திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/72.அவையறிதல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 72. அவை அறிதல்.[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, அரசனோடிருந்த அவையினது இயல்பை அறிதல். காரியம் சொல்லுங்கால் அவன் குறிப்பறிதலே அன்றி, இதுவும் வேண்டுதலின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

குறள் 711 (அவையறிந்)[தொகு]

அவை யறிந்தாராய்ந்து சொல்லுக சொல்லின் () அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

றொகையறிந்த தூய்மை யவர். (01) தொகை அறிந்த தூய்மையவர்.

இதன்பொருள்
சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்= சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினை உடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக= தாம் ஒன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுதல்
உரை விளக்கம்
சொல்லின் குழு எனவே, செஞ்சொல் இலக்கணைச் சொல் குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. 'தூய்மை' அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். 'அவை' என்றது ஈண்டு அதன்அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. 'அறி'தல் தம்மொடு தூக்கிஅறிதல். 'ஆராய்'தல், இவ் அவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று இவை உள்ளிட்டன ஆராய்தல்.

குறள் 712 (இடைதெரிந்து)[தொகு]

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி () இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்

னடைதெரிந்த நன்மை யவர். (02) நடை தெரிந்த நன்மையவர்.

இதன்பொருள்
சொல்லின் நடை தெரிந்த நன்மையவர்= சொற்களின் நடையினை ஆராய்ந்து அறிந்த நன்மையினை உடையார்; இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக= அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக.
உரை விளக்கம்
சொற்களின் 'நடை'யாவது, அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணைப்பொருள், குறிப்புப்பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி கேட்டற்கண் விருப்புடைமை. வழு சொல் வழுவும், பொருள் வழுவும்.
இவை இரண்டுபாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்லவேண்டும் என்பது கூறப்பட்டது.

குறள் 713 (அவையறி)[தொகு]

அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின் () அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூஉ மில். (03) வகை அறியார் வல்லதூஉம் இல்.

இதன்பொருள்
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார்= அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்;
வல்லதூஉம் இல்= கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை.
உரை விளக்கம்
அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார்.
இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.

குறள் 714 (ஒளியார்முன்)[தொகு]

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் () ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்

வான்சுதை வண்ணங் கொளல். (04) வான் சுதை வண்ணம் கொளல்.

இதன்பொருள்
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல்= அறிவான் ஒள்ளியார் அவைக்கண் தாமும் ஒள்ளியாராக; வெளியார் முன் வான் சுதை வண்ணம் கொளல்= ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க.
உரை விளக்கம்
ஒள்ளியார் என்றது, மிக்காரையும் ஒத்தாரையும். அதுவிகாரத்தால் 'ஒளியார்' என நின்றது. ஒள்ளியராதல், தம்நூலறிவும், சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவையறியாத புல்லரை 'வெளியார்' என்றது, வயிரம்இல் மரத்தை வெளிறு என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையாராக என்பார், 'வான்சுதை வண்ணம் கொளல்' என்றார்.
அவை அளவறிந்தார் செய்யும் திறம் இதனால் தொகுத்துக் கூறப்பட்டது. முன்னர் விரித்துக் கூறுப.

குறள் 715 (நன்றென்ற)[தொகு]

நன்றென் றவற்றுள்ளு நன்றே முதுவருண் () நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு. (05) முந்து கிளவாச் செறிவு.

இதன்பொருள்
நன்று என்றவற்றுள்ளும் நன்றே= ஒருவர்க்கு இது நன்றுஎன்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு= தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம்.
உரை விளக்கம்
தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கியனமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன்கிளத்தலும் பின்கிளத்தலும் ஆம் என்பது பெற்றாம்.
இதனால் மிக்கார் அவைக்கண் செய்யுந்திறம் கூறப்பட்டது.

குறள் 716 (ஆற்றி)[தொகு]

ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல () ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்

மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு. (05) ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு.

இதன்பொருள்
ஆற்றின் நிலை தளர்ந்தற்றே- வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றான் ஒருவன் அந்நெறியின் நின்றும் நிலைதளர்ந்து வீழ்ந்தால் ஒக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு= அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மை உணரவல்லார் அவைக்கண் வல்லான் ஒருவன் சொல் இழுக்குப்படுதல்.
உரை விளக்கம்
நிலைதளர்ந்து வீழ்தல்: "உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் கா"த்தொழுகியான் பின் இழுக்கிக் கூடாஒழுக்கத்தனாதல். பயனிழத்தலே அன்றி, இகழவும் படும் என்பதாம்.
இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.
¶. குறள், 24.

குறள் 717 (கற்றறிந்தார்)[தொகு]

கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் () கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அறச்

சொற்றெரிதல் வல்லா ரகத்து. () சொல் தெரிதல் வல்லார் அகத்து.

இதன்பொருள்
கசடு அறச் சொல் தெரிதல் வல்லார் அகத்து= வழுப்படாமல் சொற்களை, ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும்= பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.
உரை விளக்கம்
சொல்லின் என்பது, அவாய்நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.

குறள் 718 (உணர்வது)[தொகு]

உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் () உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியு ணீர்சொரிந் தற்று. (08) பாத்தியுள் நீர் சொரிந்து அற்று.

இதன்பொருள்
உணர்வது உடையார் முன் சொல்லல்= பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையார் அவைக்கண், கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று= தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும்.
உரை விளக்கம்
தானேயும் வளர்வதற்கு உரிய கல்வி மிக வளரும் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் ஒத்தார்அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.

குறள் 719 (புல்லவை)[தொகு]

புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு () புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்

ணன்கு செலச்சொல்லு வார். (09) நன்கு செலச் சொல்லுவார்.

இதன்பொருள்
நல் அவையுள் நன்கு செலச் சொல்லுவார்= நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்கு உரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க= அவை அறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாது ஒழிக.
உரை விளக்கம்
சொல்லின், தம்மை அவையறியாமை நோக்கி 'நல்லவை'யும், பொருள்அறியாமையாற் 'புல்லவை' தானும் இகழ்தலின், இரண்டவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்துஞ் சொல்லற்க' என்றார்.

குறள் 720 (அங்கணத்து)[தொகு]

அங்கணத்து ளு்க்க வமிழ்தற்றாற் றங்கணத்த () அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்

ரல்லார்முற் கோட்டி கொளல். (10) அல்லார் முன் கோட்டி கொளல்.

இதன்பொருள்
தம் கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல்= நல்லார் தம்இனத்த அல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்து அற்று= சொல்லின் அது தூய்தல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தத்தினை ஒக்கும்.
உரை விளக்கம்
'கொள்'என்னும் முதனிலைத் தொழி்ற்பெயர் முன்னின்று, பின் எதிர்மறை அல் விகுதியோடு கூடி, "மகனெனல்" என்பது போல் நின்றது. சொல்லின் அது என்பன, அவாய்நிலையான் வந்தன. பிறர் எல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார்; அவர், அத்தொழில் 'அமிழ்து' என்னும் பொருள், உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து, நுகர்வோர் கையினும் படாது, அவ் அங்கணத்துக்கும் இயைபின்றிக் கெட்டவாறு தோன்ற உக்கஅமிழ்து என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று.
இவை இரண்டு பாட்டானும், தாழ்ந்தார் அவைக்கண் ஒருவழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.
₡. திருக்குறள், 196.