திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/42.கேள்வி

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்[தொகு]

அரசியல் அதிகாரம் 42. கேள்வி[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல். கற்றவழி அதனினாய அறிவை வலியுறுத்தலானும், கல்லாதவழியும் அதனை உண்டாக்குதலானும் இது கல்வி, கல்லாமைகளின் பின் வைக்கப்பட்டது.

குறள் 411 (செல்வத்துட்)[தொகு]

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை (01)
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
இதன்பொருள்
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்= ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வருஞ் செல்வம்;
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை= அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினுந் தலையாகலான்.
விளக்கம்
செவியான் வருஞ் செல்வம் கேள்வியான் எல்லாப் பொருளையும் அறிதல். பிறசெல்வங்கள் பொருளான் வருவன. அவை நிலையாவாகலானும், துன்ப விளைவினவாகலானும், இது 'தலை'யாயிற்று. அவற்றை யொழித்து இதனையே செய்க என்புது குறிப்பெச்சம்.

குறள் 412 (செவிக்குணவு)[தொகு]

செவிக்குண வில்லாத போழ்து சிறிது       செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும் (02)                         வயிற்றுக்கும் ஈயப் படும்
இதன்பொருள்
செவிக்கு உணவு இல்லாத போழ்து= செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது;
வயிற்றுககும் சிறிது ஈயப்படும்= வயிற்றுக்குஞ் சிறிது உணவு இடப்படும்.
விளக்கம்
சுவை மிகுதியும் பிற்பயத்தலுமுடைய கேள்வியுள்ளபொழுது வெறுக்கப்படுதலான் இல்லாத போழ்து என்றும், பெரிதாய வழித் தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலாற் சிறிது என்றும், அதுதானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டாகலான் ஈயப்படும் என்றும் கூறினார். ஈதல் வயிற்றது இழிவு தோன்ற நின்றது.
இவை யிரண்டு பாட்டானும் கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 413 (செவியுணவிற்)[தொகு]

செவியுணவிற் கேள்வி யுடையாரவியுணவி      செவியுணவின் கேள்வி உடையார் அவி உணவின்
னான்றாரோ டொப்பர் நிலத்து (03)                            ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
இதன்பொருள்
செவி உணவின் கேள்வி உடையார்= செவி உணவாகிய கேள்வியனை உடையார்;
நிலத்து அவி உணவின் ஆன்றாரோடு ஒப்பர்= நிலத்தின்கண்ணராயினும் அவி உணவினை யுடைய தேவரோடு ஒப்பர்.
விளக்கம்
'செவியுணவு' செவியால் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு தேவர்க்கு வேள்வித்தீயிற் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றோர்' என்றும், துன்பம் அறியாமையால் 'தேவரோடொப்பர்' என்றும் கூறினார்.
இதனால் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 414 (கற்றிலனாயினுங்)[தொகு]

கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்      கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
கொற்கத்தி னூற்றாந் துணை (04)                    ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
இதன்பொருள்
கற்றிலன் ஆயினும் கேட்க= உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க;
அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை= அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக்கோடாந் துணையாகலான்.
விளக்கம்
உம்மை கற்கவேண்டும் என்பதுபட நின்றது. 'தளர்ச்சி' வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கட்பட்டுழி மனந் தளர்தல். அதனைக்கேள்வியானாய அறிவு நீக்குமாகலின், 'ஊற்றாந் துணை' என்றார். ஊன்று என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.

குறள் 415 (இழுக்கலுடையுழி)[தொகு]

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே      இழுக்கல் உடையுழி ஊற்றுக் கோல் அற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல் (05)      ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.
இதன்பொருள்
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே= வழுக்குதலையுடைய சேற்றுநிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல் உதவும்;
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்= காவற் சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற்சொற்கள்.
விளக்கம்
அவாய்நிலையான் வந்த உவமையடையாற் பொருளடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல்போல் உதவுதல் தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கமில்லாதார் அறிவிலர் ஆகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற 'ஒழுக்கமுடையார் வாய்ச் சொல்' என்றார். 'வாய்' என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்புணரநின்றது. அவற்றைக்கேட்க என்பது குறிப்பெச்சம்.

குறள் 416 (எனைத்தானு)[தொகு]

எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு      எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
மான்ற பெருமை தரும் (06)                                        ஆன்ற பெருமை தரும்.
இதன்பொருள்
எனைத்தானும் நல்லவை கேட்க= ஒருவன் சிறிதாயினும் உறுதிப்பொருள்களைக் கேட்க;
அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்= அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையை தரும் ஆகலான்.
விளக்கம்
'எனைத்து', 'அனைத்து' என்பன, கேட்கும் பொருண்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உளவாக்கலின், சிறிது என்று இகழற்க என்பதாம்.

குறள் 417 (பிழைத்துணர்ந்தும்)[தொகு]

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்      பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
தீண்டிய கேள்வி யவர் (07)                                                               ஈண்டிய கேள்வியவர்.
இதன்பொருள்
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்= பிறழ உணர்ந்தவழியும் தமக்குப் பேதைமை பயக்கும் சொற்களைச் சொல்லார்;
இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்= பொருள்களைத் தாமும் நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை யுடையார்.
விளக்கம்
'பிழைப்ப' என்பது திரிந்துநின்றது. 'பேதைமை' ஆகுபெயர். 'ஈண்டுதல்' பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையத் தாமும் அறிந்து அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமதகுணத்தான் மயங்கினாராயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம்.
இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

குறள் 418 (கேட்பினுங் கேளாத்)[தொகு]

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்      கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
றோட்கப் படாத செவி (08)                                        தோட்கப் படாத செவி.
இதன்பொருள்
கேட்பினும் கேளாத் தகையவே= தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்குமாயினும் செவிடாம் தன்மையவேயாம்;
கேள்வியால் தோட்கப்படாத செவி= கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
விளக்கம்
ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையிற் 'கேளாத் தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். பழைய துளை துளையன்று என்பதாம்.

குறள் 419 (நுணங்கியகேள்விய)[தொகு]

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய      நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயின ராத லரிது (09)                                       வாயினர் ஆதல் அரிது.
இதன்பொருள்
நுணங்கிய கேள்வியர் அல்லார்= நுண்ணிதாகிய கேள்வியுடையர் அல்லாதார்;
வணங்கிய வாயினர் ஆதல் அரிது= பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.
விளக்கம்
கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெய்ர். பணிந்தமொழி பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வின்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். அல்லால் என்பதூஉம் பாடம்.

குறள் 420 (செவியிற்சுவை)[தொகு]

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க      செவியின் சுவை உணரா மாக்கள்
ளவியினும் வாழினு மென் (10)                                    அவியினும் வாழினும் என்.
இதன்பொருள்
செவியிற் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்= செவியான் நுகரப்படும் சுவைகளை உணராத வாயுணர்வினையுடைய மாந்தர்;
அவியினும் வாழினும் என்= சாவினும் வாழினும் உலகிற்கு வருவுது என்னை?
விளக்கம்
செவியான் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையு்ம பொருட்சுவையும். அவற்றுட் சொற்சுவை குணம், அலங்காரமென இருவகைத்து.பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டுரைப்பிற் பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள் தொக்குநின்ற மூன்றாம் வேற்றுமைத்தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வென விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறாம். செத்தால் இழப்பதும், வாழ்ந்தாற் பெறுவதும் இன்மையின் இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
இவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.

கேள்வி அதிகாரப் பரிமேலழகர் உரை முற்றும்