திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/93.கள்ளுண்ணாமை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 93.கள்ளுண்ணாமை[தொகு]

அதிகார முன்னுரை
இனி ஒழுக்கமும் உணர்வும் அழித்தற்கண் அவ்வரைவின் மகளிரோடு ஒப்பதாய கள்ளினை உண்ணாமையது சிறப்பு எதிர்மறை முகத்தான் கூறுகின்றார்.

குறள் 921 ( உட்கப்படாஅ)[தொகு]

உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் ( ) உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார். (01) கள் காதல் கொண்டு ஒழுகுவார்.

தொடரமைப்பு: கட்காதல் கொண்டு ஒழுகுவார், எஞ்ஞான்றும் உட்கப்படாஅர், ஒளி இழப்பர்.

இதன்பொருள்
கட்காதல் கொண்டு ஒழுகுவார்= கள்ளின்மேற் காதல் செய்து ஒழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படாஅர்= எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளிஇழப்பர்= அதுவேயன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர்.
உரைவிளக்கம்
அறிவின்மையால் பொருள், படை முதலியவற்றால் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம்முன்னோரான் எய்திநின்ற ஒளியினையும் இகழற்பாட்டான் இழப்பர் என்பதாம். இவையிரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனாற் கூறப்பட்டது.

குறள் 922 (உண்ணற்க )[தொகு]

உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா ( ) உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்

னெண்ணப் படவேண்டா தார். (02) எண்ணப்பட வேண்டாதார்.

தொடரமைப்பு: கள்ளை உண்ணற்க, உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க.

இதன்பொருள்
கள்ளை உண்ணற்க= அறிவுடையராயினார் அஃதிலர் ஆதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதுஒழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க= அன்றியே உண்ணல்வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க.
உரை விளக்கம்
பெறுதற்கு அரிய அறிவைப் பெற்றுவைத்தும், கள்ளான் அழித்துக் கொள்ளவாரை, இயல்பாகவே அஃதில்லாத விலங்குகளுடனும் எண்ணார் ஆகலின், 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.

குறள் 923 (ஈன்றாள் )[தொகு]

ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச் ( ) ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி. (03) சான்றோர் முகத்துக் களி.

தொடரமைப்பு: ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது, மற்றுச் சான்றோர் முகத்து என்.

இதன்பொருள்
ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது= யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்= ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர்முன்பு களித்தல் அவர்க்கியாதாம்.
உரை விளக்கம்
மன, மொழி, மெய்கள் தம் வயத்த அன்மையான் நாண் அழியும், அழியவே ஈன்றாட்கும் இன்னாதாயிற்று. ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாது ஆதல் சொல்லவேண்டுமோ என்பதாம்.

குறள் 924 (நாணென்னு )[தொகு]

நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் ( ) நாண் என்னும் நல் ஆள் புறம் கொடுக்கும் கள் என்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (04) பேணாப் பெரும் குற்றத்தார்க்கு.

தொடரமைப்பு: கள் என்னும் பேணாப் பெரும் குற்றத்தார்க்கு, நாண் என்னும் நல் ஆள் புறம் கொடுக்கும்.

இதன்பொருள்
கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு= கள்ளென்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல் ஆள் புறம் கொடுக்கும்= நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள்.
உரை விளக்கம்
காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவாராகலிற் 'பேணா'வெனறும், பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையிற் 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும், கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி.

இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது

குறள் 925 (கையறியாமை )[தொகு]

கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து () கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து

மெய்யறி யாமை கொளல். (05) மெய் அறியாமை கொளல்.

தொடரமைப்பு: பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல், கை அறியாமை உடைத்தே.

இதன்பொருள்
பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல்= ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து= அவன் பழவினைப்பயனாய செய்வது அறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து.
உரை விளக்கம்
தன்னையறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. 'கை' அப்பொருட்டாதல், "பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று" (புறநானூறு, 209) என்பதனானும் அறிக. அறிவார் விலைகொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால், தீயது கொள்ளாமையின் 'மெய்யறியாமை கொளல்' முன்னையறியாமையான் வந்தது என்பதாம்.

