திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/91.பெண்வழிச்சேறல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 91.பெண்வழிச்சேறல்[தொகு]

அதிகார முன்னுரை
இனிக் காமத்தான் வருவன நேரே பகையல்லவாயினும், ஆக்கம் சிதைத்தல், அழிவு தலைத்தருதல் என்னும் தொழில்களாற் பகையோடு ஒத்தலின் பகைப்படுவனவாம் ஆகலான், அவற்றைப் பகைப்பகுதியது இறுதிக்கண் கூறுவான் தொடங்கி, முதற்கண் பெண்வழிச்சேறல் கூறுகின்றார். அஃதாவது, தன்வழி ஒழுகற்பாலளாய இல்லாள்வழியே தான் ஒழுகுதல்.

குறள் 901 (மனைவிழைவார் )[தொகு]

மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார் ( ) மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்

வேண்டாப் பொருளு மது. (01) வேண்டாப் பொருளும் அது.

தொடரமைப்பு: மனைவிழைவார் மாண்பயன் எய்தார், வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது.

இதன்பொருள்
மனைவிழைவார் மாண் பயன் எய்தார்= இன்பங்காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள்தன்மையராய் ஒழுகுவார் தமக்கு இன்றுணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது= இனிப் பொருள்செய்தலை முயல்வார் அதற்கு இடையீடு என்று இகழும் பொருளும் அவ்வின்பம்.
உரைவிளக்கம்
'மனை'யும், 'விழைத'லும், 'பய'னும் ஆகுபெயர். அவ்வின்பம் அவள்தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்லவிடாமையின், விடற்பாற்றென்பதாம்.

குறள் 902 (பேணாது )[தொகு]

பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர் ( ) பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியது ஓர்

நாணாக நாணுத் தரும். (02) நாண் ஆக நாணுத் தரும்.

தொடரமைப்பு: பேணாது பெண் விழைவான் ஆக்கம், பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும்.

இதன்பொருள்
பேணாது பெண்விழைவான் ஆக்கம்= தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்திநின்ற செல்வம்; பெரியது ஓர் நாணாக நாணுத் தரும்= இவ்வுலகத்து ஆண்பாலார்க்கெல்லாம் பெரியதோர் நாணுண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.
உரை விளக்கம்
எய்திநின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன்கொள்வாள் அவளாகலின், அவ்வாண்மைச் செய்கை அவள்கண்ணதாயிற்று என்று, ஆண்பாலார் யாவரும் நாண அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து பின் தானும் நாணும் என்பது நோக்கிப் 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார்.
இவ்விரண்டு பாட்டானும் மனைவிழைதற் குற்றம் கூறப்பட்டது.

குறள் 903 (இல்லாள்கட் )[தொகு]

இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று ( ) இல்லாள் கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்

நல்லாரு ணாணுத் தரும். (03) நல்லாருள் நாணுத்தரும்.

தொடரமைப்பு: இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை, நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும்.

இதன்பொருள்
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை= ஒருவன் இல்லாள்மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும்= அஃதிலராய நல்லாரிடைச் செல்லுங்கால், நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும்.
உரை விளக்கம்
அவள்தான் அஞ்சியொழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மை ஆயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம். ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.

குறள் 904 (மனையாளை )[தொகு]

மனையாளை யஞ்சு மறுமை யிலாளன் ( ) மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்

வினையாண்மை வீறெய்த லின்று. (04) வினை ஆண்மை வீறு எய்தல் இன்று.

தொடரமைப்பு: மனையாளை அஞ்சும் மறுமை இலாளன், வினை ஆண்மை வீறு எய்தல் இன்று.

இதன்பொருள்
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்= தன்மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப் பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று= வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும், நல்லோராற் கொண்டாடப்படாது.
உரை விளக்கம்
உண்டாயவழியும் என்பது அவாய்நிலையான் வந்தது. இல்லறஞ்செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையை ஆளுந்தன்மை, தன்தன்மை இல்லாத அவனான் முடிவுபோகாமையின், 'வீறுஎய்தல் இன்று' என்றும் கூறினார்.

குறள் 905 (இல்லாளை )[தொகு]

இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று () இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல். (05) நல்லார்க்கு நல்ல செயல்.

தொடரமைப்பு: இல்லாளை அஞ்சுவான், மற்று நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்.

