திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/95.மருந்து

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 95.மருந்து[தொகு]

அதிகார முன்னுரை
பழவினையானும், காரணங்களானும் மக்கட்கு, வாத முதலிய பிணிகள் வரும். அவற்றுட் பழவினையான வருவன அதன் கழிவின்கண் அல்லது தீராமையின் அவையொழித்து, ஏனைக் காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின் திறங்கூறுகின்றார். காரணங்களாவன- உணவு, செயல்களது ஒவ்வாமையாகலின், பிணிகளும் காரணத்தான் வருவனவாயின.

குறள் 941 (மிகினுங் )[தொகு]

மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் ( ) மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

வளிமுதலா வெண்ணிய மூன்று. (01) வளி முதலா எண்ணிய மூன்று.

தொடரமைப்பு: மிகினும் குறையினும், நூலோர் வளி முதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும்.

இதன்பொருள்
மிகினும் குறையினும்= உணவுஞ் செயல்களும் ஒருவன் பகுதிக்கொத்த அளவி்னவன்றி அதனின் மிகுமாயினும், குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும்= ஆயுள்வேதம் உடையாரால் வாத முதலாக எண்ணப்பட்ட மூன்றுநோயும் அவனுக்குத் துன்பம் செய்யும்.
உரைவிளக்கம்
நூலோர் எண்ணியவெனவே, அவர் அவற்றான் வகுத்த வாதப்பகுதி, பித்தப்பகுதி, ஐப்பகுதி என்னும பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது, சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல் இவை இரண்டும் இங்ஙனமன்றி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தம் நிலையின்நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றும்மை விகாரத்தான் தொ்ககது.
இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பம் செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க்கூறுப.

குறள் 942 (மருந்தென )[தொகு]

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய ( ) மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

தற்றது போற்றி யுணின். (02) அற்றது போற்றி உணின்.

தொடரமைப்பு: அருந்தியது அற்றது போற்றி உணின், யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம்.

இதன்பொருள்
அருந்தியது அற்றது போற்றி உணின்= ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளான் தெளியவறிந்து பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம்= அவன்யாக்கைக்கு மருந்தென்று வேறு வேண்டாவாம்.
உரை விளக்கம்
குறிகளாவன: யாக்கை நொய்ம்மை, தேக்கின்தூய்மை, கரணங்கள் தொழிற்கு உரியவாதல், பசிமிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாதலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது, அதன் அருமைதோன்ற நின்றது.

குறள் 943 (அற்றால் )[தொகு]

அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு ( ) அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு

பெற்றா னெடிதுய்க்கு மாறு. (03) பெற்றான் நெடிது உய்க்குமாறு.

தொடரமைப்பு: அற்றால் அளவு அறிந்து உண்க, உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது.

இதன்பொருள்
அற்றால் அளவு அறிந்து உண்க= முன் உண்டது அற்றால் பின் உண்பதனை அறும் அளவறிந்து அவ்வளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது= இறப்பவும் பலவாய பிறயாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப பெற்றான், அதனை நெடுங்காலம் கொண்டுசெலுத்து நெறி அதுவாகாலான்.
உரை விளக்கம்
இம்மை மறுமை வீடுபேறுகள் எய்தற்பாலது ஈதொன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும், அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின் 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். பெற்றால் என்று பாடம்ஓதுவாரும் உளர்.

குறள் 944 (அற்றதறிந்து )[தொகு]

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல ( ) அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல

துய்க்க துவரப் பசி்த்து. (04) துய்க்கத் துவரப் பசித்து.

தொடரமைப்பு: அற்றது அறிந்து, துவரப் பசித்து, மாறு அல்ல கடைப்பிடித்துத் துய்க்க.

இதன்பொருள்
அற்றது அறிந்து= முன்னுண்டது அற்றபடியை அறிந்து; துவரப்பசித்து= பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப்பிடித்துத் துய்க்க= உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க.
உரை விளக்கம்
'அற்றது அறிந்து' என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற்பொருட்டு. உண்டது அற்றாலும், அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறவேண்டும் என்பார் 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறுகொள்ளாமையாவது, உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், காலவியல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களான் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன முறையை வாத பித்த ஐகளான் ஆய பகுதிக்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது, சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும், தேனுநெய்யுந் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவுமாம். அவற்றைக் குறிக்கொள்ளாது, மனம்பட்டவாற்றால் துய்ப்பின் அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.

குறள் 945 (மாறுபாடில்லாத )[தொகு]

மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி () மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்

னூறுபா டில்லை யுயிர்க்கு. (05) ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

தொடரமைப்பு: மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின், உயிர்க்கு ஊறுபாடு இல்லை.

இதன்பொருள்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்= அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன்னுள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை= அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது.
உரை விளக்கம்
உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற்செல்லாதாயிற்று, இல்லையென்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரே ஆகலின் அதன்மேல் வைத்துக்கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம்.
இவை நான்கு பாட்டானும், உண்ணப்படுவனவும்,அவற்றது அளவும், காலமும் பயனும் கூறப்பட்டன.

