திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/81.பழைமை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


81.பழைமை[தொகு]

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 81.பழைமை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, நட்டாரது பழையராம் தன்மைபற்றி அவர் பிழைத்தன பொறுத்தல். காரணப்பெயர் காரியத்திற்கு ஆயிற்று. ஆராய்ந்து நட்கப்பட்டாரெனினும் பொறுக்கப்படும் குற்றமுடையார் ஆகலானும், ஊழ்வகையானும் நட்டார்மாட்டுப் பிழையுளதாம் என்பது அறிவித்தற்கு, இது நட்பாராய்தலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 801 (பழைமை )[தொகு]

பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங் () பழைமை எனப்படுவது யாது எனின் யாதும்

கிழைமையைக் கீழ்ந்திடா நட்பு. (01) கிழைமையைக் கீழ்ந்து இடா நட்பு.

தொடரமைப்பு: பழைமை எனப்படுவது யாதெனின், கிழைமையை யாதும் கீழ்ந்திடா நட்பு.

இதன்பொருள்
பழைமை எனப்படுவது யாதெனின்= பழைமையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்ந கிழைமையை யாதும் கீழ்ந்திடா நட்பு= அது பழைமையோர் உரிமையான் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு.
உரைவிளக்கம்
'கிழமை' ஆகுபெயர். கெழுதகைமை என வருவனவும் அது. உரிமையாற் செய்வனவாவன: கருமம் ஆயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்குவேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்று இவை முதலாயின. சிதைத்தல்- விலக்கல். இதனாற் பழைமையாவது காலம் சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு என்பது கூறப்பட்டது.

குறள் 802 (நட்பிற்குறுப் )[தொகு]

நட்பிற்குறுப்புக் கெழுதகைமை மற்றதற் () நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று அதற்கு

குப்பாதல் சான்றோர் கடன். (02) உப்பு ஆதல் சான்றோர் கடன்.

தொடரமைப்பு: நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை, அதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.

இதன்பொருள்
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை= நட்பிற்கு அவயவம் ஆவன நட்டார் உரிமையான் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன்= அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை.
உரைவிளக்கம்
வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். 'உறுப்பு' என்பது, ஈண்டு இலக்கணை அடியாக வந்த குறிப்புச்சொல். அவயவம் ஆதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.

குறள் 803 (பழகிய )[தொகு]

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை () பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை

செய்தாங் கமையாக் கடை. (03) செய்து ஆங்கு அமையாக் கடை.

தொடரமைப்பு:கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை, பழகிய நட்பு எவன்செய்யும்.

இதன்பொருள்
கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை= தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற்போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும்= அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?
உரைவிளக்கம்
செய்தாற்போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 804 (விழைதகையான் )[தொகு]

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் () விழை தகையான் வேண்டி இருப்பர் கெழுதகையான்

கெளாது நட்டார் செயின். (04) கேளாது நட்டார் செயின்.

தொடரமைப்பு: நட்டார் கெழுதகையால் கேளாது செயின், விழைதகையான் வேண்டி இருப்பர்.

இதன்பொருள்
நட்டார் கெழுதகையால் கேளாது செயின்= தன் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழை தகையான் வேண்டி இருப்பர்= அச்செயலது விழையப்படுந்தன்மைபற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்.
உரைவிளக்கம்
ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலினூஉங்கு நன்மையின்மையின், அச்செயல் விழையத்தக்கது ஆயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கு அல்லது இன்மையின், அவர்மேல் வைத்துக் கூறினார். வேண்டியிருப்பர் என்பது எழுந்திருப்பர் என்பதுபோல ஒரு சொல்நீர்மைத்து. இதனாற் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.

குறள் 805 (பேதைமையொன் )[தொகு]

பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க () பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க

நோதக்க நட்டார் செயின். (05) நோ தக்க நட்டார் செயின்.

தொடரமைப்பு:நோ தக்க நட்டார் செயின், பேதைமை ஒன்றோ பெருங்கிழமை ஒன்றோ என்று உணர்க.

இதன்பொருள்
நோதக்க நட்டார் செயின்= தாம் வெறுக்கத்தக்கனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க= அதற்குக்காரணம் ஒன்றிற் பேதைமை யென்றாதல், ஒன்றின் மி்க்கஉரிமை என்றாதல் கொள்க.
உரைவிளக்கம்
'ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம்மியல்பான் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும். இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதம்கொண்டார் என்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒறறுமைமிகுதிபற்றி அவரின் வந்தது என்றாதல் கொள்வது அல்லது, அன்பின்மை என்று கொள்ளப்படாது என்பதாம். கெடும்வகை செய்யின் அதற்குக்காரணம் இதனான் கூறப்பட்டது.

குறள் 806(எல்லைக்கணி )[தொகு]

எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந் () எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவு இடத்தும்

தொல்லைக்க ணின்றார் தொடர்பு. (06) தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

தொடரமைப்பு: எல்லைக்கண் நின்றார் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவுஇடத்தும் துறவார்.

இதன்பொருள்
எல்லைக்கண் நின்றார்= நட்பு வரம்பு இகவாது அதன்கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார்= தம்மொடு பழைமையில் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்த இடத்தும் விடார்.
உரைவிளக்கம்
பழைமையில் திரியாமை: உரிமை ஒழியாமை. தொலைவு பொருட்கேடும், போர்க்கேடும்.

குறள் 807 (அழிவந்த )[தொகு]

அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்()அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர். (07) வழி வந்த கேண்மையவர்.

தொடரமைப்பு:அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் வழி வந்த கேண்மையவர்.

இதன்பொருள்
அழிவந்த செய்யினும் அன்பு அறார்= நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர்மாட்டு அன்பு ஒழியார்; அன்பின்வழிவந்த கேண்மையவர்= அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார்.
உரைவிளக்கம்
அழிவு என்பது, முதனிலைத்தொழிற்பெயர். அழிவு, மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டுபாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.

குறள் 808 (கேளிழுக்கங் )[தொகு]

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு () கேள் இழுக்கம் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்க நட்டார் செயின். (08) நாள் இழுக்கம் நட்டார் செயின்.

தொடரமைப்பு: கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நட்டார் இழுக்கம் செயின் நாள்.

இதன்பொருள்
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு= நட்டார்செய்த பிழையைத் தாமாகவே அன்றிப் பிறர்சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செய்யின் நாள்= அவர் பிழைசெய்வாராயின், அது பயன்பட்ட நாளாம்.
உரைவிளக்கம்
பிழையாவன சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை, அஞ்சாமை முதலியன. கேட்டல்- உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய்க் கேளாத என்னும் எச்சத்திற்கு முடிபு ஆயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாள்அல்லவாயின. இதனான் பிழைபொறுத்தல் சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 809(கெடாஅவழி )[தொகு]

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை () கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையு முலகு. (09) விடாஅர் விழையும் உலகு.

தொடரமைப்பு:கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை, விடாஅர் உலகு விழையும்.

இதன்பொருள்
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை= உரிமையறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை; விடாஅர் உலகு விழையும்= அவர் பிழைநோக்கி விடுதல்செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும்.
உரைவிளக்கம்
'கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. நம்மாட்டும் இவர் இத்தன்மையர் ஆவர் என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். கெடார் என்று பாடம் ஓதி, நட்புத்தன்மையிற் கெடாராகி என்று உரைப்பாரும் உளர்.

குறள் 810 (விழையார் )[தொகு]

விழையார் விழையப் படுப பழையார்கட் () விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பிற் றலைப்பிரியா தார். (10) பண்பில் தலைப்பிரியாதார்.

தொடரமைப்பு: பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார், விழையார் விழையப் படுப.

இதன்பொருள்
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார்= பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப= பகைவரானும் விரும்பப்படுவர்.
உரைவிளக்கம்
தம் பண்பாவது, செய்யாதமுன்போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பும்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டுபாட்டானும் பழைமை அறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.