திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/127.அவர்வயின்விதும்பல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 127. அவர் வயின் விதும்பல்[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கைமிகவினான், ஒருவரை ஒருவர் காண்டற்கு விரைதல். தலைமகன் பிரிவும், தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின், இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப்பாலால் கூறினார். பிறரெல்லாம், இதனைத் தலைமகனை நினைந்து, தலைமகள் விதுப்புறல் என்றார். சுட்டுப்பெயர், சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருள் உணர்த்துவதல்லது, தான் ஒன்றற்குப் பெயர் ஆகாமையானும், கவிகூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற்பன்மையாற் கூறப்படாமையானும், அஃது உரையன்மை அறிக. இதனுள் தலைமகள்கூற்று நிறையழிவான் நிகழ்ந்தது ஆகலின், அவ்வியைபுபற்றி, நிறையழிதலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1261 ( வாளற்றுப்)[தொகு]

(தலைமகள் காண்டல் விதுப்பினான் சொல்லியது. )

வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற ( ) வாள் அற்றுப் புற்கு என்ற கண்ணும் அவர் சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல். (01) நாள் ஒற்றித் தேய்ந்த விரல்.

[தொடரமைப்பு: அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த, கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற. ]

இதன்பொருள்
அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த= அவர் நம்மைப் பிரிந்துபோய நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன;
கண்ணும் வாள் அற்று புற்கென்ற= அதுவேயன்றி, அவர் வரும்வழி பார்த்து என்கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின, இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை, எ-று.
உரைவிளக்கம்
'நாள்'- ஆகுபெயர். புல்லியவாதல்- நுண்ணிய காணமாட்டாமை. ஒற்ற என்பது, ஒற்றி எனத்திரிந்துநின்றது. இனி, யான் காணுமாறு என்னை என்பதாம். நாள் எண்ணலும், வழிபார்த்தலும் ஒருகாற் செய்துஒழியாது, இடையின்றிச்செய்தலான் விதுப்பாயிற்று.

குறள் 1262 (இலங்கிழா )[தொகு]

(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலையல்லை; சிறிது மறக்கல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. )

இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற் ( ) இலங்கு இழாய், இன்று மறப்பின் என் தோள் மேல்

கலங்கழியுங் காரிகை நீத்து. (02) கலம் கழியும் காரிகை நீத்து.

[தொடரமைப்பு: இலங்கிழாய், இன்றுமறப்பின், மேல் காரிகை நீத்து என்தோள் கலம் கழியும். ]

இதன்பொருள்
இலங்கு இழாய்= விளங்காநின்ற இழையினையுடையாய்;
இன்று மறப்பின்= காதலரை யான் இன்று யான் மறப்பேனாயின்;
மேல்காரிகை நீத்து என்றோள் கலங்கழியும்= மேலும், காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனாவாம், எ-று.
உரை விளக்கம்
'இலங்கிழாய்' என்பது, இதற்கு நீ யாதும் பரியலை என்னும் குறிப்பிற்று. இன்று- யான் இறந்து படுகின்றஇன்று. மேலும்- மறுபிறப்பினும். எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. நீப்ப என்பது நீத்து எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன் என்பதாம்.

குறள் 1263 (உரனசைஇ )[தொகு]

(இதுவுமது )

உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் ( ) உரன் நசைஇ உள்ளம் துணையாச் சென்றார்

வரனசைஇ யின்னு முளேன். (03) வரல் நசைஇ இன்னும் உளேன்.

[தொடரமைப்பு: உரன் நசைஇ உள்ளம் துணையாச் சென்றார், வரல் நசைஇ இன்னும் உளேன்.]

