திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/106.இரவு

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 106. இரவு[தொகு]

அதிகார முன்னுரை
இனி, மானம் தீரா இரவாமையோடு ஒத்தலின், அதனானும் வீடு எய்தற்பயத்ததாய உடம்பு ஓம்பப்படும் என்னும் அறநூல் வழக்குப்பற்றி மேல் எய்திய துவரத்துறத்தல் விலக்குதற் பொருட்டு இரவு கூறுகின்றார். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1051 (இரக்க )[தொகு]

இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி () இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

னவர்பழி தம்பழி யன்று. (01) அவர் பழி தம் பழி அன்று.

தொடரமைப்பு: இரத்தக்கார்க் காணின் இரக்க, கரப்பின் அவர் பழி தம் பழி அன்று.

இதன் பொருள்
இரத்தக்கார் காணின் இரக்க= நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணில், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று= இரந்தால் அவர் கரந்தாராயின், அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான்.
உரை விளக்கம்
இரவு என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தான் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையர் ஆவார்- உரையாமை முன் உணரும் ஒண்மை உடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியர் ஆகலின் 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிவு இன்மையின் 'இரக்க' என்றும், அவர் ஈதலி்ற் குறைகாட்டாமையிற் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள் அறுவைக்கண் மாசுபோல அவர்கண் கடிதுசேறலின் 'அவர் பழி' என்றும், ஏற்பிலார் மாட்டு இரவன்மையின், 'தம்பழி அன்று' என்றும் கூறினார்.

குறள் 1052(இன்பமொரு )[தொகு]

இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை () இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்ப முறாஅ வரின். (02) துன்பம் உறாஅ வரின்.

தொடரமைப்பு: ஒருவற்கு இரத்தல் இன்பம், இரந்தவை துன்பம் உறாஅ வரின்.

இதன் பொருள்
ஒருவற்கு இரத்தல் இன்பம்= ஒருவற்கு இரத்தல் தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅ வரின்= இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வுடைமையான் தான் துன்புறாமல் வருமாயின்.
உரை விளக்கம்
'இன்பம்' ஆகுபெயர். உறாமல் என்பது கடைக்குறைந்து நின்றது. 'துன்பம்' சாதிஒருமைப்பெயர். அவையாவன: ஈவார்கட் காலமும், இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம்வயத்தர் ஆக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவுமுமாம். அவை உறாமல் வருதலாவது, அவர் முன் உணர்ந்து ஈயக்கோடல். இரந்தவர் துன்பமுறாவரின் என்று பாடமோதி, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றான் துன்புறாது எதிர்வந்து ஈவாராயின் என்று உரைப்பாரும் உளர்.1
இவை இரண்டு பாட்டானும், நல்குரவான் உயிர்நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.

1. மணக்குடவர்.

குறள் 1053 (கரப்பிலா )[தொகு]

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் () கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று

றிரப்புமோ ரேஎ ருடைத்து. (03) இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து.

தொடரமைப்பு: கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும், ஓர் ஏஎர் உடைத்து.

இதன் பொருள்
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும்= கரத்தல் இல்லா நெஞ்சினை உடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து= நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.
உரை விளக்கம்
"சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு"2 என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல்- சொல்லுதல் உற்று, உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன், நிற்றன் மாத்திரமே அமைதலின், 'முன்னின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎர் உடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.

2. குறள் 963. திருக்குறள் அதிகாரம் 97.மானம்

குறள் 1054 (இரத்தலு )[தொகு]

இரத்தலு மீதலே போலுங் கரத்தல் () இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலுந் தேற்றாதார் மாட்டு. (04) கனவிலுந் தேற்றாதார் மாட்டு.

தொடரமைப்பு: கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு இரத்தலும், ஈதலே போலும்.

இதன் பொருள்
கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு இரத்தலும்= தமக்கு உள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார் மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும்= வறியார்க்கு ஈதலே போலும்.
உரை விளக்கம்
உம்மை ஈண்டு அவ்வாறு நின்றது. தான் புகழ்பயவாதாயினும், முன்னுளதாய புகழ் கெட வாராமையின், 'ஈதலே போலும்' என்றார். ஏகாரம், ஈற்றசை.

குறள் 1055 (கரப்பிலார் )[தொகு]

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் () கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண்ணின்று

றிரப்பவர் மேற்கொள் வது. (05) இரப்பவர் மேற்கொள்வது.

தொடரமைப்பு: கண்ணி்ன்று இரப்பவர் மேற்கொள்வது, கரப்பிலார் வையகத்து உண்மையான்.

