திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 124. உறுப்பு நலன் அழிதல்[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, தலைமகள் தன் கண்ணும், தோளும், நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல். இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின், பொழுதுகண்டிரங்கலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1231 ( சிறுமைநமக்)[தொகு]

(ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. )

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி ( ) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண். (01) நறு மலர் நாணின கண்.

[தொடரமைப்பு: சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி, கண் நறுமலர் நாணின.]

இதன்பொருள்
சிறுமை நமக்கு ஒழியச்சேட்சென்றார் உள்ளி= இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்;
கண் நறுமலர் நாணின= நின்கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன, எ-று.
உரைவிளக்கம்
நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். உள்ள என்பது, உள்ளி எனத் திரிந்துநின்றது. உள்ளுதல் என்பது, காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். இவைகண்டார் அவரைக் கொடுமைகூறுவர், நீ ஆற்றல் வேண்டும் என்பது கருத்து.

குறள் 1232 ( நயந்தவர்)[தொகு]

(இதுவுமது )

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் ( ) நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாருங் கண். (02) பசந்து பனிவாருங் கண்.

[தொடரமைப்பு: பசந்து பனிவாரும் கண், நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும். ]
]

இதன்பொருள்
பசந்து பனிவாரும் கண்= பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின்கண்கள்;
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்= நம்மான் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவபோலாநின்றன. இனி, நீ ஆற்றல் வேண்டும், எ-று.
உரை விளக்கம்
சொல்லுவபோறல்- அதனை அவர்உணர்தற்கு அனுமானமாதல். நயந்தவர்க்கு என்று பாடம் ஓதுவாரும் உளர்.

குறள் 1233 (தணந்தமை )[தொகு]

(இதுவுமது )

தணந்தமை சால வறிவிப்ப போலு ( ) தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள். (03) மணந்த நாள் வீங்கிய தோள்.

[தொடரமைப்பு: மணந்த நாள் வீங்கிய தோள், தணந்தமை சால அறிவிப்ப போலும்.]

இதன்பொருள்
மணந்த நாள் வீங்கிய தோள்= காதலர் மணந்த ஞான்று இன்பம் மிகுதியாற் பூரித்த நின்தோள்கள்;
தணந்தமை சால அறிவிப்ப போலும்= இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவபோல மெலியாநின்றன, இது தகாது, எ-று.
உரை விளக்கம்
அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால் இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து, அவரைத் தகவின்மை கூறுவர் என்பதாம்.

குறள் 1234 ( பணைநீங்கிப்)[தொகு]

(இதுவுமது )

பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித் ( ) பணை நீங்கிப் பைந் தொடி சோரும் துணை நீங்கித்

தொல்கவின் வாடிய தோள். (04) தொல் கவின் வாடிய தோள்.

[தொடரமைப்பு: துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள், பணை நீங்கிப் பைந் தொடி சோரும். ]

இதன்பொருள்
துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள்= அன்றும் துணைவர் நீங்குதலான் அவராற்பெற்ற செயற்கை அழகேயன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இ்ததோள்கள்;
பணை நீங்கிப் பைந்தொடி சேரும்= இன்று அதற்கும்மேலே தம் பெருமையிழந்து வளை கழலாநின்றன. இவை இங்ஙனம் செயற்பாலன அல்ல, எ-று.
உரை விளக்கம்
பெருமையிழத்தல்- மெலிதல். பைந்தொடி-பசிய பொன்னாற் செய்த தொடி. 'சோரும்' என்னும் வளைத்தொழில், தோள் மேல் நின்றது. அன்றும், பிரிந்தார் என்று அவர் அன்பின்மை உணர்த்தி, இன்றும் குறித்த பருவத்து வந்திலர் என்று, அவர் பொய்மை உணர்த்தாநின்றன. இனி அவற்றைக் கூறுகின்றார் மேல் குறையுண்டோ என்பதாம்.

குறள் 1235 ( கொடியார்)[தொகு]

(இதுவுமது )

கொடியார் கொடுமை உரைக்குந் தொடியொடு () கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள். (05) தொல் கவி்ன் வாடிய தோள்.

[தொடரமைப்பு: கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு தொல் கவின் வாடிய தோள்.]

இதன்பொருள்
கொடியார் கொடுமை உரைக்கும்= கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு, இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன;
தொடியொடு தொல்கவின் வாடிய தோள்= வளைகளும் கழன்று, பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை, எ-று.
உரை விளக்கம்
'உரைக்கும்' என்பது, அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'ஒடு' வேறுவினைக்கண் வந்தது. அவரொடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் வேண்டுமோ என்பதாம்.

