திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/119.பசப்புறுபருவரல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 119. பசப்புறுபருவரல்[தொகு]

அதிகார முன்னுரை
அது பசப்புற்ற பருவரல் என விரியும். அஃதாவது, பசப்புறுதலானாய வருத்தம். இதனைப் "பந்தெறிந்த வயா" என்பது போலக் கொள்க. பசப்பாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இது தலைமகனைக் காணப் பெறாதவழி நிகழ்வதாகலின் கண்விதுப்பழிதலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1181 ( நயந்தவர்க்கு)[தொகு]

(முன்பிரிவுடம்பட்ட தலைமகள் அஃதாற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது. )

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் ( ) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்

பண்பியார்க் குரைக்கோ பிற. (01) பண்பு யார்க்கு உரைக்கோ பிற.

[தொடரமைப்பு:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன், பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ பிற.]

இதன்பொருள்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்= என்னை நயந்தவர்க்கு அதுபொழுது பிரிவை உடம்பட்ட நான்;
பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ= அதனை ஆற்றாது இதுபொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன் எ-று.
உரைவிளக்கம்
'பிற'வென்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல்குறித்துப் பிரிவு உணர்த்தினர் ஆகலின், அவர் அன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவுநிகழுமாகலின், இனி அவரைக் கூடுதல் அரிது என்னும் கருத்தான் 'நல்காமை'யென்றும், முன்னர் உடம்படுதலும், பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தன அல்ல என்பாள் 'பசந்த என்பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவர்க்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள்.

குறள் 1182 ( அவர்தந்தா)[தொகு]

(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு, ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. )

அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென் ( ) அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்

மேனிமே லூரும் பசப்பு. (02) மேனி மேல் ஊரும் பசப்பு.

[தொடரமைப்பு:
]பசப்பு, தந்தார் அவர் என்னும் தகையால், என் மேனிமேல் இவர்தந்து ஊரும்.

இதன்பொருள்
(யான் ஆற்றியுளேன் ஆகவும்) பசப்பு= இப்பசப்புத்தான்;
அவர்தந்தார் என்னும் தகையால்= என்னைஉண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்;
என்மேனிமேல் இவர்தந்து ஊரும்= என்மேனியை மேற்கொண்டு செலுத்தாநின்றது, எ-று.
உரை விளக்கம்
"குருதிகொப் புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்தந்து செல்ல" (சீவகசிந்தாமணி, விமலையார் இலம்பகம், 1.) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இஃது உரிமைபற்றி ஊர்கின்றது, இதற்கு நீ கவலல் வேண்டா என்பதாம்.

குறள் 1183 ( சாயலு)[தொகு]

(அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. )

சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா ( ) சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையுந் தந்து. (03) நோயும் பசலையும் தந்து.

[தொடரமைப்பு:
கைம்மாறா நோயும் பசலையும் தந்து, சாயலும் நாணும் அவர் கொண்டார். ]

இதன்பொருள்
கைம்மாறா நோயும் பசலையும் தந்து= பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து;
சாயலும் நாணும் அவர் கொண்டார்= என் மேனியழகினையும், நாணினையும் அவர் கொண்டுபோயினார், எ-று.
உரை விளக்கம்
எதிர்நிரல்நிறை. அடக்கும்தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தால் அல்லது அவை உளவாகலும், இவையிலவாகலும் கூடா என்பதாம்.

குறள் 1184 ( உள்ளுவன்மன்)[தொகு]

( பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும், அவர் நற்றிறங்களையும் அறிதிஆகலின், நீட்டியாது வருவர் என்றவழிச் சொல்லியது.)

உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற் ( ) உள்ளுவன் மன் யான் உரைப்பது அவர் திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு. (04) கள்ளம் பிறவோ பசப்பு.

[தொடரமைப்பு:
யான் உள்ளுவன், உரைப்பது அவர்திறம், பசப்புக் கள்ளம் பிறவோ. ]

இதன்பொருள்
யான் உள்ளுவன்= அவர் சொற்களை யான் மனத்தால் நினையாநிற்பேன்;
உரைப்பது அவர்திறம்= வாக்கால் உரைப்பதும், அவர் நற்றிறங்களையே;
பசப்புக் கள்ளம்= அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்துநின்றது, இது வஞ்சனையாய் இருந்தது, எ-று.
உரை விளக்கம்
'பிற'வும் 'ஓ'வும் அசைநிலை. மெய், மற்றை மனவாக்குக்களி்ன் வழி்ததாகலின், அதன்கண்ணும் வரற்பாற்றன்றாய் இருக்க வந்தமையின், இதன்செயல் கள்ளமாய் இருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.

குறள் 1185 ( உவக்காணெங்)[தொகு]

(காதலர் பிரி்ந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு, முன்நிகழ்ந்தது கூறியது. )

உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென் () உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்

மேனி பசப்பூர் வது. (05) மேனி பசப்பு ஊர்வது.

