திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 108. கயமை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, மேல் அரசியலுள்ளும், அங்கவியலுள்ளும் சிறப்புவகையான் கூறப்பட்ட குணங்களுள் ஏற்புடையன குறிப்பினால் யாவர்க்கும் எய்த வைத்தமையின், ஆண்டுக் குறிப்பாற் கூறியனவும், ஈண்டு ஒழிபியலுள் வெளிப்படக் கூறியனவுமாய குணங்கள் யாவும் இலராய கீழோரது தன்மை. அதனால், இஃது எல்லாவற்றிற்கும் பின் வைக்கப்பட்டது.

குறள் 1071 (மக்களே )[தொகு]

மக்களே போல்வர் கயவ ரவரன்ன () மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன

வொப்பாரி யாங்கண்ட தில். (01) ஒப்பார் யாம் கண்டது இல்.

தொடரமைப்பு: மக்களே போல்வர் கயவர், அவர் அன்ன ஒப்பார் யாம் கண்டது இல்.

இதன் பொருள்
மக்களே போல்வர் கயவர்= வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்;
அவர் அன்ன ஒப்பாரியாம் கண்டது இல்= அவர் மக்களை ஒத்தார் போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டது இல்லை.
உரை விளக்கம்
முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தான் பெற்றாம். அவர் என்றது அவர் மாட்டு உளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும், கயச்சாதிக்கும் வடிவொத்தலின் குணங்களது உண்மை இன்மைகளான் அல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம்.
இதனான் கயவரது குற்றம் மிகுதி கூறப்பட்டது.

குறள் 1072(நன்றறி )[தொகு]

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் () நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்

நெஞ்சத் தவல மிலர். (02) நெஞ்சத்து அவலம் இலர்.

தொடரமைப்பு: நன்று அறிவாரின் கயவர் திரு உடையர், நெஞ்சத்து அவலம் இலர்.

இதன் பொருள்
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்= தமக்கு உறுதியாவன அறிவாரின் அவை அறியாத கீழ்மக்கள் நன்மை உடையர்; நெஞ்சத்து அவலம் இலர்= அவர்போல அவை காரணமாகத் தம் நெஞ்சத்தின்கண் கவலை இலர் ஆகலான்.
உரை விளக்கம்
நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இவை செய்யாநின்றே மிகச் செயப்பெறுகின்றிலேம் என்றும், செய்கின்ற இவை தமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர். கயவர் அப்புகழ் முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும், யாதும் கவலை உடையர் அல்லர் ஆகலான், திருவுடையர் எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு.
இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.

குறள் 1073 (தேவரனையர் )[தொகு]

தேவ ரனையர் கயவ ரவருந்தா () தேவர் அனையர் கயவர் அவரும் தாம்

மேவன செய்தொழுக லான். (03) மேவன செய்து ஒழுகலான்.

தொடரமைப்பு: தேவர் அனையர் கயவர், அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்.

இதன் பொருள்
தேவர் அனையர் கயவர்= தேவரும் கயவரும் ஒருதன்மையர்;
அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்= அஃது யாதனான் எனின், தேவரைப்போன்று தம்மை நியமிப்பார் இன்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகலான்.
உரை விளக்கம்
உயர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பான் தோன்றநின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று.
இதனால் விலக்கற் பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.

குறள் 1074 (அகப்பட்டி )[தொகு]

அகப்பட்டி யாவாரைக் காணி னவரின் () அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ். (04) மிகப் பட்டுச் செம்மாக்கும் கீழ்.

தொடரமைப்பு: கீழ், அகப்பட்டி ஆவாரைக் காணின், அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும்.

இதன் பொருள்
கீழ்= கீழாயினான்;
அகப்பட்டி ஆவாரைக் காணின்= தன்னின் சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்;
அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும்= அவ்வொழுக்கத்தின்கண், அவரில் தான் மேம்பட்டு, அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும்.
உரை விளக்கம்
அகப்பட்டி, அகமாகிய பட்டி; பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின் 'பட்டி' என்றார். "நோதக்க செய்யுஞ் சிறுபட்டி"1 என்றார் பிறரும். இ
இதனால் அவர் மேம்படுமாறு கூறப்பட்டது.
1. கலித்தொகை,15.

