திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/132.புலவிநுணுக்கம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 132. புலவி நுணுக்கம்.[தொகு]

அதிகார முன்னுரை
அது புலவியது நுணுக்கம் என விரியும். அஃதாவது, தலைமகனுந் தலைமகளும் ஓர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன்மாட்டுப் புலத்தற்காரணம் இல்லையாகவும், காதல் கைம்மிகுதலான் நுண்ணியதோர் காரணம் உளதாகவும் உட்கொண்டு அதனை அவன்மேல் ஏற்றி அவள் புலத்தல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1311 ( பெண்ணியலா)[தொகு]

(உலாப்போய்வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது. )

பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் ( ) பெண் இயலார் எல்லாரும் கண்ணில் பொது உண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு. (01) நண்ணேன் பரத்த நின் மார்பு.

[தொடரமைப்பு: பரத்த , பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர், நின் மார்பு நண்ணேன்.]

இதன்பொருள்
பரத்த= பரத்தமையுடையாய்;
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்= நின்னைப் பெண் இயல்பின் உடையார் யாவரும் தம் கண்ணால் பொதுவாக உண்பர்;
நின்மார்பு நண்ணேன்= அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன், எ-று.
உரைவிளக்கம்
கற்பு நாண் முதலிய நற்குணங்கள் இன்மையின் பரத்தையர்க்குள்ளது பெண்ணியற்கை மாத்திரமே என்னும் கருத்தான் பெண்ணியலார் என்றாள். பொதுவாக உண்டல்- தம் சேரிச்செலவின் முறையான் அன்றி, ஒருகாலத்து ஒருங்கு நோக்குதல். அதுவும் ஓர்குற்றம். தான் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து, அவர்பால் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.

குறள் 1312 (ஊடியிருந்தேமா )[தொகு]

(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது. )

ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை ( ) ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து. (02) நீடு வாழ்க என்பாக்கு அறிந்து.

[தொடரமைப்பு: ஊடி இருந்தேமாத் தும்மினார், யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து. ]

இதன்பொருள்
ஊடி இருந்தேமாத் தும்மினார்= யாம் தம்மோடு ஊடி உரையாடாது இருந்தேமாகக் காதலர் தும்மினார்;
யாம் தம்மை நீடு வாழ்க என்பாக்கு அறிந்து= அது நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று உரையாடுவேமாகக் கருதி, எ-று.
உரை விளக்கம்
தும்மியக்கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.

குறள் 1313 (கோட்டுப்பூ )[தொகு]

(தலைமகள் புலவிக்குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடி ஒழுகாநிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. )

கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியைக் ( ) கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீ ரென்று. (03) காட்டிய சூடினீர் என்று.

[தொடரமைப்பு: கோட்டுப் பூச் சூடினும், ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.]

இதன்பொருள்
கோட்டுப் பூச் சூடினும்= யான் கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேன் ஆயினும்;
ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும்= நும்மால் காதலிக்கப் பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும், இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? எ-று.
உரை விளக்கம்
கோடு என்பது, முதனிலைத் தொழிற்பெயர். பூ- ஆகுபெயர். வளையமாகச் சூடினும் என்பதாம். "கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்" (புறநானூறு, 275.) என்றார் பிறரும். இனி, அம்மருத நிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேன் ஆயினும், ஈண்டையாள் பிறள் ஒருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும் எனினும் அமையும்.

குறள் 1314 ( யாரினுங்)[தொகு]

(இதுவுமது )

யாரினுங் காதல மென்றேனா வூடினாள் ( )

யாரினும் யாரினு மென்று. (04)

[தொடரமைப்பு: யாரினும் காதலம் என்றேனா, யாரினும் யாரினும் என்று ஊடினாள். ]

இதன்பொருள்
யாரினும் காதலம் என்றேனா= காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் மிக்க காதல் உடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக;
யாரினும் யாரினும் என்று ஊடினாள்= நின் தோழி அது கருதாது, என்னால் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம்மகளிர் யாரினும் என்கண் காதலுடையர் ஆனீர் என்று சொல்லிப் புலந்தாள், எ-று.
உரை விளக்கம்
தலைமகள் கருத்திற்குத் தன்மைப்பன்மை உயர்ச்சிக்கண் வந்தது. யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக்கொண்டதல்லது பிறிது காரணம் இல்லை என்பதாம்.

குறள் 1315 ( இம்மைப்)[தொகு]

( இதுவுமது)

இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக் () இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள். (05) கண் நிறை நீர் கொண்டனள்.

[தொடரமைப்பு: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக், கண் நிறை நீர் கொண்டனள்.]

இதன்பொருள்
(இதுவும் அது) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா= காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக;
கண் நிறை நீர் கொண்டனள்= அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள்
உரை விளக்கம்
'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.