இதன் பொருள்
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது= சொல்லுதல் மாட்டாது, முன் நிற்றன் மாத்திரத்தான் இரப்பார் உயிர் ஓம்பற் பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பிலார் வையகத்து உண்மையான்= அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிது ஒன்றான் அன்று.
உரை விளக்கம்
அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின், உயிர் நீப்பர் என்பதாம்.

குறள் 1056(கரப்பிடும்பை )[தொகு]

கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை () கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் நிரப்பு இடும்பை

யெல்லா மொருங்கு கெடும். (06) எல்லாம் ஒருங்கு கெடும்.

தொடரமைப்பு:கரப்பிடும்பை இல்லாரைக் காணின், நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.

இதன் பொருள்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின்= உள்ளது கரத்தலாகிய நோய் இல்லாரைக் கண்டால்; நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்= மானம் விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்கள் எல்லாம் சேரக்கெடும்.
உரை விளக்கம்
கரத்தல் ஒருவற்கு வேண்டுவது ஒன்றன்மையின், அதனை நோய் என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்ட பொழுதே அவர் கழி உவகையர் ஆவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். 'இடும்பை' ஆகுபெயர். முழுதும் கெடும் என்று பாடம் ஓதி, எஞ்சாமற் கெடும் என்று உரைப்பாரும் உளர்.3

3. மணக்குடவர்.

குறள் 1057 (இகழ்ந்தெள்ளா )[தொகு]

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள () இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்து உள்ளம்

முள்ளு ளுவப்ப துடைத்து. (07) உள் உள் உவப்பது உடைத்து.

தொடரமைப்பு: இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின், உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து.

இதன் பொருள்
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின்= தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து= அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மை உடைத்து.
உரை விளக்கம்
'இகழ்ந்து எள்ளாது' எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பிடும்பை கெடுதல் அளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பதுடைத்து' என்றார்.
இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.

குறள் 1058 (இரப்பாரை )[தொகு]

இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞால () இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று. (08) மரப் பாவை சென்று வந்தற்று.

தொடரமைப்பு: இரப்பாரை இல்லாயின், ஈர்ங்கண் மா ஞாலம், மரப்பாவை சென்று வந்தற்று.

இதன் பொருள்
இரப்பாரை இல்லாயின்= வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண் மா ஞாலம்= குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று= உயிர் இல்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றாற் சென்றுவந்தாற் போலும்.
உரை விளக்கம்
ஐகாரம் அசைநிலை. ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின் உயிருடையர் அல்லர் என்பதாம். "ஈவாருங் கொள்வாரும் இல்லாத வானத்து, வாழ்வாரே வன்கணவர்" என்றார் பிறரும். இத்தொடையின்பம் நோக்காது இரப்பவர் இல்லாயின் என்று பாடம் ஓதுவாருமுளர்.4

4. மணக்குடவர்

குறள் 1059( ஈவார்கண்)[தொகு]

ஈவார்கண் ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோள் () ஈவார்கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்

மேவா ரிலாஅக் கடை. (09) மேவார் இலாஅக் கடை.

தொடரமைப்பு: இரந்து கோள் மேவார் இலாஅக்கடை, ஈவார்கண் தோற்றம் என் உண்டாம்

இதன் பொருள்
இரந்துகோள் மேவார் இலாக்கடை= அவர்பால் சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம்= கொடுப்பார்மாட்டு, என்ன புகழ் உண்டாம்? யாதும் இல்லை.
உரை விளக்கம்
'தோற்றம்' ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வன்மை வெளிப்படாமையின், அதனான் புகழ் எய்தார் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும், உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.

குறள் 1060 (இரப்பான் )[தொகு]

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை () இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை

தானேயுஞ் சாலுங் கரி. (10) தானேயும் சாலும் கரி.

தொடரமைப்பு: இரப்பான் வெகுளாமை வேண்டும், நிரப்பிடும்பை தானேயும் கரி சாலும்.

இதன் பொருள்
இரப்பான் வெகுளாமை வேண்டும்= ஈவானுக்குப் பொருள் உதவாவழி, இவன் எனக்கு ஈகின்றிலன் என்று, அவனை இரப்பான் வெகுளாது ஒழிதல் வேண்டும்; நிரப்பிடும்பை தானேயும் கரி சாலும் = அதுவேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும்.
உரை விளக்கம்
யாவர்க்கும் தேட வேண்டுதலும், நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்சவும்மை. தனக்கேயன்றி, மற்றை இரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவன் உறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறும் துன்பம் தானறிந்து வெகுளற்க என்பதாம்.
இதனால் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.