குறள் 946 (இழிவறிந்து )[தொகு]

இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்கும் ( ) இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்

கழிபே ரிறையான்க ணோய். (06) கழி பேர் இரையான்கண் நோய்.

தொடரமைப்பு: இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல், கழிபேர் இரையான்கண் நோய் நிற்கும்.

இதன்பொருள்
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல்= அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன்மாட்டு இன்பம்நீங்காது நிலை நிற்குமாறுபோல்; கழிபேர் இரையான்கண் நோய் நிற்கும்= மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய்நீங்காது நிலைநிற்கும்.
உரை விளக்கம்
அவ்வாறே உண்டல்- உண்ணலாம் அளவிற் சிறிது குறைய உண்டல். இன்பமாவது- வாத முதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மன மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறமுதலிய நான்கும் எய்தலும்ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கோடு ஒத்தலின், 'இரையான்' என்றார். விதி எதிர்மறைகளை, உவமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.

குறள்497 (தீயளவின்றித் )[தொகு]

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி ( ) தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்

னோயள வின்றிப் படும். (07) நோய் அளவு இன்றிப் படும்.

தொடரமைப்பு: தெரியான் தீயளவு அன்றிப் பெரிது உண்ணி்ன், நோய் அளவு இன்றிப் படும்.

இதன்பொருள்
தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின்= தன்பகுதியும், அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து வயிற்றுத் தீயளவன்றி ஒருவன் மிகஉண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப்படும்= அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும்.
உரை விளக்கம்
தெரியாமை வினைக்குச் செயப்படுபொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய்- சாதியொருமை.
இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

குறள் 948 (நோய்நாடி)[தொகு]

நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும் ( ) நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். (08) வாய் நாடி வாய்ப்பச் செயல்.

தொடரமைப்பு: நோய்நாடி, நோய்முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி, வாய்ப்பச்செயல்.

இதன்பொருள்
நோய் நாடி= மருத்துவன்ஆயினான் ஆதுரன் மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னதென்று துணிந்து; நோய் முதல் நாடி= பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து தெளிந்து; அது தணிக்கும் வாய்நாடி= பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல்= அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க.
உரை விளக்கம்
காரணம்- உணவு, செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள் வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற் பயன் நோயினையும், வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரம் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு, 'அது தணிக்கும் வாய்' என்றார். "கழுவாயுமுள" என்றார் பிறரும் (புறநானூறு, 34.). பிழையாமை- பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையில் தப்பாமை.

குறள் 949 ( உற்றானளவும்)[தொகு]

உற்றா னளவும் பிணியளவுங் காலமுங் ( ) உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல். (09) கற்றான் கருதிச் செயல்.

தொடரமைப்பு: கற்றான், உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல்.

இதன்பொருள்
கற்றான்= ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல்= அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும், அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும், தன் செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க.
உரை விளக்கம்
ஆதுரன்அளவு- பகுதி, பருவம், வேதனை வலிகளின் அளவு. பிணியளவு- சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்கம் நடு ஈறு என்னும் அதன் பருவவேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம்- மேற்சொல்லியன. இம்மூன்றும் பிழையாமல் நூனெறியானும் உணர்வுமிகுதியானும் ஆராய்ந்து செய்க என்பார் 'கற்றான் கருதிச் செயல்' என்றார்.

இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது

குறள் 950 (உற்றவன் )[தொகு]

உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் () உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று

றப்பானாற் கூற்றே மருந்து. (10) அப்பால் நாற்கூற்றே மருந்து

தொடரமைப்பு:மருந்து, உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான், என்று அப்பால் நாற்கூற்றே.

இதன்பொருள்
மருந்து= பிணிக்கு மருந்தாவது; உற்றவன்= அதனையு்ற்றவன்; தீர்ப்பான்= அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து= அவனுக்குக் கருவியாகிய மருந்து;உழைச்செல்வான் என்ற அப்பால் நாற்கூற்றே= அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது.
உரை விளக்கம்
'நான்கு' என்னும் எண் வருகின்றமையின், அதுநோக்கி 'அப்பால்' என்று ஒழிந்தார். நாற்கூற்றது என்பது விகாரம் ஆயிற்று. அவற்றுள் 'உற்றவன்'வகை நான்காவன- பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருத்துத் துன்பம் பொறுத்தல் எனஇவை. 'தீர்ப்பான்' வகை நான்காவன- நோய்கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு ஓதிய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்துவருதல், மன மொழி மெய்கள் தூயவாதல் என இவை. 'மருந்'தின் வகை நான்காவன- பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியொடு பொருந்துதல் என இவை. 'இயற்றுவான்' வகை நான்காவன- ஆதுரன்மாட்டு அன்புடைமை, மன மொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணிதீராமையின், இத்தொகுதியையும் மருந்து என்றார். ஆயுள் வேதமுடையாரும், இவை கால்களாக நடக்கும் என்பதுபற்றிப் பாதம் என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார்.
இதனால் அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.

அங்கவியல் முற்றிற்று