திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/43.அறிவுடைமை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


பொருட்பால்- அரசியல்- அதிகாரம் 43. அறிவுடைமை[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, கல்வி கேள்விகளினாய அறிவோடு உண்மை அறிவுடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 421 (அறிவற்றங்)[தொகு]

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு      அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
முள்ளழிக்க லாகா வரண் (04)                              உள் அழி்க்கல் ஆகா அரண்.
இதன்பொருள்
அறிவு அற்றங் காக்கும் கருவி= அரசர்க்கு அறிவென்பது இறுதிவாராமற் காக்கும் கருவியாம்;
செறுவார்க்கும் அழிக்கலாகா உள் அரணும் ஆம்= அதுவேயுமன்றிப் பகைவர்க்கு அழிக்காலாகாத உள்அரணுமாம்.
விளக்கம்
காத்தல் முன்னறிந்து பரிகரிததல். உள்ளரண் உள்ளாய அரண்; உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றுமாம்.
இதனான் அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 422 (சென்றவிடத்தாற்)[தொகு]

சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ     சென்ற இடத்தால் செல விடா தீது ஒரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு (02)                           நன்றின் பால் உய்ப்பது அறிவு.

இதன்பொருள்: சென்ற இடத்தால் செல விடா= மனத்தை அது சென்ற புலத்தின்கட் செல்லவிடாது;

தீது ஒரீஇ நன்றின் பால் உய்ப்பது அறிவு= அப்புலத்தின் நன்மைதீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கட் செலுத்துவது அறிவு.

விளக்கம்: வினைக்கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்புலம் ஐந்தாயினும், ஒரு காலத்து ஒன்றின்கணல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது 'அறிவு' என்றார், அஃது உயிர்க்குணம்ஆகலின்.

குறள் 423 (எப்பொருள்யார்)[தொகு]

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்      எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண் பதறிவு(03)                                        மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இதன்பொருள்:

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;
அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.

விளக்கம்:

குணங்கண் மூன்றும் மாறி மாறி வருதல் யார்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும் ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்' என்றார். அடு்க்குப் பன்மை பற்றி வந்தது. 'வாய்' என்பது, அவர் அப்பொருளின்கட் பயிலாமை உணரநின்றது. மெய்யாதல்- நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன்நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.

குறள் 424 (எண்பொருளவாக)[தொகு]

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்       எண் பொருளவாகச் செலச் சொல்லித் தான் பிறர் வாய்
நுண்பொருள் காண்ப தறிவு (04)                                                 நுண் பொருள் காண்பது அறிவு.
இதன்பொருள்:
தான் எண் பொருளவாகச் செலச் சொல்லி= தான் சொல்லும் சொற்களை அரிய பொருளவாயினும் கேட்பார்க்கு எளிய பொருளவாமாறு சொல்லி;
பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு= பிறர் வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள் காண அரிதாயினும், அதனைக் காண வல்லது அறிவு.
விளக்கம்
உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்வன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா வாயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.

குறள் 425 (உலகந்தழீஇய)[தொகு]

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்       உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலு மில்ல தறிவு (05)                         கூம்பலும் இல்லது அறிவு.
இதன்பொருள்:
உலகம் தழீஇயது ஒட்பம்= உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்;
மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு= அந்நட்பின்கண் முன் மலர்தலும், பின் கூம்புதலும் இன்றி ஒருநிலையனாவது அறிவாம்.
விளக்கம்:
'தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழின்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப் போல வேறுபடாது, கோட்டுப்பூப் போல ஒரு நிலையே நட்பாயினான், எல்லாவின்பமும் எய்தும் ஆகலின், அதனை 'அறிவு' என்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தின் மலர்தலும், நல்குரவிற் கூம்பலும் இல்லதென்று உரைப்பாரும் உளர்.

குறள் 426 (எவ்வதுறைவது)[தொகு]

எவ்வ துறைவ துலக முலகத்தோ       எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
டவ்வ துறைவ தறிவு (06)                       அவ்வது உறைவது அறிவு.
இதன்பொருள்:
உலகம் எவ்வது உறைவது= உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று;
உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு= அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.
விளக்கம்
உலகத்தை எல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பார் இல்லையெனக் கருதித் தான் நினைந்தவாறே ஒழுகிற் பாவமும் பழியும் ஆகலான், அவ்வாறு ஒழுகுதல் அறிவன்று என விலக்கியவாறாயிற்று.
இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.

குறள் 427 (அறிவுடையாராவ)[தொகு]

அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா       அறிவு உடையார் ஆவது அறிவார் அறிவிலார்
ரஃதறி கல்லா தவர் (07)                                 அஃது அறிகல்லாதவர்.
இதன்பொருள்:
அறிவுடையார் ஆவது அறிவார்= அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறியவல்லார்;
அறிவிலார் அஃது அறிகல்லாதவர்= அறிவிலராவார் அதனை முன்னறிய மாட்டாதார்.
விளக்கம்:
'முன்னறிதல்' முன்னே எண்ணியறிதல். 'அஃதறிகல்லாமை'யாவது வந்தாலறிதல். இனி, 'ஆவதறிவார்' என்பதற்குத் தமக்கு நன்மையறிவார் என்று உரைப்பாருமுளர்.

குறள் 428 (அஞ்சுவது)[தொகு]

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ       அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
தஞ்ச லறிவார் தொழில் (08)                              அஞ்சல் அறிவார் தொழில்.
இதன்பொருள்:
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை- அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்- அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.
விளக்கம்:
பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதிபற்றி 'அஞ்சுவது' என்றார். 'அஞ்சாமை', எண்ணாது செய்து நிற்றல். 'அஞ்சுதல்' எண்ணி்த் தவிர்தல். அதுகாரியமன்று என்று இகழப்படாதென்பார் 'அறிவார் தொழில்'1 என்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டு அஞ்சவேண்டும்இடம் கூறியவாறு.
இவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.
1.குறள், 382..

குறள் 429 (எதிரதாக்)[தொகு]

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை       எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
யதிர வருவதோர் நோய் (09)                          அதிர வருவது ஓர் நோய்.
இதன்பொருள்:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு= வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு;
அதிரவருவது ஓர் நோய்- அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.
விளக்கம்:
'நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனால் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. 'காத்தல்' அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பமின்மை இதனால் கூறப்பட்டது.

குறள் 430 (அறிவுடையார்)[தொகு]

அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா       அறிவு உடையார் எல்லாம் உடையார்
ரென்னுடைய ரேனு மிலர் (10).                               அறிவு இலார் என் உடையரேனும் இலர்.
இதன்பொருள்:
அறிவுடையார் எல்லாம் உடையார்- அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும், எல்லாம் உடையராவார்;
அறிவிலார் என்னுடையரேனும் இலர்= அறிவிலாதார் எல்லாம் உடையராயினும், ஒன்றும் இலராவார்.

விளக்கம்:

எல்லாம் அறிவாற் படைக்கவும், காக்கவும்படுதலின் அஃதுடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவையெல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமற் காத்தற்குந் தெய்வத்தான் அழிவுவந்துழிப் படைத்தற்குங் கருவியுடையர் அன்மையின் அஃது இல்லாதாரை 'என்னுடையரேனும் இலர்' என்றும் கூறினார். என்னும் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது.
இதனான் அவரது உடைமையும், ஏனையாரது இன்மையும் செல்வங்கள் கூறப்பட்டன.