திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/94.சூது

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 94.சூது[தொகு]

அதிகார முன்னுரை
இனி, அக்கள்ளுண்டல் போல அறம் பொருள் இன்பங்கட்கு இடையீடாகிய சூதாடலும் பிணியுழத்தலும் கூறுவான் தொடங்கி, முதற்கட் சூதினது இயல்பு கூறுகின்றார்.

குறள் 931 (வேண்டற்க )[தொகு]

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந் ( ) வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. (01) தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று.

தொடரமைப்பு: வென்றிடினும் சூதினை வேண்டற்க, வென்றதூஉம் தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று.

இதன்பொருள்
வென்றிடினும் சூதினை வேண்டற்க= தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டில் பொன் மீன்விழுங்கியற்று= வென்ற பொருள் எய்துவார் உளராலெனின், அவ்வென்ற பொருள்தானும் இரையான் மறைந்த தூண்டில் இரும்பினை இரையெனக் கருதி மீன் விழுங்கினாற் போலும்.
உரைவிளக்கம்
வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின் 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்திய பொருள், சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளையென்பதூஉம், அதன்பின் துயருழத்தலும் உவமையாற் பெற்றாம்.

குறள் 932 (ஒன்றெய்தி )[தொகு]

ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ ( ) ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம் கொல்

னன்றெய்தி வாழ்வதோ ராறு. (02) நன்று எய்தி வாழ்வது ஓர் ஆறு.

தொடரமைப்பு: ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும், நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாம்கொல்.

இதன்பொருள்
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும்= அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாம்கொல்= பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ, ஆகாது.
உரை விளக்கம்
அவ்வாற்றாற் பொருள் இழந்தே வருதலான், அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.

குறள் 933 (உருளாய )[தொகு]

உருளாய மோவாது கூறிற் பொருளாயம் ( ) உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்

போஒய்ப் புறமே படும். (03) போஒய்ப் புறமே படும்.

தொடரமைப்பு: உருள் ஆயம் ஓவாது கூறின், பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும்

இதன்பொருள்
உருள் ஆயம் ஓவாது கூறின்= உருளும் கவற்றின்கட்பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும்= அரசன் ஈட்டிய பொருளும், அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப் போய்ப் பகைவர்கண்ணே தங்கும்.
உரை விளக்கம்
கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின் மேலேற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டுங் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம்- வடமொழித் திரிசொல். காத்தற்கண்ணும், இயற்றற்கண்ணும் கருத்திலன் ஆகலின், அவையிரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.

குறள் 934 (சிறுமைபல )[தொகு]

சிறுமை பலசெய்து சீரழிக்குங் சூதின் ( ) சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்

வறுமை தருவதொன் றில். (04) வறுமை தருவது ஒன்று இல்.

தொடரமைப்பு: சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின், வறுமை தருவது ஒன்று இல்.

இதன்பொருள்
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் = தன்னை விழைந்தார்க்கு முன்னில்லாத பல துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ளபுகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல்= நல்குரவினைக் கொடுக்கவல்லது பிறிதொன்றில்லை.
உரை விளக்கம்
அத்துன்பங்கள் முன்னர்க்கூறுப. நல்வினைகளையும், நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும், தீயினத்தையும் கூட்டுதலால், 'சீரழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவரென்பதாம்.

குறள் 935 (கவறுங் )[தொகு]

கவறுங் கழகமுங் கையுந் தருக்கி () கவறும் கழகமும் கையும் தருக்கி

யிவறியா ரில்லாகி யார். (05) இவறியார் இல்லாகியார்.

தொடரமைப்பு: இல்லாகியார், கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார்.

இதன்பொருள்
இல்லாகியார்= முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார்= கவற்றினையும், அஃதாடும் களத்தினையும், அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர்.
உரை விளக்கம்
கைத்தொழில்- வெல்லும் ஆயம்படப் பிடித்து எறிதல். அவ்விவறுதலாற் பாண்டவர், தம்மரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்து ஒழுகினார் என அனுபவம் காட்டியவாறு.
இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமைபயத்தற் குற்றம் கூறப்பட்டது.

குறள் 936 (அகடாரா)[தொகு]

அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னு ( ) அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்

முகடியான் மூடப்பட் டார். (06) முகடியான் மூடப்பட்டார்.

