திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/15.பிறனில்விழையாமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 15. பிறனில் விழையாமை[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை[தொகு]

அஃதாவது, காம மயக்கத்தாற் பிறனுடைய இல்லாளை விரும்பாமை. இஃது, ஒழுக்கமுடையார் மாட்டே நிகழ்வதாகலின், 'ஒழுக்கமுடைமை'யின் பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 141 (பிறன்பொருளாட்)[தொகு]

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்
பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்கண் இல் (01)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை= பிறனுக்குப் பொருளாந் தன்மையை உடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை;
ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் இல்= ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள்நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
'பிறன் பொருள்' பிறனுடைமை. 'அறம், பொருள்' என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை தொக்குநின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்பநூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் பரகீயம் (=பிறர்க்கு உரியது) என்று கூறுவாராகலின், 'அறம்பொருள் கண்டார்கண் இல்' என்றார். எனவே, அப்பேதைமை உடையார்மாட்டு அறமும் பொருளும் இல்லை யென்பது பெறப்பட்டது.

திருக்குறள் 142 (அறன்கடை)[தொகு]

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல் (02)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
அறன் கடை நின்றாருள் எல்லாம்= காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்;
பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்= பிறன் இல்லாளைக் காதலித்து அவன் வாயிற்கண் சென்றுநின்றார் போலப் பேதையார் இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
அறத்தின் நீக்கப்பட்டமையின், 'அறன்கடை' என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச்செல்வாரும், வரைவின் மகளிரோடும், இழிகுல மகளிரோடுங் கூடி இன்பநுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலேயன்றிப் 'பிறன்கடை நின்றார்' அச்சத்தால் தாம்கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார்; எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.

திருக்குறள் 143 (விளிந்தாரின்)[தொகு]

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார்
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார் (03)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்= தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவம் செய்தலை விரும்பி ஒழுகுவார்;
விளிந்தாரின் வேறு அல்லர்= உயிருடையவரேனும் இறந்தாரே யாவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அறம் பொருள் இன்பங்களாகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்' என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவுபற்றி யாகலின் 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.

திருக்குறள் 144 (எனைத்துணையர்)[தொகு]

எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்
எனைத் துணையர் ஆயினும் என்னாம் தினைத் துணையும்
தேரான் பிறன் இல் புகல் (04)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
எனைத் துணையர் ஆயினும் என்னாம்= எத்துணைப் பெருமைஉடையர் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்;
தினைத் துணையும் தேரான் பிறன் இல் புகல்= காம மயக்கத்தால் தினையளவமு தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி 'என்னாம்' என்றார். "என்னீர் அறியாதீர் போல விவை கூறின் நின்னீர வல்ல நெடுந்தகாய்" (பாலைக்கலி- 5) என்புழிப்போல உயர்த்ற்கட் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் தம்மை ஐயுறாத பிறன் என்று உரைப்பாரும் உளர்.

திருக்குறள் 145 (எளிதென)[தொகு]

எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி (05)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
எளிது என இல் இறப்பான்= எய்துதல் எளிது என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்;
விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்= மாய்தலின்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இல்லின்கண் இறத்தல், இல்லாள்கண் நெறிகடந்து சேறல். (ப

திருக்குறள் 146 (பகைபாவம்)[தொகு]

பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண் (06)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
இல் இறப்பான்கண்= பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து;
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்= பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
எனவே இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறுபாட்டானும் பிறனில் விழைவான்கட் குற்றம் கூறப்பட்டது.

திருக்குறள் 147 (அறனியலான்)[தொகு]

அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன் (07)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்= அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்;
பிறன் இயலாள் பெண்மை நயவாதவன்= பிறனுக்குரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண்தன்மையை விரும்பாதவன்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஆன் உருபு இங்கு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறம் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.

திருக்குறள் 148 (பிறன்மனைநோக்காத)[தொகு]

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு (08)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை= பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்டகைமை;
சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு= சால்புடையார்க்கு அறனுமாம், நிரம்பிய ஒழுக்கமுமாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குதற்கு அருமையின் அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல்.
செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.

திருக்குறள் 149 (நலக்குரியார்)[தொகு]

நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறர்க்குரியா டோடோயா தார்.
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் (09)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
நாம நீர் வைப்பின்= அச்சந் தரும் கடலாற் சூழப்பட்ட உலகத்து;
நலக்கு உரியார் யார் எனின்= எல்லா நன்மைகளும் எய்துதுற்கு உரியார் யாவரெனின்; பிறற்கு உரியாள் தோள் தோயாதார்= பிறன் ஒருவனுக்கு உரிமையாகியாள் உடைய தோளைச் சேராதார்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின் நாமநீர் என்றார். நலத்திற்கு என்பது நலக்கு எனக் குறைந்து நின்றது. உரிச்சொல் ஈறு திரிந்துநின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.

('நாம்' என்றசொல் 'நாம' எனத் திரிந்து வந்தது- மெய்)

திருக்குறள் 150 (அறன்வரையான்)[தொகு]

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையான்
பெண்மை நயவாமை நன்று (10)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
அறன் வரையான் அல்ல செயினும்= ஒருவன் அறத்தைத் தனக்கு உரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்;
பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று= அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின் அது நன்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இக்குணமே மேம்பட்டுத் தோனறும் என்பதாம்.
இவை நான்கு பாட்டானும் பிறனில் விழையாதான்கட் குணம் கூறப்பட்டது.