குறள் 1316 (உள்ளினேனென் )[தொகு]

( இதுவுமது )

உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தீ ரென்றென்னைப் ( ) உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னைப்

புல்லாள் புலத்தக் கனள். (06) புல்லாள் புலத்தக்கனள்.

[தொடரமைப்பு: உள்ளினேன் என்றேன், மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள்.]

இதன்பொருள்
உள்ளினேன் என்றேன்= பிரிந்தகாலத்து நின்னை இடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்;
மற்று என்மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள்= என, அதனை ஒருகான் மறந்து பின்நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னையிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃது ஒழிந்து புலத்தற்கு அமைந்தாள், எ-று.
உரை விளக்கம்
மற்று வினைமாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலை உட்கொண்டு புலந்தாள் என்பதாம்.

குறள் 1317 (வழுத்தினா )[தொகு]

( இதுவுமது )

வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள் ( ) வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்

யாருள்ளித் தும்மினீ ரென்று. (07) யார் உள்ளித் தும்மினீர் என்று.

[தொடரமைப்பு:தும்மினேனாக வழுத்தினாள், அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள். ]

இதன்பொருள்
தும்மினேனாக வழுத்தினாள்= கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கைபற்றி வாழ்த்தினாள்;
அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள்= அங்ஙனவாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலான் தும்மினீர் என்று சொல்லிப் புலந்து அழுதாள், எ-று.
உரை விளக்கம்
வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி, அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள் என்பதாம்.

குறள் 1318 ( தும்முச்செறுப்ப)[தொகு]

(இதுவுமது)

தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள ( ) தும்முச்செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

லெம்மை மறைத்திரோ வென்று. (08) எம்மை மறைத்திரோ என்று.

[தொடரமைப்பு: தும்முச் செறுப்ப, நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள்.]

இதன்பொருள்
தும்முச் செறுப்ப= எனக்குத் தும்மல் தோன்றியவழி யாருள்ளித் தும்மினீர் என்று புலத்தலை அஞ்சி, அதனை யான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்;
நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள்= நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்து அழுதாள், எ-று.
உரை விளக்கம்
'தும்மு' என்பது, முதனிலைத் தொழிற்பெயர். 'செறுப்ப' என்புழி, இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தான் தொக்கது. 'எம்மை' என்பது, நும்மோடு யாதும் இயைபு இல்லாத எம்மை என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் காகு என்ப. தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றம் ஆயக்கால் செயற்பாலது யாது என்பதாம்.

குறள் 1319 (தன்னை)[தொகு]

( இதுவுமது)

தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ ( ) தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கு நீர்

ரிந்நீர ராகுதி ரென்று. (09) இந் நீரர் ஆகுதிர் என்று.

[தொடரமைப்பு: தன்னை உணர்த்தினும் காயும், பிறர்க்கும் இந்நீரர் ஆகுதிர் என்று.]

இதன்பொருள்
தன்னை உணர்த்தினும் காயும்= இவ்வாற்றான் ஊடிய தன்னை, யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளாநிற்கும்;
பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று= பிறமகளிர்க்கும் அவர் ஊடியவழி, இவ்வாறே பணிந்து உணர்த்தும் நீர்மையை உடையீர் ஆகுதிர் என்று சொல்லி, எ-று.
உரை விளக்கம்
இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பது பற்றி மேலேற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய அதுதானும், புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது, இனி இவள்மாட்டுச் செய்யத்தகுவது யாது என்பதாம்.

குறள் 1320 ( நினைத்திருந்து)[தொகு]

( இதுவுமது )

நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர் () நினைத்து இருந்து நோக்கினும் காயும் அனைத்து நீர்

யாருள்ளி நோக்கினீ ரென்று. (10) யார் உள்ளி நோக்கினீர் என்று.

[தொடரமைப்பு: நினைத்து இருந்து நோக்கினும் காயும், அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று.]

இதன்பொருள்
நினைத்து இருந்து நோக்கினும் காயும்= என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றை ஒழிந்திருந்து, தன் அவயவங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும், என்னை வெகுளாநிற்கும்;
அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று= என் அவயவம் அனைத்தும் நோக்கினீர், அவற்றது ஒப்புமையான் எம்மகளிரை நினைந்து என்று சொல்லி, எ-று.
உரை விளக்கம்
யான் எல்லா அவயவங்களானும் ஒருத்தியோடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும்; அவர் எல்லாரையும் யான் அறியச் சொல்லுமின் என்னும் கருத்தால், அனைத்துநோக்கினீர் யார் உள்ளி என்றாள். வாளாவிருத்தலும் குற்றமாயிற்று என்பதாம்.