திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/77.படைமாட்சி

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


77.படைமாட்சி[தொகு]

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 77.படை மாட்சி[தொகு]

அதிகார முன்னுரை
இனி, அப்பொருளினான் ஆவதாய் வெல்வதாய படை இரண்டு அதிகாரத்தான் கூறுவான் தொடங்கி, முதற்கண் படைமாட்சி கூறுகின்றார். அஃதாவது, படையினது நன்மை.

குறள் 761 (உறுப்பமைந்து )[தொகு]

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் () உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்

வெறுக்கையு ளெல்லாந் தலை. (01) வெறுக்கையுள் எல்லாம் தலை.

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை

இதன்பொருள்
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை= யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை= அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம்.
உரைவிளக்கம்
ஈண்டுப் 'படை' என்றது, அந்நநான்கன் தொகுதியை. ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின் 'ஊறஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும், அரசன் தனக்கும் காவலாகலின், 'வெறுக்கையுள் எல்லாம் தலை' என்றும் கூறினார்.

குறள் 762( உலைவிடத்)[தொகு]

உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத் () உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்துத்

தொல்படைக் கல்லா லரிது. (02) தொல் படைக்கு அல்லால் அரிது.

தொடரமைப்பு: தொலைவு இடத்து உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொல்படைக்கு அல்லால் அரிது.

இதன்பொருள்
தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண்= தான் சிறிதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவு வந்தால் தன் மேல் உறுவதற்கு அஞ்சாது நின்று தாங்கும்வன்கண்மை; தொல்படைக்கு அல்லால் அரிது= அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது.
உரைவிளக்கம்
இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான், அதனை அரசன் "வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்/ கொல்களிறு மாவுங் கொடுத்தளிக்க" என்பது குறிப்பெச்சம்.
இப்படையை வடநூலார் மௌலம் என்ப.

‡.புறப்பொருள் வெண்பா மாலை- தும்பை, 2.

குறள் 763 (ஒலித்தக்கால் )[தொகு]

ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை () ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலிப் பகை

நாக முயிர்ப்பக் கெடும். (03) நாகம் உயிர்ப்பக் கெடும்.

தொடரமைப்பு: எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம், நாகம் உயிர்ப்பக் கெடும்.

இதன்பொருள்
எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம்= எலியாகிய பகை கடல்போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்; நாகம் உயிர்ப்பக் கெடும்= அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்.
உரைவிளக்கம்
உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரர் அல்லாதார், பலர் திரண்டு ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்; அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். வீரர் அல்லாதார் பலரினும், வீரன் ஒருவனை ஆடல் நன்று என்பதாம்.
இவை மூன்று பாட்டானும், முறையே அரசனுக்குப் படை ஏனை அங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அது தன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.

குறள் 764 (அழிவின்றறை )[தொகு]

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த () அழிவு இன்று அறைபோகாது ஆகி வழி வந்த

வன்க ணதுவே படை (04) வன்கண் அதுவே படை.

தொடரமைப்பு: அழிவு இன்று அறை போகாதாகி வழிவந்த வன்கண் அதுவே படை.

இதன்பொருள்
அழிவு இன்று= போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி= பகைவரான் கீழறுக்கப்படாததாய்; வழிவந்த வன்கண்அதுவே படை= தொன்றுதொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது.
உரைவிளக்கம்
'அழிவின்மை'யான் மறம் மானங்கள் உடைமையும், 'அறைபோகாமை'யான், அரசன்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. 'வழிவந்த வன்கண்மை', "கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்/ முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்- பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மோலோடி, எய்போற் கிடந்தான்என் ஏறு." என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.

Ṱ.புறப்பொருள் வெண்பாமாலை- வாகை, 22.

குறள் 765 (கூற்றுடன்று )[தொகு]

கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு () கூற்று உடன்று மேல் வரினும் கூடி எதிர் நிற்கும்

மாற்ற லதுவே படை. (05) ஆற்றலதுவே படை.

தொடரமைப்பு: கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை.

இதன்பொருள்
கூற்று உடன்று மேல் வரினும்= கூற்றுவன் தானே வெகுண்டு மேல்வந்தாலும்; கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே படை= நெஞ்சொத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலை உடையதே படையாவது.
உரைவிளக்கம்
'மருந்தில் கூற்றாகலின் உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சு ஒத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல்-மனவலி.

