திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/83.கூடாநட்பு

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


83.கூடா நட்பு[தொகு]

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 83. கூடாநட்பு[தொகு]

அதிகார முன்னுரை
இனை ஏனைக் கூடாநட்புக் கூறுகின்றார். அஃதாவது, பகைமையான் அகத்தாற் கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும் புறத்தாற் கூடி ஒழுகுவார் நட்பு.

குறள் 821 (சீரிடங் )[தொகு]

சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை () சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு. (01) நேரா நிரந்தவர் நட்பு.

தொடரமைப்பு: நேரா நிரந்தவர் நட்பு சீரிடம்காணின் எறிதற்குப் பட்டடை.

இதன்பொருள்
நேரா நிரந்தவர் நட்பு= கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை= அதுபெற்றால், அற எறிதற்குத் துணையாய பட்டடையாம்.
உரைவிளக்கம்
எறியும் இடம் வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து, வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழில் ஒப்புமையுண்மையான், அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். தீர்விடம் என்ற பாடம் ஓதி முடிவிடம் என்று உரைப்பாரும் உளர்.

குறள் 822 (இனம்போன்றின )[தொகு]

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் () இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும். (02) மனம் போல வேறு படும்.

தொடரமைப்பு: இனம் போன்று இனம் அல்லார் கேண்மை, மகளிர் மனம் போல வேறு படும்.

இதன்பொருள்
இனம்போன்று இனமலலார் கேண்மை= தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும்= இடம்பெற்றால் பெண்பாலார் மனம்போல வேறுபடும்.
உரைவிளக்கம்
அவர் மனம் வேறுபடுதல் "பெண்மனம் பேடின் றொருப்படுப் பேனென்னும்- எண்ணில் ஒருவன்" வளையாபதி என்பதனானும் அறிக. நட்பு வேறுபடுதலாவது, பழைய பகையேயாதல்.
இவை இரண்டு பாட்டானும் கூடாநட்பினது குற்றம் கூறப்பட்டது.

குறள் 823 (பலநல்ல )[தொகு]

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல () பல நல்ல கற்றக் கடைத்தும் மன நல்லர்

ராகுதன் மாணார்க் கரிது. (03) ஆகுதல் மாணார்க்கு அரிது.

தொடரமைப்பு: நல்ல பல கற்றக் கடைத்தும், மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது.

இதன்பொருள்
நல்ல பல கற்றக் கடைத்தும்= நல்லன பலநூல்களைக் கற்றவிடத்தும்; மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது= அதனான் மனம்திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை.
உரைவிளக்கம்
நல்லன- மனக்குற்றம் கெடுப்பன. மனநல்லர் எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல்- செற்றம் விடுதல். உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பென்று என்று கருதற்க என்பதாம்.

குறள் 824 ( முகத்தினி)[தொகு]

முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா () முகத்தின் இனிய நகாஅ அகத்தின் இன்னா

வஞ்சரை யஞ்சப் படும். (04) வஞ்சரை அஞ்சப் படும்.

தொடரமைப்பு: முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை, அஞ்சப்படும்.

இதன்பொருள்
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை= கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும்= அஞ்சல் வேண்டும்.
உரைவிளக்கம்
நகையது வகை பற்றி 'இனிய'வென்றும், அகத்துச் செற்றம் நிகழவும், அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின், அஞ்சுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய் அவர் கொடுமை கூறப்பட்டது

குறள் 825 (மனத்தினமை )[தொகு]

மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் () மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்

சொல்லினாற் றேறற்பாற் றன்று. (05) சொல்லினால் தேறல் பாற்று அன்று.

தொடரமைப்பு: மனத்தின் அமையாதவரை, எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.

இதன்பொருள்
மனத்தின் அமையாதவரை= மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று= யாதொரு கருமத்தினும் சொல்லால் தெளிதல் முறைமைத்தன்று நீதிநூல்.
உரைவிளக்கம்
நீதிநூல் என்பது, அவாய்நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக்கருதி அவரைக் கருமங்களில் தெளிதல் நீதிநூல்முறைமை அன்று என்பதாம்.

குறள் 826(நட்டார்போ )[தொகு]

நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ () நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்

லொல்லை யுணரப் படும். (06) ஒல்லை உணரப் படும்.

தொடரமைப்பு: நட்டார் போல் நல்லவை சொல்லினும், ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும்.

