திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/88.பகைத்திறந்தெரிதல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 88.பகைத் திறம் தெரிதல்[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, மாணாத பகையை ஆக்குதற் குற்றமும், முன் ஆகிநின்ற பகையுள் நட்பாக்கற்பாலதும், நொதுமலாக்கற் பாலதும்,,, அவற்றின்கட் செய்வதும், ஏனைக் களைதற்பாலதன்கட் செய்வனவும், களையும் பருவமும், களையாக்காற்படுமிழுக்கும் என்று இத்திறங்களை ஆராய்தல். இரட்டுறமொழிதலென்பதனாற் பகையதுதிறமும், பகையிடத்தாக்குந் திறமுமென விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மாணாப் பகையவாகலின், இது பகைமாட்சியின் பின் வைக்கப்பட்டது.

குறள் 871 ( பகையென்னும்)[தொகு]

பகையென்னும் பண்பி லதனை யொருவ ( ) பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்

னகையேயும் வேண்டற்பாற் றன்று. (01) நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

தொடரமைப்பு: பகை என்னும் பண்பு இலதனை, ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

இதன்பொருள்
பகை என்னும் பண்புஇலதனை= பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று= ஒருவன் விளையாட்டின்கண்ணே ஆயினும் விரும்புதல் இயற்கைத்தன்று நீதிநூல்.
உரைவிளக்கம்
மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவென்பார் நீதிநூன் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய்நிலையான் வந்தது.

குறள் 872 (வில்லேருழவர் )[தொகு]

வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க ( ) வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க

சொல்லே ருழவர் பகை. (02) சொல் ஏர் உழவர் பகை.

தொடரமைப்பு: வில் ஏர் உழவர் பகை கொளினும், சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க.

இதன்பொருள்
வில்ஏர் உழவர் பகைகொளினும்= ஒருவன் வில்லை ஏராக உடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க= சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாது ஒழிக.
உரை விளக்கம்
'சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம், சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டாற் கேடுவருவது ஒருதலையன்று, வந்ததாயினும் தனக்கேயாம்; ஏனைச் சூழ்ச்சியுடையோராயில், தன்வழியின் உள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இதுகொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும். இரண்டும் உடையாரோடு கொள்ளல் ஆகாமை சொல்லவேண்டாவாயிற்று. உருவக விசேடம்.

குறள் 873 (ஏமுற்றவரினு )[தொகு]

ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப் ( ) ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன். (03) பல்லார் பகை கொள்பவன்.

தொடரமைப்பு: தமியனாய்ப் பல்லார் பகைகொள்பவன், ஏமுற்றவரினும் ஏழை.

இதன்பொருள்
தமியனாய்ப் பல்லார் பகைகொள்பவன்= தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்பவன்; ஏமுற்றவரினும் ஏழை= பித்துற்றாரினும் ஏழை.
உரை விளக்கம்
தனிமை: சுற்றம் நட்புப் படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும், ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின், தீங்கெய்துதலும் உடைய இவனை, 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது, துணையுள்வழியும் வேறல் ஐயமாயிருக்க, அஃதின்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும், ஒருங்கு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல்.
இவை மூன்று பாட்டானும் பகைகோடற்குற்றம் பொதுவினும் சிறப்பினும் கூறப்பட்டது.

குறள் 874 (பகைநட்பாக் )[தொகு]

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் ( ) பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன்

றகைமைக்கட் டங்கிற் றுலகு. (04) தகைமைக்கண் தங்கிற்று உலகு.

தொடரமைப்பு:பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண், தங்கிற்று உலகு.

இதன்பொருள்
பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண்= வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாச்செய்துகொண்டு ஒழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு= அடங்கிற்று இவ்வுலகு.
உரை விளக்கம்
வேண்டிய வழி என்பது, ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல்= பகைநிலைமையின் நீக்குதல். ஒழுகல்- நீதிவழி ஒழுகல். பெருமை: பொருள், படை என இருவகைத்தாய் ஆற்றல். அதன்வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.

குறள் 875 (தன்றுணையின் )[தொகு]

தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவன் (05) தன் துணை இன்று ஆல், பகை இரண்டு ஆல் தான் ஒருவன்

னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று. (05) இன் துணையாக் கொள்க அவற்றின் ஒன்று.

தொடரமைப்பு: தன் துணை இன்றால், பகை இரண்டால்,ஒருவன் தான் அவற்றின் ஒன்று இன் துணையாக் கொள்க.

இதன்பொருள்
தன்துணை இன்றால்= தனக்கு உதவும் துணையோவெனின் இல்லை; பகை இரண்டால்= நலிவு செய்யும் பகையோவெனின் இரண்டு; ஒருவன் தான் அவற்றின் ஒன்று இன்றுணையாக் கொள்க= அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான், அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க.
உரை விளக்கம்
பொருந்தியது: ஏனையதனை வேறற்கு ஏற்றது. அபபொழுது: அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்றுணையா' என்றார். 'ஆல்'கள் அசை.
இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.

குறள் 876 (தேறினுந் )[தொகு]

தேறினுந் தேறா விடினு மழிவின்கட் ( ) தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

டேறான் பகாஅன் விடல். (06) தேறான் பகாஅன் விடல்.

தொடரமைப்பு:தேறினும் தேறாவிடினும், அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.

இதன்பொருள்
தேறினும் தேறாவிடினும்= பகைவனை முன் தெளி்ந்தான் ஆயினும் தெளிந்திலன் ஆயினும்; அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்= தனக்குப் புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீங்காது இடையே விட்டுவைக்க.
உரை விளக்கம்
முன் தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாது ஒழிக என்றது, உள்ளாய் நின்று கெடுத்தல்நோக்கி. தெளிந்திலன் ஆயினும், அப்பொழுது நீங்காது ஒழிக என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.

குறள் 877 (நோவற்க )[தொகு]

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க ( ) நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மேன்மை பகைவ ரகத்து. (07) மென்மை பகைவர் அகத்து.

தொடரமைப்பு:நொந்தது அறியார்க்கு நோவற்க, மென்மை பகைவர்அகத்து மேவற்க.

இதன்பொருள்
நொந்தது அறியார்க்கு நோவற்க= நொந்ததனைத் தாமா அறியாத நட்டார்க்குத் தன்நோவு சொல்லற்க; மென்மை பகைவரகத்து மேவற்க= வலியின்மை பார்த்திருக்கும் பகைவர் மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.
உரை விளக்கம்
'நோவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார், நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனால் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.

குறள் 878 (வகையறிந்து )[தொகு]

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் ( ) வகை அறிந்து தற்செய்து தன் காப்ப மாயும்

பகைவர்கட் பட்ட செருக்கு. (08) பகைவர்கண் பட்ட செருக்கு.

தொடரமைப்பு: வகை அறிந்து தற்செய்து தற்காப்ப, பகைவர்கண் பட்ட செருக்கு மாயும்.

இதன்பொருள்
வகை அறிந்து தற்காப்ப= தான் வினைசெய்யும் வகையை அறிந்து, அது முடிதற்கேற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும்= தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும்.
உரை விளக்கம்
வகை: வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாயவளவிற் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல்: பொருள் படைகளால் பெருகச்செய்தல். களிப்பு: இவற்றான் வேறும் என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம்.
இதனாற் களைதற்பாலதன்கண் செய்வன கூறப்பட்டது.

குறள் 879 (இளைதாக )[தொகு]

இளைதாக முள்மரம் கொல்க களையுநர் ( ) இளைதாக முள் மரம் கொல்க களையுநர்

கைகொல்லுங் காழ்த்த விடத்து. (09) கை கொல்லும் காழ்த்த இடத்து.

தொடரமைப்பு: முள் மரம் இளைதாகக் கொல்க, காழ்த்த இடத்து களையுநர் கைகொல்லும்.

இதன்பொருள்
முள் மரம் இளைதாகக் கொல்க= களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்தவிடத்துக் களையுநர் கைகொல்லும்= அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்.
உரை விளக்கம்
களையப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே வலிதாய கால்த்துக் களையலுறின் தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல்.
இதனாற் களையும் பருவம் கூறப்பட்டது.

குறள் 880 (உயி்ர்ப்ப )[தொகு]

உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர் () உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார். (10) செம்மல் சிதைக்கலாதார்.

தொடரமைப்பு: செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார், உயிர்ப்ப உளரல்லர் மன்ற.

இதன்பொருள்
செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார்= தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாயிருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற= பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக.
உரை விளக்கம்
அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரே ஆவர் என்பதாம். அவருயிர்த்த துணையானே தாமிறப்பர் எனினும் அமையும்.
இதனாற் களையாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.