Ỉ.புறநானூறு, 3.

குறள் 766(மறமான )[தொகு]

மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற () மறம் மானம் மாண்ட வழிச் செலவு தேற்றம்

மெனநான்கே யேமம் படைக்கு. (06) என நான்கே ஏமம் படைக்கு.

தொடரமைப்பு: மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே, படைக்கு ஏமம்.

இதன்பொருள்
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே= தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும் அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம்= படைக்கு அரணாவது.
உரைவிளக்கம்
இவற்றான் முறையே பகைவரைக் கடிதிற் கொன்றுநிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமல் காத்தலும், "அழியுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சா"மை முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகள் பெறப்பட்டன. இச்செய்கையார்க்குப் பகைவர் நணுகார் ஆகலின் வேறு அரண்வேண்டா என்பதாம்.

Ḟ.புறப்பொருள் வெண்பாமாலை- வஞ்சி, 20.

குறள் 767 (தார்தாங்கிச் )[தொகு]

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த () தார் தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்குந் தன்மை யறிந்து. (07) போர் தாங்கும் தன்மை அறிந்து.

தொடரமைப்பு:: "தலைவந்த போர் தாங்கும் தன்மை அறிந்து, தார் தாங்கிச் செல்வது தானை

இதன்பொருள்
தலைவந்த போர் தாங்கும் தன்மை அறிந்து= மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரை விலக்கும் வகுப்பறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை= அவர் தூசியைத தன்மேல் வாராமல் தடுத்துத் தான் அதன்மேற் செல்வதே படையாவது.
உரைவிளக்கம்
படை வகுப்பாவது வியூகம்; அஃது எழுவகை உறுப்பிற்றாய் வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின. வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கதவிரி ஆறும், போகவிரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும், இலக்கணமும் ஈண்டு உரைப்பிற் பெருகும். அவை எல்லாம் வடநூல்களுள் கண்டு கொள்க.
இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.

குறள் 768 (அடற்றகையு )[தொகு]

அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை () அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை

படைத்தகையாற் பாடு பெறும். (08) படைத் தகையால் பாடு பெறும்.

தொடரமைப்பு: "தானை அடற்றகையும் ஆற்றலும் இல் எனினும், படைத்தகையால் பாடு பெறும்"

இதன்பொருள்
தானை= தானை; அடல்தகையும் ஆறறலும் இல் எனினும்= பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும் அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத் தகையால் பாடு பெறும்= தன் தோற்றப் பொலிவானே பெருமை எய்தும்.
உரைவிளக்கம்
'இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை என்றது, ஒரு பெயர்மாத்திரமாய் நின்றது. தோற்றப்பொலிவாவது: அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி குடை பல்லியம் காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு. 'பாடு', கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.

குறள் 769(சிறுமையுஞ் )[தொகு]

சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு () சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

மில்லாயின் வெல்லும் படை. (09) இல்லாயின் வெல்லும் படை.

தொடரமைப்பு: "சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின், படை வெல்லும்"

இதன்பொருள்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின்= தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்; படை வெல்லும்= படை பகையை வெல்லும்.
உரைவிளக்கம்
விட்டுப்போதலும், நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள்கொடாமையான் வருவன. 'செல்லாத் துனி'யாவது, மகளிரை வௌவல், இளிவரவாவன செய்தன் முதலியவற்றான் வருவது. இவை உள்வழி, அவன்மாட்டு அன்பின்றி உற்றுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.

குறள் 770 (நிலைமக்கள் )[தொகு]

நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை () நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை

தலைமக்க ளில்வழி யில். (10) தலைமக்கள் இல் வழி இல்.

தொடரமைப்பு: நிலை மக்கள் சால உடைத்து எனினும், தலைமக்கள் இல்வழித் தானை இல்

இதன்பொருள்
நிலைமக்கள் சால உடைத்து எனினும்= போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தேயாயினும்; தலைமக்கள் இல் வழித் தானை இல்= தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது.
உரைவிளக்கம்
படைத்தலைவர் நிலையுடையர் அன்றிப் போவாராயின் காண்போர் இல்லெனப் பொராது, தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல்வழி இல்' என்றார்.
இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகை இன்மையானும், அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.