இதன்பொருள்
நட்டார்போல் நல்லவை சொல்லினும்= நட்டார்போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும்= பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும்.
உரைவிளக்கம்
'சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். 'ஒட்டார்' ஆதலால், தீமைபயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.


குறள் 827 (சொல்வணக்கம் )[தொகு]

சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந் () சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம்

தீங்கு குறித்தமை யான். (07) தீங்கு குறித்தமையான்.

தொடரமைப்பு: வில் வணக்கம் தீங்கு குறித்தமையான், ஒன்னார்கண் சொல் வணக்கம் கொள்ளற்க.

இதன்பொருள்
வில் வணக்கம் தீங்கு குறித்தமையான்= வில்லினது வணக்கம், ஏற்றவர்க்குத் தீமைசெய்தலைக் குறித்தமையால்; ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க= பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும், தமக்கு நன்மைசெய்தலைக் குறித்தது என்று கருதற்க.
உரைவிளக்கம்
தம் வணக்கம் என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும், வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன்குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லியது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின் மேல்நிற்றலான், ஒன்னாரது குறி்ப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்குகுறித்தவணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் அவரைச் சொல்லால் தெளியற்க என்பது கூறப்பட்டது.

குறள் 828 (தொழுதகை )[தொகு]

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா () தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்

ரழுதகண் ணீரு மனைத்து. (08) அழுத கண்ணீரும் அனைத்து.

தொடரமைப்பு: ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும், அழுத கண்ணீரும் அனைத்து.

இதன்பொருள்
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்= ஒன்னார் குறி்ப்பை உணரவல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து= அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அதுமறைந்திருத்தற்கு இடனாம்.
உரைவிளக்கம்
தீநட்பென்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வுழித் தேற்றுகின்ற பொழுதே, அவற்றுள்ளே தோன்றும் என்பார், 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம்மென்மை காட்டித் தொழினும் அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம்.
இதனால் அவரைச் செயலால் தெளியற்க என்பது கூறப்பட்டது.

குறள் 829(மிகச்செய்து )[தொகு]

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து () மிகச் செய்து தம் எள்ளுவாரை நகச் செய்து

நட்பினுட் சாப்புல்லற் பாற்று. (09) நட்பினுள் சாப் புல்லல் பாற்று.

தொடரமைப்பு: மிகச் செய்து தம் எள்ளுவாரை, நட்பினுள் நகச் செய்து சாப் புல்லற்பாற்று.

இதன்பொருள்
மிகச் செய்து தம் எள்ளுவாரை= பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து, அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச்செய்து சாப் புல்லற்பாற்று= தாமும் அந்நட்பின்கண்ணே நின்று புறத்தின்கண் அவர்மகிழும் வண்ணம்செய்து, அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மையுடைத்து அரசநீதி.
உரைவிளக்கம்
நின்றென்பதூஉம், அரசநீதி என்பதூஉம் அவாய்நிலையான் வந்தன. அகன் ஒன்றாதல், பறன் ஒன்றாதல் ஒருவற்குத் தகாது எனினும், பகைவர்மாட்டாயின் தகும் என்பது நீதி நூல்துணிபு என்பர், அதன்மேல்வைத்துக் கூறினார். சாவ என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. "கோட்டின் வாய்ச் சாக்குத்தி" (கலித்தொகை, முல்லை: 5) என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக்கூட்டுக.

குறள் 830 (பகைநட்பாங் )[தொகு]

பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட் () பகை நட்பாம் காலம் வருங்கால் முகம் நட்டு

டகநட் பொரீஇ விடல். (10) அகம் நட்பு ஒரீஇ விடல்.

தொடரமைப்பு: பகை நட்பாம் காலம் வருங்கால், முகம் நட்டு அகம் நட்பு ஒரீஇ விடல்.

இதன்பொருள்
பகை நட்பாம் காலம் வருங்கால்= தம்பகைவர் தமக்கு நட்டாராய் ஒழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் நட்பு ஒரீஇ விடல்= தாமும் அவரோடு முகத்தால் நட்புச்செய்து, அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க.
உரைவிளக்கம்
அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்காலாகாத அளவு. இதனானே ஆமளவு எல்லாம் நீக்குக என்பது பெற்றாம்.
இவை இரண்டு பாட்டானும் அந்நட்பிடை ஒழுகுமாறு கூறப்பட்டது.