இதன்பொருள்
இல்லாளை அஞ்சுவான்= தன்மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்லசெயல் எஞ்ஞான்றும் அஞ்சும்= தான்தேடிய பொருளேயாயினும், அதனால் நல்லார்க்கு நல்லனசெய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும்.
உரை விளக்கம்
'நல்லார்'- தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும், நல் விருந்தினரும். 'நல்லன செய்தல்'- அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சிற்/ புல்லாளனாக" என்றார் பிறரும், (சீவகசிந்தாமணி, மண்மகளிலம்பகம்: 217).

குறள் 906 (இமையாரின் )[தொகு]

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா ( ) இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்

ளமையார்டோ ளஞ்சு பவர். (06) அமையார் தோள் அஞ்சுபவர்

தொடரமைப்பு: இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர், இமையாரின் வாழினும் பாடு இலரே.

இதன்பொருள்
இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர்= தம் இல்லாளுடைய வேய்போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர்= வீரத்தான் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மை இலர்.
உரை விளக்கம்
அமரர் போல வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின், 'வாழினும்' என்றார்.'அமையார் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலர் என்பதாம்.
இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது.

குறள் 907 ( பெண்ணேவல்)[தொகு]

பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப் ( ) பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடைப்

பெண்ணே பெருமை உடைத்து. பெண்ணே பெருமை உடைத்து.

தொடரமைப்பு: பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின், நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து.

இதன்பொருள்
பெண் ஏவல்செய்து ஒழுகும் ஆண்மையின்= நாண்இன்றித் தன் இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண்தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து= நாணினையுடைய அவ்ள் பெண்தன்மையே மேம்பாடு உடைத்து.
உரை விளக்கம்
'நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது. நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. 'ஏவல்' ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்'ணென்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக் கோடற்சிறப்புத் தோன்றப் 'பெண்ணே'யெனப் பிரித்தார்.

குறள் 908 (நட்டார்குறை )[தொகு]

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாட் ( ) நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல் நுதலாள்

பெட்டாங் கொழுகு பவர். (08) பெட்டாங்கு ஒழுகுபவர்.

தொடரமைப்பு: நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர், நட்டார் குறைமுடியார், நன்று ஆற்றார்.

இதன்பொருள்
நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர்= தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார்குறை முடியார்= தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறைமுடிக்க மாட்டார்; நன்று ஆற்றார்= அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவு மாட்டார்.
உரை விளக்கம்
'நன்னுதலாள்' என்பதனை, "அமையார் தோள்" (குறள், 906) என்புழிப்போலக் கொள்க. அவள்தானே அறிந்து ஏவலும், பொருள்கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.

குறள் 909 (அறவினையு )[தொகு]

அறவினையு மான்ற பொருளும் பிறவினையும் ( ) அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்

பெண்ணேவல் செய்வார்க ணில். (09) பெண் ஏவல் செய்வார்கண் இல்.

தொடரமைப்பு: அறவினையும், ஆன்ற பொருளும் பிறவினையும், பெண் ஏவல் செய்வார்கண் இல்.

இதன்பொருள்
அறவினையும்= அறச்செயலும்; ஆன்ற பொருளும்= அது முடித்தற்கு ஏதுவாய பொருட் செயலும்; பிறவினையும்= அவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல்= தம்மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா.
உரை விளக்கம்
புலன்கள் ஐந்தாகலின், 'பிறவினை'யெனப் பன்மையாயிற்று. அவைநோக்கி அறச்செயல் பொருட்செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின என்பது தோன்ற, அவற்றைப் பிரித்துக் கூறினார்.
இவை மூன்று பாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.

குறள் 910 (எண்சேர்ந்த )[தொகு]

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் () எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை யில். (10) பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல்.

தொடரமைப்பு: எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு, பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல்.

இதன்பொருள்
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு= கருமச் சூழ்ச்சிக்கட் சென்ற நெஞ்சத்தினையும் அதனினாய செல்வத்தினையம் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல்= மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது.
உரை விளக்கம்
"இடனில் பருவத்தும்" (திருக்குறள், 218) எனவும், "இடனின்றி இரந்தோர்க்கு" (கலித்தொகை, பாலைக்கலி: 1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக் காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல்செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறைமுகத்தான், அம்மூன்றும் இதனான் தொகுத்துக் கூறப்பட்டன.