தொடரமைப்பு: சூது என்னும் முகடியான் மூடப்பட்டார், அகடு ஆரார் அல்லல் உழப்பர்.

இதன்பொருள்
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார்= தன் பெயர்சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர்= இம்மைக்கண் வயிறாரப் பெறார், மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர்.
உரை விளக்கம்
செல்வம் கெடுத்து, நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றிதோல்விகள் நோக்கி ஒருபொழுதும் விடார் ஆகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின், ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறு ஆராமை சொல்லவே, ஏனைப்புலன்கள் நுகரப்பெறாமை சொல்லவேண்டாவாயிற்று. 'உழப்பர்' என்பது எதிர்கால வினை.

குறள் 937 (பழகிய )[தொகு]

பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் ( ) பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின். (07) கழகத்துக் காலை புகின்.

தொடரமைப்பு: காலை கழகத்துப் புகின், பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்.

இதன்பொருள்
காலை கழகத்துப் புகின்= அறம் பொருள் இன்பங்களுக்கடைத்த காலம் அரசனுக்குச் சூதாடும் களத்தின்கண் கழியுமாயின்; பழகியசெல்வமும் பண்பும் கெடுக்கும்= அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும், நற்குணங்களையும் போக்கும்.
உரை விளக்கம்
'பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறமுதலியவே அன்றி, முன்னோரைத் தொடங்கி வருகின்ற செல்வமும், முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.

குறள் 938 (பொருள்கெடுத்துப் )[தொகு]

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத் ( ) பொருள் கெடுத்துப் பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து

தல்ல லுழப்பிக்குஞ் சூது. (08) அல்லல் உழப்பிக்கும் சூது.

தொடரமைப்பு: சூது, பொருள் கெடுத்து, பொய் மேற்கொளீஇ, அருள்கெடுத்து, அல்லல் உழப்பிக்கும்.

இதன்பொருள்
சூது= சூது; பொருள் கெடுத்து= தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ= பொய்யை மேற்கொள்ளப்பண்ணி; அருள்கெடுத்து= மனத்து எழும் அருளைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும்= இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும்.
உரை விளக்கம்
இத்தொழில் மூன்றற்கும் 'சூது' வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும், ஏனையவற்றான் மறுமையினுமாம். பொருள்கொடுத்து என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு மேற்கொளீஇ என்புழி, மேற்கோடலாகிய வினைமுதல்வினை.

குறள் 939 ( உடைசெல்வ)[தொகு]

உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து ( ) உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும்

மடையாவா மாயங் கொளின். (09) அடையாவாம் ஆயம் கொளின்.

தொடரமைப்பு: ஆயம் கொளின், ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்ற ஐந்தும் அடையாவாம்.

இதன்பொருள்
ஆயம் கொளின்= அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்ற ஐந்தும் அடையாவாம்= அவனை ஒளியும், கல்வியும், செல்வமும், ஊணும், உடையும் என்ற இவ்வைந்தும் சாராவாம்.
உரை விளக்கம்
'ஆயம்'- ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள்நோக்கிப் பிறழநின்றது. 'செல்வம்'- அறுவகையுறுப்புக்கள். 'ஊணுடை' என்பனவற்றால், துப்புரவுகள் எல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகாவென்பதாம்.
இவை நான்கு பாட்டானும் சிறுமைபல செய்து அவற்றான் இருமையுங் கெடுத்தல் கூறப்பட்டது.

குறள் 940 (இழத்தொறூஉங் )[தொகு]

இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப () இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்

முழத்தொறூஉங் காதற் றுயிர். (10) உழத்தொறூஉம் காதற்று உயிர்.

தொடரமைப்பு: இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல், துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.

இதன்பொருள்
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல்= சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்கும்தோறும் அதன்மேல் காதல்செய்யும் சூதன்போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயி்ர்= உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்கும்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயி்ர்.
உரை விளக்கம்
'சூது'- ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார்போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற்பொருட்டு உவமம் ஆக்கிக் கூறினார். இதனது எதிர்மறை முகத்தாற் சூதினை வெறுத்தொழிவானை ஒக்கும், உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க.
இதனான் அஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன.