திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/28.கூடாவொழுக்கம்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 28. கூடாவொழுக்கம்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, தாம் விட்ட காம இன்பத்தை உரன் இன்மையிற் பின்னும் விரும்புமாறு தோன்ற அவ்வாறே கொண்டுநின்று, தவத்தோடு பொருந்தாததாய தீய ஒழுக்கம். அது விலக்குதற்கு இது தவத்தின்பின் வைக்கப்பட்டது.

குறள்: 271 (வஞ்சமனத்தான்)[தொகு]

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும் (01).
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம்= வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்= உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு த்ம்முள்ளே நகும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
காமம் தன்கண்ணே தோன்றி நலியாநிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் 'வஞ்சமனம்' என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவொழுக்கத்தைப் 'படிற்றொழுக்கம்' என்றும், உலகத்துக் களவுடையார் பிறர் அறியாமற் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்று ஆகலின், அவ்வொழுக்கத்தையும் அதன் மறைக்கின்றவாற்றையும் அறிந்து, அவன் அறியாமல் தம்முள்ளே நகுதலின் 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாதாகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.

குறள்: 272 (வானுயர்)[தொகு]

வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றப் படின் (02)
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றம் படின்.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) வான் உயர் தோற்றம் எவன் செய்யும்= ஒருவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்? ; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின்= தான் குற்றம் என்று அறிந்த அதன்கண்ணே தன் நெஞ்சு தாழுமாயின்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'வானுயர் தோற்றம்' என்பது "வான்றோய் குடி" என்றாற் போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயே விடும்; விடவே, நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயனில்லை என்பதாம்.

குறள்: 273 (வலியில்நிலைமை)[தொகு]

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று (03)
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) வலி இல் நிலைமையான் வல் உருவம்= மனத்தைத் தன்வழிப்படுத்தும் வலியில்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன் வழிப்படுதல் ; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று= பசு, காவலர் கடியாமல் புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
இல்பொருள் உவமை. 'வலியில் நிலைமையான்' என்ற அடையானும், 'மேய்ந்தற்று' என்னும் தொழில் உவமையானும், வல்லுருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை, புலி புல் தின்னாது என்பதனானும், அச்சத்தானும் ஆம்; ஆகவே, வல்லருவம் கோடற்குப் பயன், அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து, வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்லுருவமும் கொண்டுநின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடியவழியே ஓடி மறைந்து, பிறர்க்குரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்குரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய 'பைங்கூழை மேய்ந்தாற் போலும்' என்ற உவமையான் அறிக.

குறள்: 274 (தவமறைந்)[தொகு]

தவமறைந் தல்லவை செய்தல் புதன் மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ் தற்று (04)
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று.
பரிமேலழகர உரை
(இதன் பொருள்) தவம் மறைந்து அல்லவை செய்தல்= அவ் வலியில் நிலைமையான், தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவம் அல்லவற்றைச் செய்தல் ; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று= வேட்டுவன் புதலின்கண்ணே மறைந்துநின்று புட்களைப் பிணித்தாற் போலும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
தவம் ஆகுபெயர். தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்குரிய மகளிரைத் தன்வயத்த தாக்குதல். இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.

குறள்: 275 (பற்றற்றேம்)[தொகு]

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும் (275)
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்று எற்று என்று
ஏதம் பலவும் தரும்.
பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) பற்று அற்றேம் என்பார் படிற்றொழுக்கம்= தம்மைப் பிறர் நன்கு மதித்தற் பொருட்டு, 'யாம் பற்றற்றேம்' என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம்; எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும்= அப்பொழுது இனிதுபோலத் தோன்றுமாயினும், பின் 'என் செய்தேம் என்செய்தேம்' என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
சொல்லளவுஅல்லது பற்று அறாமையின், 'பற்றுஅற்றேம்' என்பார் என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்வார் அதன் விளைவின்கண்,`அந்தோ வினையே என்று அழுவர்'¶ ஆகலின் 'எற்றெற்று'என்றும் கூறினார்.
இவை ஐந்து பாட்டானும் கூடாஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.
¶(சீவகசிந்தாமணி-முத்திஇலம்பகம்)

குறள்: 276 (நெஞ்சிற்)[தொகு]

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வண்கணா ரில் (06)
நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சி்த்து
வாழ்வாரின் வண்கணார் இல்.
பரிமேலழகர் உரை
நெஞ்சின் துறவார்= நெஞ்சாற் பற்று அறாதுவைத்து; துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின்= பறறற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழும் அவர்போல்; வண்கணார் இல்= வன்கண்மையை உடையார் உலகத்தில் இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
`தானஞ் செய்வாரை வஞ்சித்த'லாவது யாம் மறுமைக்கட் டேவராதற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும் என்று அறியாது ஈந்தாரை அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல், அவர் இழிபிறப்பினராதல்,
"அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினா லலறு முந்நீர்த்
தடங்கட னடுவுட் தீவு பலவுள வவற்றுட் டோன்றி
யுடம்பொடு முகங்க கொவ்வா ரூழ்கனி மாந்தி வாழ்வர்
மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேன் மனன ரேறே"$

$(சீவக சிந்தாமணி, முத்தியிலம்பகம்-244) என்பதனான் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின், "வண்கணாரில்" லென்றார்.

குறள்:277 (புறங்குன்றி)[தொகு]

புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து(07)
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
மூக்கின் கரியார் உடைத்து.
பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) குன்றிப் புறம் கண்டு அனையரேனும்= குன்றியின் புறம்போல வேடத்தாற் செம்மை உடையராயினும்; குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து= அதன் மூக்குப்போல மனம் இருண்டிருப்பாரை உடைத்து உலகம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
குன்றி ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றனவாயினும், பண்பால் ஒத்தலின், இவை பண்புவமை; "கூழின் மலிமனம் போலிரு ளாநின்ற கோகிலமே"‡ என்பதும் அது.

‡திருச்சிற்றம்பலக்கோவையார்-322

குறள்: 278 (மனத்தது)[தொகு]

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் (08)
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்.
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
மாசு மனத்தது ஆக= மாசு தம் மனத்தின்கண்ணதாக; மாண்டார் நீர் ஆடி= பிறர்க்குத் தவத்தான் மாட்சிமைஉடையராய் நீரின் மூழ்கிக் காட்டி; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்= தாம் அதன்கண்ணே மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர்.
பரிமேலழகர் உரை விளக்கம்
மாசு காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கன்றி மாண்டா ரென்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடன்ஆக்கினார். இனி 'மாண்டார்நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய்'£ என உரைப்பாருமுளர்.

(£மணக்குடவர்) இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கம் உடையாரது குற்றமும், அவரையறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.

குறள்: 279 (கணைகொடிது)[தொகு]

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல் (279)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.
இதன்பொருள்
கணை கொடிது யாழ் கோடு செவ்விது= அம்பு வடிவாற் செவ்விதாயினும், செயலாற் கொடியது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும், செயலாற் செவ்விது. ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்= அவ்வகையே தவஞ்செய்வோரையுங் கொடியர் செவ்வியர் என்பது, வடிவாற் கொள்ளாது, அவர் செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க.
உரை விளக்கம்
கணைக்குச் செயல் கொலை. யாழுக்குச் செயல் இசையாலின்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயிற் 'கொடியர்' எனவும், அறமாயிற் 'செவ்வியர்' எனவும் கொள்க என்பதாம்.

இதனான் அவரை அறியுமாறு கூறப்பட்டது.

குறள்: 280 (மழித்தலு)[தொகு]

மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின் (10)
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
இதன் பொருள்
மழிததலும் நீட்டலும் வேண்டா= தவஞ் செய்வார்க்குத் தலைமயிரை மழித்தலுஞ் சடையாக்கலுமாகிய வேடமும் வேண்டா; உலகம் பழித்தது ஒழித்து விடின்= உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றங் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்துவிடின்.
உரை விளக்கம்
பறித்தலும் மழித்தலுள் அடங்கும். 'மழித்தல்' என்பதே தலைமயிரை உணர்த்தலின், அது கூறாராயினார்.

இதனாற் கூடாவொழுக்கம் இல்லாதார்க்கு 'வேடமும் வேண்டா' என அவரது சிறப்புக் கூறப்பட்டது.