திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/131.புலவி

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 131. புலவி[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி, ஒருவரோடு ஒருவர் புலத்தல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1301 ( புல்லாதிரா)[தொகு]

( வாயிலாகச் சென்ற தோழி, தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.)

புல்லா திராஅப் புலத்தை யவருறு ( ) புல்லாது இராப் புலத்தை அவர் உறும்

மல்லனோய் காண்கஞ் சிறிது. (01) அல்லல் நோய் காண்கம் சிறிது.

[தொடரமைப்பு: அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம், புல்லாது இராப் புலத்தை.]

இதன்பொருள்
அவர் உறு அல்லல் நோய் சிறிது காண்கம்=அங்ஙனம் புலந்தால் காதலர் எய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவேம்;
புல்லாது இராஅப் புலத்தை= நீ அவரை விரைந்து சென்று புல்லாதே இத்தொழிலை மேலிட்டுக்கொண்டிருப்பாயாக, எ-று.
உரைவிளக்கம்
'அல்லல் நோய்'- துன்பத்தைச்செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீளவிடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம், "கடம் பூண்டு ஒருகால் நீ வந்தை" (கலித்தொகை, குறிஞ்சிக்கலி-27) என்புழிப்போல முன்னிலைவினை விகுதி. புலத்தி என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள்வழியளாய் நின்று, நாமுற்ற வருத்தம் அவரும் சிறிது உற்றறிதல் வேண்டும் என நகையாடி நேர்வித்தவாறு.

குறள் 1302 ( உப்பமைந்)[தொகு]

( புலவியொழிந்து வாயில்நேரும் வகை அவள் சொல்லியது.)

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது ( ) உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது

மிக்கற்றா னீள விடல். (02) மிக்கற்றால் நீள விடல்.

[தொடரமைப்பு: புலவி உப்பு அமைந்தற்று, சிறிது நீளவிடல் அது மிக்கற்று. ]

இதன்பொருள்
புலவி உப்பு அமைந்தற்று= புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டும் அளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவைய ஆக்கற்கு வேண்டும் அளவிற்றாதல் போலும்;
சிறிது நீளவிடல் அது மிக்கற்று= இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும், எ-று.
உரை விளக்கம்
'நீளவிடல்'- அளவறிந்து உணராது, கலவிமேல் எழுந்த குறிப்பு, அழுங்கும் அளவும் செய்தல். சிறிது நீளவிடலாகாது என்றாள், நேர்விக்கின்றாள் ஆகலின். உப்பு மிக்கவழித் துய்ப்பது சுவையின்று ஆனாற்போலப் புலவிமிக்கவழிக் கலவி இன்பம் இன்றாம் என்றமையின், இது பண்புவமை.

குறள் 1303 (அலந்தாரை )[தொகு]

(பரத்தையரிடத்து நின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது. )

அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப் ( ) அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல். (03) புலந்தாரைப் புல்லா விடல்.

[தொடரமைப்பு: தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல், அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று.]

இதன்பொருள்
தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல்= தம்மைப் பெறாது புலந்தமகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல்;
அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று= பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன்மேலும் மிக்கதுன்பத்தினைச் செய்தாற்போலும், எ-று.
உரை விளக்கம்
பிறர்பாற் சேறலின், நும்மைப் பெறாது புலந்து ஊடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவிநீக்கிப் புல்லீராயின், அவர் ஆற்றார் என்பதாம்.

குறள் 1304 (ஊடியவரை )[தொகு]

(இதுவுமது )

ஊடி யவரை யுணராமை வாடிய ( ) ஊடியவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று. (04) வள்ளி முதல் அரிந்தற்று.

[தொடரமைப்பு: ஊடியவரை உணராமை, வாடிய வள்ளி முதல் அரிந்தற்று.]

இதன்பொருள்
ஊடியவரை உணராமை= நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடல் உணர்த்திக் கூடாது ஒழிதல்;
வாடிய வள்ளி முதல் அரிந்தற்று= பண்டே நீர்பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும் எ-று.
உரை விளக்கம்
நீர் பரத்தையர் இடத்து இராவழி, எம்புதல்வரைக் கண்டு ஆற்றி இருக்கற்பாலமாய யாம், நும்மோடு ஊடுதற்கு உரியம் அல்லம், அன்மையின் எம்மை உணர்த்தல்வேண்டா, உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது, அதனால் ஆண்டுச் சென்மின் என்பதாம்.

குறள் 1305 ( நலத்தகை)[தொகு]

(தலைமகளைப் புலவிநீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. )

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை () நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூவன்ன கண்ணா ரகத்து. (05) பூ அன்ன கண்ணார் அகத்து.