குறள் 1075 (அச்சமே)[தொகு]

அச்சமே கீழ்கள தாசார மெச்ச () அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

மவாவுண்டே லுண்டாஞ் சிறிது. (05) அவா உண்டேல் உண்டாம் சிறிது.

தொடரமைப்பு: கீழ்களது ஆசாரம் அச்சமே, எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம்.

இதன் பொருள்
கீழ்களது ஆசாரம் அச்சமே= கயவரது ஆய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே;
எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் = அஃது ஒழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள்அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம்.
உரை விளக்கம்
ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். எச்சத்தின்கண் எண்ணு்ம் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானுமின்றி இயல்பாக உண்டாகாது என்பதாம்.
வேண்டிய செய்தலே இயல்பு; ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.

குறள் 1076(அறைபறை )[தொகு]

அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட () அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட

மறைபிறர்க் குய்த்துரைக்க லான். (06) மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்.

தொடரமைப்பு: தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான், கயவர் அறை பறை அன்னர்.

இதன் பொருள்
தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான்= தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்;
கயவர் அறை பறை அன்னர்= கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்.
உரை விளக்கம்
'மறை': வெளிப்படின் குற்றம் விளையும் என்று, பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். 'பிறர்': அம்மறைத்தற்கு உரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையான் தன்னை அறிவித்தது ஒன்றனை, இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்கும் ஆகலான், இது தொழில் உவமம்.
இதனால் அவரது செறிவின்மை கூறப்பட்டது.

குறள் 1077 (ஈர்ங்கை)[தொகு]

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் () ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு. (07) கூன் கையர் அல்லாதவர்க்கு.

தொடரமைப்பு: கயவர் கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு, ஈர்ங்கை விதிரார்.

இதன் பொருள்
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு= கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையர் அல்லாதார்க்கு;
ஈர்ங்கை விதிரார்= தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார்.
உரை விளக்கம்
வளைந்த கை, முறுக்கிய கை. மெலியார்க்கு யாதும் கொடார்; நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர் என்பதாம்.

குறள் 1078 (சொல்லப்பயன் )[தொகு]

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற் () சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்

கொல்லப் பயன்படுங் கீழ். (08) கொல்லப் பயன்படும் கீழ்.


தொடரமைப்பு: சொல்லப் பயன்படுவர் சான்றோர், கீழ் கரும்பு போல் கொல்லப் பயன்படும்.

இதன் பொருள்
சொல்லப்பயன்படுவர் சான்றோர்= மெலியார் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்;
கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும்= மற்றைக் கீழாயினார், கரும்புபோல வலியார் நெய நெருக்கியவழிப் பயன்படுவர்.
உரை விளக்கம்
பயன்படுதல், உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற மேலாயினாரையும் உடன் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.

குறள் 1079 (உடுப்பதூஉம் )[தொகு]

உடுப்பதூஉமுண்பதூஉங் காணிற் பிறர்மேல் () உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகுங் கீழ். (09) வடுக் காண வற்றாகும் கீழ்.

தொடரமைப்பு: உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின், பிறர்மேல் வடுக் காண வற்றாகும்.

இதன் பொருள்
உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின்= பிறர், செல்வத்தான் பட்டும் துகிலும் உடுத்தலையும், பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்;
பிறர்மேல் வடுக்காண வற்றாகும்= அவற்றைப் பொறாது, அவர் மாட்டு வடு இல்லையாகவும் உண்டாக்க வல்லனாம்.
உரை விளக்கம்
உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத் தொழில்மேல் நின்றன; அவற்றான் பூண்டல், ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை எய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிதாகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார்.
இதனால் பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.

குறள் 1080 (எற்றிற்கு )[தொகு]

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் () எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து. (10) விற்றற்கு உரியர் விரைந்து.

தொடரமைப்பு: கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர், எற்றிற்கு உரியர்.

இதன் பொருள்
கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர்= கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பம் உற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்;
எற்றிற்கு உரியர்= அதுவன்றி, வேறு எத்தொழிற்கு உரியர்?
உரை விளக்கம்
உணவு இன்மையாகப் பிறிதாக ஒன்று வந்துற்ற துணையான் என்பது தோன்ற, 'ஒன்று உற்றக்கால்' என்றும், கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியர் அல்லர் என்பது குறிப்பெச்சம்.
இதனால், தாம் பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.

ஒழிபியல் முற்றிற்று

பொருட்பால் முற்றிற்று