இதன்பொருள்
உரன் நசைஇ உள்ளம் துணையாச் சென்றார்= இன்பம் நுகர்தலை நச்சாது, வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து நம் ஊக்கம் துணையாகப் போயினார்;
வரல் நசைஇ இன்னும் உளேன்= அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ் எல்லையினும் உளேன் ஆயினேன், எ-று.
உரை விளக்கம்
உரன் என்பது, ஆகுபெயர். அந்நசையான் உயிர் வாழாநின்றேன், அஃது இல்லையாயின் இறந்துபடுவல் என்பதாம்.

குறள் 1264 ( கூடியகாமம்)[தொகு]

(இதுவுமது )

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் ( ) கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளிக்

கோடுகொ டேறுமென் னெஞ்சு. (04) கோடுகொடு ஏறும் என் நெஞ்சு.

[தொடரமைப்பு: பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி, என் நெஞ்சு கோடுகொடு ஏறும்.]

இதன்பொருள்
பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி= நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்துபோயவர் மேற்கூறிய காமத்துடனே தங்கண் வருதலை நினைந்து;
என் நெஞ்சு கோடுகொடு ஏறும்= என்செஞ்சு வருத்தம் ஒழிந்து மேன்மேல் பணைத்து எழாநின்றது, எ-று.
உரை விளக்கம்
வினைவயின் பிரிவுழிக் காமவின்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள். ஒடு உருபு விகாரத்தான் தொக்கது. கோடு கொண்டு ஏறலாகிய மரத்ததுதொழில், நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. அஃது உள்ளிற்றிலேன் ஆயின் இறந்துபடுவல் என்பதாம்.

குறள் 1265 (காண்கமற் )[தொகு]

(தலைமகன் வரவுகூறி ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச் சொல்லியது. )

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி () காண்கமன் கொண்கனைக் கண் ஆரக் கண்டபின்

னீங்குமென் மென்றோட் பசப்பு. (05) நீங்கும் என் தோள் பசப்பு.

[தொடரமைப்பு: கண்ணாரக் கொண்கனைக் காண்க, கண்டபின் என் மென் தோள் பசப்பு நீங்கும். ]

இதன்பொருள்
கண்ஆரக் கொண்கனைக் காண்க= என் கண்கள் ஆரும் வகை என்கொண்கனை யான் காண்பேனாக;
கண்டபின் என் மென்தோள் பசப்பு நீங்கும்= அங்ஙனம் கண்டபின் என் மெ்ல்லிய தோளின்கண் பசப்புத்தானே நீங்கும், எ-று.
உரை விளக்கம்
'காண்க' என்பது, ஈண்டு வேண்டிக்கோடற்பொருட்டு. அது வேண்டும் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கேட்ட துணையான் நீங்காது என்பதாம்.

குறள்1266 ( வருகமற்)[தொகு]

(இதுவுமது )

வருகமற்கொண்க னொருநாட் பருகுவன் ( ) வருகமன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்

பைதனோ யெல்லாங் கெட. (06) பைதல் நோய் எல்லாம் கெட.

[தொடரமைப்பு: கொண்கன் ஒருநாள் வருக, பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன்.]

இதன்பொருள்
கொண்கன் ஒருநாள் வருக= இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக;
பைதல் நோய் எல்லாம் கெடப் பருகுவன்= வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோய் எல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில் களைந்தானும் பருகக் கடவேன், எ-று.
உரை விளக்கம்
'வருக' என்பதற்கும், 'மன்' என்பதற்கும், மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு, அவ் ஒருநாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல் என்பதாம்.

குறள் 1267 ( புலப்பேன்கொல்)[தொகு]

( இதுவுமது )

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் ( ) புலப்பேன் கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன் கொல்

கண்ணன்ன கேளிர் வரின். (07) கண் அன்ன கேளிர் வரின்.

