திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, முன்கூடிய ஞான்றை இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமைஎய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம்,

குறள் 1201 ( உள்ளினுந்)[தொகு]

(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. )

உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் ( ) உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்

கள்ளினுங் காம மினிது. (01) கள்ளினும் காமம் இனிது.

[தொடரமைப்பு: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும் காமம் இனிது.]

இதன்பொருள்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்= முன் கூடியஞான்றை இன்பத்தினைப் பிரி்ந்துழி நினைந்தாலும், அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மகிழ்ச்சியைத் தருதலால்;
கள்ளினும் காமம் இனிது= உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தலுடைத்து, எ-று.
உரைவிளக்கம்
தன் தனிமையும் தலைவனை மறவாமையும் கூறியது.

குறள் 1202 (எனைத்தொன் )[தொகு]

(இதுவுமது )

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் ( ) எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன் றில். (02) நினைப்ப வருவது ஒன்று இல்.

[தொடரமைப்பு: தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல், காமம் எனைத்து இனிது ஒன்றேகாண்.]

இதன்பொருள்
தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்= தம்மால் விரும்பப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவான் வருவதோர் துன்பம் இல்லையாம்;
காமம் எனைத்து இனிது ஒன்றேகாண்= அதனாற் காமம் எத்துணையும் இனிதுஒன்றேகாண், எ-று.
உரை விளக்கம்
புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், எனைத்தும் இனிது என்றான். சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. தான் ஆற்றியவகை கூறியவாறு.

குறள் 1203 ( நினைப்பவர்)[தொகு]

(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள், தோழிக்குச் சொல்லியது. )

நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல் ( ) நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும். (03) சினைப்பது போன்று கெடும்.

[தொடரமைப்பு: தும்மல் சினைப்பது போன்று கெடும், நினைப்பவர் போன்று நினையார்கொல்.]

இதன்பொருள்
தும்மல் சினைப்பது போன்று கெடும்= எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது;
நினைப்பவர் போன்று நினையார்கொல்= அதனாற் காதலர் என்னைநினைப்பார் போன்று நினையார் ஆகல்வேண்டும், எ-று.
உரை விளக்கம்
சினைத்தல்- அரும்புதல். சேய்மைக்கண்ணராய் கேளிர் நினைந்துழி, அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினைமுடிவது போன்று முடியாமை உணர்ந்தால் சொல்லியதாயிற்று.

குறள் 1204 (யாமுமுளேங் )[தொகு]

(இதுவுமது )

யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் ( ) யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து

தோஒ வுளரே யவர். (04) ஓஒ உளரே அவர்.

[தொடரமைப்பு: எம் நெஞ்சத்து அவர் ஓஒ உளரே, அவர் நெஞ்சத்து யாமும் உளேம்கொல்.]

இதன்பொருள்
எம் நெஞ்சத்து அவர் ஓஒ உளரே= எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழுதும் உளரேயாய் இராநின்றார்;
அவர்நெஞ்சத்து யாமும் உளேங்கொல்= அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளம் ஆதுமோ, ஆகேமோ, எ-று.
உரை விளக்கம்
ஓகாரவிடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்திநின்றது. உளமாயும் வினைமுடியாமையின் வாரார்ஆயினாரோ, அது முடிந்தும் இலம் ஆகலின் வாரார் ஆயினாரோ என்பது கருத்து.

குறள் 1205 ( தந்நெஞ்சத்)[தொகு]

(இதுவுமது )

தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ () தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார் கொல்

லெந்நெஞ்சத் தோவா வரல். (05) எம் நெஞ்சத்து ஓவா வரல்.

[தொடரமைப்பு: தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார், எம்நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல்.]

இதன்பொருள்
தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்= தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல்கொண்ட காதலர்;
எந்நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல்= தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார் கொல்லோ, எ-று.
உரை விளக்கம்
ஒருவரைத் தங்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கட் பலகாலும் சேறல் நாணுடையார் செயல் அன்மையின், நாணார்கொல் என்றாள்.

குறள் 1206 ( மற்றியானென்)[தொகு]

(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைத்து இறந்துபாடு எய்தாநின்றாய், அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது. )

மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா ( ) மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்

னுற்றநா ளுள்ள வுளேன். (06) உற்ற நாள் உள்ள உளேன்.

[தொடரமைப்பு: யான் அவரொடு உற்றநாள் உள்ள உளேன், மற்று யான் என் உளேன்.]