[தொடரமைப்பு: நலத்தகை நல்லவர்க்கு ஏஎர், பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை.]

இதன்பொருள்
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்= நற்குணங்களாற் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது;
பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை= தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே, எ-று.
உரை விளக்கம்
சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. தவறு இல்லார்க்கும் புலவி இனிது என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு- இன்பப்பயனைத் தலைப்படுதல். தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை, வியந்து கூறியவாறு.

குறள் 1306 ( துனியும்)[தொகு]

( இதுவுமது )

துனியும் புலவியு மி்ல்லாயிற் காமங் ( ) துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியுங் கருக்காயு மற்று. (06) கனியும் கருக்காயும் அற்று.

[தொடரமைப்பு: துனியும் புலவியும் இல்லாயின், காமம் கனியும் கருக்காயும் அற்று.]

இதன்பொருள்
முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்;
காமம் கனியும் கருக்காயும் அற்று= காமம் செவ்விமுதிர்ந்த பழமும் இளங்காயும் பொலும் எ-று.
உரை விளக்கம்
மிக முதிர்ந்து இறும் எல்லைத்தாய கனி, நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்யாதாகலின் துனி இல்லையாயின் கனியற்று என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித்து அன்று ஆகலின், புலவி இல்லையாயின் கருக்காய் அற்று என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.

குறள் 1307 ( ஊடலினுண்)[தொகு]

(இதுவுமது )

ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது ( )

நீடுவ தன்றுகொ லென்று. (07)

[தொடரமைப்பு: புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று, ஊடலின் ஓர் துன்பம் உண்டு.]

இதன்பொருள்
புணர்வது நீடுவது (கொல்) அன்றுகொல் என்று= இனிப்புணர்ச்சி நீட்டிக்குமோ, நீட்டியாதோ என்று கருதலான்;
ஊடலின் ஓர் துன்பம் உண்டு= இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின்கண்ணேயும் ஒருதுன்பம் நிகழும், எ-று.
உரை விளக்கம்
என்று என்னும் எச்சத்திற்குக் கருதலான் என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. கொல் என்பதனை நீடுவது என்பதுடனும் கூட்டுக. ஆங்கு என்பது, அசைநிலை. ஊடல், கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.

குறள் 1308 ( நோதலெவன்)[தொகு]

( உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது. )

நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங் ( ) நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்

காதல ரில்லா வழி. (08) காதலர் இல்லாவழி.

[தொடரமைப்பு: நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி, நோதல் மற்று எவன்.]

இதன்பொருள்
நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி= இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று, அந்நோவினை அறியும் அன்பு உடையாரைப் பெறாவழி;
நோதல் மற்று எவன்= ஒருவர் நோகின்றதனால் பயன் என், எ-று.
உரை விளக்கம்
அறிதல்- ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இவள்நம் காதலியல்லள், அன்மையின் இந்நோவு அறியாள், அறியாமையின் நாம் புலக்கின்றதனாற் பயன் இல்லையெனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.

குறள் 1309 ( நீருநிழல)[தொகு]

(இதுவுமது )

நீரு நிழல தினிதே புலவியும் ( ) நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே யினிது. (09) வீழுநர் கண்ணே இனிது.

[தொடரமைப்பு: நீரும் நிழலதே இனிது, புலவியும் வீழுநர் கண்ணே இனிது.]

இதன்பொருள்
நீரும் நிழலதே இனிது= உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின்கண்ணே இனிதாவது, ஏனை வெயிலின்கண்ணது ஆகாது;
புலவியும் வீழுநர்கண்ணே இனிது= அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும், அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது, எ-று.
உரை விளக்கம்
நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின் இனிதாயிற்று. வீழுநர் ஆற்றாமைக்கு நோதலும், கூடுதற்கண் வேட்கையும் உடையராவர். இவள், நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின், இப்புலவிதானும் இன்னாதாகாநின்றது என்பதாம்.

குறள் 1310 (ஊடலுணங்க )[தொகு]

( இதுவுமது)

ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங் () ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்

கூடுவே மென்ப தவா. (10) கூடுவேம் என்பது அவா.

[தொடரமைப்பு: ஊடல் உணங்க, விடுவாரோடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா.]

இதன்பொருள்
ஊடல் உணங்க= தாம் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்;
விடுவாரோடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா= விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது, தன் அவாவே, பிறிதில்லை, எ-று.
உரை விளக்கம்
அன்பும் அருளும் இல்லாதாரை உடையர் என்றும், அவரொடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல், அவாவுற்றார் செயல்ஆகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றாள். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. இக்கூட்டம் முடியாது என்பதாம்.