை’ யென்புழித் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமை "முருகனது குறிஞ்சிநிலம்" என்புழிப்போல உரிமைப்பொருட்கண் வந்தது.
பொருள்செய்த மக்களைப்பொருளென உபசரித்தார்.
இவை யிரண்டுபாட்டானும் நன்மக்கட் பெற்றார் பெறும் மறுமைப்பயன் கூறப்பட்டது.

திருக்குறள்: 64 (அமிழ்தினு)[தொகு]

அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்||அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ். (04) |சிறு கை அளாவிய கூழ். (௪)

தொடரமைப்பு: அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) அமிழ்தினும் ஆற்ற இனிதே = (சுவையான்) அமிழ்தத்தினும் மிக வினிமை யுடைத்து;
தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் = தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.
பரிமேலழகர் உரைவிளக்கம்
சிறுகையா னளாவலாவது #"இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும், நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தல்".
#(புறநானூறு- 188)

திருக்குறள்: 65 (மக்கண்மெய்)[தொகு]

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்|| மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. (05) |சொல் கேட்டல் இன்பம் செவிக்கு. (௫)

தொடரமைப்பு: உடற்கு இன்பம் மக்கள் மெய் தீண்டல், செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) உடற்கின்பம் மக்கள் மெய் தீண்டல் = (ஒருவன்) மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்;
செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் = செவிக்கின்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'மற்று' வினைமாற்று.
மக்களது மழலைச் சொல்லேயன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் சொல்லென்றார்.
'தீண்டல்' 'கேட்ட' லென்னுங் காரணப்பெயர்கள் ஈண்டு்க் காரியங்களின் மேனின்றன.

திருக்குறள்: 66 (குழலினிதி)[தொகு]

குழலினிதி யாழினி தென்பதம் மக்கள் || குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர். (06) | மழலைச் சொல் கேளாதவர். (௬)

தொடரமைப்பு: குழல் இனிது யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) குழல் இனிது யாழ் இனிது என்ப = குழலிசை யினிது யாழிசை யினிது என்று சொல்லுவர்;
தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் = தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'குழல்' 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிதென்பரென்பது குறிப்பெச்சம்.
இனிமை மிகுதிபற்றி, மழலைச்சொல்லைச் சிறப்புவகையானுங் கூறியவாறு.
இவை மூன்று பாட்டானும் இம்மைப்பயன் கூறப்பட்டது.

திருக்குறள்:67 (தந்தைமகற்)[தொகு]

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து||தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல். (07) | முந்தி இருப்பச் செயல். (௭)

தொடரமைப்பு: தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தந்தை மகற்கு ஆற்றும் நன்றி = தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;
அவையத்து முந்தி இருப்பச் செயல் = (கற்றார்) அவையத்தின்கண் (அவரினும்) மிக்கிருக்குமாறு கல்வியுடையனாக்குதல்.
பரிமேலழகர் உரை
பொருளுடையனாக்குதல் முதலாயின, துன்பம் பயத்தலின் நன்மையாகாவென்பது கருத்து.
இதனால் தந்தை கடன்& கூறப்பட்டது.

(&. கடன்= கடமை)

திருக்குறள்: 68 (தம்மிற்றம்)[தொகு]

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து|| தம்மின் தம் மக்கள் அறிவு உடைமை மா நிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது. (08)| மன் உயிர்க்கு எல்லாம் இனிது. (௮)

தொடரமைப்பு: தம் மக்கள் அறிவு உடைமை மா நிலத்து மன் உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது.

பரிமேலழகர் உரை
தம் மக்கள் அறிவுடைமை = தம் மக்களதறிவுடைமை;
மா நிலத்து மன் உயிர்க்கெல்லாம் தம்மின் இனிது = பெரிய நிலத்து மன்னாநின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினுமினிதாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஈண்டு ‘அறிவு’ என்றது, இயல்பாகிய அறிவோடுகூடிய கல்வியறிவினை.
‘மன்னுயிர்’ என்றது, ஈண்டறிவுடையார் மேனின்றது, அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின்.
இதனால் தந்தையினும் அவையத்தார் உவப்பரென்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 69 (ஈன்ற)[தொகு]

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்|| ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய். (09) | சான்றோன் எனக் கேட்ட தாய். (௯)

தொடரமைப்பு: ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும், தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் = (தான்) பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்;
தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் = தன்மகனைக் (கல்வி கேள்விகளான்) நிறைந்தானென்று (அறிவுடையார்) சொல்லக் கேட்ட தாய்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
கவானின்கட் கண்ட பொதுவுவகையினுஞ் சால்புடையனெனக் கேட்ட சிறப்புவகை பெரிதாகலின் ‘பெரிதுவக்கும்’ எனவும், பெண்ணியல்பால் தானாக அறியாமையிற் ‘கேட்டதாய்’ எனவுங் கூறினார். ‘அறிவுடையார்’ என்பது வருவிக்கப்பட்டது. சான்றோரென்றற்கு உரியர் அவராகலின்.
தாயுவகைக்கு அளவின்மையின் அஃது இதனாற் பிரித்துக் கூறப்பட்டது.

❖கவானின் கண் - மடிமீது வைத்தபோது

திருக்குறள்: 70 (மகன்றந்தை)[தொகு]

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை|| மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல். (10)| என் நோற்றான் கொல் எனும் சொல். (௰)


தொடரமைப்பு: தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல்.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி = (கல்வியுடையனாக்கிய) தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது;
இவன்தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல் = (தன் அறிவும் ஒழுக்கமுங் கண்டார்), இவன் தந்தை (இவனைப்) பெறுதற்கு என்ன தவஞ் செய்தான்கொல்லோவென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
‘சொல்’ என்பது நிகழ்த்துதலாகிய தன்காரணந் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் அங்ஙனஞ்சொல்லவொழுகுதல்.
இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் 'மக்கட்பேறு'$ அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.

$'புதல்வரைப்பெறுதல்' என்பதும் பாடம்.