குறள் 1236 ( தொடியொடு)[தொகு]

(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது. )

தொடியொடு தோணெகிழ நோவ லவரைக் ( ) தொடியொடு தோள் நெகிழ நோவலவரைக்

கொடிய ரெனக்கூற னொந்து. (06) கொடியர் எனக் கூறல் நொந்து.

[தொடரமைப்பு: தொடியொடு தோள் நெகிழ, அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்.]

இதன்பொருள்
தொடியொடு தோள் நெகிழ=யான் ஆற்றவும், என் வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய;
அவரைக்கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்= அவற்றைக்கண்டு நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவாநின்றேன், எ-று.
உரை விளக்கம்
ஒடு- மேல்வந்த பொருண்மைத்து. யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கு அன்று, நீ கூறுகின்றதற்கு என்பதாம்.

குறள் 1237 (பாடுபெறு )[தொகு]

( அவ்வியற் பழிப்புப் பொறாது, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. )

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் ( ) பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்

வாடுதோட் பூச லுரைத்து. (07) வாடு தோள் பூசல் உரைத்து.

[தொடரமைப்பு: நெஞ்சே, கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து, பாடு பெறுதியோ.]

இதன்பொருள்
நெஞ்சே= நெஞ்சே;
கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து= இவள் கொடியார் என்கிறவர்க்கு, நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி;
பாடு பெறுதியோ= ஒரு மேம்பாடு எய்த வல்லையோ, வல்லையாயின் அதனை ஒப்பது இல்லை, எ-று.
உரை விளக்கம்
கொடியார்க்கு என்பது, கொடியரல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடுதோள்' என்பதும் அவை தாமே வாடா நின்றன என்பது தோன்றநின்றது. பூசல்- ஆகுபெயர். அஃது அவள் தோள்நோக்கி இயற்பழித்தன்மேலும், அதனல் தனக்கு ஆற்றாமை மிகன்மேலும் நின்றது. நின்னுரை கேட்டலும் அவர் வருவர், வந்தால் இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற் செய்த நன்றியாம் ஆகலின், அதன்பயன் எல்லாம் எய்துதி என்னும் கருத்தால் 'பாடுபெறுதியோ' என்றாள்.

குறள் 1238 (முயங்கிய )[தொகு]

( வினைமுடித்து மீடலுற்ற தலைமகன், முன்நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. )

முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது ( ) முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல். (08) பைந் தொடிப் பேதை நுதல்.

[தொடரமைப்பு: முயங்கிய கைகளை ஊக்க, பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது.]

இதன்பொருள்
முயங்கிய கைகளை ஊக்க= தன்னை இறுக முயங்கிய கைகளை, இவட்கு நோகும் என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்த்தேனாக;
பைந்தொடி பேதை நுதல் பசந்தது= அத்துணையும் பொறாது, பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ, எ-று.
உரை விளக்கம்
இனிக் கடிதின் செல்லவேண்டும் என்பது கருத்து.

குறள் 1239 (முயக்கிடைத் )[தொகு]

(இதுவுமது )

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற ( ) முயக்கு இடைத் தண் வளி போழப் பசப்பு உற்ற

பேதை பெருமழைக் கண். (09) பேதை பெரு மழைக்கண்.

[தொடரமைப்பு: முயக்கிடைத் தண்வளி போழ, பேதை பெருமழைக்கண் பசப்புற்ற. ]

இதன்பொருள்
முயக்கிடைத் தண்வளி போழ= அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம்முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக;
பேதை பெருமழைக்கண் பசப்புற்ற= அத்துணை இடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக்கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள் மலைகளும், காடும், நாடுமாய இவ்விடையீடுகளை எல்லாம் யாங்ஙனம் பொறுத்தன, எ-று.
உரை விளக்கம்
தன்மை ஈண்டு மென்மைமேல் நின்றது. போழ என்றது, உடம்பிரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை-குளிர்ச்சி.

குறள் 1240 ( கண்ணின்)[தொகு]

( இதுவுமது )

கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே () கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

யொண்ணுதல் செய்தது கண்டு. (10) ஒள் நுதல் செய்தது கண்டு.

[தொடரமைப்பு: கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே, ஒண்ணுதல் செய்தது கண்டு.]

இதன்பொருள்
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று= தண்வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பம் உற்றது; ஒ்ணணுதல் செய்தது கண்டு= தனக்கு அயலாய ஒண்ணுநல் விளைத்த பசப்பைக்கண்டு, எ-று.
உரை விளக்கம்
அது கைகளை ஊக்க அவ்வளவிற் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன் எனத் தன் வன்மையும், அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம்; ஆகவே, அவள் உறுப்புக்கள் ஒன்றின்ஒன்று முற்பட்டு நலன் அழியும், யாம் கடிதின் சேறும் என்பது கருத்தாயிற்று.