[தொடரமைப்பு: கண் அன்ன கேளிர் வரின், புலப்பேன்கொல், புல்லுவேன்கொல்லோ, கலப்பேன்கொல்]

இதன்பொருள்
கண் அன்ன கேளிர் வரின்= கண்போற் சிறந்த கேளிர் வருவராயின்;
புலப்பேன்கொல்= அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ;
புல்லுவேன்கொல்= அன்றி என் ஆற்றாமைநோக்கிப் புல்லக்கடவேனோ;
கலப்பேன்கொல்= அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விருசெயல்களையும் விரவக்கடவேனோ, யாது செய்யக்கடவேன், எ-று.
உரை விளக்கம்
புலவியும் புல்லலும் ஓர் பொழுதின்கண் விரவாமையின் 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையும் செய்தல் கருத்தாகலின் விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேனகொல்' என்பதற்கு, ஒருபுதுமைசெய்யாது பிரியாத நாட்போலக் கலந்து ஒழுகுவேனோ என்று உரைப்பாரும் உளர்.

குறள் 1268 ( வினைகலந்து)[தொகு]

( வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினைமுடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. )

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து ( ) வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து

மாலை யயர்கம் விருந்து. (08) மாலை அயர்கம் விருந்து.

[தொடரமைப்பு: வேந்தன் வினைகலந்து வென்றீக, மனைகலந்து மாலை அயர்கம் விருந்து.]

இதன்பொருள்
வேந்தன் வினை கலந்து வென்று ஈக= வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக;
மனைகலந்து மாலை விருந்து அயர்கம்= யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்தை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வோமாக, எ-று.
உரை விளக்கம்
மனை என்பது, ஈண்டு ஆகுபெயர். "மங்கலம் என்ப மனைமாட்சி" (குறள், 60) என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்து அயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தான் தொக்கது. இது வினைமுடியாமுன் கூறலான் விதுப்பாயிற்று. பிறர் எல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது, 'வேந்தன் வெல்க' என்றும், 'மனைகலந்து' என்றும், மாலைப்பொழுதின்கண் 'விருந்து அயர்கம்' என்றும் வந்த அவ்வுரை தானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.

குறள் 1269 ( ஒருநாளெழு)[தொகு]

( இதுவுமது )

ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார் ( ) ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (09) வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு.

[தொடரமைப்பு: சேண் சென்றார் வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு, ஒருநாள் எழுநாள்போல் செல்லும்.]

இதன்பொருள்
சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு= சேணிடைச் சென்ற தங்காதலர் மீண்டுவரக்குறித்த நாளையுட்கொண்டு, அது வருந்துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு;
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்= ஒருநாள் பலநாள் போல நெடிதாகக்காட்டும், எ-று.
உரை விளக்கம்
ஏழ் என்பது, அதற்கும் மேலாய மிக்கபன்மை குறித்து நின்றது, "ஒருவர் கூறை எழுவர் உடுத்து" என்றாற் போல. தலைமகள் வருத்தம் பிறர்மேல் இட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்று ஆகாமை அறிக. இருநாள் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

குறள் 1270 ( பெறினென்னாம்)[தொகு]

( இதுவுமது )

பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா () பெறின் என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின் என்னாம்

முள்ள முடைந்துக்கக் கால். (10) உள்ளம் உடைந்து உக்கக்கால்.

[தொடரமைப்பு: உள்ளம் உடைந்து உக்கக்கால், பெறின் என்னாம், பெற்றக்கால் என்னாம், உறின் என்னாம்.]

இதன்பொருள்
உள்ளம் உடைந்து உக்கக்கால்= காதலி நம் பிரிவினை ஆற்றாது, உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி;
பெறின் என்னாம்= நம்மைப் பெறக்கடவள் ஆனால் என்;
பெற்றக்கால் என்னாம்= அதுவன்றியே பெற்றால் என்;
உறின் என்= அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என், இவை ஒன்றானும் பயனில்லை எ-று.
உரை விளக்கம்
இம்மூன்றும் உடம்பொடுபுணர்த்திக் கூறப்பட்டன. அதன்மேலும், முன்னை வழக்கு உண்மையின். அதற்குமுன்னே யான் செல்லவேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கல் ஆவதல்லது, விதுப்பாகாமை அறிக.