[தொடரமைப்பு:
எம் காதலர் உவக்காண் செல்வார், என் மேனி பசப்பூர்வது இவக்காண். ]

இதன்பொருள்
எம் காதலர் உவக்காண் செல்வார்= பண்டும் காதலர் உங்கே செல்வாராக;
என்மேனி பசப்பூர்வது இவக்காண்= என்மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ, அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ, எ-று.
உரை விளக்கம்
'உவக்காண்' 'இவக்காண்' என்பன, ஒட்டிநின்ற இடைச்சொற்கள். தேயவண்மையாற் காலவண்மை கருதப்படடது. அவர் செலவும் பசப்பினதுவரவும், பகல்இரவுகளின் செலவும்வரவும் போல்வது அறிந்துவைத்து, அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்னை என்பதாம்.

குறள் 1186 ( விளக்கற்றம்)[தொகு]

( இதுவுமது )

விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் ( ) விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (06) முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு.

[தொடரமைப்பு:
விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு. ]

இதன்பொருள்
விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல்= விளக்கினது மெலிவுபார்த்து நெருங்கிவரும் இருளேபோல;
கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு= கொண்கன் முயக்கினது மெலிவுபார்த்து நெருங்கிவரும் இப்பசப்பு, எ-று.
உரை விளக்கம்
பார்க்கும் என்பன இலக்கணைச்சொல். முன்பிரியாது இருக்கவும், தனக்கு அவகாசம் பார்த்துவரும் பசப்புப் பிரிவு பெற்றால் என்செய்யாது என்பதாம்.

குறள் 1187 (புல்லிக்கிடந்தேன் )[தொகு]

(இதுவுமது )

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி ( ) புல்லிக் கிடந்தேன் படை பெயர்ந்தேன் அவ் அளவில்

லள்ளிக்கொள் வற்றே பசப்பு. (07) அள்ளிக் கொள்வற்றே பசப்பு.

[தொடரமைப்பு:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன், அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்றே. ]

இதன்பொருள்
புல்லிக்கிடந்தேன், புடைபெயர்ந்தேன்= முன்ஒருஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடைபெயர்ந்தேன்;
அவ்வளவில் பசப்பு அள்ளிக்கொள்வற்றே= அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக்கொள்வதுபோல வந்து செறிந்தது, எ-று.
உரை விளக்கம்
'கொள்வது' என்பது குறைந்துநின்றது. அள்ளிக்கொள்வது- அள்ளிக்கொள்ளப்படும் பொருள். அப்புடைபெயர்ச்சி மாத்திரத்துக்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்லவேண்டுமோ என்பதாம்.

குறள் 1188 ( பசந்தாளிவ)[தொகு]

( நீ இங்ஙனம் பசக்கற்பாலை அல்லை என்ற தோழியொடு புலந்து சொல்லியது. )

பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத் ( ) பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத்

துறந்தா ரவரென்பா ரில். (08) துறந்தார் அவர் என்பார் இல்.

[தொடரமைப்பு:
இவள் பசந்தாள் என்பது அல்லால், இவளை அவர் துறந்தார் என்பார் இல். ]

இதன்பொருள்
இவள் பசந்தாள் என்பது அல்லால்= இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழிகூறுவதல்லது;
இவளை அவர் துறந்தார் என்பார் இல்= இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவரும் இல்லை, எ-று.
உரை விளக்கம்
'என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.

குறள் 1189 ( பசக்கமற்)[தொகு]

(இதுவுமது )

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் ( ) பசக்கமன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார்

நன்னிலைய ராவ ரெனின். (09) நல் நிலையர் ஆவர் எனின்.

[தொடரமைப்பு:
நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின், என் மேனி பட்டாங்கு பசக்க. ]

இதன்பொருள்
நயப்பித்தார் நன்னிலையார் ஆவர் எனின்= இப்பிரிவை யானே உடம்படும்வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்லநிலையினர் ஆவராயின்;
என்மேனி பட்டாங்கு பசக்க= என்மேனி பட்டதுபடப் பசப்பதாக, எ-று.
உரை விளக்கம்
நன்னிலையராதல்- நன்மைக்கண்ணே நிற்றலையுடையராதல். பட்டாங்காக என ஆக்கம் விரித்துரைக்க. முன் இப்பிரிவின் கொடுமை அறியாத என்னை, இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என்மேனியும் பசப்பும் யாதுசெய்யின் என் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.

குறள் 1190 (பசப்பெனப் )[தொகு]

( தலைமகள் ஆற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி, அவள் இயற்பட மொழிந்தது. )

பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் () பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றா ரெனின். (10) நல்காமை தூற்றார் எனின்.

[தொடரமைப்பு:
நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின், பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே. ]

இதன்பொருள்
நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்= அன்று, தாம் குறைநயப்பித்துக் கூடினவர்க்கு இன்று நல்காமையை நட்டார் தூற்றார் ஆயின்;
பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே= பசப்புற்றாள் என வேற்றுமையான் அன்றிப் பசப்புத்தான் ஆயினாள், என ஒற்றுமையால் தாம் சொல்ல அ்பபெயரைப் பெறுதல் எனக்கு நன்று, எ-று.
உரை விளக்கம்
நட்டார் என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாள் ஆகலின், இகழ்ச்சிக்குறிப்பாற் கூறினாள். அவரை அருளிலர் என்னாது, இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றுநெறியாவது என்பதாம்.