திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/49.காலமறிதல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 49. காலமறிதல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை:

அஃதாவது, வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேற் சேறலுற்ற அரசன் அச்செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 481 (பகல்வெல்லுங்)[தொகு]

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

'வேந்தர்க்கு வேண்டும் பொழுது.(01)'வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

இதன்பொருள்
கூகையைக் காக்கை பகல்வெல்லும்= தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும்; இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது= அதுபோலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாதது.
உரைவிளக்கம்
எடுத்துக்காட்டு உவமை. காலமல்லாவழி வலியாற் பயனி்ல்லையென்பது விளக்கிநின்றது. இனிக் காலமாவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து நோய்செய்யாது, தண்ணீரும் உணவும் முதலியன உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனாற் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 482 (பருவத்தோ)[தொகு]

பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை யார்க்குங் கயிறு. (02) தீராமை ஆர்க்கும் கயிறு.

இதன்பொருள்
பருவத்தோடு ஒட்ட ஒழுகல்= அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல்; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு= ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமற் பிணிக்கும் கயிறாம்.
உரைவிளக்கம்
காலத்தோடு பொருந்துதல் காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தன்மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்துவருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.

குறள் 483 (அருவினை)[தொகு]

அருவினை யென்ப வுளவோ கருவியாற்அருவினை என்ப உளவோ கருவியான்

கால மறிந்து செயின். (03)காலம் அறிந்து செயின்.

இதன்பொருள்
அரசரால் செய்தற்கு அரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ; கருவியான் காலம் அறிந்து செயின்= அவற்றை முடித்தற்காம் கருவிகளுடனே செய்தற்காம் காலம் அறிந்து செய்வாராயின்.
உரைவிளக்கம்
கருவிகளாவன: மூவகையாற்றலும், நால்வகை உபாயங்களும்ஆம்; அவை உளவாயவழியும் காலம் வேண்டும் என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லாவினையும் எளிதில் முடியும் என்பதாம்.

குறள் 484 (ஞாலங்)[தொகு]

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி யிடத்தாற் செயின். (04)கருதி இடத்தான் செயின்.

இதன்பொருள்
ஞாலம் கருதினும் கைகூடும்= ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினான் ஆயினும், அஃது அவன் கையகத்ததாம்; காலம் கருதி இடத்தான் செயின்= அதற்குச் செய்யும் வினையைக் காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.
உரைவிளக்கம்
இடத்தான் என்பதற்கு, மேற் கருவியான் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க. கைகூடாதனவும், கைகூடும் என்பதாம். :
இவைமூன்று பாட்டானும் காலமறிதற் பயன் கூறப்பட்டது.

குறள் 485 (காலங்கருதி)[தொகு]

காலங் கருதி யிருப்பர் கலங்காதுகாலம் கருதி இருப்பர் கலங்காது

'ஞாலங் கருது பவர். (05)'ஞாலம் கருதுபவர்.

இதன்பொருள்
கலங்காது ஞாலம் கருதுபவர்= தப்பாது ஞாலமெல்லாம் கொள்ளக்கருதும் அரசர்; காலம் கருதி இருப்பர்= தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கேற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேற் செல்லார்.
உரைவிளக்கம்
'தப்பாமை' கருதியவழியே கொள்ளுதல். வலிமிகுதி 'காலங் கருதி' என்பதனாற் பெற்றாம். அது கருதாது செல்லின், இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவாராகலின், 'இருப்பர்' என்றார். இருத்தலாவது, நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரிதல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனால் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.

குறள் 486 (ஊக்கமுடையான்)[தொகு]

ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து. (06)தாக்கற்குப் பேருந் தகைத்து.

இதன்பொருள்
ஊக்கம் உடையான் ஒடு்க்கம்= வலிமிகுதி உடைய அரசன் பகைமேற் செல்லாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு; பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து= பொருகின்ற தகர், தன்பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால்வாங்குந் தன்மைத்து.
உரைவிளக்கம்
உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால், பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனால் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 487 (பொள்ளென)[தொகு]

பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்பொள் என ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து

துள்வேர்ப்ப ரொள்ளி யவர். (07)உள் வேர்ப்பர் ஒள்ளியவர்.

இதன்பொருள்
ஒள்ளியவர்= அறிவுடைய அரசர்; ஆங்கே பொள் எனப் புறம் வேரார்= பகைவர் மிகை செய்தபொழுதே விரைவாக அவர் அறியப் புறத்து வெகுளார்; காலம் பார்த்து உள் வேர்ப்பர்= தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர்.
உரைவிளக்கம்
'பொள்ளென' என்பது குறிப்புமொழி. 'வேரார்', 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பார் ஆகலிற் 'புறம் வேரார்' என்றும், வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகைசெய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள்வேர்ப்பர்' என்றும் கூறினார்.

குறள் 488 (செறுநரைக்)[தொகு]

செறுநரைக் காணிற் சுமக்க விறுவரைசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணிற் கிழக்காந் தலை. (08)காணின் கிழக்காம் தலை.

இதன்பொருள்
செறுநரைக் காணின் சுமக்க= தாம் வெல்லக்கருதிய அரசர், பகைவர்க்கு இறுதிக்காலம் வருந்துணையும் அவரைக்கண்டால் பணிக; இறுவரை காணின் தலை கிழக்காம்= பணியவே, அக்காலம் வந்திறும்வழி அவர் தகைவின்றி இறுவர்.
உரைவிளக்கம்
பகைமை ஒழியும் வரை மிகவும் தாழ்க என்பார் 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே அவர் தம்மைக் காத்தல்இகழ்வார், ஆகலின் தப்பாமற் கெடுவர் என்பார், அவர் தலை, கீழாம் என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால் அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது.
இவையிரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றமல் இருக்க என்பது கூறப்பட்டது.

குறள் 489 (எய்தற்கு)[தொகு]

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையேஎய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல். (09)செய்தற்கு அரிய செயல்.

இதன்பொருள்
எய்தற்கு அரியது இயைந்தக்கால்= பகையை வெல்லக் கருதும் அரசர் தம்மால் எய்துதற்குஅரிய காலம் வந்து கூடியக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல்= அது கழிவதற்கு முன்பே, அது கூடாவழித் தம்மால் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.
உரைவிளக்கம்
ஆற்றல் முதலியவற்றால் செய்துகொள்ளப்படாமையின் 'எய்தற்கரிய' என்றும், அது தானே வந்துஇயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும், அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கரிய' என்றும் கூறினார்.
இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.

குறள் 490 (கொக்கொக்க)[தொகு]

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்

குத்தொக்க சீர்த்த விடத்து. (10) குத்து ஒக்க சீர்த்த இடத்து.

இதன்பொருள்
கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க= ஒருவினைமேல் செல்லாது இருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறுபோல இருக்க; மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க= மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி அது செய்து முடிக்குமாறுபோலத் தப்பாமல் செய்து முடிக்க.
உரைவிளக்கம்
மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்துஎய்தும் துணையும் முன்னறிந்து தப்பாமற்பொருட்டு உயிர் இல்லது போன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின்தப்புவதற்கு முன்பே விரைந்து குத்துமாகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்கு உவமையாயிற்று. 'கொக்கொக்க' என்றார் ஆயினும் அது கூம்புமாறு போலக் கூம்புக என்றும், 'குத்தொக்க' என்றாராயினும், அது குத்துமாறு போலக் குத்துகவென்றும் உரைக்கப்படும், இது தொழிலுவமம் ஆகலின். உவமை முகத்தால் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று.