இதன்பொருள்
யான் அவரோடு உற்றநாள் உள்ள உளேன்= யான் அவரோடு புணர்ந்தஞான்றை இன்பத்தை நினைதலான் இத்துன்ப வெள்ளத்தும் உயிர்வாழ்கின்றேன்;
மற்று யான் என்னுளேன்= அது இன்றாயின், வேறு எத்தால் உயிர்வாழ்வேன், எ-று.
உரை விளக்கம்
நாள்-ஆகுபெயர். உயிர்வாழ்தற்கு வேறுமுள, அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன் தூது சேறன் முதலாயின. அவையாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக்கோடு இல்லை என்பது கருத்து.

குறள் 1207 ( மறப்பினெவ)[தொகு]

( இதுவுமது )

மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே ( ) மறப்பின் எவன் ஆவன்மன் கொல் மறப்பு அறியேன்

னுள்ளினு முள்ளஞ் சுடும். (07) உள்ளினும் உள்ளம் சுடும்.

[தொடரமைப்பு: மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும், மறப்பின் எவன் ஆவன்மன்கொல்.]

இதன்பொருள்
மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்= அவ்வின்பத்தை மறத்தல் அறியேனாய் இன்று உள்ளாநிற்கவும், பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது;
மறப்பின் எவன் ஆவன்= அங்ஙனம் பிரிவு ஆற்றாத யான் மறந்தால் இறந்துபடாது உளேன் ஆவது எத்தால், எ-று.
உரை விளக்கம்
மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. மன் ஈண்டும் அதுபட நின்று ஒழியசை ஆயிற்று. கொல்-அசைநிலை.

குறள் 1208 ( எனைத்துநினைப்)[தொகு]

(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பஞ் செய்வர் என்றாட்குச் சொல்லியது. )

எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ ( ) எனைத்து நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ

காதலர் செய்யுஞ் சிறப்பு. (08) காதலர் செய்யும் சிறப்பு.

[தொடரமைப்பு: எனைத்து நினைப்பினும் காயார், காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ. ]

இதன்பொருள்
எனைத்து நினைப்பினும் காயார்= தம்மை யான் எத்துணையும் மிகநினைந்தாலும் அதற்கு வெகுளார்;
காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ= காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ, எ-று.
உரை விளக்கம்
வெகுளாமை- அதற்கு உடன்பட்டு நெஞ்சின்கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் சிறப்பு என்றாள். காதலர் தம்மாட்டருள் என்றும், செய்யுங்குணம் என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறியவதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.

குறள் 1209 ( விளியுமென்)[தொகு]

( தலைமகன் தூதுவரக் காணாது வருந்துகின்றாள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. )

விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா ( ) விளியும் என் இன் உயிர் வேறு அல்லம் என்பார்

ரளியின்மை யாற்ற நினைந்து. (09) அளி இன்மை ஆற்ற நினைந்து.

[தொடரமைப்பு: வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து, என் இன் உயிர் விளியும். ]

இதன்பொருள்
வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து= முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து;
என் இன் உயிர் விளியும்= எனது இனியவுயிர் கழியாநின்றது, எ-று.
உரை விளக்கம்
அளியின்மை- பின் வருவர்ஆகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டுநின்றுழித் தூதுவிடாமையும் முதலாயின. பிரிவாற்றல்வேண்டும் என வற்புறுத்தாட்கு, என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று, அவர் அன்பின்மைக்கு என எதிரழிந்து கூறியவாறு.

குறள் 1210 ( விடாஅது)[தொகு]

(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரான் சொல்லியது. )

விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப் () விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி. (10) படாஅதி வாழி மதி.

[தொடரமைப்பு: மதி வாழி, விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி.]

இதன்பொருள்
மதி வாழி= மதியே;
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி= என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப்போயினாரை, யான் என் கண்ணளவாயினும் எதிர்ப்படும்வகை நீ படாது ஒழிவாயாக, எ-று.
உரை விளக்கம்
கண்ணளவானே எதிர்ப்படுதலாவது, மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர்கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமையுண்மையின் 'சென்றாரைக் காண' என்றும், குறையுறுகின்றாள் ஆகலின் 'வாழி' என்றும் கூறினாள். இனிப் படாது என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதுஇல்லையென, அதனால் துயில்பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு வாழி என்பது அசைநிலை.