குறள் 926 (துஞ்சினார் )[தொகு]

துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று ( ) துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (06) நஞ்சு உண்பார் கள் உண்பவர்.

தொடரமைப்பு: துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர், கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பவர்.

இதன்பொருள்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்= உறங்கினார், செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறெனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார்= அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறெனப்படார், அவர்தாமேயாவர்.
உரை விளக்கம்
உறங்கினார்க்கும், கள்ளுண்பார்க்கும் உயிர்ப்புநிற்றல், வேறாதலும் வேறன்மையும்உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரையாக்கி, திரிக்கப்படுதலால் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர், கைவிடப்படுதலான் செத்தாரும் கள்ளுண்பாரும் ஒப்பர் என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமைபுணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்று ஆகலானும், சொற்கிடக்கை நிரல்நிறைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக.
இவை இரண்டுபாட்டானும் அவரது அறிவுஇழத்தற்குற்றம் கூறப்பட்டது.

குறள் 927 (உள்ளொற்றி )[தொகு]

உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங் ( ) உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர். (07) கள் ஒற்றிக் கண் சாய்பவர்.

தொடரமைப்பு: கள் ஒற்றிக் கண் சாய்பவர், உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர்.

இதன்பொருள்
கள் ஒற்றிக் கண்சாய்பவர்= கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவுதளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர்= உள்ளூர் வாழ்பவரான் உள்நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர்.
உரை விளக்கம்
'உள்ளூர்' ஆகுபெயர். உண்டென்பது அவாய்நிலையான் வந்தது. உய்த்து உணர்தல், தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.

குறள் 928 (களித்தறியே )[தொகு]

களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் ( ) களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

தொளித்ததூஉ மாங்கே மிகும். (08) ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

தொடரமைப்பு: களித்து அறியேன் என்பது கைவிடுக, நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

இதன்பொருள்
களித்து அறியேன் என்பது கைவிடுக=மறைந்து உண்டுவைத்து யான் கள்ளுண்டு அறியேன் என்று உண்ணாதபொழுது தம் ஒழுக்கம் கூறுதலை ஒழிக; நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்= அவ்வுண்டபொழுதே, பிறர் அறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும், முன்னை அளவின் மிக்கு வெளிப்படுதலான்.
உரை விளக்கம்
களித்தறியேன் எனக் காரியத்தான் கூறினார்.
இவை இரண்டுபாட்டானும், அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.

குறள் 929 (களித்தானைக் )[தொகு]

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் ( ) களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (09) குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

தொடரமைப்பு: களித்தானைக் காரணம் காட்டுதல், நீர்க் கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

இதன்பொருள்
களித்தானைக் காரணம் காட்டுதல்= கள்ளுண்டு களித்தான் ஒருவனை, இஃது ஆகாது என்று பிறன் ஒருவன், காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க் கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇயற்று= நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறன் ஒருவன் விளக்கினால் நாடுதலை ஒக்கும்.
உரை விளக்கம்
களித்தானை என்னும் இரண்டாவது, "அறிவுடை அந்தணன் அவளைக் காட்டுஎன்றானோ" (கலித்தொகை, மருதக்கலி: 7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம்.
இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.

குறள் 930 (கள்ளுண்ணாப் )[தொகு]

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா () கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்

லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு. (10) உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

தொடரமைப்பு: கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக், காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான்கொல்.

இதன்பொருள்
கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக்= கள்ளுண்பான் ஒருவன், தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணும் அன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான்கொல்= காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை, அவன் சோர்வால் அதுவும் இற்று என்று கருதான் போலும்.
உரை விளக்கம்
சோர்வு- மன, மொழி, மெய்கள் தன்வயத்த அல்லவாதல்.
கருதல் அளவையான், அதன் இழுக்கினை உய்த்து உணரின் ஒழியும், என இதனால் அஃது ஒழிதற்காரணம் கூறப்பட்டது.